சாட்சிகள் ஏதுக்கடி?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 6,165 
 

இருள் அடர்த்தியாகக் கவிழ்ந்திருந்த நிலவற்ற நள்ளிரவு.சூன்யம் தடவிய கறுப்புவெளி. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாய்க் கழன்று விழுகின்றனவோ விழி மணிக்குள்… அந்தகாரமான அமைதிக்குள் டிக்,டிக்கென்று காதுகளைச் செவிடுபடுத்தும் ஓசை.விர்ரென்று அமைதிப்
பிரவாகத்தைச் சிதறடித்துக் கீறல் உண்டாக்குகின்ற காற்றின் கூவல்… ஏதோ இம்சிப்பதாய்…ஏதோ
ஒன்று மனதை ரணப்படுத்துவதாய்…

ஹ..ஹ…ஹய்யோ…சலனங்களைக் கடக்க மாட்டாத தவிப்போடு மூடிக்கிடந்த சிவசம்புக் கிழவரின் இடுங்கிச் சுருங்கிய வாயிதழ்கள் கொஞ்சம் முனகலாய்த் தொடங்கி, விக்கலின் ஆங்காரத்தோடு முடிவுறுவதாய் வீறிட்டுக் கத்தின.

ஒருகணம் வீட்டுக்குள்ளிருந்த அமைதியின் பரிமாணம் சட்டென்று சிதறிப் போயிற்று.

“அப்பா…என்னப்பா…?” தூக்கம் குழம்பிப் போயிற்றென்ற எரிச்சல் ஊற முயன்றாலும் அதை
ஒரு புறம் தள்ளிவிட்டுத் தந்தையின் பீதியூட்டும் குரலினால் அருட்டப்பட்ட வாமதேவனின் அனுசரணையான குரல்…

“விமலி… விமலி… எங்கை…?”

அவனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது.இருப்பினும், தந்தையின் படுக்கைப்பாடு தந்த பரிவுணர்வில் பொறுமையாய்ப் பதிலளித்தான்.

“இதென்னப்பா, விமலி நித்திரையெல்லோ…?”

“அவளைக் கூட்டிவா, அவளை நான் பாக்கோணும், அவளின்டை காலிலை விழோணும்…”

“ஏதோ கெட்ட கனாக் கண்டு புசத்துது மனிசன்…”

பின்னோடு வந்து நின்று தூக்கக் கண்களோடு பார்த்தபடியிருந்த புவனா காதுக்குள் குசுகுசுத்தாள்.

“நித்திரைக் குளிசை குடுத்ததே இண்டைக்கு…”

“ஓமோம், அதெல்லாம் குடுத்தாச்சு…”

“விமலி…விமலி… நான் பாவி…”

“என்னப்பா, நாங்கள் பக்கத்திலைதானை இருக்கிறம். நீங்கள் ஒண்டுக்கும் யோசியாமல் படுங்கோ…” ஆறுதல் தர விழைகின்ற வாமதேவனின் குரல்.

“நான், கன நாள் இருக்கமாட்டன். அதுக்கிடையிலை…அதுக்கிடையிலை…”

“தாசனோடையும், மாதவனோடையும் நான் கதைச்சனான் அப்பா. அவங்கள் கட்டாயம் வந்திடுவாங்கள்.இப்ப பாதையும் திறந்தாச்சுத்தானை, எல்லாரையும் ஆசை தீரப் பாக்கலாம்…”

அந்த வயோதிபச் சுருக்கங்கள் ஏறிய முகம் வேதனையில் மேலும் சுருங்கியது.

“அவங்களைப் பற்றி எனக்கென்ன கவலை.. ஆனா விமலி…”

“அவளைத் தானை நெடுகப் பாக்கிறியள் நீங்கள்…”

“நான்…பாக்கிறன்… ஓம்…ஓம்…நெடுகப் பாக்கிறன் தான்… ஆனா… ஆனா…விமலி அவள் பொம்பிளைப் பிள்ளை எல்லே… அவளைக் கவனமாப் பாத்துக் கொள்ளப்பு…”

வாமதேவன் சிரித்தான்.

“இதென்னப்பா நீங்கள் விமலிக்கு இன்னும் பத்து வயது ஆகேல்லை.அதுக்கிடையிலை நீங்களும் உங்கட கதையும்…”

“இல்லையடாப்பா…இல்லை…”

சடசடவென்று அவரது குரலை மூழ்கடித்து மழைத்துளிகள் கூரையில் விழும் ஓசை துல்லியமாய்க்
கேட்கத் தொடங்கியது.

“மழை வருதப்பா…நீங்கள் ஒண்டும் யோசிக்காமல் படுங்கோ…”

போர்வையால் அவர் உடலை கழுத்துவரை பக்குவமாய்ப் போர்த்திவிட்டு அவன் ஆறுதலாய்ச் சொன்னான்.

“விமலி எங்கட சொத்தப்பா… அவளை ராசாத்தி மாதிரிப் பாப்பம்…”

லாம்பை மீண்டும் தணித்து வைத்து விட்டு வாமதேவன் தனது அறையை நோக்கிச் சென்றான்.

பன்னிரெண்டும், பத்துமாய் அறைக்குள் படுத்துக் கிடந்த நிர்மலனையும், விமலியையும் பாசத்தோடும், பரிவோடும் பார்த்து விட்டு மனைவியிடம் திரும்பினான்.

“என்னவோ தெரியா…மாமா ஆகலும்தான் பயப்பிடுறார்…”

புவனா பிள்ளைகளுக்குப் போர்வை எடுத்துப் போர்த்தியபடி தனக்குள் முணுமுணுத்தாள்.வெளியே மழையின் ஆங்காரம் நிமிஷத்துக்கு நிமிஷம் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது. ச்சல்…ச்சல்…என்ற சலங்கை ஒலிகளின் கலீரிடலாய் மழை கசிந்து,கசிந்து கூரையைத் தடவிக் கொண்டிருந்தது.இனி இந்த மழைத்துளிகள் மெல்ல நழுவிக் கூரையில் ஏற்பட்ட இடுக்குகளின், ஒழுக்குகளின் வழியாய் உள்ளிறங்கலாம்.

எச்சரிக்கை உணர்வு சட்டென்று புவனாவின் உள்ளத்தைத் தாக்கிற்று.இனி, படுக்கப் போய் இந்த மழை வலுத்து ஒழுக்கூறுகின்ற ஒரு தருணத்தில் திரும்பவும் தூக்கம் கலைப்பதென்றால் அதைப்
போல் அலுப்பு வேறொன்றில்லை.இப்போதே ஒழுக்குகளுக்குப் பாத்திரம் வைத்தால் பிறகு எழுவதைத் தவிர்த்துவிடலாம்.

“நீங்கள் படுங்கோப்பா… வாறன்…”

அவள் அடுக்களையில் நுழைந்து பாத்திரங்கள் தேடி பழைய மழை காலங்களில் படித்திருந்தபடி ஒழுக்குகளின் மறைவிடத்தைக் குறிப்பால் துளாவி பாத்திரங்களை வைத்துவிட்டுப் படுக்கைக்கு வந்தாள்.

அதற்கிடையில் வாமதேவன் உறங்கிப்போயிருந்தான்.

இடையிடையே தொடரும் முனகலோடு கிழவரின் பிதற்றல் தொடர்ந்தது.

“முந்திப் பொம்பிளைப்பிள்ளை இல்லாததாலையாக்கும் விமலியிலை அவ்வளவு பட்சம்…”

தூக்கத்தில் முறுவல் சிந்திய சின்னவளை அணைத்துக்கொண்டு புவனாவும் படுத்துக்கொண்டாள்.

மழை இப்போது வலுத்து விட்டது.காற்றும் ஊ… ஊவென்று ஊளையிட்டது.கிழவரின்
காதில் அந்த அழுகை ரீங்காரம்…மழையின் வீறிடலாய் மாறி,மாறிக் கேட்டது.தலைமாட்டில் ஒழுக்குச்சட்டியில் பட்,பட்டென்று விழுகின்ற மழைத்துளிகளின் வேகம் தலையில் ஓங்கி
அறைகின்ற சம்மட்டி ஓசை ஆயிற்று.

கத்தவேண்டும் போலிருந்தது, இந்த மழையை நிறுத்தச்சொல்லி…அது முடியாது. அவ்வாறெனின் இந்தக் கட்டிலை மாற்றவேண்டும், ஒழுக்குகள் இல்லாத இடம் பார்த்து.அதுவும் முடியாது. வீடெங்கும் பரந்துபட்ட ஒழுக்குகள்.அவர் எப்படித்தான் விலகிப் போகமுயன்றாலும்…அவரது அமைதியை வேரறுத்து, உயிர்வளையை நெரிக்கப் போவதாய் அச்சுறுத்தி… அச்சுறுத்தி…
மனதை இறுக்கிக் கொண்டிருக்கின்ற அந்த நரக வேதனை…அந்தச் சத்தம் தருகின்ற துன்பம்…

“பட்…பட்…” மீண்டும்…மீண்டும்…

ஐயோ…இது என்ன வேதனை… கட்டில் விளிம்புகளை நடுங்கித் தளர்ந்த விரல்களால், இறுகப்
பிடித்தபடி வாழ்க்கைச்சுழலில் அகப்பட்டு மீள முடியாமல் தவிப்பவராகி…

“தாத்தா…தாத்தா…” இது விமலியின் குரலா…?

“விமலி…நீ எங்கேயிருக்கிறாய்…?” தொண்டைக்குழிக்குள் இடறுண்டு தவிக்கின்றாளே… பக்கத்தில்… பக்கத்தில்… யாரது…? அவன்…அவன்…யார்? கிழவரைப் போல… கிழவரின் இளமைத்
தோற்றம்போல், தோன்றுகின்ற அவன்… பத்திரமாய் அவளைக் கொணர்ந்து வந்து சேர்த்து விட்டதாய்ப் பேர் பண்ணிக் கொண்டு…செய்த குற்றத்தின் சுவடு மாறாமலே…இன்னும் அவிழ்ந்த காற்சட்டைப் பொத்தான்கள் பூட்டாமலே…

ஓ…என் விமலி… நாங்கள் என்ன பாவம் செய்தோம்…? ஓடிப்போய் அவளை வாரிஎடுத்துக் கத்த
முற்படுகையில் கண்கள் விடுபட்டன.இறுக்கமாகப் பூட்டுப் போட்டு இதுவரை அவர் கண்களைக் கட்டியிருந்த ஏதோ ஒன்று கனவென்று பேர் சொல்லித் தளர்ந்து போக… லேசான மங்கல் வெளிச்சம் தெரிந்தது.

மழை இப்போது கசிந்தபடியிருந்தது.பட்…பட்டென்று சத்தம் ஓய்ந்து போயிருந்தது.அந்தச் சம்மட்டியால் ஓங்கிய ஒலி அவரை மயக்கத்தில் ஆழ்த்திற்றோ…?

மங்கல் ஒளியில் பாயை விட்டு விலகி வெறும் நிலத்தில் விமலி புரண்டிருந்தது தெரிந்தது.
வாமதேவனும், புவனாவும். நிர்மலனும் கூட ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது திறந்திருந்த கதவினூடே தெரிந்தது.

போர்வை விலகி, ஆடை கலைந்து அவள் கிடக்கிற கோலம்…

அது விமலியா …? விமலிதானா அது…?

“என்ன பாவம் செய்தோம்…?” என்று கத்த முயல்கையில் “நீ செய்த அதே பாவம்…” என உள்ளுக்குள் ஒரு குரல் முரண்டிக் கொண்டே நின்றதே… அதுதானா இன்று விமலியாகிக் கிடக்கிறது.

அன்று…யுகயுகாந்திரமாய்ப் போன காலநீட்சியின் அடியில்…நாற்பத்தைந்து நீளமான வருஷங்களுக்கு முன்பு…அவள் கிடந்தாள்.

வெறுந்தரையில்…ஒரு மங்கல் வெளிச்சத்தில்…பன்னிரண்டும் கடவாத பால்யத்தில்… பூப்பை உணராத ஒரு பிஞ்சின் துவக்கத்தில் குழந்தைமை படிந்த அவள்… வெம்பிப் போகிறோம் என்று உணர்ந்தும், உணராமலும்…சத்தமாய் அழலாமா……? கூடாதா…? என்பது புரியாத மாதிரி அழுது… அவள்…?

செல்வநாயகியா…அவள் பெயர்…? அதுபோல் தான் ஏதோ ஒன்று.செல்வி என்று கூப்பிட்டதாய்
ஞாபகம்.முல்லைத்தீவிலே, எங்காவது ஒரு மூலையிலே இன்றும் அவள் வாழ்ந்துகொண்டிருப்பாளா…? இல்லாவிட்டால் பட்ட காயத்தின் ஆழத்தை உள்ளுக்குள்ளேயே அறிந்து,குமைந்து அவமானத்தால் செத்துப் போயிருப்பாளா…? எப்படியாயினும் அவர் அவளைப் பற்றி அறிந்திருக்க வேண்டுமா?தவறு செய்து விட்டாரா…? முன்னதே ஒரு பெருங்குற்றம்… அதற்கான பிராயச்சித்தம் இல்லாதபோது இன்னும் ஒரு தவறா…?

செல்வி…ஓ… செல்வி… முதன்முதல் அங்கு அவர் ஒரு வாலிபனாய் அங்கு போன போது… அந்தக்
காட்டு வாழ்க்கைக்குள் அவர் மனதை இனிமைப்படுத்தியது அவளல்லவா…? அந்த முதற்கணங்கள்… இவர் தொழில் ஏற்று அங்கு போயிருந்த அடுத்த கணமே, அவருக்குள் கிடைத்த இனிய கனவல்லவா அவள்…

“உஸ்..உஸ்…” புதிய அறைக்குள் தன இருப்பை உறுதி செய்து கொண்டு ஆயாசமாய்ச் சாய்ந்து கொண்டிருந்த வேளையில்தான் ஜன்னலுக்குள் வித,விதமான மருட்டல் ஓசைகள்,கீச்சுத் தொனிகள் . யாரது…? இவன் கேள்விக்குறியாய் நிமிர்கையில் ஜன்னலை ஒட்டித் தெரிந்த முகம் திடுமென்று மறைந்தது. மறுபடியும் எட்டி இவனை அழைத்துக் கூவி விட்டு மறைந்துவிடும் வேகம் இவனுக்குப் புரிந்தது.யாரோ ஒரு ‘வால்’ வந்து அவனுக்குச் சண்டித்தனம் காட்டுகின்றதென்றும். அடுத்த கணம் கண்மூடித் தூக்கமென நடித்தான்.அந்தக் குரல் பதுங்கிவரும் நேரத்தைக் கணிப்பிட்டு அதற்குள்ளாகவே வீட்டின் மறு வழியால் வெளிப்பட்டு ஜன்னல் கரையோரமாய் பதுங்கிக் கொண்டிருந்த அவளை அலாக்காய்த் தூக்கி வீசிப் பயமுறுத்தினான்.

“ம்…ஹும்..ம்…ஹும்…” அவள் பிடிவாதமாய்த் திமிறிக் கத்துகையில் அவளை மெதுவாய்க் கீழிறக்கினான்.பிடித்த கையை விடாமல் இருக்கப் பற்றியபடி சொன்னான்.

“ம்…என்னோடை இனி சேட்டை விட்டால் கை,கால் மிஞ்சாது தெரியுமோ…? ஆத்திலை வீசி எறிஞ்சு போடுவன்.”

போலியாய்ப் பயமுறுத்தினான்.

திமிறிக் கைகளை விடுவித்தவள்,

“என்ரை கை,காலை உடைச்சால் நான் சும்மா விடுவனோ, பொலிசிட்டைப் போவன்…” எனறாள்.

“பொலிசிட்டைப் போகவே ஏலாமல் நாக்கைப் புடுங்கினால்….”

“எங்கை புடுங்குங்கோவன் பாப்பம்…” அவள் அப்பால் ஓடிப்போய் ஈயென்று பற்களைக் காட்டிவிட்டு ஓடினாள்.

அதுதான் முதல் அறிமுகம்.பக்கத்து வேலியோடு அவள் வீடு. வாய்த்துடுக்கு அவளை வயதுக்கு அதிகமானவளாய் ஒரு கணமும், சிறுபிள்ளைத்தனம் மாறாதவளாய் மறு கணமும் மாற்றிக்
கொண்டிருந்தது. அவளையும், அவள் பேச்சையும், செயல்களையும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போல அவனுக்குத் தோன்றும்..பொழுது போகாத வேளைகளிலும், வேலை முடிந்து வருகின்ற மாலைப் பொழுதுகளிலும் அவன் அவளோடு அரட்டையடிப்பான்.வயோதிபத் தாய் தந்தையருக்குக் கடைக்குட்டியாய்ப் பிறந்துவிட்டவள்.அவள் சகோதரர்கள் குடியும்,குடித்தனமுமாய்ப் பிரிந்து போன பிறகு வீட்டில் தனித்திருந்து நேரம் கழிக்கத் திண்டாடுவாள்.இடையிடையே அக்கா வீடு, அண்ணா
வீடு என்று கொண்டாடித் திரிந்தவளுக்கு இவன் வந்த பிறகு எல்லாம் மறந்து போயிற்று.இவன் அவளது பொழுதுபோக்குகளின் பங்காளியானான்.வயலோரங்களில் மாலைப் பொழுதுகளில் இவனோடு உலவி வருவதும், பறந்து திரிகின்ற கொக்குகள், நாரைகள் உதிர்த்துப் போகின்ற சிறகுகள் சேர்ப்பதுமாய் அவள் தன் பொழுதுகளுக்கு இனிமை சேர்த்துக் கொண்டிருந்தாள்.இடையிடையே தாய் செய்து கொடுக்கின்ற சிற்றுண்டிகளை இவனுக்கு எடுத்து வருவதும் அவளே.

இவனுக்குச் செல்வி இல்லாவிடின் வேலை ஓடாது.

அவளுக்கும் அவ்வாறே.

அவள் மலர்வதற்குத் தயாராகி வளர்ந்தாள்.ஆனால், மலர்வதற்கிடையில்…

அந்த நாள்… அது வந்தே இருக்கக் கூடாதோ…?

அவளுடனான இனிய பந்தத்தைக் கொலைவாளாகி அறுத்த அந்த மாலைப் பொழுது வராமலே இருந்திருக்கலாமோ…?

ஒரு வியாழக் கிழமையாய் இருந்திருக்க வேண்டும்.அவள் உற்சாகமாய்த்தான் வந்திருந்தாள்.

வழமை போலவே சூரியன் பொன் நிறம் மங்கி கடலினுள் அமிழ்ந்துகொண்டிருந்தான்.

இவனுக்கு காலையிலிருந்து மனம் குரங்காகி இருந்தது.சில்வாவின் வார்த்தைகள் அப்படியே பூதாகாரமாகித் தன்னுள் வெடிக்கும் என்பதை ஒருபோதும் அவன் நினைத்திருக்கவில்லை.

சில்வா கொஞ்சம் உல்லாசப் பேர்வழி.கம்பகாவிலிருந்து முல்லைத்தீவிற்கு வேலை நிமித்தம் வந்ததில் சிநேகமாகியிருந்தான்.

“உங்கட யாழ்ப்பாணத்தவங்களுக்கு என்னதான் தெரியும்” ஒரு சிகரெட்டை நாசூக்காகப்
பற்றியபடி சொன்னான்.

“இதைப் பிடிச்சு அடிச்சுப்பார் மச்சான்…” என்று அவன் நீட்டிய சிகரெட்டை மறுத்தது தான் அப்படியெல்லாம் பேசத் தூண்டிற்றோ …?

“ஒரு சதம் சிலவழிக்க மாட்டீங்கள், ஒரு சந்தோசம், உல்லாசம் ஒண்டும் இல்லை. என்னத்துக்குத் தான் சேர்த்து வைக்கிறீங்களோ… என்ஜோய் பண்ண வேணுமடா என்ஜோய் … என்னைப் பார்.எவ்வளவு சந்தோசமாய் இருக்கிறன். நினைச்ச நேரம் தண்ணி.என்னைப் பாத்து ஆரும்
வருவாளுகளடா…

உன்னட்டை ஒருத்தி, ஒருத்தியாவது வருவாளா…?…ம்… ‘அது’ வெண்டால் என்னவெண்டாவது தெரியுமாடா…? சரியான பயந்தாங்கொள்ளிளகடா… நீங்கள்.சரியான முட்டாள்..”

ஒருவனுக்கு ஆத்திரம் ஊட்ட வேண்டுமெனில் அவனது ஊரைப் பற்றி மோசமாய்ச் சொன்னாள் போதும், கிளர்ந்து போய் விடுவான்.இவனுக்குள் பொங்கிய ஆத்திரத்தையும், கோபத்தையும்
வெளிக்காட்ட முடியவில்லை. பழக்கமுமில்லை.அத்துடன் சில்வாவின் பக்கத்தில் கேலியாய் சிரித்துக் கொண்டிருந்த அத்தனை பேரும் அவன் கூட்டாளிகள்.அடிபடும் போது அவன் பக்கம்
நிற்பார்கள். ஆனால் இவன் பக்கம் இவனது ஊரவர்களாவது நிற்பார்களா…? என்பது சந்தேகமாய்ப் போனது. பற்கள் கெட்டித்ததில் உதடுகள் கடிபட்டு ரத்தம் கசிந்தது.மெல்ல சில்வாவின் பேச்சினின்றும்
ஒதுங்கி வந்துவிட்ட போதும் பாறைகளின் இடுக்குகளில் எதிரொலிக்கின்ற வார்த்தை மோதல்களாய் அவன் குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.

“முட்டாள்களடா நீங்கள்…”

இவன் முஷ்டியை இறுகக் குத்தினான்.

“சே..ர்…” யாரோ கூப்பிடுவதுபோல் அந்தக் கீச்சுக்குரல் கொஞ்சம் இருமல் சேர்த்துக் கூப்பிட்டது.யாரோ வந்தாற்போல் நடித்துக் காட்டுகிறாளோ…? யாராயுமிருக்கட்டும்.இப்போது இவன் மனம் யார் அழைப்பிலும் கரையவில்லை.

இறுகிய கல்லாய் கதிரையில் சாய்ந்திருந்து வெற்றுவெளியை வெறித்தபடியிருந்தான். என்றாலும் அவன் எவ்வளவு மோசமாய்க் கேலி செய்தான்.பதிலுக்கு அவனையும் கேலி செய்ய வார்த்தைகள்
இல்லாமல் இல்லை. ஆனால் அவனைக் கட்டிப் போட்டது எது…?

பின் கழுத்தில் லேசாய் ஏதோ கிசு,கிசுவேன்று உராய்ந்தது.புறங்கையால் தட்டிவிட்டு உட்கார்ந்தான்.

மீண்டும் கழுத்தில் கிசு,கிசு.லேசான பறவைச் சத்தம்.படக்… மறுபடி திரும்பினான்.மெல்ல கதிரைக்கடியில் மறைந்து கொள்ளப் பார்க்கிற செல்வி.கிடு,கிடுவென்று கோபம் தலைக்கு மேல் ஏறிற்று.சட்டென்று கதிரையைத் தள்ளி, அவளைப் பிடித்து இழுத்துப் பார்த்த போது கையில்
வெண்ணிறச் சிறகுகள்… அதைக் கொண்டுதான் கழுத்தில் கிசு,கிசு மூட்டினாளோ…? இவள்
என்ன அவனை முட்டாள் என்று எண்ணிக் கொண்டாளோ…? சில்வா மேலிருந்த கோபம்
அனைத்தும் அவள் மீதுபாய்ந்தது இந்தச் சின்னன் கூட என்னை முட்டாளாக்கப் பார்க்கிறதோ? அவளை நோக்கி அடிப்பதற்காக நீண்ட கை சட்டென்று அந்தரத்தில் நின்றது.

“அதெண்டால் உனக்கு என்னவெண்டாவது தெரியுமோ…?” மனதுக்குள் சில்வா எக்களித்தான்.

“இனிமேல் இல்லை, இனிமேல் இல்லை…” பயந்தபடி கெஞ்சுதலாய் மிழற்றிய அவளை நோக்கி இவன்
கண்கள் அபூர்வமாய் மின்னின.

“இனிமேல் இல்லை, இண்டைக்கு மட்டும்தான்… ம்…” அடிக்கக் கொண்டுபோன கை அவள் கன்னங்களின் வழுவழுப்பை வருடிப் பார்த்தது. அதுவரைக்கும் அவன் அறியாத மிருதுத்தன்மை அவனுள் படர, அந்த மலரின் மென்மையை வருடி, வருடி அவன் அளைந்தான்.

கண்ணுக்குள் மயக்கம் ஏறிக்கொண்டிருந்தது.

இந்த சில்வா என்னை என்ன நினைத்துக் கொண்டான்…?

இவள் என்ன என்னை எப்பவும் பேய்க்காட்டுறது…?

வெளியே இருள் தாவித் தாவி மங்கல் ஒளிக்குள் ஊடுருவ முயன்றது.

மொட்டைப் பிய்த்துத் தேனுண்ட வந்தாய் அவளுக்குள் நுழைந்து எதையோ தேடியவன் அவளைத்
தரையிலேயே விட்டுவிட்டு எழுந்தான்.மனதில் துருத்தி நின்ற ஆங்காரம் திருப்திப்பட்ட நிலையில் மனதினின்றும் ஏதோ கழன்று விழுந்து விட்ட உணர்வு.விழித்துப் பார்த்தபடி செல்வி கிடந்தாள். உடையின் அலங்கோலத்தைக் கவனித்து ஒழுங்காக்கும் வயது இன்னும் வரவில்லையோ…?
எதுவென்றால் என்னவென்று தெரியா நிலையில் கிடந்தாள்.மனச்சாட்சி பொறுக்கமுடியாக் கணத்தில் இவன் எழும்பி அவள் ஆடை சரிப்படுத்தினான்.அவள் எழும்பியிருந்து விசும்பினாள்.உள் எழுந்த வியாபகமான கேள்விகளுக்கு விடை தெரியாமல் அவள் தவித்தாளா…?

“செல்வி…” இவன் உயிரில்லாமல் கூப்பிட்டான்.

“வீட்டிலை விடுறன் வா…” கூட்டிப் போய் வீட்டில் விட்டு விட்டு உள்ளே போகாமல் திரும்பி வந்தான்.

இனியென்ன அவளுக்குப் பாதுகாப்பு… எல்லாமே போன பிறகு…

ஆனால், செல்வி அதொன்றும் கேட்கவில்லை.இப்போது தான் உலகின் விகாரம் புரிந்து, இனிமேல் தான் அவள் தனியே போகும் நாள்களுக்குப் பயப்பட நேரிடுமோ…? இனி அவள் தன் குறும்புப் பேச்சுக்களை ஒழித்து விடுவாளோ…?

அன்றிரவு முழுவதும் அவனுக்கு நித்திரையில்லை.அந்தப்பிஞ்சு முகம், நெருடி,நெருடி
உள்ளத்தை எதுவோ செய்துகொண்டிருந்தது.இன்னொருதரம் செல்வியின் முகத்தைப் பார்க்கத் தைரியமில்லை.இந்த இடத்தில் இருக்கவே பிடிக்கவில்லை.கொடிய பாவமொன்று செய்துவிட்டதாய்
அன்றிரவு முழுவதும் நெட்டுயிர்த்தான்.அந்தப் பூ முகத்தின் கேள்விக்குறிகள் இவன் மனத்தை ரணப்படுத்தின.இனி அவளைப் பார்க்க நேரின் அவளின் வேதனை தனக்கு எமனாகி விடுமெனப் பயந்தான்.உறங்குதல் இல்லாமலே கழிந்த அந்தப் பொழுதில் அவனைச் சலனங்கள் ஆட்கொண்டன.

சொல்லிவிடுவாளோ…? வீட்டில்…? ஊரில்…? போலீசில்…? எங்கேனும் ஓரிடத்தில் எதையாவது சொல்லிவிடுவாளோ…?

அதன் பின் இங்கு இவனால் தலைநிமிர்ந்து உலவத்தான் முடியுமா…? இரவிரவாய்த் தன சாமான்களை மூட்டை கட்டினான். விடிவதற்கிடையில் அங்கிருந்து கிளம்பி விட்டான். யார்,யாருடையதோ கையையும், காலையும் பிடித்து ஊருக்கு மாற்றலானான். இடைப்பட்ட
உழைப்புகளிலும், ஓட்டங்களிலும் சில்வாவையோ, செல்வியையோ, முல்லைத்தீவையோ பற்றி நினைப்பதையும், பேசுவதையும் தவிர்த்தான்.தெரிந்த யாரிடமாவது அவற்றைப் பற்றி விசாரிக்கக்கூட அச்சமுற்றவனாய்… அவற்றை மறந்து விட்டதாயே…அவை நடவாததாயே நினைத்துக் கொண்டான். தொடர்ந்து வந்த வாழ்க்கையின் பாரமும், சஞ்சலங்களும், அந்த நிகழ்ச்சியின் பெறுமானத்தைக் குறைத்து ஒதுக்கிவிட, நாட்கள் வேகமாக நகர்ந்தோடி
அவன், அவராகி நரை திரைகளுடனான அவரது முதுமை தொடர்கையில் விமலியின் உருவிலே அவரை வாட்டி வதைக்கும் செல்வியின் நினைவுகள்… விமலியைத் தூக்கி அணைக்கின்ற போதெல்லாம் அந்த வழுவழுப்பான மேனியும், பூ முகமும் செல்வியாய் மாறி அவரை இம்சிக்க…இம்சிக்க…

“ஓ…விமலி… விமலி…” இது மரண வேதனையா? மனதின் ரோதனையா? கூரையில் சடசடவென்று மரக்கிளைகள் உராயும் சத்தம்.பட்பட்டென்று காற்றில் அடிக்கின்ற ஜன்னல் சத்தம்.

யாரோ வரப்போகின்றார்களோ…? துப்பாக்கிமுனையில் விமலியை இழுத்துப்போக…

வேண்டாம்…வேண்டாம்… அவளை விட்டுவிடு…

விமலி…விமலி… ஓ… செல்வி… செல்வி…அவளை விட்டு விடச்சொல்… விமலி…ஐயோ என் விமலி… இந்தக் கிழவனின் பழி உன்னிடமா…?

பீதியூட்டிய அலறல்களுக்கிடையே வாமதேவனும், புவனாவும் மட்டுமன்றி விமலியும், நிர்மலனும் கூட எழுந்துவிட்டனர். கிழவர் கால்களை உதைத்தபடி புலம்பினார்.உதைத்துக்கொண்டிருக்கின்ற கால்களின் அடியில் தான் முடிவற்ற நரகம் பதுங்கியிருக்கிறதா…?

– நவம்பர் 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *