மின்சார ரயில் இந்திரா நகரில் வந்து நின்றது. கூட்டம் அலைமோதினாலும் பெண்களுக்கான பெட்டியில் வழக்கம் போல் கூட்டம் இல்லை. ரயில் கிளம்பிய சில நிமிடங்களில், தட தடவென ஒரு சத்தம். எல்லோரின் கவணமும் சிதைந்து கீழே அமர்ந்து தட்டினை குச்சியால் தட்டிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் சென்றது.
அவளுக்கு முப்பது வயதிற்கும் குறைவாகவே இருக்கும் என அவள் முகத்தின் பொழிவு சொன்னது. வண்ணமையமான புடவையும், நெற்றியின் பொட்டும், அணிந்திருந்த நகைகளும் வெறுமாநிலத்தவள் என நன்கு உணர்த்தியது. மற்றப் பெண்களெல்லாம் அவளேயே பார்த்துக் கொண்டிருக்க, ரேவதி மட்டும் நடுவில் நின்று ஆட ஆரமித்த சிறுமியை கவணித்தால்,.
ஒல்லியான தேகம். கையில் ஒரு வளையம். என்னச் செய்யப் போகிறாள் என நினைக்கும் முன்னே உடலை வளைத்து வளையத்திற்குள் நுழைத்து வித்தை காட்டினாள். பெண்கள் சிலர் ரசித்து கைதட்டினார்கள். ரேவதிக்கு அருகில் இருந்த அரசாங்க ஊழியை “இதுங்களுக்கு வேற வேலையே இல்லை. காலங்காத்தால இந்த தரித்திரங்கள பார்க்காம வேலைக்கே போகமுடியல” என கரித்துக் கொட்டினாள்.
ரேவதிக்கு அவள் குழந்தையைப் பற்றி நினைவுகள் வந்தன. இந்நேரம் அவள் பள்ளிக் கூடத்தில் இருப்பாள் என மனதைத் தேற்றிக் கொண்டாள். அந்தக் குழந்தை இப்போது குரங்கினைப் போல குட்டிக்கரணம் அடித்துக் கொண்டிருந்தாள். ரேவதிக்கு அதற்கு மேல் அதைக் காண சகி்க்க முடியவில்லை. ஓடிச்சென்று அந்தக் குழந்தையை அனைத்தபடி அழுதாள். எல்லோருக்கும் ஒன்றும் புரியவில்லை.
அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்தாள். அவள் கையில் நூறு ரூபாய் திணிக்க, அவள் திகைத்துப் போனாள். ரயில் அடுத்த நிருத்தத்தில் நிற்க, ரேவதி அழுதபடியே இறங்கினாள். மகளிர் பெட்டியில் இருந்த எல்லோரும் புரியால் நிற்க,. “நம்ப மட்டும் இந்த தொழிலுக்கு வரலையின்னா நம்ப குழந்தைக்கும்…”, அவளை அழைத்துச் செல்ல காத்திருந்த வாடிக்கையாளரிடம் சென்றாள்.
கதைக் காரணம் –
தங்களுடைய வயிற்றுக்காக குழந்தையை வைத்து வி்த்தை காட்டி வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள் பலர். சிலர் தங்களின் மானத்தை விற்று குழந்தைக்கு வழிகாட்டுகின்றார்கள்.
அங்கிகாரமில்லாத ஆபத்தான தொழிலில் குழந்தைகளுக்கு ஈடுபடுகின்ற தாயை, விவரமறிந்த குழந்தைகள் வெறுக்கின்றன. நடு பகலில் குழந்தையை கத்தியால் கீறி கிடைக்கும் பணத்தில், டாஸ்மார்க்கிக்கு செல்லும் பெற்றோர்களை நான் வெறுக்கின்றேன். நீங்கள் எப்படி?.