தாயைப்போல் பெண்ணா…

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 8,769 
 

“”ரேணு… எத்தனை தடவை கூப்பிடறது… காது என்ன செவிடா?”
அப்பாவின் கத்தல், ஊரைப் பிளந்தது.
“”இல்லீங்க… குக்கர் சப்தத்தில கேக்கலை.”
“”அந்த துண்டை எடுத்துக் குடு.”
அப்பாவின் கைக்கெட்டும் தூரத்தில், அவர் கால் கீழ் விழுந்து விட்ட துண்டை எடுத்து, பவ்யமாக கொடுத்து விட்டு, சமையலை கவனிக்க திரும்பினாள் ரேணு.
“”என்ன அவசரம். ஆபீசுக்கா போகப் போறே… நல்லா, “ஸ்டிராங்கா’ ஒரு கப் காபி போட்டு, எடுத்து வா.”
அம்மா கீழ்ப்படிந்தாள்.
புவனாவுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து, அப்பா அதட்டுவதும், அம்மா பணிந்து போவதும் சகஜமாகிப் போன விஷயம். அன்றைய தேதி பதினாறாக இருக்கும். “ரேணு… அந்த இரண்டாம் தேதி பேப்பரை எடுத்துக் கொடு…’ என்பார்; அம்மா பொறுமையாக தேடி எடுத்துக் கொடுப்பாள்.
தாயைப்போல் பெண்ணா...“இந்த, “ஷர்ட்’ பட்டனைத் தைக்க உனக்கு பொழுதில்லை போலிருக்கு…’
“வெந்நீர் சரியா விளாவி வச்சிருக்கியா?’
“என் சீப்பு எங்கே காணோம்?’ (அதே இடத்தில் தான் இருக்கும்.)
“ரேணு… முந்தாநாள் ஒரு கல்யாணப் பத்திரிகை வந்ததே… அந்த கல்யாணம் எத்தனாம் தேதி?’ ரேணுவாகப்பட்ட மனைவி, திருமணத் தேதியை நினைவு வைத்து, “கரெக்டா’க சொல்ல வேண்டும். இல்லையென்றால், “இந்த வீட்டில் எல்லா எழவையும் (பாருங்களேன் கல்யாண நிகழ்ச்சியை எழவு என்பதை.) நான்தான் பார்க்கணும்…’ என்பார்.
புவனா யோசித்தாள். “அப்படி என்னவெல்லாம் பொறுப்பாக செய்கிறார் அப்பா. காலையில் எழுந்து காபி குடிக்கிறார். பேப்பர் படிக்கிறார். குளித்து சாப்பிட்டுவிட்டு பத்து மணிக்கு ஆபீசுக்கு போய்விட்டு, மாலை ஐந்து மணிக்கு திரும்புகிறார். மாலை வந்தவுடன் டிபன், காபி. பிறகு சிறு தூக்கம். இரவு பலகாரம், தூக்கம்.
“கரன்ட் பில் கட்டுவது, காய்கறி வாங்குவது, மளிகை சாமான்களுக்கு, “லிஸ்ட்’ போட்டு சரி பார்த்து வாங்குவது, வங்கிக்கு சென்று பணம் எடுப்பது, காஸ் சிலிண்டருக்கு போன் செய்வது, பால் கணக்கு எழுதி வைப்பது, என் படிப்பு, அப்பா ஆபீஸ் கிளம்பத் தேவைகள், இத்துடன், டிபன், காபி, சமையல், ஊறுகாய், பொடி வகைகள், பட்சணங்கள் செய்வது, இட்லி மாவு அரைப்பது என்று அம்மாவின் வேலைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்…’
பிள்ளை ரகு நந்தனுக்கு வேலை கிடைத்து வேற்றூர் போகவும், புவனாவின் பட்டப் படிப்பு முடியவும் சரியாக இருந்தது. புவனாவுக்கு வரன் வேட்டை ஆரம்பமானது. அழகான, நல்ல படிப்பு, நல்ல சம்பளம் எல்லாம் கூடி வர, வாசுவுக்கும், புவனாவுக்கும் திருமணம் முடிந்தது.
அன்றே, தன் மனதுக்குள் ஒரு தீர்மானம் செய்து கொண்டாள் புவனா.
புகுந்த வீட்டில், நாம் அனாவசிய மிரட்டலுக்கு பணியக்கூடாது. மாமியாராகட்டும், மாமனார், புருஷன், நாத்தனார் ஆகட்டும். அவர்களால் முடிகிற வேலையை, அவர்களுக்கு நேரம் இருந்தும் நம்மை ஏவினால், செய்யக் கூடாது. எல்லாவற்றையும் விட, அம்மா மாதிரி புருஷனுக்கு அடிமையாகக் கூடாது.
திருமணமாகி ஒரு மாதம் கழிய, காலை நேரம், “”புவனா என் சீப்பு எங்கே?” வாசு கத்தினான்.
“”அங்கேயேதான் இருக்கும். இல்லேன்னா வேற சீப்பு எடுத்துக்கோங்க. எனக்கு ஆபீசுக்கு நேரமாச்சு.”
“”உனக்கு பத்து மணிக்குத்தானே போகணும். கொஞ்சம் தேடிக் கொடு.”
“”முடியாது. உங்களுக்கு கை, கால், கண் எல்லாம் நல்லாதானே இருக்கு. தேடி எடுத்துக்கலாம்.”
“”என்ன ரொம்ப வாய்த் துடுக்கா பேசறே. உங்கப்பா மாதிரி அதட்டி உருட்டணுமா?”
“”இந்த புவனா தேவையுள்ளவர்களுக்குத் தான் உதவி செய்வாள். தேவையில்லாதவர்களுக்கு உதவி செய்து, அவர்களை சோம்பேறியாக்க மாட்டாள். நீங்கள் எப்படி என்னை அதட்டினாலும், மிரட்டினாலும் இதுதான் என்னுடைய கொள்கை.”
“”நீ இப்படியெல்லாம் பேசறதா இருந்தா, எனக்கு உன்னுடன் சரிப்பட்டு வராது,” கொதித்தான் வாசு.
“”நேத்து, நான் ஆபீஸ் கிளம்ப தாமதமாகி விட்டது. பஸ் அஞ்சு நிமிஷத்துல வந்துரும். நீங்க அரை நாள், லீவு போட்டிருக்கீங்களே, பஸ் ஸ்டாப் வரை கொண்டு விடுறீங்களான்னு நான் கேட்டதற்கு, நீங்க சொன்ன பதில் நினைவிருக்கா… “அவரவர் அலுவலக நேரப்படி, அவரவர் சரியாக கிளம்பணும். எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. நீ வேண்டுமானா அரை நாள் லீவு போடேன்னீங்க.
“”அதுவரை நல்லாத்தான் நடமாடிட்டு இருந்தீங்க. என் ஆபீசில், “ஆடிட்டிங்’ங்கறது உங்களுக்கு தெரியும். சரின்னு பஸ் ஸ்டாப் வரை நான் ஓடவும், பஸ் வரவும் சரியா இருந்தது. ஒரு வழியா பஸ்சில் சீட்டைப் பிடித்து உட்கார்ந்து, வெளியே வேடிக்கை பார்த்தவளுக்கு, நீங்க <உங்க நண்பரை பின் இருக்கையில் <உட்கார வைச்சு ஸ்கூட்டர்ல போய்க் கொண்டிருந்தது கண்களில் பட்டது. நான் அவசரத் தேவைக்குத் தானே உங்க உதவியை கேட்டேன்.”
“”இதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு, மனசுல வச்சிருக்கியே… இன்னிக்கு, <உங்கப்பாவுக்கு போன் போட்டு, உன் மரியாதை இல்லாத நடத்தை பத்தி சொல்லப் போறேன்.”
“”நீங்க என்ன சொல்றது. நானே ஆபீஸ் முடிஞ்சு அங்க போகப் போகிறேன். நீங்களும் வர்றீங்களா?”
“”நான் வரலை.”
வீட்டுக்குள் நுழையும் போதே, அம்மாவின் குரல் கேட்டது.
அம்மாவின் உரத்த குரலையே கேட்டறியாத புவனா, திகைத்து நின்றாள்.
“”இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படிக் கூச்சல் போடறே ரேணு?” அப்பாவின் இந்த மாதிரியான தாழ்ந்த குரலையும் புவனா கேட்டதில்லை.
“”பின்னே என்ன… எப்பப் பார்த்தாலும், “இதை செய், அதை செய்’ன்னு ஓயாம வேலை வாங்கினால், நான், “டிவி’ பார்க்க, புத்தகம் படிக்கன்னு ஒரு, “சேஞ்ச்’ வேண்டாமா… புவனா இருந்த வரைக்கும் சரிதான். அவளை பெண் பாக்க வர்றவங்க, “தாயைப் போல புள்ள… நூலைப் போல சேலை’ன்னு, என்னைப் பார்த்து எடை போட்டுத் தான் பெண் எடுப்பர். அவளுக்குத்தான் நல்லபடியாக கல்யாணம் நடந்துடுச்@ச. இன்னும் என்ன? இனி, உங்களால் முடிஞ்ச வேலைகளை நீங்களே செஞ்சுக்க பழகுங்க!”
தாயின் பேச்சுக்கு கை தட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் புவனா.
“”அம்மா… இப்பதான் நீ என் உள்ளங்கவர்ந்த அம்மா… அப்பா, ஆபீசில் வேலை செய்யறார். நீ வீட்டில் வேலை செய்றே. அதனால, அவரவர் தங்களால் முடிஞ்சவரை, தங்கள் வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்ற என் கொள்கைக்கு, இப்பதான்மா நீ வந்திருக்கே… ஆனா, நீ என்ன சொன்னே… என் கல்யாணம்… உன்னைப் பாத்து எடை போட்ட அப்பறம், பெண்ணை, “செலக்ட்’ பண்ணுவாங்கன்னு சொன்னே… அதுக்காகத்தான், நீ அப்பாவின் எடுபிடியாக இத்தனை நாள் இருந்திருக்கே… இதை எக்காரணத்தைக் கொண்டும், என்னால் ஒத்துக்க முடியாது…
“”நீ அடங்கி இருந்ததாலதான், கல்யாணத்துக்கு அப்பறம், ரொம்ப சுதந்திரமாக இருக்கணும்ன்னு எனக்கு எண்ணம் வந்தது. “தாயைப் போல புள்ள’ என்ற பழங்காலப் பழமொழி, உருவ ஒத்துமைக்குத்தான் ஓரளவு இந்தக் காலத்தில் செல்லுபடியாகும்.
“”நாளைக்கு, எனக்கு ஒரு பொண் பொறந்தா, நான் அவளுக்காக, என் தனித் தன்மையை விட்டுக் கொடுக்க முடியாதில்லையா… பெண் என்பவள், இப்போது வீட்டு வரை மட்டும் இல்லை… அதையும் தாண்டி புருஷனோட, பொருளாதார நிலையை பகிர்தல், அவனுடைய கவுரவத்தை உயர்த்தி, தானும் உயர்தல், சமூக நலன்களில் இருவரும் பங்கேற்றல் என்று, எத்தனையோ விதங்களில் அவனுடன் ஒன்றுபட்டு உயர்கிறாள்.
“”என் பெண் என்னைப் போல இருப்பாள் என்று கூற முடியுமா… யார் கண்டது. “நான் வேலைக்குப் போவதால், அவளுக்கு தாயன்பு குறைவதாகப் பட்டு, “நாம் நாளை திருமணம் செய்துண்டால், வீட்டிலிருந்து, குழந்தைகளை பிரியாமல் அன்புடன் இருக்க வேணும்…’ன்னு நினைச்சு, வீட்டிலேயே இருக்க வாய்ப்பு உண்டு. சரி… நாமெல்லாரும் இப்போ காபி குடிக்கப் போகிறோம். யார் போடப் போறது…”
“”நானே போடறேன்…”
“”நானே போடறேன்…” என்று மூவரும் கிச்சனுக்குள் நுழைய, அங்கே பெரிய சிரிப்பு சப்தம் வெடித்தது.
“”நானும் கூட காபி போட்டுத் தருவேன்,” என்று உள்ளே நுழைந்த வாசுவை அனைவரும் வரவேற்றனர்.
“”ஒன்று செய்யுங்கள். அப்பாவும், மாப்பிள்ளையும் டிகாஷன் போட்டு பால் காய்ச்சி வைக்கட்டும்… நானும், அம்மாவும் கரெக்டா கலந்து குடுக்கறோம்,” என்று புவனா சொல்ல, அங்கே கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது.

– வேதாத்மா (ஜூலை 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *