சிறுமை கண்டு பொங்குவாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 12,420 
 

சன்னதி கோவில் தேர்த்திருவிழாவுக்குப் போகிற சந்தோஷம் அம்மாவுக்கு உறவினரெல்லாம் கூடி ஒன்றாக வானில் போவதாக ஏற்பாடு. இதற்கு முந்தைய காலாங்களில் வல்லிபுரக் கோவிலுக்குத் திருவிழா பார்க்க மாட்டுவண்டியில் பயணித்த கதை மிகவும் சுவாரஸ்சியமானதென்று அம்மா கூறக் கேட்டதாகக் கல்யாணிக்குள் ஒரு ஞாபகச் சிமிழ் இந்தச் சிமிழைத் திறந்து பார்த்தால் இதுவல்ல இன்னும் எத்தனையோ நினைவு முத்துக்கள் கண் திறந்து ஒளி சிரிக்கும் இப்படி வருகிற முத்துக்களெல்லாம் ஒளி தான் கொண்டு வருமென்றில்லை அவற்றில் சில தடம் மாறி இதயத்தை பிளந்து சாகடிக்கிற கொடூர வாள் கணக்கிலும் மாறிப் போகிற கொடுமையை நினைக்கும் போது கண்களில் இரத்தம் தான்.

அம்மாவுக்கு அந்த அனுபவமே முள் படுக்கை தான் அதை அவள் நிறைய அனுபவித்திருக்கிறாள் ஆனால் அதையெல்லாம் கண்டு பொங்கியெழக் கூடிய அளவுக்கு அவள் தர்மாவேசம் கொண்டு என்றைக்குமே கல்யாணி அவளைத் தரிசித்ததில்லை அப்படியிருக்காது போனால் சமூகம் மனிதர்களை அதிலேயே பசியாறி விழுங்கிவிடுமென்பது கண்கூடாகிவிட்ட ஓர் கசப்பான உண்மை இதற்கு அம்மாவே ஓர் சிறந்த உதாரணம் அவள் எப்போது கண் திறந்து வழி நடந்தாலும் அவளைச் சிலுவையில் தூக்கி அறைவதற்காகவே யூதர்களல்ல இந்த பெண்மை நலன் பாடும் மனிதச் சிறுக்கிகள், சிறுமை கொண்ட மனிதர்கள்.

அம்மா மாதிரி அவர்களும் கல்யாணமாகிப் புருஷனோடு வாழ்கிற குடும்பத் தலைவிகள் தாம் அதிலும் அம்மாவின் நெருங்கிய உறவு வேறு இருப்பினும் அம்மாவை எதற்கெடுத்தாலும் குற்றக் கண் கொண்டு பார்த்துச் சட்டியில் போட்டு வறுத்தெடுப்பதே அவர்களின் தலையாய கடமையாக இருந்தது கடமையென்ன கர்மயோகமா ஒவ்வொருவருக்கும்?இது கடமையல்ல கழுத்தறுப்பு.

அம்மாவோடு உறவெல்லாம் கூடி வானில் சன்னதி முருகன் கோவிலுக்குத் திருவிழா பார்க்கப் போன போது கல்யாணிக்கு எட்டு வயது தான் வானில் போன ஞாபகம் மட்டும் தான் மங்கலாக நினைவிருக்கிறது அப்போது கொழும்பிலிருக்கிற சித்தியும் சித்தப்பாவும் கூட வந்தது மறக்கவில்லை சித்தப்பா துரைசிங்கத்துக்கு ரெயில்வேயில் வேலை அபூர்வமாக எப்போதாவது சிராமத்துக்கு வந்து போவார்கள் இருவரும் அப்படி வரும்போது சித்தியின் தங்கை சந்திரா வீட்டிலே தான் தங்குவது வழக்கம் அவர்களுக்குப் பிள்ளைகள் கிடையாது சந்திராவின் பிள்ளைகளோடு நல்ல ஒட்டுதல் சித்திக்கு. அதிலும் பெண் பிள்ளைக்கு விதம் விதமாய் கவுன்கள் தைத்துக் கொடுத்து அலங்காரம் செய்து அழகு பார்ப்பதில் சித்திக்கு நிகர் அவளே தான்.

சித்தப்பா துரைசிங்கம் அப்பாவின் ஒரே தம்பி அது வெறும் பேச்சளவில் தான் சித்திக்கு அவர்களைக் கண்ணில் காட்ட முடியாது அவள் உலகம் வேறு கொழும்பு நாகரீகம் பிடிபட்டு மிக அமர்க்களமாக உடையலங்காரம் செய்து கொண்டு அவள் வரும் நிலையில் பாமரத்தனமான கிராமீயத் தோற்றத்துடன் தட்டுடுப்பு உடுத்தவாறே எதிரில் வந்து நிற்கும் அம்மாவின் நிழக் கூடக் கரிக்கும் அவளுக்கு இப்படி நிழல் தின்ற மனிதர்களிடையே தான் பாவம் அம்மாவினது உயிர் வழிப் பாதையின் ஒற்றைத் தடங்கள் இந்தத் தடங்களை வழி மறித்து அவள் மீது கல்லெறியவே காத்திருக்கும் ஒரு கூட்டம் சித்தி இதற்கு விதி விலக்கல்ல.

சன்னதி கோவிலுக்குப் போன போது சேலைக்கு மாட்சாக ரவிக்கை அணிந்து கொண்டு வெகு நாகரீகமாக அவள் வரும் போது நிழல் கவ்விய அம்மாவின் எதிர்மறைத் தோற்றம் யார் கண்ணிலும் எடுபடவில்லை அவள் கிராமத்து மண்ணின் வாடை குறையாத சரியான பட்டிக்காடு தான் இருந்து விட்டுப் போகட்டுமே வாழ்க்கையை நிலை சரியாமல் கொண்டு நடத்துவதற்கு அதுவா முக்கியம்?

கோவிலில் இருந்து திரும்பி வரும் போது வானுக்குள் இருந்தபடியே கடலை வாங்கப் போன போது சித்திக்கும் அம்மாவுக்குமிடையே ஒரு நெருடல் சம்பவம் நேர்ந்ததாம் இதை அம்மாவே சொல்லியிருக்கிறாள்.

உண்மையில் இந்தச் சித்தி பெரிய செய்காரியக்காரிதான் அதிலும் கொழும்பு நாகரீநடத்தைகள் பிடிபட்டுப் புடம் போடப்பட்ட கணக்கில் அம்மாவைத் தூக்கியெறிந்து பேசியே பழகிய அவளுக்கு அன்றும் வாய் சும்மா இருக்கவில்லை அம்மா கடலை வாங்கும் போது கடலைக்காரியிடம் அதைக் கொடுப்பதற்கான பைகள் தீர்ந்து போனதால் வேறு வழியின்றி வான் டிரைவர் வான் துடைக்கவென வைத்திருந்த துணியை அம்மாவிடம் நீட்டிய போது அவள் அதை வாங்க மறுத்ததே சித்தியின் வாய்க் கொழுப்புக்குத் தீனி போட்ட மாதிரியாயிற்று.

அது ஊத்தையென்று அதை வாங்க மறுத்து அம்மா சொன்ன போது சித்தி பதிலுக்குக் கேட்ட விதம் அம்மாவைச் சிலுவை அறைந்து கொல்கிறவிதமாகவே இருந்ததில் அவள் வெகுவாகப் புண்பட்டுப் போனாள்.

“ஒன்றுக்கும் செய்காரியமில்லை உடுப்புத் தோய்ச்சுக் குளிக்க மாட்டியள் இதிலை மட்டும் என்ன துப்பரவு வேண்டிக்கிடக்கு?”

அம்மா பதில் பேசவில்லை அவள் பேச வேண்டிய நேரம் இது தன்னை மிகவும் கீழ்த்தரமாக எடைபோடுமளவுக்குச் சித்தி துணிந்த பின் தர்க்கங்களாலே அந்த மடமையைச் சரி செய்து நீதியை நிலை நிறுத்திச் சாதிக்க வேண்டிய தார்மீகக் கடமையை மறந்து அவள் ஒரு மெளனப் பதுமையாக நின்றது ஏன்? அவள் கேட்டிருக்க வேண்டும்.

“நாங்கள் உடுப்புத் தோய்ப்பதில்லையென்றால் அந்த நாற்றத்துடனேயே இப்பவும் எங்களைக் கறைபிடிச்ச மாதிரி உங்கடை கண்கள் அழுகியிருக்கும் அது நடக்காதபட்சத்திலை இதென்ன கேள்வி?

அம்மா அதைக் கூடக் கேட்கவில்லை அதனால் அந்தச் செய்காரியச் சிறுக்கிக்கு வாய் இன்னும் நீளும் அதைக் கண்கூடாகக் காண்பதற்கு இன்னும் ஓரு உண்மைச் சம்பவம் துருப்பிடித்த காட்சி நிழலாய் கல்யாணியின் வாழ்க்கையில் நடந்தேறியது அவளுடைய கல்யாண நேரம் சொந்தத்திலேயே அவளுக்கு மாப்பிள்ளை துரதிஷ்டவசமாகச் சித்தி வீட்டுப் பையன் அவன் சித்தியின் தமையன் மகன். பெயர் மணிவண்ணன் அவன் ஒரு வட்டிக் கடை முதலாளி அவனை மணந்த போது கல்யாணி மனதில் இன்ப ஊற்றாக ஆயிரம் கனவுச் சுனைகள். அவற்றில் அவள் நீச்சலடித்துக் கொண்டிக்ருந்த வேளையில் அந்த விபரீதம் சித்தியின் தன்முனைப்போடு மிக இயல்பாக நடந்தேறியது.

கல்யாணமான மறு நாள் மணிவண்ணன் பெரிய ஜமீந்தார் வீட்டுப் பையன் மாதிரி. பெரிய மாளிகை மாதிரி வீடு. ஏழெட்டு அறைகள் இருக்கும். சாப்பாட்டறை டைனிங் டேபிள் என்று எல்லாம் படு அமர்க்களமாக இருந்தது. அன்று காலையில் அதிலிருந்து மணிவண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருக்க,அவனுக்குப் பரிமாறுவதற்காகாகப் பக்கத்தில் கரண்டியும் கையுமாகக் கல்யாணி நின்று கொண்டிருந்த போது வந்ததே வினை. சித்தி வந்திருந்தாள் சதி செய்ய வந்த நினைவோடு கல்யாணியைப் பார்த்து அவள் சொன்னாள்”.

“கல்யாணி இவையளைப் பாத்து நீயும் செய்காரியத்தைப் பழகு “.

இதைக் கேட்டு மணிவண்ணன் வெகுவாக முகம் கறுத்துப் போனான் அவளைத் தன் மனைவி ஸ்தானத்தில் வைத்துப் பார்க்கவே மனம் கூசியவனாய் மேற்கொண்டு சாப்பிடப் பிடிக்காமல் கோப்பையிலேயே கை கழுவி விட்டு எழுந்தவன் கடும் தோரணையில் அவளை முறைத்துப் பார்த்துத் துவாயை எடு என்று அவன் கட்டளை போட்டதும் கல்யாணிக்குப் புரிந்தது அவன் மனதில் இந்த விஷ விதையை விதைத்தவள் சித்தி தான் இது இனி விருட்சமாக வளரும் போது நான் உயிரோடு இருந்தாலே பெரிய அதிசயம் தான் எனது உண்மை நிலையைச் சாட்சி கொண்டு விளக்குவதே பெரிய அக்கினிப் பரீட்சை மாதிரி எனக்கு. என்ரை பெண்மை நலன்கள் எடுபடாமல் காற்றில் கரைஞ்சு போனாலென்ன சித்திக்கு மனிதாபிமான சிந்தனை இருந்தால் தானே இதைப் பற்றியெல்லாம் சிந்தித்துக் கதை சொ;ல்ல என் வாழ்க்கையே தீப்பற்றியெரிஞ்சால் இவளுக்குக்கென்ன.

இவ்வளவு யோசித்து மனம் கலங்கிய பிறகும் அவளுக்குப் பேச வரவில்லை அம்மா மாதிரி அவளும் ஒரு வாயில்லாப் பூச்சி தான் இவர்களெல்லாம் பெரிதுபடுத்திச் சொல்கின்ற வாழ்க்கை நிலையாமைக்கும் மாறான ஒரு பெண்ணினுடைய அந்தச் செய்காரிய நிலை குறித்து விடை அறிய முடியாமல் போன கேள்விகளால் அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது செய்காரியமென்றால் ஒரு பெண் குடும்ப நிர்வாகத்தை அதி கூடிய கெட்டித்தனத்துடன் கொண்டு நடத்தக் கூடிய அசாத்திய திறமைச் சான்றிதழ்களுடன் நிரூபித்துக் காட்டுவதையே குறிக்கும். அப்படி இல்லாது போனால் என்ன குடியா முழுகி விடப் போகிறது? ஏன் இவர்கள் இப்படியெல்லாம் அலட்டிக் கொள்கிறார்கள்.? ஏன் இந்தச் சிறுமைத் தன மன வெளிப்பாடு இவர்களிடம்? செய்காரியமென்ற இந்த அலட்டல் சம்பிரதாயம் வாழ்க்கையின் ஒரு குறியீடா?புதிதாகக் கல்யாணமான ஒரு பெண்ணைப் பார்த்து இப்படியாவது பேசுவது? அப்புறம் அவள் நிலைமை என்னவாகும்? ஓர் அடிமை மாதிரி கணவன் பார்வையில் அவள் எடுபட்டால் எங்கே போய் மூட்டிக் கொள்வது? இதற்கு விலை கொடுக்கச் சித்தியால் முடியுமா ?/என் பெண்மைதான் வீழும். அவள் அப்படிச் சொன்னதற்காக அன்றே ஒட்ட வெட்டியிருக்க வேண்டிய நாக்கல்லவா இது. அம்மாவாலும் அது முடியவில்லை பெரிய செய்காரியப் புலி / இவள் எங்களுக்குப் பாடம் சொல்ல வந்திட்டா இதைக் கேட்டு மணிவண்ணனென்ன மொத்தக் குடும்பமுமே என்னைப் பலிக்கடாவாக்கும். இதுகளுக்கு இரை என்ரை தலை தான் இப்படித் தலைகளைக் கொய்து வேட்டையாடவா இந்தச் செய்காரிய வேதம்? இது வேதமல்ல, உயிர்களைக் கொன்று தீர்க்கிற சிறுமைத்தனம் சாதிக்கின்ற சாத்தானாய் இருந்து கொண்டு வேதமாவது இவர்கள் வாயிலிருந்து வருவதாவது? சீ நினைக்கவே மனம் கூசுகிறது பெரிய செய்காரியப் புலிகளென்று உலகம் இவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறதை நினைத்தால்.நெஞ்சு கொதிக்குது. இந்தச் சிறுக்கிகளை என்னவென்று சொல்லி மன்னிப்பது?இந்த மிகவும் அற்பத்தனமான சிறுமை கண்டு பொங்காவிட்டால் எங்கள் தன்மானத்துக்கே இது இழுக்கல்லவா? இப்படியெல்லாம் குடும்ப வேலை செய்யத் தெரிந்த செய்காரிய வெற்றிச் சாம்ராச்சியமெல்லாம் உடல் புழுத்து மனமே வீழ்கிற போது காணாமல் போய் விடுமென்பதற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்துக் கொள்ள எவருமின்றி அனாதையாய் ஹோமில் உயிர் விட்ட சித்தியின் கதையே சான்றாக நிற்கும் நிலையில் பெரிதாக அவள் வாய்ச் சவடால் பேசிய செய்காரிய வெற்றித் தூண் கூடச் செயல் இழந்து போனது வெறும் காட்சி மயக்கம் தான் என்று நம்புவது கூடக் கஷ்டம் தான் வாழ்க்கையைப் பங்கமுறாமல் நிஜமாக்கும் உண்மைகள் இப்படித் தான் வரும் அப்படிக் கண்களில் கலக்கமில்லாமல் உண்மை தெளியும் போது எந்தச் செய்காரியச் சிறுக்கியாலும் எனக்குத் தோல்வியில்லையென்று கல்யாணி மிகவும் நம்பிக்கையோடு நினைவு கூர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *