தொடர்பு எல்லைக்கு வெளியே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2012
பார்வையிட்டோர்: 12,165 
 

கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்க்கையில், தலை சுற்றுவதுபோல் இருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி வேறு தாங்கவில்லை. வயிற்றை ஒரு கையால் தடவிக்கொண்டே, ”கொஞ்சம் பொறுத்துக்கோ! சுதா வந்துரட்டும்” என்று வயிறோடு பேசினாள்.

மஞ்சு கட்டிலில் ஷிட்னி ஷெல்டன் நாவலுடன்கிடந்தாள்.

”மஞ்சு! இந்த சுதா பாரேன்… தினமும் நைட் லேட்டா வர்றா. எனக்குப் பசி தாங்க மாட்டேங்குது!” என்றாள் ஆதங்கமாக.

”நீ எதுக்கு அவளுக்காக வெயிட் பண்றே? நீ பாட்டுக்குச் சாப்பிட வேண்டியதுதானே? எட்டு மணிக்கு வாங்கிவைக்கிற சாப்பாட்டை தினமும் பத்தரை, பதினோரு மணிக்குச் சாப்பிட்டா, ஆறி அவலாப்போயிடாதா? நீ வெயிட் பண்ணுவேன்னு அவளுக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? தினமும் லேட்டாத்தான் வர்றா. அப்படி எங்கதான் போயிட்டு வர்றா?”

மஞ்சுவுக்குச் சொல்லும்போதே கோபம் கொப்பளித்தது. ”அவ சரியில்ல கவிதா. நீயும் கேட்க மாட்டேங்குற!” என்றாள்.

”அவ ராஜ் கூட ஆன்லைன்ல சாட் பண்ணிட்டு வர்றா. நம்ம என்ன சொல்ல? அவளும்தான் என்ன செய்வா? அவன் எங்கேயோ இருக்கான். இவ இங்கே இருக்கா. எப்படித்தான் பேசிப்பாங்க பின்னே? அதான் நான் ஒண்ணும் சொல்றதில்ல” – கவிதா பெருமூச்சுவிட்டாள்.

”அப்போ காத்துக்கிட! என்கிட்ட வந்து பசிக்குதுன்னு புலம்புனே… மவளே கொன்னுடு வேன்.”

கவிதா கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தே முக்கால். சுதா வரவில்லை இன்னும். என்னதான் பேசுவாள் ராஜுவிடம்? அழைப்பு மணி ஒலிக்க, சென்று கதவைத் திறந்தாள். சுதாவேதான். ”சாப்பிட்டியாடி?” என்றாள் நுழைந்தவுடன்.

”இல்லை… உனக்காகத்தான் வெயிட்டிங்…”

”அச்சச்சோ… சரி வா! சாப்பிடுவோம்.”

கையில் தட்டுடன் அமர, தொலைபேசி மணி ஒலித்தது. எதிர் முனையில் வார்டன். ”கவிதா! சுதாவுக்கு போன். மணி இப்போ பத்தே முக்கால். 10 மணிக்கு மேல கால் வரக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? சுதாகிட்ட சொல்லு. சரியா?” என்றாள் வார்டன் அதட்டலாக.

சுதா வந்து ரிஸீவரை வாங்கினாள். ”ம்… சாப்பிட்டுட்டேன் ராஜு நீ…? …ம்… சரி… சரி… டேக் கேர்…”

கவிதா அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள். ”இப்பதானே சாட்ல பேசிட்டு வர்றே? அப்புறம் என்ன திரும்ப கால்? ஆன்ட்டி வேற கன்னாபின்னான்னு திட்டுது. மொபைல்ல கூப்பிட்டாதான் என்ன?”

”இல்ல கவிதா! ஃபிரான்ஸ்லேர்ந்து இங்கே லேண்ட் லைனுக்குப் பேசினா ஃப்ரீ. மொபைலுக்குப் பேசினா, பைசா அதிகம். அதான் ராஜு லேண்ட் லைனுக்குப் பண்றான். சரி விடு, எல்லாம் இன்னும் நாலு நாள்தானே? நான்தான் ஃபிரான்ஸ் போய்டுவேன்ல” என்றாள்.

கவிதாவுக்குச் சட்டென்று முகம் வாடியது. சுதா போகப்போகிறாள். ராஜு இருக்கும் ஃபிரான்ஸுக்கே போகப்போகிறாள். எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன. ராஜு ஃபிரான்ஸ் போவதற்கு முன், சுதாவைப் பதிவுத் திருமணம் செய்துவிட்டுத்தான் போனான். இது ஹாஸ்டலில் கவிதாவைத் தவிர, யாருக்கும் தெரியாது. இவள்தான் சுதா தரப்பில் சாட்சிக் கையெழுத்து போட்டாள். பரம ரகசியமாக இருவரும் இதை வைத்திருந்தனர். ஒருத்திக்குத் தெரிந்தாலும் அவ்வளவுதான். ஏனோ திடீரென மனம் கனத்துப்போனது கவிதாவுக்கு.

”நீ போயிட்டா, நான் என்ன பண்ணுவேன் சுதா?”

சுதா சிரித்தாள். ”கொஞ்ச நாள் கஷ்டப்படுவே… அப்புறம் போகப்போக வேற எவளாவது ஹாஸ்டலுக்குப் புதுசா வருவா. அவ ஃப்ரெண்ட் ஆனவுடன் என்னை மறந்துடுவே!” என்றாள். சுதா, கவிதாவிடம் ஏன் அப்படி ஒட்டிக்கொண்டாள்? இருவருக்குமே தெரியாது. அவள் ஹாஸ்டலில் சேர்ந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால், நெடுநாள் பழகியவள்போல் கவிதாவிடம் எல்லா விஷயங்களையும் சொன்னாள் சுதா. ராஜுவைக் காதலிக்கும் விவரம் தெரிந்து, அப்பா அடித்தது முதல், அம்மா அவளை இரண்டு செட் துணிகளோடு எங்காவது அவனோடு போய்ப் பிழைத்துக்கொள் என்றதையும், அண்ணன் – அண்ணி அவளைக் கரித்துக்கொட்டியதையும், அண்ணனின் குழந்தையைப் பிரிய முடியாமல் பிரிந்து வந்ததையும், அழுதுகொண்டே கதை கதையாக அவள் கூறியபோது, கவிதா அவள் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னாள். அன்று பிடித்த கையை இன்று வரை விடவில்லை சுதா.

ராஜுதான் அவளை இந்த ஹாஸ்டலில் சேர்த்துவிட்டான். அவன்தான் அட்வான்ஸ் கொடுத்து, துணிமணிகள், வாளி, சோப்பு, சீப்பு, கண்ணாடி எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத் தான். சுதா ஹாஸ்டலில் சேர்ந்து ஒரே மாதத்தில், ராஜுவை அவன் வேலைபார்த்த கம்பெனி ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அனுப்பியது. அவனுக்கு அவளை விட்டுப் போக மனசே இல்லை. இருவருமே ரகசியமாக மணமுடிக்க முடிவெடுத்தார்கள். திருமணத்தைப் பதிவு செய்யக் கிளம்புகையில், அறைக்குள் அமர்ந்து அழுதாள் சுதா. அவளைத் தேற்றி அழைத்துக் கொண்டு போனாள் கவிதா. பதிந்து முடிந்ததும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார்கள்.

”சுதாவைப் பார்த்துக்கோங்க… அவளுக்கு யாருமே இல்லை. என்னை மட்டும் நம்பி வந்தா. நானும் அவளை விட்டுட்டு நாளைக்குக் கிளம்புறேன். எவ்வளவு சீக்கிரம் அவளை அங்கே அழைச்சுக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அழைச்சுப்பேன். ஆனாலும், எனக்குக் கஷ்டமா இருக்கு. நீங்கதான் அவளைப் பார்த்துக்கணும்” – கவிதாவிடம் கெஞ்சுவது போல் தழுதழுத்த குரலில் சொன்னான் ராஜு.

அன்று முதல் சுதாவுக்கு கவிதாதான் எல்லாம். ஒருநாள் இரவு கவிதா யதேச்சையாகக் கண் விழித்தபோது, தன் கட்டிலில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தாள் சுதா. அருகில் சென்று அவள் தலையைக் கோதிவிட்டாள். வெடித்து அழுதாள் சுதா. ”என் அண்ணன் குழந்தை மகி… என் மேல் எத்தனை பாசமா இருப்பான் தெரியுமா? அவனைக்கூட விட்டுட்டு வந்துட்டேன் கவிதா! அவன் பிறந்த நாள் இன்னிக்கு. எனக்கு மகி ஞாபகமாவே இருக்கு” என்று அந்தக் குழந்தையின் படத்தை வைத்துக் கொண்டு கண்ணீர்விட்டாள். இப்படி அடிக்கடி மகியின் படத்தை எடுத்துப் பார்த்துக் கண்ணீர் விடுவது சுதாவின் வழக்கமாகி இருந்தது.

குடும்பத்தைப் பிரிந்தது அவளை ரொம்பவே வாட்டியதாக கவிதாவுக்குப் பட்டது. எவ்வளவு பாசம் இருக்கிறதோ, அதேபோல குடும்பத்தினர் மீது பயமும் அவளுக்கு இருப்பதாக கவிதா நம்பினாள். அதற்கு ஏற்றவாறு ஒருநாள் சுதாவும் கவிதாவும் தி.நகருக்கு சுடிதார் வாங்கச் சென்றபோது, நன்றாகப் பேசிக்கொண்டே வந்த சுதா, திடீரென முகம் இருண்டாள். கவிதாவின் கைகளை அவசரமாகப் பற்றினாள். அருகில் இருந்த கடை ஒன்றினுள் நுழைந்தாள். அது பெர்ஃப்யூம்கள் விற்கும் கடை. கவிதா விழித்தாள். ”அண்ணன்… அண்ணன்…” – ரகசியமாகக் கிசுகிசுத்தாள் சுதா. ”எங்கடி? எங்கே?” பரபரத்தாள் கவிதா. ”வெளிய ரோட்ல பார்த்தேன். அதான் இங்க இந்தக் கடைக்குள்ள நுழைஞ்சுட்டேன்…” – சுதாவின் குரல் நடுங்கியது. பயத்தில் நா குழறியது. வியர்வை ஆறாக ஓடியது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. ‘என்னை மறைச்ச மாதிரி நின்னுக்கோ, ப்ளீஸ். பயமா இருக்கு!’ – இந்த வார்த்தைகளைத்தான் அவள் சொல்லி இருப்பாள் என்று கவிதா யூகித்தாள். சுதாவின் கைகள் கவிதாவின் தோள்களை இறுகப் பற்றி இருந்தது. மிகவும் அசாதாரணமான அச்சம் அந்த ஸ்பரிசத்தில் இருந்ததை உணர்ந்தாள் கவிதா.

அவள் கண்கள் அலை பாய்ந்துகொண்டு இருந்தன. கால்கள் தள்ளாடின. ”அதோ போறார்!” பதறினாள் சுதா. அவள் காட்டிய திசையில் நீல நிறச் சட்டை அணிந்த இளைஞன் ஒருவன் போய்க்கொண்டு இருந்தான். ‘ஒண்ணுமில்ல… பதற்றப்படாதே! அவர் உன்னைப் பார்க்கலை…” என்று சுதாவை ஆசுவாசப்படுத் தினாள் கவிதா. கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு புள்ளியாக நீல நிறச் சட்டை மறையும் வரை காத்திருந்துவிட்டு, இருவரும் வெளியே வந்தனர். வந்த வேகத்தில் ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆட்டோவுக்குள் பாய்ந்தாள் சுதா. ஆட்டோ ஹாஸ்டலுக்குப் பறந்தது. அன்று முழுவதும் படபடப்பு அடங்கவில்லை சுதாவுக்கு.

அப்போது முதல் வெளியே வருவதை அறவே தவிர்த்தாள். அருகில் உள்ள கடைக்கு வரக் கூடப் பயந்தாள். சுதா இப்படிப் பயப்படு வது தேவையற்றது என்றே தோன்றியது. ஃபிரான்ஸ் போவதற்குள் தன் வீட்டார் கண்ணில் பட்டுவிட்டால், தன் கதி என்னாவது என்று அரற்றிக்கொண்டே இருந்தாள். ஆனால், மாலையானதும் பக்கத்தில் உள்ள பிரவுஸிங் சென்டருக்குப் போவதற்கு மட்டும் தவறுவதே இல்லை. ஒருநாள், கோடம்பாக்கம் பகுதி முழுவதும் மின்சாரம் இல்லை. அன்றைக்கு அவள் தவித்த தவிப்பைக் கண்டு கவிதாவுக்கு ஒரு புறம் சிரிப்பு வந்தாலும், மறுபுறம் பாவமாக இருந்தது.

”ஒருநாள்தானே சுதா? ராஜுவோடு ஒருநாள் பேசாம இருக்க முடியாதா?”

”உனக்குப் புரியாது கவிதா. ஒருநாள் பேசலைன்னாலும் ரொம்பக் கஷ்டம். ஹும். என்னைக் காப்பாத்திக் கொண்டுவந்து வெச்சிருக்கான். இல்லேன்னா, நான் என்னிக்கோ தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துருப்பேன் தெரியுமா?” – சொல்லும்போதே கண்களில் பயமும் மிரட்சியும் தெரிந்தன.

சுதாவின் வீட்டில் அப்படி என்ன கொடுமை அவளுக்கு? பெற்ற பெண்ணை அப்படி யாராவது கொடுமைப்படுத்துவார்களா? கவிதா அவள் முகத்தையே பார்த்தாள். பால் வடியும் இந்த முகத் தைப் பார்த்தால் எப்படிக் கொடுமைப்படுத்தத் தோன்றும்? என்ன மனிதர்கள்?

”என்னதான் ஆச்சு உன் வீட்டுல?

சொல்லேன்?”

”இப்போ வேணாம். அப்புறமா சொல்றேன்…”

அந்த ‘அப்புறமா’ அவள் ஃபிரான்ஸ் புறப்படும் வரை வரவே இல்லை. ஆனால், தினமும் ஏதோ சொல்ல எத்தனிப்பதும், சொல்ல இயலாமல் உள்ளுக்குள் விழுங்குவதுமாக சுதா தவிப்பதாகப்பட்டது. ஆனாலும், புறப்படும் நாள் வரை அவள் எதுவும் சொல்லவே இல்லை.

விமான நிலையத்தில் நிற்கையில் அடக்க இயலாமல் கண்ணீர்விட்டனர் இருவரும். சுதாவை வழியனுப்பிவிட்டு வந்த பின்னர், கவிதாவுக்கு அறை வெறுமையாகத் தெரிந்தது. சாப்பிடக்கூடப் பிடிக்கவில்லை.

மாலையில் தன்னைத் தேடி யாரோ வந்திருப்பதாகத் தகவல். விருந்தினர்கள் அறைக்கு வந்தாள். ஓர் அம்மாளும் ஒரு பெரியவரும் நின்றிருந்தனர். ஆச்சர்யம்! அந்த அம்மாள் முகத்தில் சுதாவின் அதே சாயல். பார்த்தவுடன் சொல்லிவிடலாம், அது சுதாவின் தாய்.

”இதோ இவதான் கவிதா…” – மஞ்சு அடையாளம் காண்பித்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள்.

அந்த அம்மாள் மெள்ள நெருங்கினார். ”அம்மாடி! நீதான் சுதாவோட ஃப்ரெண்டாம்மா?”

”ஆமா… நீங்க?”

”நான் சுதாவோட அம்மா. அவ இப்போ எங்கேம்மா? சொல்லு?”- அதட்டலாகக் கேட்டார் அந்த அம்மாள்.

கவிதாவுக்கு எரிச்சல் வந்தது. அமைதியாக ”தெரியாது” என்றாள்.

”நான் திருநெல்வேலில இருந்து வந்திருக்கேன்மா. அவ எங்கே? எங்கேயோ வெளிநாடு போயிட்டதா ரிசப்ஷன்ல சொன்னாங்க. எந்த ஊரு, என்ன, ஏதுன்னு அவங்களுக்கு விவரம் தெரியலை. கட்டையில போறவ. இப்படிப் பண்ணிட்டுப் போயிட்டாளே… எங்க போனா அவ? சொல்லும்மா சொல்லு! எங்க குடும்ப மானத்தையே வாங்கிட்டு அவ எங்க போனா? அவ பண்ணின காரியத்துக்கு அவ கையில் கிடைச்சா, கண்டந்துண்டமா வெட்டிப் போட்ருப்பான் அவ அண்ணங்காரன்” – சொல்லும்போதே அழுதுகொண்டே சொன்னாலும், குரலில் வன்மம் தெரிந்தது.

”அந்த ஓடுகாலிச் சிறுக்கி ஓடுனாளே… பெத்த புள்ளையை விட்டுட்டுல்ல ஓடிட்டா. அதெப்படி ஒரு தாய்க்கு இப்பிடிச் செய்ய மனசு வரும்?”

அதிர்ந்து நின்றாள் கவிதா. என்ன சொல்கிறார் இந்த அம்மாள்?

”அம்மா… என்ன சொல்றீங்கம்மா? யாரு குழந்தை? குழந்தை இருக்கா? சுதாவுக்கா?”

அந்தம்மாள் ஒரு புகைப்படத்தை எடுத்து வீசினாள். கழுத்தில் தாலி. கையில் குழந்தை.

சுதாவேதான். குழந்தை… இது… இது… அவள் அண்ணன் குழந்தை மகி என்றல்லவா சொன்னாள்? இந்தக் குழந்தையின் படத்தைத்தானே அவள் எடுத்துவைத்துக்கொண்டு அழுவாள். அருகில் யார்? இந்த முகம் கவிதாவுக்குத் தெரிந்த முகமாகத் தோன்றியது… யார் இது?

”அம்மா! இது யாரு?” என்றாள் சன்னமான குரலில்.

”அவ புருஷன்” என்றாள் அம்மாள். சட்டென்று நினைவுக்கு வந்தது. இந்த முகத்தைத்தான் தி.நகரில் பார்த்து அன்றைக்கு மிரண்டாள் சுதா. அவளால் நம்ப முடியவில்லை. ஆனால், அவர்கள் நிச்சயமாக கணவன் – மனைவிதான் என்பதைப் படத்தில் தெரிந்த அவர்களின் நெருக்கம் சொல்லியது. அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

”அம்மா! அவ ஏன் வீட்டைவிட்டு வந்தா?”

அந்தம்மாள் அழ ஆரம்பித்தாள். ”கிளி மாதிரி வளர்த்தேன் எம் பொண்ணை. ஒரு குரங்கு கையில புடிச்சுக் குடுத்தேன். அவ அப்பவே இந்த மாப்பிள்ளை வேணாம்னா. ஆனா, நல்ல வசதியான எடம்னு சொல்லிக் கட்டிவெச்சோம். அந்தப் படுபாவி அவளைப் படாத பாடு படுத்தினான். சிகரெட்டால சுட்டுருக்கான். அவ மேல எப்பவும் சந்தேகம்தான். யார்கிட்ட பேசினாலும் சந்தேகந்தான். தினமும் குடி. கண்ணு மண்ணு தெரியாம அடிப்பான். எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டா குழந்தைக்காக. ஒரு தடவ அவளை அடிச்சதுல கை ஒடஞ்சு ஃபிராக்சர் ஆயிடுச்சும்மா. என் புள்ளய சின்னாபின்னப்படுத்திட்டான்மா. அடிச்சு அவள வீட்டைவிட்டுத் தள்ளி கதவ சாத்திட்டான். அப்போ, அந்த வழியாப் போன ஒருத்தன்தான் அவளைக் கூட்டிட்டுப் போயி ஆஸ்பத்திரில சேர்த்தான். அப்படித்தான் அந்தப் பையனோட பழக்கம் அவளுக்கு.

ஒருநாள் திடீர்னு மாப்பிளை குடிச்சிட்டு வந்து அவளை அடிச்சப்போ, அடி வயித்துல பட்டு மயங்கிட்டா. அன்னிக்கு அவளுக்கு உயிர்ப் பயம் வந்துடுச்சு. செத்துப்போயிட்டா என்ன செய்றதுன்னு நெனச்சுக் கௌம்பிட்டா. அன்னிக்கு குழந்தை அவ மாமியார் ரூம்ல இருந்துச்சுபோல. போய் எடுத்துட்டுப் போறதுக்கு அவளுக்குப் பயம்… மாட்டிப்போமோனு. அப்படியே கிளம்பிட்டா. கிளம்பினவ இங்கே எங்க வீட்டுக்கு வர வேண்டியதுதான..? நேரா அவனைப் பார்க்கப் போயிட்டா.”

அதுவரை அமைதியாக இருந்த அந்த மனிதர் கோபம் கொப்பளிக்கப் பேசினார். ”சாதிசனம் முன்னாடி தல குனியவெச்சுட்டாம்மா! அவளை ஒனக்கு இப்பத்தானே தெரியும். இந்தக் கதை எல்லாம் சொன் னாளா உங்கிட்ட?”

”இல்லை! கல்யாணம் ஆனதெல்லாம் எனக்குத் தெரியாது. சொல்லலை. ரொம்ப ஷாக்கா இருக்கு.”

”எப்படிச் சொல்வா? இதெல்லாம் தெரிஞ்சா மூஞ்சி குடுத்துப் பேசுவீங்களா யாராச்சும். அதான் சொல்லியிருக்க மாட்டா.”

”அவள எந்த ஊர்ல கட்டிக்குடுத்தீங்க? குழந்தை எங்க இருக்கு?”

”இந்த மெட்ராஸ்லதான். ஆவடியிலதான் வீடு. ஓடுகாலி பெத்ததா இருந்தாலும், நம்ம குடும்ப வாரிசாச்சேனு… இவ போன பிறகு நான் போய்க் கேட்டேன். குடுக்கலை. அந்தாள் மறு கல்யாணம் ஒடனே பண்ணிக்கிட்டான். இவளைத் தேடாத எடம் இல்ல. அவ அண்ணங்காரன் ஆத்திரத்துல குதிக்கிறான். எங்க இருக்கான்னே தெரியல. எங்க சொந்தக்காரரு ஒருத்தர் இந்த ரோட்டுல அவள ஆட்டோவுல பாத்ததா சொல்லி, நேத்து அட்ரஸ் சொன்னாரு. போட்டோவை வெச்சு அக்கம்பக்கம் விசாரிச்சு வந்துட்டோம். சனியனை அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிருவோம்னு நெனச்சு வந்தோம். ஆனா, நாட்டைவிட்டே அவன் கூட ஓடிட்டா!”

”அம்மா! நீங்க பாத்து கல்யாணம் பண்ணிவெச்ச ஆளுதான் அத்தனை கொடுமக்காரனா இருக்கானே… அதான் இப்ப அவளாப் பாத்துக்கிட்டா… நீங்க அதுக்கு ஏன் அவளத் திட்டுறீங்க?”

”அவனோட வாழப் புடிக்கலைன்னு ரத்து பண்ணிட்டு வந்தா, எங்க சாதியில நாங்க கல்யாணம் பண்ணிவெச்சிருப்போம்ல.”

கவிதா அவர்கள் இருவரையும் எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

”எங்கதான் போயிருக்கா அவ… சொல்லும்மா?”

”தெரியாது! எனக்குத் தெரியாது” – அழுத்தமாகச் சொன்னாள்.

அந்த அம்மாள் பட்டென்று அவள் காலில் விழுந்தார். பதறிப் பின்வாங்கினாள் கவிதா.

”என்னதிது… இவ்வளவு பெரியவங்க… என் கால்ல விழுந்துக்கிட்டு… எழுந்திருங்கம்மா!”

”அட்ரஸ், போன் நம்பர் ஏதாச்சும் குடும்மா… இந்த காரியம் பண்ணிட்டுப் போயிருக்காளே… அவளை…” – கவிதாவின் காலைப் பிடித்துக் கண்ணீர்விட்டுக் கெஞ்சினார் அந்தம்மாள். கண்களில் இருந்து மாலை மாலையாக நீர் வழிந்தோட கெஞ்சிக்கொண்டே இருந்தார். அந்த அம்மாள் பேசியது எதுவுமே அவள் காதில் விழவில்லை. அழுத முகம் மட்டுமே தெரிந்தது.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல், ”அம்மா! ப்ளீஸ்” என்றாள் சத்தமாக, ”இவ்வளவு பெரியவங்க நீங்க. உங்கள யாருன்னே தெரியாத என் கால்ல விழவெச்சுட்டாளே அவ. நீங்க உங்க நம்பர் குடுங்க… ஊருக்குப் போங்க. இப்போ அவ எனக்கு நிச்சயமா போன் பண்ணுவா. பண்ணினா, அவளோட நம்பர் வாங்கி உங்களுக்குத் தர்றேன். சரியா?”

அந்த அம்மாளின் முகம் பிரகாசமாகியது. கவிதா தன் கைப்பையைத் திறந்து ஒரு சின்ன டைரியை எடுத்துக் கொடுக்க, அந்த அம்மாள் தன் கைபேசி எண்ணை எழுதிக்கொடுத்தார்.

”உன் நம்பர் சொல்லும்மா!” – அந்த மனிதர் கேட்டார். அவள் சொல்ல… தன்னுடைய கைபேசியை எடுத்து, அதிலிருந்து இவள் எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் செய்தார்.

”என்னை நம்புங்கம்மா! அவ கண்டிப்பா கூப்பிடுவா. கூப்பிட்டா, நான் பேசி, அவள் அட்ரஸும் போன் நம்பரும் வாங்கித் தரேன்.”

”அவ எந்த ஊருக்குப் போயிருக்கா?”

”சிங்கப்பூர்.”

”சிங்கப்பூரா? சொந்தக்காரங்கள்லாம் இருக்காங்க. பாத்துருவோம். கண்டுபிடிச்சுருவோம். போன் நம்பர் இருந்தாக்கூட போதும். ஒன்ன நம்பிப் போறேம்மா. அவ போன் பண்ணினா, நாங்க வந்துட்டுப்போனதை சொல்லாதே. உஷாராயிடுவா…”

அந்தம்மாள் கையெடுத்துக் கும்பிட்டார்.

அன்று இரவு… கவிதாவுக்கு லேண்ட்லைனில் அழைப்பு வந்தது. மறு முனையில் சுதா.

”சுதா! நல்லபடியா போய்ச் சேர்ந்தியா? ஒண்ணும் பிரச்னை இல்லையே?”

”இல்ல கவி! இந்த ஊர் பிடிச்சிருக்கு. ராஜு மட்டும்தான் இங்க எனக்குத் தெரியும். ஆனாலும், பிடிச்சிருக்கு. இவன் கூட இருக்குறதே எனக்குச் சந்தோஷமா இருக்கு. நீ எப்பிடி இருக்கே?”

”இருக்கேன். உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…”

”என்ன?”

”உங்கம்மாவும் அப்பாவும் ஹாஸ்டலுக்கு வந்தாங்க…”

இரண்டு விநாடிகள் மௌனத்துக்குப் பிறகு துண்டிக்கப்பட்டது இணைப்பு.

அதன் பின் சுதாவிடம் இருந்து ஒருபோதும் கவிதாவுக்குத் தொலைபேசி அழைப்பு வரவே இல்லை!

– மார்ச் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *