செலவுக்கு ஒரு சிகிச்சை!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,016 
 

சாலையோரமாக நடந்து கொண்டிருந்தார் சொக்கலிங்கம். கார் ஒன்று, அவரை உரசியவாறு வந்து நின்றது; திடுக்கிட்டு விலகினார். பிறகுதான் தெரிந்தது, அது, முத்தரசு அண்ணனுடைய கார் என்று.
கண்ணாடியை இறக்கி, சொக்கலிங்கத்தைப் பார்த்த முத்தரசன், “”என்ன சொக்கா… நடந்து போற… சைக்கிளை வித்துட்டியா?” என்று கேட்டார்.
புது காரிலும், முத்தரசன் போட்டிருந்த உடையிலும், அமெரிக்க பணம் டாலடித்தது.
செலவுக்கு ஒரு சிகிச்சை!“”இல்லைண்ணா… சைக்கிள் டயர் பஞ்சர்; கடையில் விட்டிருக்கேன்… நல்லாயிருக்கீங்களா… அண்ணி நல்லா இருக்காங்களா… ரகு அமெரிக்காவிலிருந்து பேசுறானா… எப்ப ஊருக்கு வர்றானாம்?”
“”எல்லாத்தையும் ரோடுல வச்சே பேசுவியா… உள்ளே வா… உன்கிட்ட ஒரு சமாச்சாரம் பேசணும்.”
சங்கடமாக ஏறி, உடம்பை ஒடுக்கி உட்கார்ந்தார் சொக்கலிங்கம்.
“”உன் வாழ்நாளில் முதல்முதலா கார்ல ஏர்ற… ஒரு காருக்கே சொந்தக்காரனாயிட்டேன் நான். பாவம்… உன்னால என்ன பண்ண முடியும். நீ ஏழை; ஓடி, ஓடி நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்கற… உன் மகனோ, அதே சம்பளத்துக்கு இரும்படிக்கிறான்… அரை வயிறு சாப்பிடவே, உன்னைப் பிடி, என்னைப் பிடின்னு இருக்கும். இதுல உங்களுக்கு வீண் ரோஷம் வேற…
“”அண்ணி என்னமோ சொன்னாள்ன்னு வீட்டுப் பக்கம் வர்றதே இல்லை. ரகு அமெரிக்கா கிளம்பினப்ப, ஓட்டல்ல விருந்து வச்சோம்; வரலை. கார் வாங்கினதுக்கு ட்ரீட் வச்சோம்… புது நாய்க்குட்டிக்கு பர்த் டே கொண்டாடினோம்…
“”ஊர்ல பெரிய மனுஷங்கெல்லாம் வந்தாங்க. யார், யாரோ வந்து சாப்பிட்டுட்டு போறாங்க; நீங்க வர்றதேயில்லை… அது சரி… சும்மா வர முடியுமா? ஏதாவது கிப்ட் வாங்கிட்டு வரணும். அதுக்கு உங்களுக்கு வசதிப்படாதுன்னு ஒதுங்கிட்டீங்க… அப்படித்தானே?” என்றபடி காரை நகர்த்தினார்.
“”அப்படி இல்லைண்ணா… வரணும்ன்னு தான்… ஆனா, ஏதாவது வேலை வந்துட்டுது. அண்ணி சொன்னதை எல்லாம் மனசுல வச்சிக்கிறதில்லை. அலையடிச்சு அலை விலகுமா அண்ணா!”
“”நல்லாதான் பேசற. அப்புறம்… ரகுவுக்கு சம்பந்தம் தேடி வந்திருக்கு. கோயம்புத்தூர்ல பெரிய மில் அதிபர் வீட்டு ஒரே வாரிசு. கோடீஸ்வரி… பணத்திலும் சரி… பேரிலும் சரி… அடுத்த முறை ரகு வரும்போது, பேச்சு வார்த்தை முடிஞ்சுடும். அதுக்குள்ள அவங்களுக்கு தனி வீடு வாங்கணும்…”
“”இப்ப உள்ள வீடு பெரிசுதானே?”
“”ஆனாலும் பழசு… கோடீஸ்வர வீட்டுப் பெண்ணை, புது வீட்ல வச்சுதானே வரவேற்கணும். டபுள் பெட்ரூம் ப்ளாட்டா இருந்தாலும் சரி… தனி வீடாக இருந்தாலும் சரி… நீயும் பாரு… கமிஷன் கொடுத்திடுறேன்.”
“”கமிஷன் வாங்கிகிட்டு செய்ய, நான் புரோக்கரா அண்ணா? வீடு பார்க்கிறேன்…”
“”நீ ஏழைடா… கமிஷனா ஒரு தொகை கிடைச்சால் நல்லதுதானே…” என்றபடி சைக்கிள் கடை அருகே வண்டியை நிறுத்த, சொக்கலிங்கம் இறங்கிக் கொண்டார்.
கார் விருட்டென்று கிளம்பி விரைந்தது.
கார் மறைந்த பின்னும், அது, போன திசை பார்த்து நின்றார் சொக்கலிங்கம்.
பெரியப்பா மகனான முத்தரசனுக்கு கை ஓட்டை. எவ்வளவு பணம் வந்தாலும் நிற்காது. சின்ன வயதிலிருந்தே, சிக்கனம் அறியாத செலவாளி. அவருக்கு மனைவியாக வந்த பார்வதியும், கணவனைப் போலவே!
வங்கியில் பணிபுரியும் முத்தரசன், 30ம் தேதி சம்பளம் வாங்கி, வீடு வருவதற்குள், பாதி பணம் விரல் இடுக்கு வழியாக வழிந்து விடும். சிகரெட்டாகவும், ஓட்டல் சாப்பாடாகவும், சீட்டுக்கட்டு, சினிமா… என்று கரைந்து விடும். பத்து தேதிக்குள் சம்பளம் பஞ்சாய் பறந்து விடும்.
முன்னோர் கட்டி வைத்த வீடு இருந்ததால், வாடகை பிரச்னை இல்லை. ஊரில் நில புலன்கள் இருந்தது. குத்தகைக்கு விட்டிருந்தனர். அதிலிருந்து வந்த வருமானம், அவர்கள் கையை காய்ந்து போகாமல் காப்பாற்றிக் கொண்டிருந்தது.
போதுமான மழை இல்லாமல், விளைச்சல் குறைந்து, வருமானமும் குறைந்தது. குத்தகைக்காரர்கள் சில வருடங்களுக்கு முன், பயிர் செய்ய முடியாதென்று பின் வாங்கிவிட்ட நிலையிலும், முத்தரசன் அசரவில்லை. வருவாய் குறைந்து விட்டது என்பதற்காக, செலவை நிறுத்த முடியுமா?
நிலத்தை கொஞ்சம், கொஞ்சமாக விற்று செலவழித்தார்.
சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்று தெரிந்தும், “அண்ணா… எங்க அப்பா, அம்மால்லாம் எங்களுக்கு எதையும் சேர்த்து வச்சட்டு போகலை. கடவுள் கொடுத்த கையும், காலையும் வச்சி பிழைச்சிக்கங்கடான்னு விட்டுட்டு போயிட்டாங்க. உங்களுக்கோ… வீடு, நிலம், உத்யோகம்ன்னு வேண்டிய வசதியை பண்ணி வச்சிட்டு போயிருக்காங்க. நீங்க புதுசா சம்பாதிச்சு சேர்க்கலைன்னாலும், பெரியவங்க சம்பாதிச்சு வச்சதை அழிக்காமல் இருக்கலாமே!
“சொத்து போனால், சொந்தம் போகும்; ஊருக்குள்ள மதிப்பு போகும். இப்ப நல்லா பேசறவங்கெல்லாம், நீங்க எப்ப விழுவீங்கன்னு மனசால எதிர்பார்க்கிறவங்க. நாம கொஞ்சம் நிதானமா இருக்கணும். நீங்களும், செலவாளியா இருக்கீங்க; அண்ணியும், அப்படியே இருக்காங்க… இப்படியே போனால், ரகுவுக்கு மிச்சமிருக்காது…’ என்று, அறிவுரை கூறுவார் சொக்கலிங்கம்.
இப்படி பேசுவதால், அவர்கள் கோபத்துக்கு ஆளாவதுதான் மிச்சமாக இருந்தது.
“கூந்தல் உள்ளவ முடிஞ்சுக்கிறாள். மொட்டை தலைச்சிக்கு ஏன் பொறாமை… எல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க எல்லாம் வந்து அறிவுரை சொல்ற அளவுக்கு நாங்க இல்லை!’ என்று, முகம் கடுத்தாள் பரிமளம். முத்தரசனும் அதை ஆமோதிப்பது போல் இருந்ததால், அந்த வீட்டுப் பக்கம் அனேகமாக போவதில்லை.
கண் எதிரிலேயே சொத்து கரைந்து, வீட்டின் பேரிலும் கடன் வளரத் துவங்கிய நேரத்தில்தான், முத்தரசனுக்கு உடம்புக்கு வந்து விட்டது. முன், பின் யோசிக்காமல், வேலையை ராஜினாமா செய்து விட்டார்.
நல்ல வேளையாக அவர்கள் மகன் ரகு கை கொடுத்தான். ரகு, ஒரு வரப்பிரசாதம்தான். நன்றாக படித்தான்; மெரிட்டில் கல்லூரியில் சீட் கிடைத்தது. அபாரமான மார்க். ஸ்காலர்ஷிப் உள்ளிட்ட உதவித் தொகைகளைக் கொண்டு வந்தது. படிக்கும் போதே, கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, எஞ்சிய படிப்பை கம்பெனி செலவில் படித்து, கடைசி செமஸ்டர் எழுதிய கையோடு, பெங்களூருவில் வேலைக்கு சேர்ந்து விட்டான். ஆறு மாதத்திற்குள், அமெரிக்கா அனுப்பப்பட்டான் ரகு. முக்கியமான, பெரிய வேலை. ஒவ்வொரு மாதமும் லட்ச ரூபாய் டிராப்ட் அனுப்பினான்.
புது கார், வேலையாட்கள், வீடு நிறைய விதவித அலங்காரப் பொருட்கள். பார்ட்டி, <லூட்டி, படாடோபம் என்று கொண்டாடுகின்றனர். இது, எங்கு போய் முடியுமோ என்ற கவலையில், பெருமூச்சு வந்தது. ""என்ன சார்... எதையோ மறந்தவர் மாதிரி யோசிச்சுகிட்டு நிக்கறீங்க?'' சைக்கிள் கடைக்காரர் குரல் கொடுக்கவும், நினைவுக்கு திரும்பிய சொக்கலிங்கம், ""ஒண்ணுமில்லை... சைக்கிள் ரெடியாயிடுச்சா?'' ""எப்பவோ தயார். யார் சார் கார்ல, உங்க அண்ணன் தானே... வசதி மேல வசதி போல... உங்களை ஏதாவது கவனிக்கிறாரா சார்?'' ""அவர் நல்லாயிருந்தால் போதாதா...'' என்றபடி சைக்கிளை உருட்டினார். சொக்கலிங்கத்துக்கு, வீடு தேடி பழக்கமில்லை. அண்ணா சொன்னாரே என்பதற்காக, கொஞ்சம் மெனக்கெட்டு தேடினார். மனைவி, மகனிடமும் சொல்லி வைத்தார். ஒரு மாதத்துக்கு பின், ஒரு இடம் தட்டுப்பட்டது. சொல்வதற்காக முத்தரசுவை தேடிப் போன போது, அவர் மொபைல் போனில் யாரிடமோ கோபப்பட்டுக் கொண்டிருந்தார். ""என்னய்யா... அதான் சொன்னேனே... ஒண்ணாம் தேதிக்கு மேல கொடுக்கிறேன்னு... பில் தொகை எவ்வளவு... லட்சமா, கோடியா? ஆப்ட்ரால் பனிரெண்டாயிரம் ரூபாய். தராம ஓடியா போயிருவேன். தினமும் போன் பண்ற... வழக்கமா வர்ற டிராப்ட் இன்னும் வந்து சேரலை. மகனுக்கு சொல்லியிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல வரும். அப்ப வந்து மொத்தமா வாங்கிக்க... சரியா!'' என்று கடுமை காட்டினார். காரை நிறுத்த, போர்டிகோ எழுப்பும் வேலை, பாதியில் நின்றிருந்தது. வேலைக்காரர்களைக் காணவில்லை. அண்ணிதான் வேண்டா வெறுப்பாக தண்ணி கொடுத்தாள். அவள் முகம் இறுக்கமாக இருந்தது. "எந்த பாவி கண் பட்டுதோ... அவங்க நாசமா போக...' என, காதுபட முணுமுணுத்தாள். அண்ணனிடம் வீடு பார்த்த விஷயத்தை சொல்லவும், ""கமிஷன் கொடுக்கறேன்னதும், ஆர்வமா தேடி பிடிச்சிருக்கே... ஆனால், உனக்கு அதிர்ஷ்டமில்லை. வீடு வாங்கற திட்டத்தை இப்போதைக்கு நிறுத்தி வச்சிருக்கோம். நேரம் சரியில்லைன்னு ஜோசியர் சொன்னார்... பிறகு சொல்லி அனுப்பறேன்... பாவம் கை நிறைய கமிஷன் கிடைக்கும்ன்னு ஆசை ஆசையா ஓடியாந்திருக்கே... இந்தா இதை வச்சிக்க...'' என்று சில நூறு ரூபாய்களை கொடுக்க வந்தார் முத்தரசன். அதை வாங்க மறுத்து எழுந்தார் சொக்கலிங்கம். ஏதோ சுருதி குறைவதை உணர முடிந்தது. அது என்ன என்பதுதான் புரியவில்லை சொக்கலிங்கத்துக்கு. அப்போது, விசாரித்தாலும் பதில் சொல்வர் என்று எதிர் பார்க்க முடியாது என்பதால், அமைதியாக வந்து விட்டார். சில வாரங்களுக்கு பின் வந்த தகவல், அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருந்தது. ""உண்மைதான்பா... ரகுவுக்கு வேலை போயிட்டுது!'' என்றான் சொக்கலிங்கத்தின் மகன் கதிர். ""அவனுக்கு கடுமையான மன அழுத்த நோய் ஏற்பட்டிருக்கு. சிக்கலான பெரிய புராஜக்ட் கொடுத்திருக்காங்க... இரவு - பகலாய் ஆறு மாசம் தொடர்ந்து வேலை பார்த்து, புராஜக்ட் முடிச்சு கொடுத்திருக்கான். அவன் தான் டீம் தலைவன். எல்லாரையும் கட்டி மேய்ச்சு, வேலை வாங்கி, குறிப்பிட்ட நாளுக்குள்ள புராஜக்ட்டை முடிக்க வேண்டிய கட்டாயம்... ""அதனால், உடம்பை வருத்தி, நேரம் - காலம் பார்க்காம உழைச்சிருக்கான். வேலை பளு, தூக்கமின்மை, முறையான சாப்பாடு இல்லாமல் கடின உழைப்பு, இதெல்லாம் சேர்ந்து, அவன் மன நிலையை பாதிச்சிருக்கு... ""அங்க வச்சு சிகிச்சை பண்ணி, ஆறு மாசம் லீவ் கொடுத்து, உடம்பை சரி பண்ணிக்கிட்டு வந்து சேரச் சொல்லி, வீட்டுக்கு அனுப்பியிருக்காங்க... இப்போ இங்க ட்ரீட்மென்ட் நடக்குது. குணமானாலும், பழையபடி வேலைக்குப் போவானான்னு தெரியலை...'' ""இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்?'' ""ரகுவோடு படிச்ச பையன் ஒருவன், இங்க டைடல் பார்க்குல வேலை பார்க்கிறான். அவன் எனக்கு கொஞ்சம் பரிச்சயம். அவன் சொல்லித்தான் தெரியும்...'' ""வாங்க... போய் பார்க்கலாம்...'' என்று கிளம்பும் போது, வாசலில், ஆட்டோவில் வந்து நின்றார் முத்தரசன்; அவரின் முகம் வாடியிருந்தது. வாசலில் இருந்தபடியே, ""அவசரமா அம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுது. உன்கிட்ட இருக்க வாய்ப்பில்லைன்னு தெரியும். உனக்கு தெரிஞ்சவங்க யார்கிட்டயாவது வாங்கிக் கொடுக்க முடியமா... ப்ளீஸ்!'' என்று கேட்டார் முத்தரசன். எதற்கு என்று கூட கேட்காமல், வெளியில் விரைந்த சொக்கலிங்கம், பணத்தோடு திரும்பினார். ""யார் கிட்ட வாங்கினே... வட்டி எவ்வளவு? திருப்பி கொடுக்கறதுக்கு சில மாசங்களாகும்... பரவாயில்லையா?'' ""நிதானமா கொடுங்க... வட்டி வேணாம்; இது எங்க சொந்த பணம்தான்...'' என்று அடக்கமாக சொன்னார் சொக்கலிங்கம். முத்தரசன் முகத்தில் திகைப்பு. ""குறைவான வருவாய்தான். ஆனால், எவ்வளவு சம்பாதிச்சாலும், கால் பங்கை சேமிப்பில் போட்டு வச்சிருவோம். எந்த நேரம் எப்படியிருக்கும்ன்னு சொல்ல முடியாதில்லையா...'' என்று, சொக்கலிங்கம் சொன்னதும், பளாரென்று கன்னத்தில் அறை வாங்கியது போலிருந்தது அவருக்கு. ஒரு நொடியில் பொறுப்பில்லாமல், ஊதாரியாக வாழ்ந்த மொத்த காலமும் மனதில் வந்து அவரை பரிகாசம் செய்தது. கண் கலங்க நிமிர்ந்தார். ""பையனோட வைத்தியச் செலவுக்குத்தான் பணம் தேடி வந்தேன். தம்பி... நீ எனக்கே வைத்தியம் பார்த்துட்டேடா... சத்தியமா இனிமே, வீண் செலவு செய்ய மாட்டேன்டா... ஆடம்பரத்தை விட்டுடுடறேன். திருந்திடறேன்டா... எத்தனையோ முறை சொல்லியிருக்கே... அப்போல்லாம் நான் கேட்கவில்லை. இப்ப கேட்காமல் போனால், நான் மனுஷனே இல்லை... ரொம்ப நன்றி!'' என்று கும்பிட்டுவிட்டு, ஆட்டோவில் ஏறினார் முத்தரசன். அவரை, அனுதாபத்துடன் பார்த்தபடி நின்றது சொக்கலிங்கத்தின் குடும்பம். - பிப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *