கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 30,119 
 

சித்ராவின் கல்யாணத்துக்காக மிக உற்சாகமாகத் துவங்கிய பயணம் மெள்ள மெள்ள ஒரு கெட்ட கனவாக மாறியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஆயிரத்தெட்டு ரயில்களும், பஸ்களும் இருக்க, இவருக்கு, எல்லாருக்குமே பிக்னிக் போல காரில் போகலாம் என்று தோன்றியது விதிதான்.மூர்த்தி வீட்டில் அம்மா ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாதது என்று சொல்லி விட்டாள். “எல்லோருமே மாருதியில் போக முடியுமா?” என்று சொல்லிப் பார்த்தேன். “முன்னால் ஜெயந்தியும், அவள் மடியில் குமாரும் உட்காரட்டும். பின்னால் நீ, அம்மா, பாலாஜி. அவ்வளவுதானே “ என்று எளிதாகச் சொல்லி விட்டார்.”எல்லாம் சரிதான் அப்பா. பயணம் பூரா பாபநாசம் சிவன் பாட்டாகப் பாடி அறுப்பீங்களே…” என்று சிரித்தாள் ஜெயந்தி. என்னைத் தவிர எல்லோரும் உற்சாகமாக இருந்தார்கள். எனக்கென்னவோ இந்தப் பயணத்தில் எச்சரிக்கை இருப்பது போல வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி பறந்தது. முதல் குழந்தை பிறந்து இறந்தபோது பறந்த அதே பட்டாம்பூச்சி. சொன்னால் என்மேல் பாய்வார் என்று உற்சாகத்தில் கலந்துகொண்டேன். இரண்டு நாளைக்கு அதிக சாமான் கட்ட வேண்டாம் என்று பார்த்தால் எட்டு அயிட்டமாகி விட்டது.எங்கள் குடும்பத்தைப் பற்றி உங்களுக்கு ஐடியா கிடைத்திருக்கும். மூத்தவள் ஜெயந்தி. மகாராணி காலேஜில் பி.ஏ. கார்ப்பரேட் படிக்கிறாள். அப்புறம் பாலாஜி பிளஸ் டூ. அப்புறம் நீண்ட இடைவெளிக்கப்புறம் ஒரு அசந்து மறந்த ராத்திரியால் பிறந்த குமார் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட். அம்மா என்று நான் அழைப்பது என் மாமியாரை. அம்மாவுக்கும் பிள்ளைக்கும் சரிப்பட்டு வராது. பத்து நிமிஷத்துக்குள் சண்டை வந்து விடும். “இந்த முசுடுடன் எப்படிக் குடித்தனம் பண்ணுகிறாயோ… எனக்கென்ன தலைவிதியா ? இதோ மூர்த்தியிடம் போகிறேன்” என்று சொல்வாளே தவிர போக மாட்டாள்.“எதற்கெடுத்தாலும் ரெண்டு அர்த்தம் வச்சுப் பேசி மூஞ்சியைக் காட்டினா யார் அவகிட்ட இருப்பா ?” இத்தனைக்கும் மூர்த்தியின் மனைவி ரமாமணி நல்லவள்தான். கொஞ்சம் படபடவென்று பேசி விடுவாள். (‘அந்த கிழத்துக்கு நீதாம்மா சரி’). சில சமயம் ரொம்பப் பிடிவாதம் பிடித்தாலும் சோதித்தாலும் எனக்கு அம்மாவுடன் எந்தப் பிரச்னையும் இல்லை. கணவருக்குத்தான்!

எப்போதும் எங்களுடன்தான் இருந்தாள். எழுபது வயதுக்கு நல்ல ஆரோக்கிய தேகம்… கொட்டைப் பாக்கு வைரத் தோட்டைக் கழற்றாமல் காது தொங்கிப் போயிருந்தது. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. கணவர் இறந்தபோது சொல்லிட்டுப் போயிருக்கிறாராம். எனக்கு அவர்கள் குடும்பத்தில் கெட்ட பெயர். எல்லாம் சொத்து நகைக்குத்தான் அவளை வைத்துக் கொண்டாடுகிறேனாம். நான் கவலைப்படுவதில்லை.

அதிகாலை புறப்பட்டோம். எங்கள் கார் சிவப்பு மாருதி. போஸ்ட் ஆபீஸ் சிவப்பு. இந்த வண்ணம் அத்தனை முக்கியத்துவம் பெறப் போகிறது என்று தெரிந்திருந்தால் இரவோடிரவாக மாற்றியிருப்போம்.

முதல் நாளே காராஜ் போய் பாட்டரி லெவல், ஃபேன்பெல்ட் ஸ்டெப்னியில் காற்று எல்லாம் பார்த்துவிட்டு வந்தார். பாலாஜிக்குக் கொஞ்ச தூரம் ஓட்ட ஆசை.

“அப்பாகிட்ட சொல்லும்மா. ஹைவே தானேம்மா… சொல்லும்மா” என்று நச்சரித்தான்.

“நீயே கேளேன்!”

“தரமாட்டார். அப்பாவைவிட நல்லா ஓட்டுவேன்” என்றான்.

ஓட்டப் போகிறான் என்று அப்போது தெரியவில்லை. என் கணவர் வேகமாக ஓட்ட மாட்டார். “ராமு, மெள்ளப்பா ராமு! ஒண்ணும் அவசரமில்லை. ஒவ்வொரு முறையும் லாரியைத் தாண்டும் போது எனக்குப் படபடன்னு வரது” என்றாள் அம்மா.

“மெள்ளத் தாம்மா போயிட்டிருக்கேன்.”

‘தத்வ மறிய தரமா’ என்று பாட ஆரம்பித்தார். “ராமு ஒண்ணு ஒட்டு. இல்லை பாடு… ரெண்டும் வேண்டாம்ப்பா…” சொல்லிவிட்டு,

“காஸெட் போடுறி” என்றாள் அம்மா.

‘அடடா அல்வாத் துண்டு — இடுப்பு உன் இடுப்பு , அழகா பத்திக்கிச்சு நெருப்பு தூள் கிளப்பு….’

“என்னடா பாட்டு இது ?”

“பாட்ஸ்… இப்ப எல்லாப் பாட்டும் இப்படித்தான் இருக்கு. ‘மெட்டாலிக்கா’ கேக்கறியா, தூளு..” என்று பாப் சங்கீதம் போட்டான்.

“என்ன இது ராட்சசர்கள் பாடறா அடித்தொண்டையிலே ? ஏம்மா திருவரங்கம்னு ஒரு காஸெட் இருந்ததே…”

“அதை பாலாஜி ஒளிச்சு வெச்சுட்டான் பாட்டி” என்றான் குமார்.

“பாட்டி, நான் ரைம்ஸ் சொல்லட்டுமா ? பாட்டகேக் பாட்டகேக் பக்கர்ஸ் மேன்” என்று ஆரம்பித்த குமாரை வேண்டாம் என்று குடும்பமே ஒரே குரலில் அதட்டியது.

“குழந்தை ஆசையா பாடறேங்கறது…பாடட்டுமே!”

“பாட்டி, சூச்சூ வரது. அப்பாவை நிறுத்தச் சொல்லு” என்றான் சிறுவன்.

“பேசப்படாது, சித்தூர் போறவரை…”

“எனக்குக்கூட போகணும் ராமு…. கொஞ்சம் நிறுத்து காரை.”

“என்னம்மா ! புறப்படற போதே ப்ளாடரை காலி பண்ணுங்கன்னு எல்லாருக்கும் சொன்னேனா இல்லையா ?”

“அப்பவும் போனேன். இப்பவும் வரதே…. என்ன பண்ண ?”

“சித்தூர் பக்கத்துல பிரேக்ஃபாஸ்டுக்கு நிறுத்தறேன்… அங்க போய்க்கலாம்.”

“இப்ப நிறுத்தப்போறியா இல்லை இந்த சீட்டிலேயே போயிடவா ?”

“ஐயோ! ரோதனைம்மா உன்னோட. எங்க போனாலும் லக்கேஜ் மாதிரி கூட வந்தாகணுமா? மூர்த்தி கிட்ட இரண்டு நாள்…இரண்டே நாள் இருக்கக் கூடாதா ? என்ன ஒரு தாயார் நீ ?”

அம்மா மௌனமானாள்.

“அழாத பாட்டி” என்றான் குமார். “சூச்சூ வந்தா அடக்கிக்கோ பாட்டி!”

சட்டென்று ப்ரேக் போட்டு நிறுத்தினார்.

“எல்லாரும் போங்கோ” என்று வெடித்தார். நான் அவரைக் கண் கொட்டாமல் பார்த்தேன். என் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஒரே ஆயுதம் அது. அம்மாவைக் கைத்தாங்கலாக அழைத்துப் போனோம். சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“ஏண்டா, பொட்டைக் காட்டுல நிறுத்தினா எப்படி ? மறைவா ஒரு இடம் பார்க்க மாட்டியோ… புதர்ல இறங்கினா பாம்பு பிடுங்கும்!”

“உனக்காக ஜனானா கட்ட முடியாதும்மா…”

ஜெயந்தியும் நானும் பவானி ஜமக்காளத்தை திரைபோலப் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அப்புறம் மர நிழலைப் பார்த்து நிறுத்தி ஜமக்காளத்தை விரித்து இட்லி சமாசாரங்களைப் பிரித்து எல்லோரும் சாப்பிட்டோம். அம்மா “மோர் இல்லையா ?” என்றாள்.

நான் பதட்டத்துடன் அவரைப் பார்த்தேன்.

“திஸ் இஸ் தி லிமிட்! அம்மா மோர் இல்லை” என்றார் சுருக்கமாக.

“பக்கத்தில் கடை கண்ணி இல்லையா லட்சுமி. நான் மோர் சாப்பிடுவேனே தெரியாதா உனக்கு ? “ என்றாள்.

“பாரும்மா இன்னிக்கு ஒரு நாள் எங்களை மன்னிச்சுடு! பூந்தமல்லி வந்த கையோட உனக்குன்னு ஆச்சி மோர் ஆறு பாக்கெட் வாங்கித் தரேன். பொறுத்துக்கம்மா…”

“ராமு, எதுக்காக இவ்வளவு கோபப்படறே ? நான் லட்சுமியைத்தானே கேட்டுண்டிருந்தேன் ?”

“ரொம்ப லொள்ளு பண்றேம்மா நீ, ஏதோ போற இடத்துலே கோ ஆப்பரேட் பண்ணாம!”

“மோர் இருக்கான்னு கேட்டது தப்பா ?”

“ஆமாம்! ரொம்ப டென்ஷன் பண்ற என்னை நீ.”

“உனக்கு ஆஃபீஸ்ல வேற ஏதோ கோபம்னு நினைக்கிறேன்.”

“ஆமாம்… மெட்ராஸ் வரைக்கும் வாயை மூடிண்டு சும்மா வரயா ?”

“அப்படியே உங்கப்பா” என்றாள். இதற்கு மூர்த்தி பரவால்ல. அந்தப் பிசாசு இல்லைன்னா அங்க போய் இருந்துக்கலாம். சாக்கடைக்குப் போக்கிடம் ஏது ?” என்றாள் அழுகைக் குரலில்.

“அம்மா” என்று அதட்டினார். வாய் தவறிப் போய், “இந்த மாதிரி தொண தொணன்னு ஆரம்பிச்சே, இங்கேயே விட்டுப் போயிடுவேன்” என்றார்.

“விட்டுட்டுப் போயேன். எனக்கு என்ன பயமா ? என்னால தனியா சமாளிக்க முடியாதுன்னு நெனைச்சியா ? உங்கப்பா என்னை விட்டுட்டுப் பரலோகத்துக்கே போயிட்டார் இருபத்துநாலு வயசில!”

“ஐயோ! அதை ஆயிரம் தடவை சொல்லியாச்சும்மா….”

அம்மா அதைக் கவனிக்காமல், “ரெண்டு குழந்தைகளையும் வெச்சு வளர்க்கலையா ? விட்டுட்டுப் போயேன். யாரையாவது அப்பா தாயேன்னு கெஞ்சி லாரியைப் பிடிச்சு ஏறிண்டு வந்துடுவேன். கோயில்ல போய் உக்காந்துக்கறேன். நன்றியில்லாத ரெண்டு பிள்ளைகளை வளர்த்தன்னு கையை நீட்டினா யாராவது உண்டைக்கட்டி போடறா!”

“பாட்டி… கட்டைவிரலை இப்டி உசத்தி காட்டினா லாரில ஏத்திப்பா பாட்டி” என்றான் குமார்.

நான் அவரைத் தனியா கூப்பிட்டு, “கொஞ்சம் பொறுமையா இருக்கக் கூடாதா …. அப்புறம் ஓட்டறதில் கவனம் போய்டும். அம்மா அப்படித்தான்னு தெரியாதா உங்களுக்கு ?”

“என்ன டென்ஷன் பண்றா பாரு.. திஸ் இஸ் தி லிமிட்! “

“பாலாஜி, நீ பாட்டி கிட்ட பேச்சு கொடுத்துண்டு இரு” இதனிடையில் அம்மா தனியாகப் போய் ஒரு கல்லில் உட்கார்ந்து கொண்டாள். விரோதமான திசையில் பார்த்துக் கொண்டு. எனக்கு சிரிப்புதான் வந்தது.

“அம்மா ஏதோ படபடப்பில் தப்பா பேசிட்டார்.”

“கோவிச்சுக்காத பாட்டி!”

“ஜெயந்தி! உன் வயசில இருக்கறப்ப எனக்கு ரெண்டு பிள்ளை கொடுத்துட்டுப் போய்ட்டார்.”

“எல்லாம் சரிதாம்மா வா” என்று அவள் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.

“நான் இனிமே பேசவே இல்லைப்பா! ராமு மாத்திரை சாப்ட்டியா ?”

“சாப்ட்டன்மா!”

பயணம் தொடர்ந்தது.

பகுதி 2:

“பாட்டி இந்த சீட்டுக்கட்டுல ஒரு சீட்டு எடுத்து பாத்து வெச்சுக்கோ!”

“பாத்தாச்சு… ஏழு ஆட்டின்!”

“எடுத்த கார்டை சொல்லாதே பாட்டி! நான் கண்டுபிடிக்கறேன்!”

“அம்மா, நீ சீட்டாடிருக்கியா?”

“நிறைய! உங்கப்பா சொல்லிக் கொடுத்திருக்கார். கழுதை ஆட்டம்தான். எப்பவும் நான்தான் தோக்கணும். தப்பித் தவறி ஜெயிச்சுட்டா கோவிச்சுண்டு ஒரு வாரம் பேச மாட்டார்!”

“அவர் எப்படி இருப்பார்மா…?”

“இதோ இவன் இருக்கானே.. இதே மூக்கு, இதே கோபம். நேரம் கொஞ்சம் குறைச்சல். என் கை பக்கத்திலே தன் கையை வெச்சுண்டு, ‘யார் சேப்பு, யார் சேப்பு’னு கேட்டுண்டே இருப்பார். கொஞ்ச நாளைக்கு இட்லர் மீசை வெச்சுண்டிருந்தார். அது என்ன மூக்குக்குக் கீழே என்னவோ கருப்பா இருக்கே, அழிங்கோன்னு வேடிக்கைக்குச் சொல்லி சிரிச்சுட்டேன். வந்ததே கோபம். கேலியா பண்றேன்னு பண்ருட்டிக்கு அடுத்த ரயிலேற்றி அனுப்பிச்சுட்டார். நானும் விட்டுக் கொடுக்கலை. உங்களுக்கா எப்ப தோன்றதோ அப்ப வந்து அழைச்சுண்டு போங்கோன்னு வந்துட்டேன். ரெண்டு பேரும் பிடிவாதம். உம்மாதிரி தழைஞ்சு போகவே மாட்டேன். ஒருவாரம் கழிச்சு ஓட்டல் சாப்பாடு சரிப்படலைன்னு வந்துட்டார். அப்பத்தான் உன்மாதிரியே முதல்து பொறந்து தவறிப் போனப்புறம் மூர்த்தியை உண்டானேன்! லட்சுமி, இவன் என் வீட்டுப் பிள்ளையா இருந்தாலும் சொல்றேன். நிறையப் படிச்சிருக்கே. பயப்படக்கூடாது! பணிஞ்சு பணிஞ்சு போறே. அதனாலே தான் இவன் இந்த எகிறு எகிர்றான். பயமே கூடாது!”

“இதப் பார்ரா, மாமியார் மருமகளுக்கு கொடுக்கிற உபதேசம்!”

“ஒண்ணே ஒண்ணுக்குத்தான் பயப்படணும். இருபத்து நாலு வயசிலே போய்ட்டாரே… மூர்த்திக்கு பத்து வயசு. இவனுக்கு எட்டு. பிறந்தவீடுன்னு கிடையாது. உலகமே இருட்டின மாதிரி இருந்தது. யோசிச்சேன். எதுக்காகப் பயப்படணும்? எதிர்காலம் தெரியாததனாலதானே பயம்? அப்பல்லாம் ஒரு நாளைக்கு என்ன செலவு… அஞ்சு ரூபாயா? எப்படியும் எச்சில் எலை எடுத்தாவது சம்பாதிச்சுடலாம்னு தைரியம் வந்துடுத்து. அண்ணாகிட்டயும் இல்லை. மன்னிக்கும் எனக்கும் சரிப்படலை. கிஷ்ணசாமி அப்பப்ப வந்து பார்த்துப்பார். எல்லாரும் கதை கட்டி விட்டா, நான் அவரை வச்சிண்டிருக்கிறதா? பயப்படலையே….எதுக்கு? மனசாட்சி ஒண்ணுக்குத் தான் பயப்படணும். தெளிவு இல்லாம இருந்தா பயம் வரும். தப்பு பண்ணா பயம் வரும்!”

“பாட்டி… யானை!” என்று குமார் கத்தினான். ரோட்டோரத்தில்

மணியோசையுடன் ஆடி அசங்கி ஒரு யானை சென்று கொண்டிருந்தது.

“கோயிலுக்குப் போறது! ராமு, நாம காஞ்சிபுரம் போயிட்டுத்தானே போறம்?”

“என்னது..? காஞ்சிபுரமா? இது என்ன புதுசா…?” என்றார்.

“லட்சுமி, நீ சொல்லலையா…?”

எனக்கு மறுபடி பயம் வந்தது. மற்றொரு சண்டையின் துவக்கம். என்னிடம் எதும் சொல்லவில்லை.

“காஞ்சிபுரமும் இல்லை. கீஞ்சிபுரமும் இல்லையம்மா…”

“போறப்ப வந்து வரதராஜப் பெருமாளை சேவிக்கறதா வேண்டிண்டுட்டேண்டா. போற வழியிலேதானேடா இருக்கு?”

“போற வழி இல்லைம்மா. அதிலிருந்து விலகி ஒரு பத்து கிலோ மீட்டர் உள்ளே போகணும். இருட்டிடும். அப்புறம் நைட் டிரைவிங் ஆயிடும்!”

“மணி என்ன இப்ப..?”

“மணி என்னவா இருந்தாலும் நாம காஞ்சிபுரம் போகலை. திரும்பி வரப்ப வேணா போயிட்டு வரலாம்!”

“போய்டலாமே… வேண்டிடுட்டேண்டா… தெய்வ குற்றமாய்டும்டா!”

“யாரைக் கேட்டு வேண்டிண்டே… பாரும்மா, நீ மனசுக்குள்ள வேண்டிக்கறதெல்லாம் என்னால நிறைவேற்ற முடியாது!”

“லட்சுமி… உங்கிட்ட சொன்னேனேம்மா…?”

“சொல்லவில்லை. ”போயிட்டுத்தான் வந்துரலாமே…!” என்றேன்.

“சும்மாரு. நாம கல்யாணத்துக்குப் போறோம். காஞ்சிபுரத்துக்கு இல்லை.சாயங்கால ஜானவாசத்துக்குள்ள போகணும். பெங்களூர் திரும்பி போறப்ப வேணா போகலாம். அம்மா, வரதராஜப் பெருமாள்கிட்ட சொல்லிடு என்ன…?”

“வேண்டிண்டுட்டேனே… ஐயோ!”

“இப்ப சும்மா இருக்கப் போறியா இல்லையா!”

“பாட்டி நம்ம கார் மாதிரியே கார் போறது பாரு” குமார் அம்மாவின் கவனத்தைக் கலைத்தது.

“அப்பா.. நம்ம காரைப் போலவே சிவப்பு மாருதிப்பா!”

“என்ன இவ்வளவு வேகமாப் போறான். மாருதி இந்த வேகம் தாங்காதே” ஒரு மின்னல் போலத்தான் அந்த சார் எங்களை அசுர வேகத்தில் கடந்து சென்றது.

“என்ன ஃபாஸ்டா போறான் பாருப்பா, நீயும் இருக்கியே” என்றான் பாலாஜி.

சற்று நேரத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எங்களைத் தொடர்ந்து வந்தன. இவர் கை நீட்டி வழி விட்டாலும் எங்களுடனே சமமாக வந்தன. சன்னலருகில் அந்த இளைஞன் “காரை நிறுத்துய்யா… ஓரங்கட்டுய்யா” என்று அதட்டினான்.

அவர்கள் ஒட்டிய விதம் எங்கள் காருக்குக் குறுக்கே அவ்வப்போது வருவது போல் அபாயகரமாக இருந்தது. இவர் வேகம் குறைத்து நிறுத்தினார். அவர்களும் திருப்பி நிறுத்தினார்கள். சற்று நேரத்தில் ஒரு டெம்போவில் ஆறு பேர் வந்தார்கள்.

“வாட்ஸ் த மேட்டர்?”

“தப்பிச்சுடலாம்னு பாக்கறியா ? இறங்குடா.”

“என்ன சொல்றீங்க?”

“மேக்கால தொரப்பாக்கத்துல சைக்கிள் மேல ஏத்திட்டுப் போனியே, அந்த ஆள் செத்துட்டான்!”

“என்னது? நானா ?”

“ஆமாம். துரத்தறோம் இல்லை… நிறுத்தாமப் போறியே? எங்களால பிடிக்க முடியாதுன்னு நெனைப்பா ?”

“இதே சிகப்பு காருதான் அண்ணே!”

அவருக்கு நிலைமை புரிந்து, “பாருங்க… தமிழ்நாட்டில் ஆயிரம் சிவப்பு மாருதி கார் இருக்கும்.”

“அண்ணே, இந்தாளுதாங்க. கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தான்.முன்னாடி பின்னாடி நாலு உருப்படிங்க உக்காந்துகிட்டு..”

“அவனோட என்ன பேச்சு? எறங்குடா முதல்ல.”

பின்சீட்டில் அம்மா, “எதுக்காக இறங்கணும்?” என்றாள் விரோதமாக.

“அம்மா! சும்மாரும்மா” என்று அதட்டினார். ”பாருப்பா… நாங்க…”

“எதுக்காகன்னா உங்க டிரைவரு சைக்கிள்ள போய்ட்டிருந்த எங்க கிராமத்து ஆளை அடிச்சுப் போட்டுட்டு நிக்காம வந்துட்டாரு. அதுக்காக.”

“நாங்க எந்த சைக்கிளையும் ஆக்ஸிடெண்ட் பண்ணலை!” என்றாள்.

“பெங்களுர்லருந்து ஃபேமலியோட ஒரு கல்யாணத்துக்குப் போறம்பா. நான் டிரைவர் இல்லை. குடும்பத் தலைவன்.”

“நீ எங்க போனா என்ன… இடிச்சுட்டு நிக்காம போன…”

“நான் இல்லையா அது…”

“இவங்கதாங்க… பின்னாலேயே வந்தமே… அதே சிவப்பு மாருதி, ரத்த துளி மாதிரி!”

“ஐயோ! நான் எப்படி விளக்குவேன் ?”

“விளக்கம் ஒண்ணும் வேண்டாம். எறங்கிரு. பாப்பா இதை ஒரு முடிவு பண்ற வரைக்கும் வண்டி போவாது.”

“என்ன முடிவு ?”

“இறந்து போனவனுக்கு காம்பன்சேஷன் ஒரு அம்பதாயிரம் கொடுத்துட்டுப் போ…”

“ஸ்கூல் வாத்தியாருங்க, கைல குழந்தை. போன வருஷம் தான் வேலூர்ல போய்ப் பொண்ணு எடுத்து வந்தான். ஒரு சைடே தெரியாம அதுங்கிப் போய் அடிபட்டிருக்காங்க….”

ஜெயந்தி என் முழங்கையை இறுகப் பிடித்துக் கொண்டாள்.

“கொஞ்ச நேரம் உடம்பு துடிச்சுக்கிட்டு இருந்துச்சு”

ஜெயந்தி, “ஐயோ அம்மா” என்றாள்.

“எறங்குய்யா அப்புறம் பொல்லாப்பாயிரும்.”

“ஏதாவது கொடுத்துட்டுப் போ…”

“யு ஆர் மிஸ்டேக்கன்.”

“”இங்கிலீசு பேசாதே, வவுறு எரியுது. இப்ப வரியா இல்லையா?”

“எங்க வரணும் ?”

“ஸ்பாட்டுக்கு வந்து அந்தாளை கொன்னுட்டியே, அந்தக் குடும்பத்துக்கு ஏதாவது செய்துட்டுப் போ. முதல்ல காரை விட்டு எறங்குங்க.”

ஜெயந்தியின் தரப்புக் கதவைத் திறந்து அவளை “வெளியே வா பாப்பா” என்றார்கள். ”பாட்டியம்மா, எறங்கு. எல்லாரும் எங்களுக்குப் பதில் சொல்லாம ஒரு அடி நவுர முடியாது. கார் போவாது!”

அம்மா, “என்னடா உளர்றீங்க? நாங்க என்ன செஞ்சோம்? எந்த சைக்கிளையும் நாங்க அடிக்கலைங்கறோம். அதையே திருப்பித் திருப்பிச் சொல்லிண்டு…”

“கெளவி…’டா’ போட்டுப் பேசாத.. மரியாதையாப் பேசு…”

“அம்மா, ப்ளீஸ்… லட்சுமி ஹாண்டில் திஸ்!”

“பாலாஜி, ஜெயந்தியைப் பார்த்துக்கோ… நீ குமாரைப் பார்த்துக்கோ!” என்று அவர் வெளியே இறங்கினார். நான் குமாரை எடுத்து மார்மேல் அணைத்துப் போர்த்திக் கொண்டேன். உடம்பு சூடாகியது.

“ஜெயந்தி, டோண்ட் கெட் அவுட்… டோண்ட் கெட் அவுட்” என்றார். “ஒதுங்கிப் போய்டும்மா.”

“எங்க போற பாப்பா… இங்கயே இருக்கணும்” என்று அவள் கையை ஒருவன் பிடிக்க… பாலாஜி, “லீவ் ஹர் அலோன்” என்று அவனை அடிக்க, அவன் திருப்பி அடித்ததில் சுருண்டுவிட்டான். அவர்கள் சற்றே வன்முறையுடன் அவனை வெளியே இழுக்க முற்பட… அவன் அதை எதிர்க்க… சட்டை பட்டன்கள் சிதற இழுத்தார்கள். எனக்கு முகம் பூரா சூடாகப் பயம் பரவியது.

“ஜெயந்தி ஒரு கல்லை எடுத்துக்கோ” என்றாள் அம்மா.

“அம்மா!”

“பாரு, என்னைத் தொட்ட அப்புறம்…”

இவர் கைகள் நடுங்கின. பயத்தில் வியர்த்திருந்தார். சிறிது சிறிதாக அவரை நெக்கி நெக்கித் தள்ளினார்கள்.

“போலீஸ் ஸ்டேஷனுக்குத்தான் வருவேன்” என்றார்.

“முதல்ல ஸ்பாட்டுக்கு வா!”

“இங்கருந்து எவ்வளவு தூரம்பா?” என்று அம்மா யதார்த்தமாகக் கேட்டாள்.

“மூணு பர்லாங்கு இருக்கும் மேக்க…”

அம்மா, “ராமு! இங்கயே இரு. நான் போய்ப் பார்த்துட்டு வர்றன்” என்றாள். ”ஏம்பா! பாடி எங்க கிடக்குது?”

“அம்மா நீ வேற இப்ப குழப்பாதே… கொஞ்ச நேரம் சும்மாரு.”

“பாட்டிம்மா நீ எதுக்கு? ஓட்டனவரு வரட்டும்… பைசல் பண்ணிட்டுப் போவட்டும்.”

“கொஞ்சம் இருப்பா.. பர்ஸை எடுத்துக்கறேன்” என்று முன்பக்கம் ஏறிக் கொண்டார். பாலாஜியின் காதில் ஏதோ சொன்னார். பாலாஜி திடீர் என்று ஒரு காரியம் செய்தான். எங்கள் எல்லாரையும் உள்ளே தள்ளி டிரைவர் ஸீட்டில் பாய்ந்து காரைக் கிளப்பி ஒரே வேகமாக ஓடவிட்டான்.

“ஏய்! தப்பிச்சு ஒடறாண்டா! பிடிடா… பிடிடா!”

எனக்கு இதயம் படபடத்தது. அவர்கள் பின்னால் மோட்டார் சைக்கிளைக் கிளப்பித் தொடர்வதற்கு முன் நாங்கள் கொஞ்ச தூரம் வந்துவிட்டோம்.

கண்ணாடியில் பார்த்தோம். பின்தங்கியிருந்தார்கள். சட்டென்று திரும்பிவிட்டார்கள். பாலாஜி வேகம் அதிகரித்து பேயாக ஓட்டினான்.

“நேரா மெட்ராஸ் போயிடலாம். நிக்கவே வேண்டாம்” என்றார். ”அப்பாடா… தப்பிச்சோம்.”

“அம்மா, பாட்டி எங்க?” என்றாள் ஜெயந்தி.

“பாட்டி இல்லையா?” ”அம்மா பின்னால் இல்லையா?”

“எப்ப இறங்கினா ?”

“எதுக்கு இவ முந்திரிக்கொட்டை மாதிரி கார்லருந்து எறங்கணும்? எப்பவுமே இப்படித்தான் அவ…சே!”

“ஐயோ! அவாகிட்ட மாட்டிண்டிருப்பாளே” என்று அலறினேன்.

பகுதி 3:

“அம்மாவாலதான் வந்தது. அவங்கூட வாக்குவாதம் பண்ணிட்டு அவன் டென்ஷனாயிட்டான். பேசாம கார்ல உட்கார்ந்திருக்க வேண்டியதுதானே. எப்ப இறங்கினா ?”

நான் பதறிப் போனேன். ”ஜெயந்தி கழுதை… பாட்டிய பார்த்துக்கறதைவிட என்னடி வேளை உனக்கு!”

பாலாஜி, ”இப்ப நாம மேற்கொண்டு போறமா இல்லையா?”

“என்னடா பேசற நீ? பாட்டியை விட்டுட்டுப் போறதாவது.”

“திரும்பணுமா?”

ஜெயந்தி அழுதாள். ”பாட்டி! பாட்டி!”

“சும்மார்றி. அப்பா என்ன செய்யறது சொல்லு!”

“போலீஸ் பாதுகாப்பு இல்லாம போகக் கூடாது. வயலென்ட் மாப்… அருவா எல்லாம் வெச்சிருந்தா.”

“சே! இந்தப் பாட்டி!” என்றான் பாலாஜி.

ஜெயந்தி பெரிசாக அழ ஆரம்பித்தாள். ”அவா அடிச்சா பாட்டி உயிருக்கு ஆபததாய்டுமேப்பா!”

“என்ன பண்றது… அவ விதிப்படி நடக்கறது” அவருக்கு என்ன பண்ணுவது என்று தெரியவில்லை.

நான் அவரை முறைத்துப் பார்த்தேன். ”என்ன பண்றதாவது? திரும்பிப் போறது!”

அப்போதுதான் அந்தக் காவல் நிலையத்தைப் பார்த்தோம். ”நல்ல வேளை போலீஸ் பாதுகாப்போட போகலாம்.” காரை நிறுத்தி உள்ளே போய் அங்கிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் விஷயத்தைச் சொன்னோம். ”ஐயா! எங்கம்மா வயசானவங்க, அவங்ககிட்ட மாட்டிக்கிட்டு இருக்காங்க. நாங்க விட்டுட்டு வந்துட்டோம்.”

“என்ன ஜாமீனாவா?” என்றார் சிரித்துக்கொண்டே.

“இல்லைங்க… பாட்டி இல்லாததை கவனிக்கலை. கொஞ்ச தூரம் வந்ததும்தான் கவனிச்சோம் வாங்க.”

“ஒரு நிமிஷம் இருங்க, ரேடியோவில் செய்தி சொல்லிட்டு வரேன்”

இன்ஸ்பெக்டர் தன் மோட்டார் சைக்கிளில் தொடர, நாங்கள் காரில் திரும்பிச் சென்ற போது எனக்கு இதயம் தொண்டை வரை வந்துவிட்டது. ஐயோ! அம்மா என்ன ஆயிருப்பாளோ? என்ன ரகளையோ!

நாங்கள் முதலில் நின்ற இடம் காலியாக இருந்தது. அங்கிருந்து நாங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்தோம். சாலையோரமாக ஒரு கயிற்றுக் கட்டிலில் பிணத்தை மூடியிருந்தார்கள். அருகே….

“பொன்னால் அரிக்கஞ்சட்டி என்னைப் பெத்த அப்பா புதுச்சம்பா வாய்க்கரிசி… நான் பொண்ணான தலை முழுவி பொழும்மி மயிராத்தி” என்று குடல் நடுங்கும் ஒப்பாரி கேட்டது. இன்ஸ்பெக்டர் நிறுத்தி விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். சாலை முழுவதும் கண்ணாடி சிதறியிருந்தது.

“முட்டாப்பயலுகளா… இவங்களை போட்டு ரேக்கிருக்கீங்களே… எட்லைட் கண்ணாடி உடைஞ்சு கெடக்குது… முதல்லே அதைப் பார்க்க வேண்டியதுதானே. பாருய்யா இவங்க காரை! ஏதாவது ஒரு டேமேஜ் இருக்குதா பாரு!”

“ஆமாங்க, அந்த காரு அது இல்லைங்க” என்று அவர்கள் சொல்ல,

“அந்த பெரியம்மா எங்கய்யா” என்றேன்.

“அவங்களை ஏதாவது அடிச்சுக் கிடிச்சு வெச்சீங்களா?”

“உள்ளே போய்ப் பாருங்க.”

அந்தக் குடிசைக்குள் கணவனை இழந்தவள் அருகில் அம்மா உட்கார்ந்திருந்தாள். அவளுக்கென்று ஒரு ஸ்டூல் போட்டிருந்தது. அம்மா புது விதவையின் தலையைக் கோதிக் கொண்டிருந்தாள்.

“மனசை தேத்திக்கோ மாரியம்மா. நானும் உன்னைப் போலத் தான். ரெண்டு பிள்ளைங்களை விட்டுப் போயிட்டார்.”

“பாட்டியம்மா… அவங்க உங்களை அடிச்சாங்களா?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்.

“சேச்சே… யாரும் என்னை அடிக்கலை, திட்டலை. எப்படியும் நீங்க என்னை அழைச்சுண்டு போக வந்துருவீங்கன்னு தெரியும். இவங்க கூட வரேன்னு சொன்னதுமே…”

“அம்மா எப்படி இங்கே வந்தே?”

“அதோ அவர் மோட்டார் சைக்கிள் பின்னால ஏறிண்டு வந்தேன்! அழாதடி மாரியம்மா… தைரியமா இரு!”

“பெரியம்மா! மோர் கேட்டீங்களே!” என்று ஓர் இளைஞன் தம்ளரில் மோர் கொடுத்தான்.

“தாங்க்ஸ்றாப்பா. படபடன்னு வந்துருத்து ராமு. என் பணத்திலிருந்து ஒரு ஐந்நூறு ரூபா கொடுத்துடு. பாவம் ரெண்டு பிள்ளை, வயித்துல ஒண்ணு, கைல ஒண்ணு பொட்டை!”

ஜெயந்தி பாட்டியருகில் உட்கார்ந்து கொண்டு அவள் தலையைத் தடவிவிட்டு கண்ணீர் சிந்தினாள். எனக்கும் இயல்பாக கண்ணீர் வழிந்தது. ”எதுக்குடி அழறீங்க? ஆனாலும் ராமு இந்த மாதிரி சொல்லாம கொள்ளாம திடுதிப்னு புறப்பட்டுப் போய்ட்டியா, நான் என்னன்னு யோசிப்பேன். வாக்குவாதம் பண்ண கோவத்தில் விட்டுப் போய்ட்டியா? அந்த மாதிரியெல்லாம் செய்ய மாட்டியே…”

அவர் தன் தாயாரை அணைத்துக் கொண்டு, ”மன்னிச்சுக்கம்மா தெரியாத்தனமா நடந்து போச்சு. ஒரு செகண்டு உன்னை விட்டுட்டு ஓடிப் போய்டலாம்னு தோணித்து பாரு! மஹா பாவம்மா! மன்னிச்சுக்கம்மா!”

“பாவம் இல்லைடா,,, பயம்தான் காரணம்” என்றாள் அம்மா.

“என்னை யாரும் ஏதும் செய்யலை. சொன்னனே… எதுக்குப் பயப்படணும்? எல்லாரும் கிட்டக் கிட்ட பார்த்தா நல்லவாதான். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு துரத்திருக்காளே தவிர, நம்மை அடிக்கணும், கொல்லணும்னு உத்தேசமே இல்லை இவாளுக்கு.”

இன்ஸ்பெக்டர், “போங்கய்யா பாடியை எடுக்க வழியைப் பாருங்க!”

“ஸார்! நீங்க பெரியம்மாவை அழைச்சுட்டுப் போங்க. இன்ட்ரஸ்டிங் லேடி” என்றார்.

“என் பிள்ளைகிட்ட சொன்னேன் ஸார், காஞ்சிபுரம் கோயிலுக்கு போய்ட்டுப் போகலாம்னுட்டு. கேட்டாத்தானே? போயிருந்தால் இந்த ரகளையெல்லாம் நடந்திருக்காதில்லையா!”

“ஆனா, எனக்கு உங்களைச் சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்காதே பாட்டியம்மா” என்றார் இன்ஸ்பெக்டர்.

“உங்க பேர் கேட்டு வெச்சுக்கலையே!”

“வரதராஜப் பெருமாள்” என்றார்.

சிவப்பு மாருதியின் பயணம் நிறைவுற்றது.
———————————————

மகாகவி பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’ வரிகளுக்குப் பொருத்தமாக, 1987-ம் ஆண்டில் ‘பரசுராம் பிஸ்வாஸ்’ என்னும் புனைபெயரில் 22 சிறப்புச் சிறுகதைகளை வெளி யிட்டது விகடன். அப்போது கதை வடிவம் கொடுக்கப்பட்ட வரிகள் அல்லாமல், வேறு 22 வரி களுக்குப் பொருத்தமாகப் பிரபல எழுத்தாளர்களின் ‘புதிய ஆத்தி சூடி’க் கதைகளை இந்த ஆண்டு (1998) வெளியிட்டுள்ளது. முதல் சிறு கதையை எழுதியுள்ளவர் சுஜாதா. ‘சிவப்பு மாருதி’ என்னும் இந்தக் கதைக்குப் படம் வரைந்துள்ளவர் ஓவியர் ஸ்யாம். இதிலிருந்து விகடனில் தொடங்குகிறது ஸ்யாம்ராஜ்ஜியம்!

ஆனந்த விகடன் தீபாவளி ஸ்பெஷலில் (18 -10 -98 ) வெளிவந்த சுஜாதாவின் புதிய ஆத்திசூடி கதை (அச்சம் தவிர்)

Print Friendly, PDF & Email

1 thought on “சிவப்பு மாருதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *