சரணாலயம்..!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 5,178 
 

கொஞ்சம் வழக்கத்தை விட சீக்கிரமாகவே அலுவலகம் வந்து விட்டிருந்தான் ரவி.. ! நம்ம ரவீந்திரன்தான்.!

அரக்கோணம் பக்கத்தில் ஷோலிங்கரில் வேலை.. ! பெரிய க்ரூப் கம்பெனியின் தொழிற்சாலை ஒன்றில் மேனேஜர் உத்தியோகம்.. ! வீடு பக்கத்திலேயே டவுனில்.. பைக்கை எடுத்து மூனாவது கியர் மாற்றுமுன்பே வீட்டக்கு போயிடலாம்கர அளவுக்கு பக்கம் தான்..! அது என்னமோ.. நாலஞ்சு நாளாகவே ஏழு மணிக்கெலலாம் ஆஃபீஸ் வந்துடரான் இப்பெல்லாம்.!

வயிறு பசியில் கிள்ளியது.. மேஜை டிராயரில் நாலஞ்சு கலர் டோக்கன்களை எடுத்து பர்சுக்குள் சொருகிக்கொண்டு கேண்டீனுக்கு புறப்பட்டான் ரவி..!

க்யூவில் சந்தானம்..! ” என்ன ரவி சார்.? சீக்கிரமா வந்துட்டீங்க.? வீட்ல சாப்டலயா? நாங்கதான் காட்பாடில இருந்து ரெண்டு பஸ் மாறி லொங்கு லொங்குனு வர்ரோம்..! வீட்டுல சாப்பிட முடியாது.. உங்களுக்கென்ன .?” என்று குசலம் விசாரித்தான்!

“அதெல்லாம் ஒன்னுமில்ல பாஸ்..! கொஞ்சம் மெய்ன்ட்டனென்ஸ் வேல இருக்கு.. இந்த வாரம் பூரா..! கொரோனா லீவுக்கப் புறம் நிறைய ஷட்டவுன் எடுத்து ஒர்க் பண்ரோம் ..அதான்..!” என்று விளக்கம் குடுத்து வாயடைத்தான் நம்ம ரவி!

மொத்தையா ரெண்டு தோசையை முள்ளங்கி சாம்பாரில் ஊற வைத்து விழுங்கிவிட்டு.. ஒரு டம்ளர் காபியில் வாயை நனைத்துக் கொண்டு இருக்கைக்கு வந்து சேர்ந்தான்..!

பக்கத்து டேபிள்.. வேணுகோபோல் சாரும் வந்திருந்தார்..! உடம்பு செக்கப் செய்யணும். மூனு நாள் லீவில போறேன்னு போன மனுஷன்.. என்ன ஆச்சுன்னு தெரியல..!ரெண்டாவது நாளே வந்து நிக்கிறார்.. அடுத்த செப்டம்பரில் ரிட்டயர்மெண்ட் ஆகப் போற நேரத்துல ஏன் இழுத்துப் போட்டுகிட்டு வர்ரார் னு தெரியல!இந்த லட்சணத்துல ரிட்டயர் ஆனதுக்கு அப்புறம் ஏதாவது வேலை கிடைககுமான்னு இப்பவே வான்டட் காலம் பாக்கிறார் ரெகுலரா.!

என்ன சார்.? என்ன ஆபீஸ் வந்துட்டீங்க.? லீவுன்னீங்களே.?

முடியல ரவி.! வீட்ல இருக்க முடியல.!

அவரது சின்சியாரிட்டியை நினைத்து ரவிக்கு மகிழ்ச்சியா இருநதது.. என்ன இருந்தாலும் சீனியரில்லையா?!

காதெல்லாம்..” கொய்..”யுனுதுப்பா.! என்றார் வேணு சார்.?

ஏன் சார்? என்ன ஆச்சு? ஷாப் ஃப்ளோர் போனீங்களா? மிஷின் சவுண்டா?

“அட ..! அதெல்லாம் ஒன்னுமில்லப்பா..! நேத்து பூரா வீட்ல….! தாங்க முடியலைப்பா! பேசிகிட்டே இருக்காங்க.! அதச் செய்யி..! இத வாங்கிட்டு வா..! ” னு.. நிம்மதியா டிவி கூட பாக்க முடியல.!

அதான் மிஷின் சவுண்டே பரவால்லன்னு வந்துட்டேன்னு டாபிக்கை ஓப்பன்செய்தார் வேணு சார்.?

அது அரட்டை என்பதை விட..முப்பது வருட மனக் குமுறல் என்றே சொல்லலாம்.!

“ஆமா சார்..! ஒரே பொண்ணு .. வெளியூர்ல கட்டிக் குடுத்துட்டீங்க.! அப்புறம் வேற என்ன சார் கவலை.? ராஜா மாதிரி இருக்க வேண்டியதுதானே.?” என்றான் ரவி!

“வயித்தெறிச்சல கொட்டாத ரவி…!” ன்னு வேணு சார் சொல்லும் போதே பக்கத்துல இவங்க பேசரத கேட்டுகிட்டு இருந்த முருகேசன் தானும் பேச்சுக்கு உள்ள நுழைஞ்சார்!

“எவ்ளதான் சார்.. கேட்டுகிட்டே இருக்கர்து..? ஞாயித்துக்கிழமையாவது அக்கடான்னு லேட்டா எந்திரிச்சு டிவியப் பாத்துகிட்டு.. ரெஸ்ட் எடுக்கலாம்னா.! ஜன்னலத் தொடை . கதவைத் தொடை.. பரண சுத்தம் பண்ணு !” னு..! ஒரு மனுஷன் ஒத்தையா என்ன பண்ணுவான் சார்.! அவ்ளோ பெரிய பொட்டிய ஏத்தி எறக்கிற வயசா சார் நமக்கு..? ஏன்டா ஞாயித்துக்கிழமை வருதுன்னு பயமா இருக்கு சார் ..!இதுல சினிமா .. ஷாப்பி்ங்னு வேற கட்டாயம் போர்ட்ர்…பாடிகார்டு வேலபாக்கப் போகணும்.!

குரலில் தெரிகிற உண்மையை விட கண்களில் தெரிந்த ஈரத்திலயே சோகம் அதிகமா தெரிஞ்சது.. இன்னும் நாலு வார்த்தை சேர்ந்து பேசினா. விட்டா அழுதாலும் அழுதுடுவார் போல..!

நான்லாம் வீட்டுக்கு கௌம்பரதே எட்டு மணிக்குதான் சார்.! என்றார் பெருமையாக.? அனுபவசாலி.!

ரவியும் யோசித்துப் பார்த்தான்..! நமக்கும் இதே ப்ரச்சினைதான் என்பது புரிந்தது..!

காலங்காத்தால ஆறு மணிக்கு எழுப்பரதுல இருந்து .. எத்தன மணிக்கு காப்பி குடிக்கணும்.. எப்படி போர்வைய மடிச்சு வெக்கணும்..? எப்படி பசங்கள ஸ்கூலுக்கு ரெடி பண்ணனும்னு.. எல்லா இன்ஸ்ட்ரக்க்ஷன்களும் சமையலறையில் இருந்தே வந்து கொண்டே இருக்கும்..! ஏதாவது ரெண்டு நிமிஷம் டிவில ஹெட்லைன்ஸ் பாக்கலாம்னாலும்.. உத்திரவு கிடைக்காது.! என்ன இது காலங்காத்தால டிவி..? பசங்களும் சேர்ந்து உக்காந்திருவாங்க.. போய் அவங்கள ஸ்கூலுக்கு கௌப்பற வழியப் பாருங்க.. ஸ்கூல் வேன் வந்திடும்னு எட்டரை மணி வேனுக்கு ஆறரை பணிக்கே தொரத்துவா சுசீலா.!

ஆனா உண்மை என்னன்னா.. யார் சொன்னாலும்..சொல்லாட்டியும்… பசங்க தானா ஸ்கூலுக்கு ரெடியாய்டுதான் இருப்பாங்க..இந்த காலத்து பசங்களுக்கு பழகிடுச்சு.. ஒரு வேளை அவங்களும்.. கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னுதான் ஸ்கூலுக்கு போறாங்களோ என்னமோ?!

முருகேசன் இப்படி சொல்ராரேன்னு ஆச்சர்யப் பட்டான் ரவி.! மனுஷன் நிறைய அவார்டெல்லாம் வாங்கியிரு்கார்.. பெஸ்ட் எம்ப்ளாயி அவார்டு உட்பட..!

என்ன சார் நீங்க.? பெஸ்ட் எம்ப்ளாயீ அவார்டு வாங்கின நீங்களா..வீட்டு வேல செய்ய தயங்கரீங்கன்னு கேட்டான் ரவி.!

அதுவுமில்லாம அவங்களுக்கும் வேற யார் சார் இருக்காங்க? பேசரதுக்கு என்று சமாதானப் படுத்தினான்.!

“அட போப்பா..! அதெல்லாம் ஒரு பெரிய மகளிரணி கும்பலே இருக்கு.. லேடீஸ் க்ளப்புனு..இன்டர்காம் அரட்டையே மணி்க்கணக்கா போகும்.! நான் அவார்டு வாங்கினதுக்குக் காரணமே என் வீட்டம்மா தான்..! காலைலயும் வீட்ல இருந்து சீக்கிரம் ஓடி வந்துடரேன்! சாயந்திரமும்.. இல்ல.. நைட்டானதுக்கு அப்புறம்தான் வீட்டுக்கு போறேன்.. அப்புறம் அவார்டு கிடைக்காம என்ன பண்ணும் ?” என்று படு கேஷூவலாகச் சொன்னார்.!

சிரிப்பாய் வந்தது ரவிக்கு…” நிறைய அவார்டு நானும் வாங்குவேன்!” என்ற நம்பிக்கையும் கூடவே வந்தது..!

வேணு சார் ..! உங்க பொழப்புதான் ரொம்ப கவலைக்கிடம் போல..!

“ஆமாப்பா.. இப்பவே கௌம்பு.! பைக்க எடு.. தாம்பரம் போகும்கரா.! ஒன்னு விட்ட நாத்தனார் பொண்ணுக்கு குழந்த பொறந்திருக்காம்.! இந்த ஹைவேஸ்ல. புழுதியில. இவள வெச்சுைபேலன்ஸ் பண்ணிகிட்டு அவ்ளோ தூரம் வண்டிய ஓட்ரதெல்லாம் எவ்ளோ கஷ்டம்னு அவளுக்கு புரிய மாட்டேங்குது.! எல்லா புருஷனும் பாகுபலியா.? சிவலிங்கம் மாதிரி வெய்ட்டு தூக்க..! ? சொல்லு.?!”

“நாமல்லாம் மேனேஜர் கேட்டகிரி. இந்த ஓவர் டைம் பெனிஃபிட்டும் கிடையாது..! இருந்திருந்தா நாலு காசு கல்லா கட்டியிருக்கலாம் ..! சரி..! விடு..!மனுஷனுக்கு நிம்மதியா பொழுதாவது போகுதேன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.!” என்றார்.! “ரிட்டயர் ஆய்ட்டாலும் ஏதாவது ஏடிஎம் வாட்ச் மேனாவாவது வேலையப் பாத்துருவேன்!” னாரு தீர்மானமா.!

“அது மட்டுமில்ல..சார்..! விஜயவாடாவுல இரு்து தங்கச்சியும் அவ புள்ளைங்களும் வராங்க.! போய் கூட்டிட்டு வாங்கன்னா.. நைட்டு பனிரெண்டர மணிக்கு கௌம்பி ஆட்டோ எடு்துகிட்டு லொங்கு லொங்குனு அரக்கோணம் வரைக்கும் போவணும்சார்.. ! அவங்க மூட்ட முடிச்சயெல்லாம் முதுகு வலிக்க தூக்கி ஆட்டோல வெச்சு.. முன்னாடி ட்ரைவர் சீட்டு பக்கத்துல. ஒத்த பட்டக்ஸ்ல தொங்கிகிட்டு வீடு வந்து சேர்ரதெலலாம் …!! சொல்லி மாளாது சார்.! ” னார் .. முருகேசன்..!

“வீட்டு்க்கு பத்திரமா அவங்கள கொண்டு வந்து சேத்துட்டு.. ரெண்டு மணிக்கு மேல வராத தூக்கத்த வம்படியா வரவழைச்சு.. திரும்பவும் காலைல.. அஞ்சரை மணிக்கெல்லாம் எழுந்து அவங்க பசங்களுக்கு கறந்த பால்வாங்க.. வண்டிய எடுத்துகிட்டு கௌம்ப சொல்லும்போது பொங்கிட்டு வர்ர அழுகைய என்னன்னு சொல்ரது ரவி.?!”

“உண்மைய சொல்லனும்னா.. ! காக்கா குருவி்ங்கல்லாம் சாயந்திரமா கூட்டுக்கு திரும்ப வர்ர மாதிரிதான் நாமளும்…! ஆனா என்ன ஒன்னு..!? நாம காலங்காத்தால ஆபிசுக்கு வர்ரோம் அவ்ளதான்” என்றார்!

பாக்கெட்டில் செல் ஃபோன் கிணுகிணுத்தது..! சுசீலாதான்.!

“ஏங்க..! சாயந்திரமா வீட்டுக்கு வரும்போது….! என்று ஆரம்பித்தாள்..!

“இலலம்மா.! நான் வர்ர எட்டு..எட்டரை மணி ஆய்டும் ..! மீட்டிங் இருக்கு .!” என்று சொல்லி ஃபோனை வைத்தான் ரவி!

“இது ஆபீஸல்ல…!! சிறகொடிந்த பறவைகளின் சரணாலயம்.!”னு என்ற கவிதை கூட தோன்றியது மனசுக்குள்..!

“எப்படியும் இந்த வருஷம் நாலஞ்சு அவார்டாவது வாங்கிடணும் .!” என்ற முனைப்புடன்.. இன்றைய மெய்ன்டனென்ஸ் ஷெட்யூல் ஃபைலைத் திறந்தான் ரவி.!

Print Friendly, PDF & Email

1 thought on “சரணாலயம்..!

  1. Nice to read the short story. Reflected some of the actual
    thinking in the minds of some people work in various
    offices.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *