சில நேரங்களில் சில நியதிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 21, 2022
பார்வையிட்டோர்: 3,913 
 

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“தேவன்…தேவன்…”

‘கேற்’ வாயிலில் அவசரமான அழைப்புக் குரல் கேட்ட போது எட்டிப் பார்த்தேன். இரண்டு இளைஞர்கள் சைக் கிள்களுடன் நின்றிருந்தார்கள். நான் தயங்கி கேற்’ ஐ அண்மித்த போது,

“முகமத்…இல்லை…தேவன் நிற்கிறாரோ?” ஒருவன் தடுமாறிக் கேட்டான்.

“அவருக்குச் சரியான காய்ச்சல் தம்பி; டொக்டரிட் டைப் போய் மருந்து எடுத்துக்கொண்டு வந்து சாப்பிட்டிட்டு இப்பதான் நித்திரையாகினவன்.” நான் அவனை எழுப்ப மனமில்லாமல் கூறியபோது அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து யோசித்தார்கள். அவர்கள் வியர்வையில் தெப்பமாக நனைந்திருந்தார்கள். கால்கள் புழுதியில் தோய்ந்து வெளிறிப்போய்க்கிடந்தன. ‘ஷேட’ அதீத வேலையால் மிக வும் கசங்கிப்போயிருந்தது! இருவரும் ‘சாரம் தான் அணிந் திருந்தனர். அவை சற்று முன்னர்தான் அழுக்காக்கப்பட்டவை போலத் தெரிந்தன.

“அக்கா , கேக்கிறமெண்டு கோவியாதையுங்கோ , ஒரு அவசரமான கதை. ஒருக்கால் எழுப்பி விடுங்கோ” அவன் தன் தலையை ஒரு கையால் கோதிவிட்டவாறே சுற்றுமுற் றும் பார்த்துத் தயங்கினான். மற்றவன் அடிக்கடி வீதியின் இரு பக்க எல்லைகளையும் நோட்டம் விட்டவண்ணம் நின்றி ருந்தான். நான் யோசித்தேன்.

“அக்கா, கெதியா…” மற்றவன் பதற்றத்தோடு அவசரப் படுத்தினான்.

நான் உள்ளே நுழைந்து படுக்கையில் மல்லாக்காகக் கிடந்த தம்பியின் மார்பில் கையை வைத்துப் பார்த்தேன். அனல் வாடை வீசியது!

“தம்பி .. இங்கை ஒருக்கால் கண்ணைத் திற’ நான் அவனை மெல்லத் தட்டியபோது, அவன் திரும்பி ஒருக்களித் துப் படுத்துக்கொண்டான்.

“என்ன மாதிரி இருந்தவன்…என்ன மாதிரிக் கொட்டுப்பட்டுப் போனான்! ஆனவாயிலை – சாப்பிட்டிருக்க மாட்டான். பாவம் ! சொகுசாய் வாழ்ந்தவன். சாப்பிடுற போது கூட கதிரைக்குத் தலையணை வைப்பான். அப்பிடிப் பட்டவன், எப்பிடி இரண்டு மாசமாய்…இரண்டு உடுப் புகளோடை..? அதுதான் அவனாலை தாங்க முடியேல்லை ஆக்கும் ! சின்னப் பிள்ளை தானே – மீசை கூட அரும்பயில்லை! பதினைஞ்சு வயசு தானே”

“தம்பி, உன்னட்டை ஆரோ ரெண்டு பெடியள் வந் திருக்கிறாங்கள்; அவசரமாய் ஒரு கதையாம்…”

நெற்றியைச் சுளித்தவன், மெல்லக் கண்களைத் திறந்தான். கண்கள் கோவைப் பழங்களாய் சிவந்திருந்தன!

“ரெண்டு பெடியன்கள்..?” வார்த்தைகளை முடிக் காமல், அவன் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்தான்.

“‘கேற்’ றடியில் உன்னைத் தான் காத்துக்கொண்டு நிக்கிறாங்கள்…..” நான் கூறிமுடிக்கமுன், வழுகிய ‘சாரத்தை’ இழுத்துக் கட்டிக்கொண்டு ‘கேற்’ வாயிலை நோக்கி அவசரமாக ஓடினான். வந்திருந்த இளைஞர்கள் அவனிடத் தில் மிகவும் இரகசியமாக எவற்றையோ முணுமுணுப்பது எனக்குக் கேட்டது.

ஐந்து நிமிடங்களில் தம்பி உள்ளே வந்து “ஷேட ஐ அணிந்து கொண்டு வெளியில் புறப்பட ஆயத்தமானான். போகிறவனை பின்னால் அழைக்கக்கூடாது என்பதற்காக, நான் அவசரமாக அவனருகில் ஓடினேன்.

“தேவா, இந்தக் காய்ச்சலோட …!?” நான் அவனைத் தடுக்கும் நோக்குடன் கேள்விக்குறியோடு பார்த்தேன்.

“அக்கா; சும்மாயிருங்கோ , அம்மா குசினிக்குள்ளை தானே நிக்கிறா?…அவவுக்குச் சத்தம் காட்டாதேங்கோ; நான் உதில போறதும் வாறதுமாய் வந்திடுவன்” அவன் ‘சாரத்தை’ மடித்துக் கட்டிக்கொண்டு திரும்பினான்.

“உனக்கு இப்பவும் சரியாய்க் காய்ச்சல் காயுதடா! என்ணெண்டாலும் தண்ணிக்குள்ளை மட்டும் இறங்கிப் போ பாதை ; பிறகு சன்னி ஆக்கிப்போடும்!” நான் மீண்டும் ஒரு தடவை அவன் கழுத்தில் கையை வைத்துப் பார்த்தேன்.

“தேவன் கெதியா…” மீண்டும் அந்த இளைஞர்க ளில் ஒருவன் குரல் கொடுத்தபோது,

” அக்கா , பிளீஸ் ………… கோவிக்காதேங்கோ ” அவன் கன் னத்தைச் செல்லமாக அழுத்திவிட்டு ஓடி மறைந்தான். அவன் கைகள் பட்ட இடம் இன்னமும் சுடுவது போலவே இருந்தது.

‘என்ன மாதிரி சொக்குப்பொடி போட்டிட்டு ஓடிறான்!?” எனக்கு ஆச்சரியமாகவும் அதேவேளை வேதனையாகவும் இருந்தது.

இரண்டு மாதங்களிற்கு முன்னர், அவன் திடீரென்று எங்கோ தலைமறைவாகி விட்டபோது, வீட்டிலுள்ள அத்தனை பேரும் எவ்வளவு துடித்துப் போனோம் ? பின்னர் ஒரு நாள், கடைசித் தங்கை கடைக்குப் போகும் வழியில், தோள்ப்பையும் ஆளுமாக அவனைக் கண்டதாகச் சொன்ன போது நிறைய ஆத்திரப்பட்டோம். அப்போ தான் அவனது பாடசாலை நண்பர்கள் சொன்னார்கள் – முன்பு, அவன் பாடசாலை நேரங்களில், பாடசாலை மதிலால் பாய்ந்து வெளி யேறி எங்கோ போய் வருவானாம். ஆனால், முன்பு நாங்கள் கேட்ட பொழுது முற்று முழுதாக மறுத்து விட்டான்.

பின்னர், பாடசாலையுடையுடன் கடற்கரை வீதியில் நின்றதைக் கண்ட சிலர், அம்மாவிடம் மெலிதாக வினாவிய போது நாமனைவரும் அதிர்ந்து தான் போனோம். எனக்கு விளங்கிவிட்டது அவன் இனிமேல் மனம் வைத்துப் படிக்க மாட்டான் என்று. அம்மா அவனை அடித்த போது அவன் அழவில்லை; மாறாகச் சிரித்தான். கொஞ்சக் காலத்திற்குள் அவன் நிறைய வித்தியாசமாகி விட்டான். குழந்தைப்பிள்ளை போல் அழுவதையே மறந்து விட்டான்.

அவன் தலைமறைவாகி இரண்டு மாதங்களின் பின்னர் வீட்டுக்கு வந்த போது உடலாலும் சரி, உள்ளத்தாலும் சரி உறுதியடைந்த தேவனாகவே காணப்பட்டான். அவன் என் ணம், செயல் யாவும் ஒரே திசையில், ஒரே நோக்கிலேயே இருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு நாட்கள் இரவுப் படுக்கைக்கு வரவில்லை. மூன்றாம் நாள் காய்ச்சலோடு வந்தான். ஆனால், முன்பு போல் அம்மாவின் மடியில் விழுந்து முனகுவதில்லை. எங்களிலிருந்து நிறையத் தூரம் விலகிவிட்ட மாதிரி கொஞ்சமும் ஒட்டிக் கொள்ளா மல் பாயை எடுத்துப்போட்டு , தன் பாட்டில் படுத்து விட் டான்! அந்தச் செயலும் நகர்வும் அம்மாவை மிகவும் வேதனைப்படுத்தியது.

“இவனுக்கு…வர வர பாசம் எண்டதே இல்லா மல் போச்சுது…” என்று அம்மா வேதனைப்பட்டபோது நான் தான் அம்மாவை ஒருவாறு தேற்றினேன். இருந்தாலும் என்னைத் தேற்றிக் கொள்ள என்னால் முடியவில்லை!

உடைகளைத் தோய்த்துத் தரும்படி கூடக் கேட்காமல், அழுக்கோடு அவன் அணிய ஆயத்தமான போது, நான் தான் பேசிவிட்டு, வாங்கித் தோய்த்துப் போட்டேன். நேரத்துக்கு நேரம் அலங்காரம் பண்ணி, ‘சைக்கிளில்’ சுற்றித்திரிந்து கொண்டு இருந்தவன் இப்படி மாறிப்போனதென்னவோ கனவு மாதிரித் தான் இருக்கிறது!

நேற்று முன்தினம் ‘கொல்லுக் கொல்’ லென்று இருமியபோதும், அவன் எந்தவித ஆதரவையும் எம்மிடமிருந்து எதிர்பார்க்கவில்லைப் போலும். மிகவும் சாதாரணமாகத், தானே தன் மார்பைக் கைகளால் நீவிவிட்டுக் கொண்டது இன்னமும் என் கண்களில் நிற்கிறது. இரவு, “கால்கள் ரெண்டும் வலிக்கிறது” என்று அவன் வாய் விட்டுக் கூறிய போது, அம்மா அவனது கால்களை உருவி விட்டவாறே கண்ணீர் சிந்தினா. நீண்டமாதங்களின் பின்னர், அன்று தான் அவனும் கண்கள் கலங்கினான்.

இன்று காலையில் கூட, காய்ச்சலோடு எங்கோ போய் விட்டு வந்து, அவன் இருமித்துப்பிய பொழுது இரத்தமும் வெளியில் வந்தது. அதைக் கண்டதில் எனது பாதிப்பை உணர்ந்த நான், அது பற்றி அம்மாவிடம் எதுவும் சொல் லாமல் அவன் கைகளைப் பற்றி அழுதபொழுது, “உங்களுக்குப் பைத்தியம் ! இந்தச் சின்ன விசயத்துக் கெல்லாம் அழுறீங்களே எத்தனையோ பெரிய பிரச்சினை களையெல்லாம் எதிர் நோக்க வேண்டியிருக்கிற நாங்கள், இந் தச் சின்னப் பிரச்சினைக்காகக் குழம்பிப் போயிடக்கூடாது”.

அவன் தத்துவம் பேசுகிற மாதிரிப் பேசிய போது நான் எதுவுமே பேசமுடியாமல் அமைதியாகிப் போனேன். அவன் மனம் ஏதோ ஒரு வழியில் மிகவும் செப்பனிடப் பட்டு விட்டது என்பது மட்டும் எனக்கு நன்றாகப் புரிந் தது. டொக்டரிடம் போய் விட்டு வந்தவன் , நெஞ்சில் சளி கூடிவிட்டதால் ஏற்பட்ட இரத்த வெளிப்பாடு பற்றி என்னிடம் விளக்கினான்.

மதியம், நான் சுடவைத்துக் கொடுத்த வெந்நீரை அசட்டை செய்து விட்டு, நல்ல குளிர் நீரில் குளித்துவிட்டு, எங்கோ வெளியில் போய் விட்டு வந்தான். எங்கள் புலம் பல்களின் விளைவாக, ஒரு நேரமாவது வீட்டில் வந்து அவன் சாப்பிடுவதே இப்போதைக்கு ஆறுதல் தான். இப்பவும் அநேகமாய் வந்திடுவான். அதுவரைக்கும் அம்மாவைச் சமா ளிப்பது தான் கடினம் ! ”காய்ச்சலோடு அலைகிறானே…….!” என்று புலம்புவா. அவனது மனப்போக்கும் சிந்தனையும் கஸ்டங்களும் எனக்குப் புரிகிறது. இருந்தாலும் அம்மாவின் மனம் பெற்றமனம் இல்லையா?

அவவின் புலம்பலைத் தடுப்பது தான் பிரச்சனையாக இருக்கும்.

நான் திரும்பிய போது ‘கேற்’ வாயிலில் மணியோசை கேட்டது. அவசரமாக விரைந்தேன்.

“அக்கா, தேவன் இதை உங்களிட்டைக் குடுக்கச் சொல் லித் தந்துவிட்டவர்” இளைஞன் ஒருவன் ஒரு மடித்த காகிதத் துண்டைத் தந்துவிட்டு விரைந்து மறைந்தான். நான் ஆவல் மேலிட, அதனை அவசரமாகப் பிரித்தேன்.

‘அன்புள்ள அம்மா , குடும்பத்தார் அனைவருக்கும், நான் உங்களை விட்டு, வெகு தூரத்திற்குப் போக வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. நான் போகிறேன். என் காய்ச்சல் குணமாகி விடும். என் நண்பர்கள் எனக்குப் பெற்றவர்கள்’ மாதிரியுந் தான் ! எனவே பயப்படாதீர்கள். விரைவில், நாம் நமது சுதந்திர மண்ணில் சந்திப்போம். விடைபெறுகிறேன்,

அன்புடன்
தேவன்

நான் அதிர்ந்து , சிலையாகி…பின்னர். மெல்….மெல்லத் தெளிவாகி…கண்களைத் துடைத்து விட்டுக் கடிதத்தை மடித்தபோது, அம்மா சமையலறைக்குள் நின் றவாறே தேவனை அழைப்பது எனக்குக் கேட்கிறது.

– ஈழமுரசு, அக்டோபர் 1986,

– நிழல்கள் (சிறுகதைகளும், குறுநாவலும்), முதற் பதிப்பு: ஒகஸ்ட் 1988, உந்தன் புத்தக நிலையம், பருத்தித்துறை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *