கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 12,880 
 

சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

.., புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…, டுமீல்…, டுமீல்…, டமால்…, டமால்…,

தன் குடிசை வீட்டு வாசலில் அம்மா மைடியில் படுத்திருந்த வாணி அண்ணாந்து வானத்தை பார்த்தாள். பக்கத்து அடுக்கு மாடி குடியிருப்பிலிருந்து வெடிக்கப்படும் பட்டாசுகளின் வெளிச்சமும், சத்தமும் அவளின் கவனத்தை ஈர்த்தது.

அம்மா! அப்பா எப்போம்மா வருவாங்க?

வேலையை முடிச்சுட்டு வந்துட்டே இருப்பாங்க கண்ணு…,

என்கிட்ட இருக்குற பைசாவுல அதுப்போல வெடி வாங்க முடியுமா?!

ம் ம் ம் முடியும் மா. நிறைய வாங்க முடியாது., ஆனா, கொஞ்சமா வாங்கலாம்…

புது சொக்கா?!

ம் ம் வாங்கிக்கலாம் கண்ணு…,

ஸ்வீட்?

அதுக்கூடத்தான்…, எத்தனை முறை கேட்பே?! நான் போய் பக்கத்து வூட்டு அக்கா கூட போய் இட்லிக்கு மாவு அரைச்சுட்டு வரேன்.., நீ வூட்டை பத்திரம பார்த்துக்கோ…,

டே பட்டாச்சுடா…, கலர் கலர மின்னுது.., சூப்பரா இருக்கு…,ன்னு பேசிக்கிட்டே வரும் தன் ஃப்ரெண்ட்சுகளை பார்த்தாள்…,

ஹேய் வாணி! நாளைக்கு தீபாவளி பண்டிகைங்குறதால இன்னிக்கு அங்க ஏதோ விழாவாம். எல்லா மதத்துக்காரர்களும் கொண்டாடுறங்களாம். இது வருசா வருசமும் நடக்குதாம்.நாங்கலாம் அங்க போய் பட்டாசு வெடிக்குறதை பார்க்க போறோம். நீயும் வர்றியா?!

இல்லடா மணி…, நான் வர்லை…,

ஏன்? உங்க அம்மா அங்கதானே வேலை பார்க்குறாங்க?!

ஆமா, ஆனா, அந்த அப்பார்ட்மென்டுல ஒரு வீட்டுல பணக்கார முஸ்லீம் குடும்பம் இருக்கு. அந்த வீட்டு அம்மா, ஐயாலாம் என்கிட்ட பாசமாத்தான் இருக்காங்க. சாப்பிடறதுக்கும் பலகாரமும், போட்டுக்கு பழைய துணியும் குடுப்பாங்க.

ஆனா, அவங்க பையனுக்குதான் என்னை கண்டாலே பிடிக்கலை. அங்க போனாலே நாயை அவுத்து விட்டு என்னை கடிக்க விடுவான். போன வருசம் தீபாவளிக்கு முதல் நாள் கொண்டாட்டத்தை பார்க்க போன போது, அங்க இருக்குற ஒரு அக்கா எனக்கு கம்பி மத்தாப்பு குடுத்தாங்க.

அதை கொளுத்தி விளையாடிக்கிட்டு இருக்கும்போது என்னை ஏளனமா பார்த்து சிரிச்சுட்டு…, என்ன நினைச்சானோ அக்கா குடுத்த பட்டாசு பாக்சுல தண்ணியை ஊத்தி நனைச்சுட்டு.., ஒரு பாக்கட் மொளகா பட்டாசுக்கூட வாங்க முடியலை…, உனக்கெதுக்கு தீபாவளின்னு கிண்டல் பண்ணிட்டான். இப்போ போனாலும் அதேப் போலதான் கிண்டல் பண்ணுவான்.

அதனால, உண்டியல்ல பைசா சேர்த்து வெச்சு, புது சட்டை, பட்டாசு வாங்கை வர சொல்லி அப்பாக்கிட்ட குடுத்திருக்கேன். இப்போ வந்துடுவாரு. நான் இங்கிருந்தே பட்டாசு வெடிப்பேன். அங்கலாம் நான் வரலை. வேணுமின்னா நீங்களும் இங்க வந்து வெடிங்க..

வாணி நம்மால எப்படி அவங்களை போலலாம் பட்டாசு வாங்கி வெடிக்க முடியும்? தூர இருந்து பார்த்துக்கத்தான் முடியும். வா வாணி!

இல்லடா .., நீ போய் வா! எனக்கு பிடிக்கலை நான் வரலை…,

சரி நீ சொன்னா கேட்க மாட்டே! நாங்கலாம் போறோம்..,

என்ன வாணி? அப்பா இன்னுமா வர்ல?

இல்லம்மா.., மணி எட்டாச்சே?! எப்போ வருவாரும்மா?

தெரியலையேம்மா…, இந்நேரத்துக்கு வந்திருக்கனும். நீ சாப்பிட வாயேன்…,

இல்லம்மா.., அப்பா வரட்டும் எல்லாத்தையும் பார்த்துட்டு சாப்பிடுறேன்…,

சரி உன் இஷ்டம்…,

மணி பத்தாச்சு…, காலைல வெள்ளனமே எழுந்துக்கனும்.., சாப்பிட்டு படு வாணி…,

இல்லம்மா எனக்கு தூக்கம் வரலை…,

டொக்.., டொக்..,

வாணி யாருன்னு பாரு.., அட! உக்காந்த படியே தூங்கிட்டியா?

என்னங்க இது மணி 12 ஆச்சு.., இப்போதான் வர்றீங்க? வாணி இம்புட்டு நேரமும் அப்பா எப்போ வருவாங்கன்னு தொண தொணத்துட்டு இப்போதான் தூங்கியிருக்கா போல…அவ சொன்னதுலாம் வாங்கி வந்துட்டீங்களா? எங்கே? சைக்கிள்ள மாட்டீயிருக்கியா? இரு போய் எடுத்தாரேன்…

தங்கம்…

சொல்லுங்க…, ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? சாப்புடலியா?

அதெல்லாம் இல்ல தங்கம்.., நான் வாணி சொன்னதெல்லாம் வாங்கி வரலை…,

என்னது வாங்கி வரலியா? ஏன்? இத கேட்டா குழந்தை ஏமாந்துப்புடுவாளே?! பைசாலாம் என்னய்யா பண்ணே? குடிச்சு அழிச்சுட்டியா?!

ஐயோ! தங்கம் என்னை கொல்லாதே…, குடிக்குறதில்லைன்னு வாணி மேல சத்தியம் பண்ணியிருக்கேனே.., குடிப்பேனா?

அப்புறம் என்னாச்சு சொல்லித் தொலையேன்…

அது வந்து.., அது வந்து…, வேலை முடிச்சுட்டு பட்டாசு, சொக்காத்துணிலாம் வாங்க கடைத்தெருவுக்கு போனேன். அங்க சிவகாசி பட்டசு ஃபேக்டரில பாதிக்கப் பட்டவங்களுக்கு உதவி பண்ணுறதுக்காக எதோ சங்கத்துல நிதி திரட்டிக்கிட்டு இருந்தாங்க… அவங்க வெச்சுக்கிட்டு இருந்த அடிபட்டவங்க ஃபோட்டோலாம் பார்க்கும்போது பாவமா இருந்துச்சு. அதான்.., கைல இருந்த பைசாவை போட்டுட்டேன்..,

ஐயையோ! என்ன காரியம் பண்ணிட்டேயா?!

இல்லை தங்கம் அந்த ஃபோட்டோல நம்ம வாணி போல சின்ன புள்ளைங்கலாம் இருந்துச்சா?! அதை பார்க்கும்போது மனசு கலங்கி போய் என்ன செய்யுறேன்னே தெரியாம பைசாலாம் போட்டுட்டேன்…, இப்போ நினைச்சா அவசரப்பட்டுட்டேன்னு தோணுது…, வாணியை நினைச்சாதான் கவலையா இருக்கு. என்ன சொல்ல போறளோ?!

பெரிய கர்ணன்னு மன்சௌக்குள்ள நினைப்பா? கையிலுருந்த பணமெல்லாத்தையும் போட்டு வந்திருக்கே. புள்ளைக்கு வருசத்துக்கொரு முறை சொக்க எடுத்துக் குடுத்து.., பட்டாசு வாங்கி குடுக்க துப்பில்ல. அவளே சேத்து வெச்ச பணத்தையும் தானம் பண்ணிட்டு வந்திருக்கே.., உன்னையெல்லாம்….

அப்பாவை திட்டாதேம்மா…,

வாணிக்கண்ணு தூங்கலியாமா!ன்னு வாரி அனைத்துக்கொண்டான் சிவசாமி..,

நீ வரும்போதே முழிச்சுக்கிட்டேன். நீ வாங்கி வந்ததெல்லாம் உன் கையால தரட்டும்ன்னுதான் தூங்குற மாதிரி நடிச்சுக்கிட்டு இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் பேசுறதை கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்.

கண்ணு அப்பா மேல கோவமில்லையா?

இல்லப்பா. பட்டாசு.., சொக்காதானே?! அடுத்த வருசம் போட்டுக்கலாம்.., ஆனா, பாதிக்கப்பட்ட்வங்களுக்கு உதவுறதுதான் முக்கியம். தேவைப்படுறவங்களுக்கு உதவுனா.., கடவுளுக்கு சேவை செய்யுற மாதிரின்னு எங்க வாத்தியார் சொல்லுவாருப்பா. அதனால எனக்கொன்னும் வருத்தமில்லை.

பாட்டாசு வெடிச்சு கொண்டாடுறதைவிட இதுதான் திருப்தியா இருக்குப்பா…, மனசு நிறைஞ்சு போச்சுப்பா. வாங்க போய் தூங்கலாம்…,

வாணி! வாணி எழுந்திரு.., யாரு வந்திருக்காங்க பாரு..

.,

யாரும்மா?

பக்கத்து பிளாட்ல இருந்து நான் வேலை செய்யுற வூட்டுல இருந்து பாய் அங்கிளும், அவங்க பையனும் வந்திருக்காங்க..,

இவன் ஏன் இங்க வந்திருக்கான்.. கிண்டல் பண்ணாவா? னு மன்சுக்குள நினைத்தப்படியே வந்து சிவசாமிக்கு அருகில் நின்று கொண்டாள்…,

வீட்டில் இருந்த ஒரே ஒரு சேரில் முஸ்லீம் பெரியவர் அமர்ந்திருக்க.., அவருக்கு பக்கத்தில் அவர் மகன் உசேன் தலை குனிந்து நின்றிருந்தான்.

ஐயா! வாணிதான் வந்துட்டாளே இப்பவாவது சொல்லுங்களேன்.., பிளீஸ்…, என் பொண்னு எதாவது தப்பு பண்ணிட்டாளா?!

ஐயோ இல்லை சிவசாமி, என் பையந்தான் தப்பு பண்ணிட்டான். அவனுக்கு ஏழைன்னாலே வெறுப்பு. அவங்க திருடுவாங்க, அழுக்கானவங்க, யாரை பத்தியும் கவலைப்பட மாட்டாங்கன்னு அவனுக்குள் ஒரு எண்ணாம்.. எவ்வளவோ சொல்லியும் அவன் மாறலை. ஆனா, இன்னிக்கு காலைல உங்க சம்சாரம் நேத்து உங்க வீட்டுல நடந்த நிகழ்ச்சிலாம் சொன்னப்பின்.., அவனுக்கு தன்ன்னோட கருத்து தப்புன்னு உணர்ந்துட்டான்.

ஆமா அங்கிள், தங்கம் ஆண்டி எங்கம்மா கிட்ட…, வாணி சேர்ட்த்துவெச்ச காசை பட்டாசு ஆலை விபத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு குடுத்து உதவுனதையும்.., அதை வாணி மனம் கோணாம ஏத்துக்கிட்டதையும் சொல்லிக்கிட்டிருந்தாங்க. மகளோட ஒரு வருட கனவையும், எதிர்பார்ப்பையும் தூக்கி எறிஞ்சுட்டு பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுன உங்க குணத்துக்கும்…, தன் ஆசைலாம் நிராசையானாலும், தான் சேர்த்து வெச்ச பணம் மத்தவங்களுக்கு உதவுச்சேன்னு சந்தோசப்பட்ட வாணிக்கும் முன் நான்லாம் தூசு அங்கிள். என்னை மன்னிச்சிடுங்க அங்கிள்.., வாணி உன்னை நிறைய கஷ்டப்படுத்திட்டேன். சாரி வாணி.

ஐயோ என்ன பெரிய பெரிய வார்த்தைலாம் சொல்லிக்கிட்டு.., விடுங்க தம்பி..,ன்னு உசேனை அணைத்துகொண்ட சிவசாமியை நெருங்கிய பெரியவர்…,

சிவசாமி, எனக்கொரு ஆசை நிறைவேத்துவியா?

சொல்லுங்க ஐயா! செய்யுறேன்.

நான் பொறப்பாலயும், வளர்ப்பாலயும் முஸ்லீம். இதுவரை ஒரு இந்து பண்டிகைலயும் நான் கலந்துக்கிட்டதில்லை. நானும் என் குடும்பத்தாரும் இந்த தீபவளியை உங்க வீட்டில் கொண்டாடலாம்ன்னு வந்திருக்கோம்.., என்ன சொல்றே?!

எந்த மதமானாலும், சொந்த, பந்தம்லாம் கொண்டாடத்தான் பண்டிகைகளை உருவாக்கியிருக்கு. அதனால நீங்க வர்றதுல எனக்கொன்னுமில்லை.. ஆனா, நாங்க ஏழைங்க எங்க வீட்டுக்கு நீங்க போய்…,

நாங்க பணத்தாலதான் உயர்ந்தவங்க …, ஆனா, நீங்கலாம் மனசால உயர்ந்தவங்க.., அதனால, இங்க கொண்டாடுறதுல எங்களுக்கு சந்தோசமே .., வாங்க கடைத்தெருவுக்கு போய், தீபாவளி பண்டிகைக்கு என்ன வேணுமோ அதை வாங்கி வருவோம்..

சார் , ஒரு நிமிஷம்..

சொல்லும்மா..

இந்த வருஷம் தீபாவளியே கொண்டாட வேணாம்னு தோணுது. பட்டாசு வாங்கறதாலதானே சிவகாசில அத்தனை குழந்தைத்தொழிலாளர்கள் பாதிக்கப்படறாங்க? மக்கள் மேலும் மேலும் பட்டாசு வாங்கிக் குவிக்கறதாலதானே பட்டாசுக்கான தேவை அதிகமாகி ஓடி பார்க்க வெச்சு குழந்தைகளை கொடுமைப்படுத்தறாங்க? பட்டாசு வாங்கறவங்க
எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சா பட்டாசு தயாரிப்பும் குறைஞ்சுடும். முழுக்க முழுக்க பட்டாசை ஒழிக்கறது சாத்தியம் இல்லை, ஆனா முடிஞ்ச வரை குறைக்கலாம். பட்டாசு மட்டும் தான் தீபாவளியா? புது டிரஸ் போட்டுக்கிட்டு ஸ்வீட் சாப்பிட்டுட்டு சினிமாவுக்கு போவோம், பார்க் போய் விளையாடுவோம்.பண்டிகை என்பது சொந்தங்களுடன் கொண்டாடுவதே, சந்தோஷமாய் இருப்பதே…

அவளை இழுத்து அரவணைத்துக்கொள்கிறாள் அவள் அம்மா.

Print Friendly, PDF & Email

1 thought on “சிவகாசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *