கோழியும் சேவலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 5,794 
 

பாளையங்கோட்டை ராஜாக்கள் தெருவில் என்னுடைய நண்பன் கிட்டு குடியிருக்கிறான். சொந்தவீடுதான் என்றாலும் கிட்டுவின் வீடு மிகச் சிறியது.

ஒன்பது வீடுகள் வரிசையாக இருக்கின்ற நீளமான ஒரு காம்பவுண்டிற்குள் அவன் வீடு முதலாவது. ஒன்பது வீடுகளுக்கும் பொதுவான நீள நடை ஒன்று உண்டு. அந்த நடையில் உரல், அம்மி, சில வேண்டாத சாமான்களும் இருக்கும். காம்பவுண்டின் ஓனர் கிட்டுவின் அப்பாதான்.

காம்பவுண்டில் வசிக்கும் ஒவ்வொருத்தரும் புறா, கோழி, முயல், புனுகுப் பூனை என்று எதையாவது வளர்த்துக் கொண்டிருப்பார்கள். ஒன்பதாவது வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவரின் இருபது வயது மகள் குமுதினியை கிட்டு காதலித்துக் கொண்டிருந்தான். குமுதினி பூனை வளர்த்தாள்.

கிட்டு மட்டும் எப்போதும் சேவல்தான் வளர்ப்பான். அது ரொம்பச் சின்னக் குஞ்சாக இருக்கும்போதே வாங்கிவிடுவான். நீள நடையில் அவனுடைய வீட்டிற்கு எதிரில் உரலில் கட்டிப் போட்டிருப்பான். சின்னக் கூடை ஒன்றால் அதை எப்போதும் மூடி வைத்திருப்பான். இல்லாவிட்டால் பூனை சப்பிட்டுவிடுமாம். வால் முளைக்கிற பருவம் பூராவும் அந்தச் சின்னக் கூடைக்குள் ஒடுங்கியபடியே அவனுடைய சேவல் நின்று கொண்டிருக்கும்.

அது என்னவோ அவன் வளர்க்கும் சேவல்களின் வால் வளர்ந்து அழகாகத் தொங்காது. கோணலாகத்தான் இருக்கும். அதனால் குமுதினி அவனை “கோணச் சேவல்” என்றுதான் காதலுடன் விளிப்பாள். இவன் பதிலுக்கு சிரித்துக்கொண்டே அவளை “அழகுக் கோழி’ என்பான்.

குமுதினி சுறு சுறுவென்று சூட்டிகையாக எப்போதும் சிரித்த முகத்துடன் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். கிட்டுவின் மீது தீராக்காதல் கொண்டிருந்தாள்.

சேவல் பெரியதாகி கூவி விட்டால் கிட்டு அதை தெருவில் மேய அனுப்பிவிடுவான். சேவல் வளர்ந்து கொண்டிருக்கும்போதே அதற்கு சண்டைப் பயிற்சியும் கொடுப்பான். அவன் சேவல் வளர்ப்பதே அதை மற்ற சேவல்களுடன் சண்டைபோட வைத்துப் பார்ப்பதற்குதான்.

சிலர் சேவல்களின் காலில் சிறிய கத்தியைக் கட்டி சண்டைக்கு அனுப்புவார்கள். கிட்டு தன்னுடைய சேவலின் காலில் கத்தி கட்டுவதில்லை. கத்தி கட்டிய சேவல்களுடன் தன் சேவலை சண்டைக்கு அனுப்பவே மாட்டான்.

சேவல் சண்டைக்காக, வெற்றிமாறனின் ஆடுகளம் சினிமாவை எட்டு தடவைகள் கிட்டு பார்த்தான்.

சண்டையின்போது சேவல்களின் முகத்திலும் கொண்டையிலும் ரத்தம் சொட்டுகிற மாதிரி நிறைய காயங்கள் ஏற்படும். கோபத்தில் சேவலின் கொண்டையும் ரத்தச் சிவப்பாக ஜொலிக்கும்.

சண்டைச் சேவலை வளர்ப்பது ஒரு கலை. அதற்கு பெரும்பாலும் கோதுமைத் தவிட்டை சோறு வடித்த கஞ்சியில் குழைத்துக் கொடுப்பான். கொஞ்சம் கூட உமி இல்லாமல் மைபோல் சலித்தெடுத்த கோதுமைத் தவிடு கஞ்சி விட்டுக் குழைக்கும்போது வெண்ணெய் மாதிரி ஆகிவிடும்.

சமயங்களில் கோதுமைத் தவிட்டுடன் கடலைப் புண்ணாக்கையும் நன்றாக ஊறவைத்து கலந்து கொடுப்பான். போதாக்குறைக்கு அவ்வப்போது கருவாடு, ஆட்டுக் குடலின் ஜவ்வுகள் வேறு… அதனால் கிட்டு வளர்க்கின்ற சேவல்களின் மினுமினுப்பே அலாதிதான்.

சண்டை போடுவதற்காக சேவலை தூக்கிச் செல்லும்போதும், சண்டை முடிந்து திரும்ப வரும்போதும் கிட்டு அவனுடைய சேவலை மார்போடு வாஞ்சையுடன் சேர்த்து அணைத்தபடி செல்வான். சண்டை முடிந்து வந்ததும் சேவலின் கொண்டையிலும், முகத்திலும் இருக்கின்ற ரத்தக் காயங்களை நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவித் துடைத்து, தேங்காய் எண்ணையில் மஞ்சள் பொடியைக் குழைத்து காயங்களில் அன்பாகத் தடவி விடுவான். காயங்கள் வலிக்குமோ என்னவோ, சேவல் அந்த நேரத்தில் ஆடாமல் அசையாமல் கழுத்தைச் சிறிது தாழ்த்தியபடியே நிற்கும். ஆனால் சண்டை முடிந்து வேகுநேரமாகிய பிறகும்கூட சேவலின் கண்களில் உக்ரம் மாறாமல் இருக்கும்.

கிட்டு எப்போதும் சேவல்களைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பான். பக்கத்து கிராமங்களில் நடைபெறும் சேவல் சண்டைகளை தவறாமல் சைக்கிளில் போய்ப் பார்ப்பான்.

சண்டைக்காக சேவலை எடுத்துப் போகிறபோது, சில சமயங்களில் கிட்டுவின் சேவல் அவனுடைய கைகளில் இருந்துகொண்டே கம்பீரமாகக் கூவும்! அந்த மாதிரிக் கூவினால் சண்டையில் ஜெயிக்கும் என்று கிட்டு ஜோசியம் சொல்வான்.

குமுதினிக்கு கிட்டு சேவல் வளர்ப்பது பிடித்தாலும், அதைச் சண்டைக்கு விட்டு ரத்தக் களரியாக்குவது கிஞ்சித்தும் பிடிக்காது.

கிட்டு-குமுதினி காதல் விவகாரம் காம்பவுண்டில் அனைவருக்கும் தெரிந்த சங்கதிதான். கிட்டு தன் பெற்றோர்களுடன் முறையாகப் போய் குமுதினியைப் பெண் கேட்டான். நானும் நண்பனாக அவன் கூடப் போயிருந்தேன். அவர்களும் சம்மதிக்கவே கிட்டு-குமுதினியின் திருமணம் ஜாம் ஜாமென்று நடந்தது.

கல்யாணம் முடிந்த சில மாதங்களில் கருங்குளத்தில் இருக்கும் சுப்பையா என்பவனின் சேவலுடன் சண்டை போடுவதற்காக கிட்டு தன் சேவலை எடுத்துப் போனான். சண்டையில் சுப்பையாவின் சேவல் தோற்றுவிட்டது. அதுதவிர, சுப்பையாவின் சேவலின் ஒரு கண்ணைக் கிட்டுவின் சேவல் கொத்திக் குதறிவிட்டதில் அதன் கண்ணே குருடாகப் போய்விட்டது. சுப்பையாவால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஓடிப்போய் கிட்டுவின் சேவலை காலால் எட்டி உதைத்தான். கிட்டுவுக்கு கோபத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை. சுப்பையாவை எழுந்துபோய்த் தாக்கினான். பதிலுக்கு சுப்பையாவும் தாக்க பெரிய சண்டை மூண்டுவிட்டது. ஊர்க்காரர்கள் சுப்பையாவுடன் சேர்ந்துகொண்டு கிட்டுவை ரத்தம்வர அடித்து விரட்டி விட்டார்கள்.

சேவலுக்கும் ரத்தக் காயம்; கிட்டுவுக்கும் நிறைய ரத்தக் காயம். அதோடு வீடு திரும்பினான். குமுதினி துடித்துப் போய் விட்டாள். கிட்டுவை உடனிருந்து நன்கு கவனித்துக் கொண்டாள்.

கோபத்தில் கிட்டுவைக் கேட்காமலேயே அவனுடைய சேவலைத் தூக்கி கக்கூஸ் சுத்தம் செய்யவரும் மாயாண்டியிடம் கொடுத்து விட்டாள். இனிமேல் எந்தக் காரணத்தைக் கொண்டும் வீட்டில் சேவல் வளர்க்கக் கூடாது என்றும் கண்டிப்பாக உத்தரவிட்டாள்.

அந்தச் சேவலை சமைத்துச் சாப்பிட்டதாகவும் கறி ரொம்ப ருசியாக இருந்ததாகவும் மாயாண்டி இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்து சொன்னான். கிட்டு அவன் சொன்னதை பதிலே சொல்லாமல் வேதனையுடன் கேட்டுக் கொண்டான்.

பொதுவாக கூவிய பெரிய சேவலை சமைத்துச் சாப்பிட மாட்டார்கள். அதன் கறி சக்கையாக இருக்கும். கூவுகிற வயதுக்கு வருவதற்கு முன்பாகவே சேவலை சமைத்துச் சாப்பிட்டால்தான் அதன் கறி சுவையாக இருக்கும்.

கிட்டு தற்போது சேவல் வளர்ப்பதில்லை.

குமுதினியின் முயற்சியால் கிட்டு இப்போது ஊரிலேயே மிகப்பெரிய கோழிப்பண்ணை வைத்திருக்கிறான். முற்றிலும் நவீன விஞ்ஞான முறைப்படி எட்டாயிரம் கோழிகளை அந்தப் பண்ணையில் பராமரித்து அதை ஒரு வியாபாரமாக்கி கொழித்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு மிகப்பெரிய சோகம் என்னவெனில், அந்தப் பண்ணையில் மருதுக்குக்கூட சேவல் கிடையாது…

வெளியில் கிட்டுவின் சேவல்கள் ஜெயித்திருந்தாலும், வீட்டினுள் ஜெயித்தது என்னவோ கோழிதான்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *