கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 8,707 
 

சரண்யாவுக்கு தன் திருமண விஷயத்தில் தான் அவசரப் பட்டு விட்டோமோ என்ற எண்ணம் சமீப காலமாக அடிக்கடி தோன்றியது.

தன் கணவன் பாஸ்கரை நல்லவிதமாக மாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் பிரயோஜனமில்லாதது குறித்து வருத்தமாக இருந்தது.

சரண்யா சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர், பாஸ்கர் சாப்ட்வேர் இன்ஜினியர். இருவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் பெண் பார்த்தலில் தொடங்கி, நிச்சயதார்த்தம், திருமணம், முதலிரவு என பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடு எல்லாம் முறையாக நடந்தது.

பெங்களூரில் தனிக் குடித்தனம் அமர்களமாகத்தான் தொடங்கியது.

ஆனால் பாஸ்கரின் அசுத்தமான பழக்கங்கள் சரண்யாவுக்கு மிகுந்த ஏமாற்றமளித்தன. அடிக்கடி சிகரெட் பிடிப்பான். வாரத்திற்கு இரண்டு முறை குடித்துவிட்டு வருவான். மாதம் ஒரு முறை ஹேர் கட்டிங் செய்து கொள்ளும்போதுதான், ஷேவ் செய்து கொள்வான்.

அலுவலகத்திற்கு நேர்த்தியாக உடையணியாது, பச்சை, சிகப்பு, ஊதா என அடிக்க வரும் கலர்களில் சட்டை அணிந்துகொள்வான். அதையும் நான்கு நாட்கள் சேர்ந்தாற்போல் அணிவான்.

கை விரல் நகங்களை நெயில் கட்டரால் வெட்டவே மாட்டான். எல்லா விரல் நகங்களிலும் அழுக்கு படிந்து கறுப்பு நிறமானதும் தனக்கு தோன்றும் போது நகங்களை கடித்துதான் துப்புவான். கால் பாதங்கள் கறுப்பாக அழுக்கு படிந்திருக்கும், அதோடு பெட்ரூமிற்கு வந்து படுத்துக் கொள்வான்.

ஷூ பாலீஷ் போடவே மாட்டான். சாக்ஸ் வாரத்திற்கு ஒரு முறைதான் மாற்றுவான். பனியன், உள்ளாடைகளை விதவிதமான கலர்களில் அணிவான், அவைகளையும் தினசரி மாற்ற மாட்டான். அக்குளில் ஜடை பின்னலாம் போல மயிர் வளர்த்துக் கொள்வான்.

ஒவ்வொரு முறையும் ஹேர் கட்டிங் செய்ய சலூனுக்கு போகும் போது சரண்யா அவனிடம் அக்குள் மயிரையும் சேர்த்து மழித்துக் கொள்ளச் சொல்லிக் கெஞ்சுவாள். கேட்க மாட்டான். சலூனில் ‘எல்லோர் முன்பும் சட்டையை கழட்ட முடியாது’ என்பான்.

கல்யாணமான புதிதில் ஒரு சனிக் கிழமை சரண்யா அவனிடம் மனம் விட்டு பேசினாள்.

” நீங்க என்னை பெண் பார்க்க வரும்போது நீட்டா ஷேவ் பண்ணிக் கொண்டு, தலையை அழுந்த வாரி, வெள்ளை முழுக்கைச் சட்டையில் பிரமாதமாக வந்தீர்கள்…நான் சொக்கிப் போயிட்டேன்..”

” உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஜூலைல உன்ன பெண் பார்க்க வந்தன்னிக்குதான் நான் ஷேவ் பண்னேன். அப்புறமா செப்டம்பர்ல நம்ம கல்யாணத்துக்கு முந்தின நாள் மாப்பிள்ளை அழைப்பின் போதுதான் மறுபடியும் ஷேவ் பண்ணிக் கொண்டேன்.” சொல்லிவிட்டு பெரிதாகச் சிரித்தான்.

“இனிமே தினமும் ஷேவ் பண்ணிகிட்டுதான் ஆபீஸ் போகணும்.. .நீங்க நிறைய மாறணும் பாஸ்கர்… உங்களுக்கு நிறைய பர்சேஸ் இருக்கு, இன்னிக்கு •புல்லா ஷாப்பிங்தான், வெளிலதான் நமக்குச் சாப்பாடு” என்றாள்.

இருவரும் வெளியே கிளம்பினார்கள்.

பாஸ்கருக்கு பார்த்து, பார்த்து வெள்ளை கலர், லைட் கலர் பிராண்டட் ஷர்டுகள், பிராண்டட் ட்ரொளஸர்கள், வெள்ளை கலா¢ல் காஸ்ட்லி உள்ளாடைகள், காட்டன் சாக்ஸ்கள் எல்லாம் ஆர்வத்துடன் வாங்கிக் கொடுத்தாள். ஐந்து முனைகள் கொண்ட பிளேடுகளுடன் அமைந்த ந்வீன ஷேவிங் செட் வாங்கினாள். வெண்மையான கைக்குட்டைகள், உயர்ந்தவகை பாடி ஸ்ப்ரே என அசத்தினாள்.

முதல் ஒரு மாதம் பாஸ்கர் சரண்யாவின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தான். பிறகு பழையபடியே மாறிவிட்டான்.

சரண்யா அவனை விடுவதாக இல்லை.

தன் அன்பினால் அவனை கட்டிப் போட வேண்டும் என்று மெனக்கிட்டாள். நீ பெரியவனா, நான் பெரியவளா என்ற ஈகோ அவனிடம் பார்க்கவில்லை.. பேசி தீர்த்துக் கொள்ளலாம் என நினைத்தாள். முதலில் ஒருவருக்கு ஓருவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். உட்கார்ந்து தங்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை மனம் விட்டு பேச வேண்டும். சின்ன பிரச்சனை வந்தாலும் அதை இழுத்தடிக்காமல் உடனே உட்கார்ந்து பேசினால் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என்று நம்பினாள்.

“நீங்க தினமும் ஷேவ் பண்ணிக்கணும், தினமும் ட்ரஸ் மாற்றிக் கொள்ள வேண்டும் பாஸ்கர்.. ஷ¥ பாலீஷ் போட வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும் ப்ளீஸ்..” என்று ஆரம்பித்தாள்.

“நீ வேற நான் திருநெல்வேலியில் கலேஜ் படிக்கும்போதே வாரத்துக்கு ஒரு முறைதான் ட்ரஸ் மாத்துவேன்.. அந்த வெயிலிலேயே அப்படி இருந்தேன்… பெங்களூர் குளிருக்கு இது போதும்… ஷேவ் பண்ணிக்க. ஷ¥ பாலீஷ் போட டைம் இல்ல சரண்யா.” என்றான்.

சரண்யாவுக்கு மிகுந்த ஆயாசமாக இருந்தது. ஆனால் தனக்குள், ‘விட்டுக் கொடுப்பதில்தான் நிஜமான சந்தோஷம் இருக்கிறது. விட்டுக் கொடுக்கும் யாரும் கெட்டுப்போய்விட மாட்டார்கள். தேவையற்ற கோபம், வீண் சண்டை, அர்த்தமற்ற வாக்குவாதம், அனாவசியமாக பாஸ்கரை காயப் படுத்துவது என்பதெல்லாம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது ஒரு கட்டத்தில் இருவரையும் தனிமைப்படுத்தும், மன உளைச்சலை உண்டாக்கும். இந்த வாழ்க்கை என்பது ஒரு முறை தான். சந்தோஷம் என்பது வெளியில் இல்லை, என்னிடம்தான் இருக்கிறது’ என்று திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டாள்.

அடுத்த சில மாதங்களில் திருநெல்வேலியிலிருந்து சரண்யாவின் மாமியார், மாமனார் பெங்களூர் வந்தார்கள்.

மாமனார் எப்போதும் வீட்டில் பீடி பிடித்துக் கொண்டேயிருந்தார். ஒரே பீடி நாற்றம். சரண்யா அவா¢டம் அமைதியாக, “அப்பா டெரஸ்ஸ¥க்கு சென்று பீடி புகையுங்களேன், பக்கத்து வீ£ட்டுக்கு பீடி நாற்றம் அடிக்காது” என்றாள்.

” அட நீ வேற உனக்குத் தெரியுமா, உன் மாமியாரின் மாமனாரும் மாமியாரும் – அதான் என் அப்பா அம்மா அடிக்கடி சுருட்டுதான் பிடிப்பார்கள். அப்பதான் அவர்களுக்கு கக்கூஸ் வரும்” என்று சொல்லி வாய் விட்டு பெரிதாகச் சிரித்தார்.

இது போதாதென்று, பாஸ்கர் தன்னிடம் சிகரெட் இல்லாத இரவுகளில் அப்பாவிடம் பீடி வாங்கிப் புகைத்துவிட்டு, பீடி நாற்றத்துடன் பெட்ரூமுக்கு வந்து இவளை அணைப்பான். சரண்யாவுக்கு குமட்டிக் கொண்டு வரும்.

சரண்யாவின் மாமியாரோ, தான் அணிந்திருக்கும் நைட்டியை இரு கைகளினாலும் முன்புறம் தூக்கிக் கொண்டு, தலையை குனிந்து நைட்டியினுள் அடிக்கடி தும்மினாள்.
சரண்யாவுக்கு மாமியாரின் இந்தச் செயல் மிக அநாகா£கமாகப் பட்டது.

ஒரு டவலை எடுத்துக் கொடுத்து, “அம்மா இத நீங்க தும்மும்போது யூஸ் பண்ணுங்க ” என்று கொடுத்தாள்.

மாமியார் டவலை வாங்கிக் கொள்ளாமல், “பெங்களூர் குளிருக்கு தும்மிக்கிட்டேதான் இருப்பேன்…இத வேற கையில தூக்கிகிட்டு அலையணுமா, வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் நைட்டியினுள் தும்மினாள்.

சரண்யா, ‘கருமண்டா சாமி, சரியான விவஸ்தை கெட்ட குடும்பம்’ என்று மனதில் முதன் முறையாக நினைத்துக் கொண்டாள்.

ஒழுக்கமான வளர்ப்பு என்பது மிக முக்கியம், அது பாஸ்கருக்கு அமையவில்லை என்பதை உணர்ந்தாள்.

சரண்யாவுக்கு டீம் லீடராக பதவி உயர்வு கிடைத்தது. பாஸ்கர் அதை ரசிக்கவிலை. எரிச்சலும், கோபமும் அடைந்தான். டீம் லீடரான பிறகு சரண்யா தன் வேலையில் மிகவும் கவனம் செலுத்தினாள். பாஸ்கரின் மீதான தனிப்பட்ட அக்கறை குறைந்தது.

ஒரு நாள், சரண்யாவின் ப்ராஜக்ட் மானேஜர் ஷண்முகநாதனின் மனைவி கான்சரில் மிகவும் சீரியஸாக இருப்பதாக கேள்விப்பட்டு,தன் சக ஊழியர்களுடன் அவளைப் பார்க்க ஹாஸ்பிடல் சென்றிருந்தாள். ஷண்முகநாதனின் ஒரே பெண் மூன்று வயது தாரிணி இவளிடம் மிகவும் ஒட்டிக் கொண்டாள். வீட்டிற்குச் செல்லும்போது எட்டு மணியாகிவிட்டது. பாஸ்கர் இவளிடம் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டான்.

அடுத்த ஒரு மாதத்தில் ஷண்முகநாதனின் மனைவி இறந்து போனாள். சரண்யாவுக்கு ஷண்முகநாதன் மீது மிகுந்த அனுதாபம் ஏற்பட்டது. அவனுக்கு ஆறுதலாக இருக்குமேயென்று அவ்வப்போது தாரிணியிடம் •போனில் பேசினாள். பாஸ்கருக்கு அவளின் இந்த ஒட்டுதல் சிறிதும் பிடிக்கவில்லை. அடிக்கடி சரண்யாவையும், ஷண்முகநாதனையும் இணைத்து கொச்சையாகத் திட்டினான்.

சரண்யா, ‘இவனுக்கு உடம்பு மட்டுமல்ல மனசும் நிறைய அழுக்குதான்’ என வெறுப்புடன் நினைத்துக் கொண்டாள்.

அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு ஞாயிற்றுக் கிழமை தாரிணிக்கு பிறந்த நாள் வந்தது. அவளை நேரில் சென்று வாழ்த்தலாம் என்று பாஸ்கரையும் அழைத்தாள். “அவ அம்மா செத்து இன்னும் ஒரு வருஷம்கூட ஆகல, அதுக்குள்ள என்ன பிறந்த நாள் வேண்டி கிடக்கு…உனக்கு ஷண்முகநாதனப் பார்த்து சிரித்து சிரித்து பேசணும், அதுக்கு எதுக்கு நான் உங்கூட…” என்று வார்த்தைகளில் வெறுப்பை உமிழ்ந்தான்.

சரண்யா மட்டும் தனியாக சென்றுவிட்டு வந்தாள். “என்ன கொஞ்சியாச்சா ?” என்று சிலேடையாக குத்திப் பேசினான்.

சரண்யாவுக்கு பாஸ்கரிடமிருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் விட்டுப் போயிற்று. அன்று இரவு தூக்கம் வராது படுக்கையில் புரண்டாள்.

மறுநாள் காலையில் சரண்யா குளித்துவிட்டு பாத்ரூமிலிருந்து வெளிவரும்போது, பாஸ்கர் சரண்யாவின் மொபைலை தன் கையில் வைத்துக் கொண்டு எதையோ தேடினான்.

அதைப் பார்த்த சரண்யா மிகுந்த கோபத்துடன், ” என் மொபைல்ல என்ன தேடறீங்க ?” என்று அதட்டினாள்.

“உன்னோட புருஷண்டி நான், நீ எவனோடல்லாம் •போன்ல காண்டாக்ட்ஸ் வச்சிருக்கேன்னு பார்த்தேன்..”

“புருஷணாவது, புடலங்காயாவது… கடவுளே வந்தாலும் என் மொபைல தொடக்கூடாது.”

பாஸ்கர் அவளது மொபைலை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தான். சரண்யா மிக அமைதியாக அதை எடுத்துக் கொண்டாள்.

அன்று அலுவலகத்தில் இருந்த பாஸ்கருக்கு, சரண்யாவிடமிருந்து தமிழில் ஒரு நீளமான ஈ மெயில் வந்தது:

பாஸ்கர்,

இந்தக் கடிதத்தை அதன் முழு உணர்வுடன் உன்னால் புரிந்து கொள்ள முடியுமா என்பது எனக்கு சந்தேகம்தான். எனினும் இக்கடிதத்தின் மூலமாக நான் உன்னைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட்டேன் என்பதை நீ புரிந்து கொண்டால் போதும்.

நீ நாய் வால்.

என் வாழ்க்கையில் நம் திருமணம் ஒரு தடங்கல். அசிங்கமான உன்னுடன் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு எஞ்சிய என் வாழ் நாளை வீணடிக்க எனக்கு விருப்பமில்லை.

ரசனையில்லாத உன்னுடன் நான் இத்தனை நாட்கள் வாழ்ந்ததே ஒரு பெரிய சோகம். நல்ல சங்கீதம், சாப்பாடு, உடைகள், செய்யும் வேலை, நல்ல சினிமா என்று எதிலுமே ஒரு ரசனையில்லாதவன் நீ. நாம் தனிக் குடித்தனம் இருந்தபோதும் புதுப் பெண்டாட்டியிடம் சில் மிஷங்கள், கொஞ்சல்கள், உரசல்கள் என எந்தவிதமான ரொமாண்டிக் •பீலிங்க்கும் உனக்கு கிடையாது. முயங்குதலில்கூட முஸ்தீபுகள் எதுவும் கிடையாது. அழகான புரிதல்கள் இல்லாமல் கோழியிடம் காட்டப்படும் சேவலின் அவசரம்தான் எப்போதும்.

புரிந்து கொள்ள விருப்பமின்றி அலட்சியம் காட்டும் ஒருவனிடம், அன்பு செலுத்துதல் இயற்கை விதிக்குப் புறம்பானது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்றால், மூன்றாவது அடிக்கு முதுகையா காட்ட முடியும் ? நான் படித்தவள், கை நிறைய சம்பாதிக்கிறேன். தன்மானமும் தன்னம்பிக்கையும் என்னிடம் அதிகம்.

இன்றிலிருந்து அடுத்த கணவனுக்கான தேடல் எனக்கு ஆரம்பம். எல்லா புத்திசாலி மனிதருக்குள்ளும் நாம் சிறந்தவற்றை அடைய வேண்டும் என்ற தொடர்ந்த தேடல் எல்லா விஷயங்களிலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ரசனையற்ற வாழ்க்கை என்பது வீண்.

ரசனையுள்ள ஒரு ஆணுக்கு பஞ்சாஙகப் பெண்ணும், ரசனையுள்ள ஒரு பெண்ணுக்கு அம்மாஞ்சி ஆணும் அமைந்து விடுவது மிகவும் கொடுமை. அதனால்தான் திருமணத்திற்கு பிறகும்வெளியே தேடல்கள் ஆரம்பித்து தகாத உறவுகள் ஏற்பட காரணமாகி விடுகின்றன.

ஆனால் என் விஷயம் வேறு. மன முறிவினால், மண முறிவு ஏற்பட்டு, அடுத்த திருமணத்திற்கான என் தேடல் இப்போது ஆரம்பமாகிறது. நீ கரிச்சுக்கொட்டிய ஷண்முகநாதனும் எனக்கு ஒரு நல்ல ரெடிமேட் சாய்ஸ்தான். ஒரு பொறுப்புள்ள நல்ல கணவராகவும், நல்ல அப்பாவாகவும் தன்னை நிரூபித்தவர் அவர். ஆனால் அவர் என்னை மணந்து கொள்ள ஒப்புக் கொள்வாரா என்பது எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு எபிடோம் ஆ•ப் சோ•பிஸ்டிகேஷன்.

நம் திருமணத்திற்கு என் வீட்டிலிருந்து போட்ட நகை, கொடுத்த பணம், பண்ட பாத்திரங்கள் எல்லாம் உன்னிடமே இருக்கட்டும். சட்டா£தியான நடவடிக்கைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. உனக்கு வேண்டுமென்றால் அது உன் விருப்பம். நல்ல வேளையாக நமக்கு குழந்தை இல்லை.

நாம் படித்தவர்கள். ஊரைக்கூட்டி பஞ்சாயத்துப் பண்ணி அசிங்கப் படுத்தாமல், அமைதியாக, மிக நாகா£கமாக நாம் பிரிவது நமக்கு நல்லது.

சரண்யா

Print Friendly, PDF & Email

1 thought on “தேடல்

  1. நேர் கோட்டில் அமைந்துள்ள சிறந்த கதை. மனம் மற்றும் உடல் அழுக்கான ஆண்களுக்கு சரியான சவுக்கடி. கதை படித்தவுடன் கதாசிரியரை நான் தொலைபேசியில் வாழ்த்தினேன்.
    ஜனனி ராம்நாத், திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *