சிடுமூஞ்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 6, 2013
பார்வையிட்டோர்: 8,219 
 

கோபி ஒரு முன்கோபி.

”ஏன்கோபி, இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் படறியே? ஒரு வேளை, ரத்த கொதிப்பு இருக்குமோ? டாக்டரை பாரேன்?” –அப்பா

“நானா? நானா? கோபப்படறேன்?”

“ஆமா கோபி! உன் பிரண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்களே! ”

“அவங்க கிடக்கறாங்க. தண்டங்க. அது சரி! உன்னை யாரு இதெல்லாம் அவங்க கிட்டே கேக்க சொன்னது? வேறே வேலை இல்லே உனக்கு?”

“கோபிக்காதே! மது தான் நேத்திக்கு சொன்னான். ஆபீஸ்ல காட்டு கூச்சல் போடறியாமே, சின்ன விஷயத்துக்கெல்லாம்?”

“சொன்ன பேச்சு கேக்கலன்னா, பின்னே என்ன கொஞ்சுவாங்களாமா?”

“அப்புறம், உன் அத்தை கூட சொல்றா, நீ அவளோட, அநியாயத்துக்கு சண்டை போடறியாம்! ரொம்ப வருத்தம் அவளுக்கு!”

“அவ என்ன சொன்னான்னு உனக்கு தெரியுமா?”

“இருக்கட்டும்டா! எதுக்கும் நீ டாக்டரை போய் பாத்துட்டு வாயேன்!”

“சரி சரி, போய் பாத்து தொலைக்கறேன்! இல்லேன்னா விடவா போறீங்க?”

***

“குட் மார்னிங் டாக்டர்”

“வாங்க கோபி! என்ன விஷயம்?”

“ஒண்ணுமில்லே டாக்டர், சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் வரது. அடக்க முடியலே! அதான்..”

“ஓகே. ரத்த அழுத்தம் அதிகமிருக்கும். செக் பண்ணிடலாம்”

செக்கிங் முடிந்தது.

“கோபி, உங்களுக்கு அழுத்தம் ரொம்ப அதிகமாக இருக்கு. எவ்வளவு நாளா உங்களுக்கு இந்த பிரச்சனை?”

“தெரியலே டாக்டர். கோபம் வரும், அவ்வளவுதான்”

“கோபம் வந்தால் என்ன பண்ணுவீங்க?”

“வாய்க்கு வந்த படி திட்டுவேன்”

“ஆபீஸ்லே கோவம் வருமா?”

“ரொம்ப”

“அதனாலே பிரச்னைகள் வருமே?”

“வரும்”

“அதை வீட்டில் காட்டுவீங்களா?”

“காட்டித்தானே ஆகணும்?”

“அப்போ வீட்டிலே சண்டை வருமா?”

“வரும்.”

“யாரோட?”

“யாரோட இருந்தா உங்களுக்கு என்ன டாக்டர், நீங்க எதுக்கு எங்க வீட்டு பிரச்சனைகள் பத்தி கேக்கறீங்க?”

“அதுவும் சரிதான்! எனக்கெதுக்கு உங்க வீட்டு பிரச்னை ? போகட்டும், உங்களுக்கு ஹைபர் டென்ஷன் இருக்கு. இந்த மருந்து எழுதி தரேன். சாப்பிடுங்க. பிரஷர் குறையும். உப்பை குறையுங்க. ஓகே வா? கோபம் வந்தால், ரொம்ப குறைச்சுக்கோங்க. அது ரொம்ப அவசியம்.”

*****

வருடங்கள் ஓடின. கோபிக்கு இப்போது வயது 60. கோபமும் குறையவில்லை. நோயும் கூடிற்று. கோபிக்கு இப்போது ரத்தக் கொதிப்பு, தூக்கமின்மை, அல்சர், கொஞ்சம் இதய நோய்.

ஒருநாள், ஒரு வாடிக்கையாளரிடம், அலைபேசியில், வாய்க்கு வந்த படி பேச, அவர் இவனை ஏக வசனத்தில் ஏச, எல்லாம் சேர்ந்து, மயக்கம் வந்து, அப்படியே விழுந்து விட்டான். மூக்கில் ரத்தம். பக்கவாதம்.

‘தன்னைத்தான் காக்கின் சினம் காக்க: காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்’ – இவனை பொருத்தவரை கிட்டதட்ட உண்மையாயிற்று.

உடனே ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

பத்து நாள் கழித்து. இன்னும் கோபிக்கு பேச்சு வரவில்லை. கை கால் அசைக்க முடியவில்லை. கொஞ்சம் அரை மயக்கம். கண்மூடி படுத்திருந்தான்.

அவனது பெண்கள் அவனை பார்க்க ஆஸ்பத்திரியில். படுக்கைக்கு அருகில்.

“அப்பா! அப்பா! உடம்பு இப்போ எப்படிப்பா இருக்கு?- பெரிய பெண் ஊர்வசி.

“அப்பா! நாந்தான் மாலா வந்திருக்கேன். தேவலையா இப்போ?”- இரண்டாம் பெண்.
கோபியின் முகத்தில் எந்த மாற்றமுமில்லை. மூடிய கண்கள் மூடியே இருந்தன.

“பாவம்பா நீ! உடம்பு இப்படி இளைச்சு போச்சே!”
“என்ன பண்ணுவார்டீ! இவருக்கு இப்போ டியுப் வழியாத்தான் எல்லாமே”

சிறிது நேரம் கழித்து, அப்பாவை விட்டு, சகோதரிகள் இருவரும் வேறு கதை பேச ஆரம்பித்தனர். இதுவரை அப்பா எதிரில் பேசியதே இல்லை.

கோபிக்கு இதெல்லாம் காதில் விழுந்து கொண்டிருந்தது.

இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து, பேச்சு அப்பாவை பற்றி திரும்பியது. அப்பா மயக்கமாக இருக்கும் தைரியத்தில், பேச ஆரம்பித்தனர்.

“ஏய், மாலா, பாரு அப்பாவை. எப்படி நம்மை பாடாய் படுத்தினார்?. இப்போ பாரு கைகாலெல்லாம் இழுத்துகிட்டு” – ஊர்வசி

“கிழத்துக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்டி” – மாலா

“எனக்கு இவரை பார்த்தால் பாவமே வரலை. பத்திக்கினுதான் வருது”- ஊர்வசிக்கு கோபம் இன்னும் கூடியது.

“ஆமாமா, நம்ம அம்மாவை என்ன பாடு படுத்தியிருக்கிறார் இவர். இப்போ நல்லா படட்டும்.”

“அம்மா அழாத நாளே இல்லே தெரியுமா?”

“இந்த அப்பாக்கு கோபத்திலே என்ன பன்றார்ன்னே தெரியாது. என்னை கூட கண்ணு மண்ணு தெரியாம அடிப்பார். தள்ளி விட்டுடுவார். வசவு தாங்கவே முடியாது.”

“சின்ன விஷயத்துக்கெல்லாம், முடியே பிடிச்சு உலுக்குவார். ச்சே! இவரெல்லாம் ஒரு அப்பான்னு சொல்லிக்கவே வெக்கமாயிருக்கு”- மாலா

அவர்களது அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்தது.

அப்போது அவர்களது அம்மா உள்ளே வந்தாள். கொஞ்சம் தூரத்திலிருந்தே கோபியை பார்த்தாள்.

“ஏம்மா ! அப்பா கண் விழிச்சாரா? பேசினாரா? ஸ்மரணை வந்துதா?”- அம்மா
“இல்லேம்மா. அப்படியே தான் அசையாம இருக்கார்”- மாலா

“இருக்கட்டும் கொஞ்ச நாள் ஆஸ்பத்திரியிலே. என்னை என்ன பாடு படுத்தியிருக்கிறார்? கிடக்கட்டும் இங்கே. நர்ஸ் பாத்துப்பாங்க. நாம வீட்டுக்கு போகலாம் வாங்க!”

கேட்டுக்கொண்டிருந்த கோபிக்கு மிகுந்த வருத்தம். தாங்க முடியவில்லை. கண்ணில் நீர் வழிய ஆரம்பித்தது.

‘இந்த குடும்பத்திற்கா நேரம் காலம் பாக்காமல் உழைத்தோம்? இவ்வளவு சொத்து சேர்த்தோம்? எல்லாம் இவங்களுக்கு தானே! என்னை இப்படி உதறிவிட்டு போறாங்களே!நம்ம கோபத்தினாலே, எல்லாரையும் இழந்துட்டோமே!. எனக்கு இப்போ யாருமே இல்லியே.”

வயதானால், பணம் மட்டுமே வாழ்க்கை இல்லே. உறவுகள் வேண்டும். புரிந்தது. இனிமேலாவது நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான்(ர்).

*****

ஒரு மாதம் கழித்து. தனது வீட்டில் கோபி. உடல் தேறிவிட்டது.

டாக்டர் சொல்லி விட்டார், ‘கோபி, இங்கே பாருங்க , சண்டகோழியா இருந்தா, உங்க உயிருக்குதான் ஆபத்து. நீங்க கோபமே பட கூடாது. இன்னொரு முறை, ஸ்ட்ரோக் வந்தால் ரொம்ப கடுமையாயிருக்கும்.பாத்துக்கோங்க!”

கோபத்தை இப்போது மிகவும் குறைத்து கொண்டார். மனைவியிடம் மிக மிக அன்பாக இருந்தார். மகள்களிடம் மிக கனிவோடு பழகினார்.

பெரிய மகள் ஊர்வசியின் குழந்தைகளுடன் ஒரே விளையாட்டு தான். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் அவருடன் நேசமாக ஆரம்பித்தனர். சுற்றம் கூடியது. வாழ்க்கை என்பது என்ன என இப்போது தெரிந்து கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *