கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 6,160 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் அருகில் நிறைந்துவிட்டார்கள். தெருவின் மறுபுறத்தில் இருந்த வாசிகசாலைக் கட்டிடத்தின் திண்ணைகளில் ஆண்கள் வசதியாக அமர்ந்திருந்தார்கள். மாணவர்களைத் தவிர அங்கு பத்திரிகை வாசிப்பதற்காகவும் சிலர் வந்திருந்தனர். பெண்கள் அந்த பஸ்தரிப்பு நிலையத்தின் அருகில் வளர்ந்திருந்த ஆலமரத்தின் ஒதுக்குப் புறத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்.

இரவு முழுவதும் பெய்த மழை இப்பொழுது சற்று ஓய்ந்திருந்தாலும் எந்த நேரத்திலும் மீண்டும் வரலாம் என்பதற்கு அறிகுறியாக வானம் மூடிக்கிடந்தது.

வாசிகசாலையில் இருந்தபடியே ஒருசிலர் மாணவிகளின் பக்கம் தங்களது பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்தனர். மாணவிகள் சிலரது பார்வைகளும் அந்த ஆண்களின் பக்கந்தான் சாய்ந்திருந்தது. பார்வைகள் சந்தித்தபோது சிலர் கவனத்துடன் வேறு எங்கோ பார்ப்பதுபோலப் பாவனை செய்தனர்; சிலர் புன்னகை பரிமாறிக் கொண்டனர்.

இந்த இளவட்டங்களின் திருவிளையாடல்களைப் பார்த்து ரசிக்க முடியாத சிலர் தங்களுக்குள் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டார்கள்.

பஸ்தரிப்பு நிலையம் இங்கு ஏற்பட்ட காலத்திலிருந்தே இந்த நிகழ்ச்சிகள் சிலருக்குத் தெரிந்தும் பலருக்குத் தெரியாமலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பெண்கள் இருந்த பகுதியில் அவர்களுடன் சேராது சற்று ஒதுக்குப் புறமாக நின்றிருந்த பார்வதியும் மூன்றுமாத காலத்துக்கு முன்னர் பாடசாலை மாணவியாக இருந்தபோது இதே பஸ்தரிப்பு நிலையத்தில் நின்று சுந்தரத்தை அடிக்கடி கவனித்திருக்கிறாள். அவள் பாடசாலைக்குப் போகும்நேரத்தில் அவளைப் பார்ப்பதற்கென்றே சுந்தரம் அங்கு வருவான். அவன் அவளைப் பார்த்துப் புன்னகை புரியும்போதெல்லாம் அவளும் புன்னகை புரிந்திருக்கிறாள். அவன் அங்கு வராத நேரங்களில், அவனை நினைத்து அவனது வரவுக்காக ஏங்கியிருக்கிறாள். ஒருநாள் சுந்தரம் அவளைக் கூட்டிச்செல்வதற்காகக் காருடன் வந்தபோது, தனது தாயையும் சகோதரிகளையும் உதறித் தள்ளிவிட்டு அங்கிருந்துதான் அவனுடன் ஓடிச்சென்று தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கினாள்.

சுந்தரம் ஊரில் உள்ள ‘கறாச்’ ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்கிறான். தாய்தந்தையரைச் சிறுவயதிலே இழந்து தன் மாமனோடு வாழ்ந்துவந்த சுந்தரம் பார்வதியை மறந்து விடமுடியாத நிலையில், தன்னை வளர்த்து ஆளாக்கிய மாமனின் பேச்சையும் மீறித்தான் அவளைக் கைப்பிடித்தான்.

பார்வதியும் சிறுவயதிலே தந்தையை இழந்தவள்தான். அவளது தந்தை எப்போதோ அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்திருந்ததினால் அவர் இறந்த பின்பு அவளது தாய்க்குக் கிடைக்கும் பென்ஷன் பணத்தில் அவளும் அவளது தாயும் இரு சகோதரிகளும் வாழ்ந்து வந்தார்கள்.

சுந்தரமும் பார்வதியும் தங்களது சுற்றத்தவர்கள் எல்லோரையும் உதறித் தள்ளிவிட்டுத் தனியாக வாடகை வீடொன்றில் குடும்பம் நடத்தத் தொடங்கி இன்று மூன்று மாதங்களாகிவிட்டன.

நான்கைந்து நாட்களுக்கு முன்னர் சுகவீனமாகப் படுக்கையில் படுத்த சுந்தரம், திடீரென நிலைமை மோசமாகி நோயினால் அவதியுற்றபோது, பார்வதி செய்வதறியாது. திகைத்துப் போனாள். ஆனாலும் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவனைக் காரில் ஏற்றிச்சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்தாள்.

சுந்தரத்துடன் வாழ்க்கை நடத்தத் தொடங்கிய பின்னர் இன்றுதான் அவள் இந்த பஸ்தரிப்பு நிலையத்திற்கு வந்திருக்கிறாள். நோயுற்றிருக்கும் தனது கணவனுக்கு வேண்டிய பொருட்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதற்காக அவள் இப்போது பஸ்ஸிற்காகக் காத்திருக்கிறாள்.

கறுத்திருந்த மேகத்திலிருந்து மழைத்துளிகள் சிறிது சிறிதாக விழத் தொடங்கின.

பார்வதிக்கு அங்கு நின்றிருந்த ஒவ்வொரு நிமிடமம் யுகமாகக் கழிந்து கொண்டிருந்தது. வாசிகசாலையிலிருந்த எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதுபோல அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்த ஒவ்வொருவரும் தான் சுந்தரத்தோடு ஓடிச்சென்று வாழ்க்கை நடத்தத் தொடங்கிய நிகழ்ச்சியை நினைவுபடுத்திக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற உணர்வும் அவளுக்குள் ஏற்பட்டது.

அவளுடன் படித்த சகமாணவிகள் இப்போதும் கல்லூரிக்குப் போய்வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவளுடைய சினேகிதிகள் சிலர் அவளைக் கண்டதும் தங்களுடைய பழைய சினேகிதத்தை உறுதிப் படுத்துவதுபோல அவளுடன் சகஜமாகக் கதைத்தார்கள். அப்போது பார்வதியின் மனதில், தான் சுந்தரத்துடன் கூடிவாழும் வாழ்க்கையைப்பற்றி அவர்கள் கேட்டுவிடக் கூடாதே என்ற தவிப்பு ஏற்பட்டது. அவளுடைய உயிர்த் தோழிகள் அவளது சொந்த வாழ்க்கையைப் பற்றி ஒன்றுமே கேட்காது பொதுவான விஷயங்களைப்பற்றியே பேசியபோது தனக்கும் அவர்களுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டு விட்டதை எண்ணி ஒருவிதத் தனிமை உணர்ச்சியில் அவள் வேதனைப்படவும் செய்தாள்.

ஒருசிலர், தன்னைக்கண்டதும் காணாததுபோல் பாவனை செய்தபோதும், தான் சுந்தரத்தோடு ஓடிச்சென்ற நிகழ்ச்சியைத் தவறென்று அவர்கள் கருதுவதைக் கவனித்தபோதும், தன்னுடன் கதைப்பதால் தங்களுக்கும் கெட்டபெயர் வந்துவிடுமோ என அவர்கள் பயந்து ஒதுங்கியதைப் பார்த்தபோதும் பார்வதியின் வேதனை மேலும் அதிகமாகியது.

அவளுடைய தங்கை பானுமதியும் சகமாணவிகளோடு சேர்ந்து கொண்டு தன்னைப் பார்த்தும் பார்க்காதவள்போலத் தோழிகளுடன் கதைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தபோது பார்வதிக்குக் கதறியழ வேண்டும்போலத் தோன்றியது.

பஸ் வருகிறதா எனக் கவனிப்பதுபோலத் தனது தங்கை பானுமதியை அடிக்கடி கவனித்தாள் பார்வதி. ஆனால் பானுமதி அவளின் பக்கம் திரும்பவேயில்லை.

கடந்த மூன்று மாதங்களிலும் அவள் எத்தனையோ தடவை தனது தாயைப் பற்றியும் சகோதரிகளைப் பற்றியும் நினைத்திருக்கிறாள். அப்போதெல்லாம் அவர்களைப் பார்க்க வேண்டும்போலத் தோன்றும். அவர்கள் தன்னை இனிமேல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்து, பொங்கி வரும் தனது பாச உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் தனிமையில் கண்ணீர் விட்டிருக்கிறாள்.

தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. அருகில் வந்ததும் பார்வதியும் மற்றவர்களுடன் முண்டியடித்துக்கொண்டு பஸ்ஸில் ஏறினாள். உள்ளே ஏறியதுந்தான் அது மாணவர்களுக்கான பாடசாலைச்சேவை என்பதைக் கவனித்ததும் அவள் பதற்றத்துடன் கீழே இறங்கினாள். பஸ்ஸில் ஏறிவிட்ட மாணவிகள் சிலர் அப்போது அவளைப் பார்த்து கேலியாகச் சிரித்தார்கள். பார்வதிக்குப் பெரிதும் அவமானமாக இருந்தது.

பஸ்ஸில் ஏறுவதற்கு முன்னரே அது பாடசாலைச் சேவைக்காக ஓடும் பஸ் என்பதைக் கவனிக்காது உள்ளே ஏறிய தனது அவசர புத்திக்காக அவள் தன்னைத்தானே கடிந்து கொண்டாள். நிதானமில்லாது அவசரமாகத் தான் புரிந்துவிடும் காரியங்களுக்காக அவள் எத்தனையோ தடவை தன்னைத்தானே கடிந்திருக்கிறாள். ஆனாலும் திடீரென அவளையும் மீறிவிடும் அந்த அவசர குணத்தை அவளால் மாற்றவே முடியவில்லை.

இவ்வளவு நேரமும் வாசிகசாலையில் யாருடனோ கதைத்துக்கொண்டு பார்வதியையே கவனித்துக் கொண்டிருந்த கனகரத்தினம் இப்போது அவள் அருகில் வந்தார்.

கனகரத்தினத்திற்கு முப்பது அல்லது முப்பத்தைந்து வயதுவரைதான் மதிக்கலாம். திருமணஞ் செய்த நான்கைந்து வருடங்களுக்குள்ளாகவே அவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதால் அவர் இப்போது தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். ஊரிலே பெரிய மனிதர் என்ற ஸ்தானத்தில் அவர் இல்லாவிட்டாலும் மற்றவர்கள் மரியாதை கொடுக்குமளவுக்கு சிறப்போடு வாழ்கிறார்.

பார்வதி தனது தாயுடனும் சகோதரிகளுடனும் இருந்த காலத்தில் கனகரத்தினம் அடிக்கடி அவர்களுடைய வீட்டுக்கு வருவார். கனகரத்தினத்தின் வீடு அவர்களுடைய வீட்டை அடுத்துத்தான் இருந்தது. வெகுகாலமாகவே அவர்களுடன் பழகி, குடும்ப நண்பராகிவிட்ட கனகரத்தினம் வேண்டிய நேரங்களில் அவர்களுக்கு உதவியும் செய்வார்.

பார்வதிக்குக் கனகரத்தினத்திடம் எப்பொழுதுமே மதிப்பு உண்டு. அவள் அவரைக் ‘கனகரம்மான்’ என்றுதான் மரியாதையாக அழைப்பாள்.

பள்ளிமாணவியாக இருந்த காலத்தில் பார்வதி சுந்தரத்தோடு தொடர்பு கொண்டிருந்தபோது, கனகரத்தினம் அவளை எத்தனையோ தடவைகள் தனிமையில் கண்டித்திருக்கிறார்; சுந்தரத்தை மறந்து விடும்படி கூறியிருக்கிறார்.

கனகரத்தினம் அருகே வந்தபோது பார்வதியின் மனம் பயத்தால் அடித்துக்கொண்டது. மூன்று மாதங்களின் பின்னர் அன்றுதான் பார்வதி அவரைச் சந்திக்கிறாள். தன் புத்திமதிகளையும் மீறிச் சுந்தரத்தோடு சேர்ந்து வாழ்வதால் கனகரத்தினம் இப்போது கோபத்தோடு ஏசுவாரோ எனப் பார்வதி பயந்தாள்.

“எங்கை பார்வதி போகிறாய்?” கனகரத்தினம் அவளிடம் கேட்டார்.

சுந்தரம் சுகவீனமுற்றிருப்பதையும், சுந்தரத்தைப் பார்க்கப் போவதற்காகத்தான் பஸ்ஸிற்காகக் காத்துநிற்பதையும் பார்வதி தயக்கத்தோடு அவரிடம் கூறினாள்.

மழை இப்போது பலக்கத் தொடங்கியது. குடையில்லாது நனைந்து கொண்டிருந்த பார்வதியிடம் தனது குடையைக் கொடுத்தார் கனகரத்தினம். தன்னை எப்படியெல்லாமோ ஏசுவார் என எதிர்பார்த்திருந்த பார்வதிக்கு அவர் குடையைக் கொடுத்துதவ முன்வந்தது பெரிதும் ஆறுதலாக இருந்தது. நன்றியறிதலுடன் அவள் குடையைப் பெற்றுக்கொண்டாள்.

“சுந்தரத்துக்கு வருத்தம் கடுமையே?”

“நெருப்புக்காய்ச்சல் என்று டொக்டர் சொன்னவர். இரண்டு மூண்டு கிழமைக்கு ஆஸ்பத்திரியிலை இருக்க வேணுமாம்.”

தூரத்தில் பஸ் வருவது தெரிந்தது. பின்னேரம் தான் குடையைப் பெற்றுக்கொள்வதாகக் கூறிவிட்டு கனகரத்தினம் விடைபெற்றுக் கொண்டார்.

பார்வதி ஆஸ்பத்திரியை அடைந்தபோது சுந்தரம் காய்ச்சலின் வேகத்தினால் நினைவற்றுப் படுத்திருந்தான். பார்வதி அங்கு வந்ததைகூட அவனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. சுந்தரத்தின் நிலைமையைப் பார்த்ததும் பார்வதி அழத்தொடங்கிவிட்டாள். யாருமே உதவியற்ற நிலையில் சுந்தரத்துக்கு இப்படியான நிலைமை ஏற்பட்டதை நினைக்கும்போது பொங்கிவந்த வேதனையை அவளால் அடக்க முடியவில்லை.

டொக்டர் அவளுக்கு ஆறுதல் கூறினார். முக்கியமான சிலமருந்துகள் ஆஸ்பத்திரியில் இல்லாததினால் அவற்றை வெளியில் உள்ள மருந்துக்கடைகளில் வாங்கி மறுநாள் வரும்போது கொண்டுவரும்படி சிலமருந்துகளின் பெயர்களைக் குறித்துக் கொடுத்தார்.

ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது பார்வதியின் கவலை முழுவதும் எப்படியாவது டொக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை வாங்கவேண்டும் என்பதிலேதான் இருந்தது. அவளிடம் அப்போது அந்த மருந்துகளை வாங்குவதற்குப் போதிய பணம் இருக்கவில்லை. யாரிடந்தான் பணத்தைக் கேட்பது?

சுந்தரத்துடன் எப்படியும் வாழ்க்கை நடத்த முடியும் என்ற திடத்துடன் அவள் தனது வாழ்வை அமைத்துக் கொண்டபோது ஊரவர்களும் உறவினர்களும் அதனைக் கேவலமாகப் பேசினார்கள். இன்று சுந்தரத்திற்காகவே யாரிடமாவது சென்று பணம் கடனாகக் கேட்டால் அவர்கள் தனது மனம் நோகும்படி குத்தலாக ஏதும் சொல்வார்களோ என அவள் பயந்தாள்.

பார்வதி வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது நன்றாக இருட்டி விட்டது. அவளுக்கு வீட்டில் தனியாக இருப்பதற்குச் சிறிது அச்சமாக இருந்தது. அயலிலும் வீடுகள் இல்லை. முன்கதவை நன்றாகப் பூட்டித் தாழ்ப்பாழ் போட்டுவிட்டுத் தனது வீட்டு வேலைகளில் முனைந்திருந்தாள்.

வெளியே கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. பார்வதி யன்னலைத் திறந்து வெளியே பார்த்தாள். கனகரத்தினம் நின்று கொண்டிருந்தார். காலையில் அவரிடம் வாங்கிய குடை இன்னும் தன்னிடத்திலேயே இருப்பது அவளுக்கு நினைவு வந்தது. முன் கதவைத் திறந்து அவரை வரவேற்றாள்.

“நான் இங்கை வாறதை யாரும் கண்டால் வீண்கதை பேசுவினம். அதனாலைதான் இந்த நேரத்தில ஒருவருக்கும் தெரியாம வந்தனான்.” கனகரத்தினம் அங்கிருந்த கதிரையில் அமர்ந்தார்.

“அம்மா எப்பிடி இருக்கிறா? எப்ப எண்டாலும் என்னைப் பற்றியும் கதைக்கிறவவே?” பார்வதி ஆவலோடு தனது தாயைப் பற்றி விசாரித்தாள்.

“அம்மாவுக்குச் சரியான கோவம்; அவ உன்னிடம் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தவ. திடீரெண்டு ஓடிப்போனவுடனை அவவுக்குக் கோவம் வரத்தானே செய்யும். அவவின்ரை கோவம் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். போகப்போக எல்லாம் சரியாகிவிடும்; நான் எப்பிடியும் உங்களை ஒற்றுமையாக்கி வைப்பன். நீ ஒண்டுக்கும் யோசிக்காதை.” கனகரத்தினத்தின் வார்த்தைகள் பார்வதிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தன. அவர் நினைத்தால் எப்படியும் தன்னைத் தனது தாயுடனும் சகோதரிகளுடனும் ஒற்றுமையாக்கி வைப்பார் என்பது பார்வதிக்கு நிச்சயமாகத் தெரியும்.

“இருங்கோ கனகரம்மான், தேத்தண்ணி போட்டுக் கொண்டு வாறன்.” சமையல் அறைப்பக்கம் போனாள் பார்வதி.

சிறிது நேரத்தின் பின்பு தன்னைத் தொடர்ந்து கனகரத்தினமும் சமையல் அறைக்குள் வந்துவிட்டதைக் கவனித்தபோது அவளது மனதில் ஏதோ குறுகுறுத்தது.

“எனக்கு இப்ப தேத்தண்ணி வேண்டாம், கொஞ்ச நேரத்துக்கு முன்னந்தான் வீட்டிலை குடிச்சிட்டு வந்தனான். உன்னுடைய புருஷனுக்கு இப்ப எப்படி இருக்கு? எப்பவாம் ஆஸ்பத்திரியாலை விடுவினம்?”

“வருத்தம் கொஞ்சம் கடுமைதான்; டொக்டர் எதோ மருந்துகளை எழுதித் தந்திருக்கிறார். நாளைக்குப் போகும்போது வாங்கிக்கொண்டு போகவேணும்.” பார்வதி அப்படிக் கூறியபோது கனகரத்தினத்திடம் தனது நிலைமையை விளக்கிக் கடனாகப் பணம் கேட்கலாமா எனவும் யோசித்தாள்.

“செலவுக்குக் கையிலை மடியிலை ஏதும் வச்சிருக்கிறியே? கனகரத்தினந்தான் கேட்டார்.

பார்வதி பதிலொன்றும் பேசாது நின்றுகொண்டிருந்தாள்.

“எனக்குத் தெரியும் பார்வதி, இந்த நேரத்தில உன்னட்டை செலவுக்குக் காசு இருக்காது. உனக்குத் தாறதுக்குத் தான் நான் கொஞ்சம் காசு கொண்டு வந்திருக்கிறன். நீ என்னட்டைப் பயப்பிடாமல் எதுவேணுமெண்டாலும் கேட்கலாம். இந்த நேரத்திலை உதவி செய்யாவிட்டால் பிறகு எப்ப உதவி செய்யிறது?”

பார்வதியின் பார்வை தற்செயலாக முன்பக்கம் சென்றது. முன்கதவு சாத்தப்பட்டிருந்தது. கனகரத்தினந்தான் சாத்தியிருக்க வேண்டும். அவளது நெஞ்சம் துணுக்குற்றது.

கனகரத்தினத்திற்குத் தேநீர் தயாரிப்பதற்காக மூட்டிய நெருப்பு அடுப்புக்குள் சுவாலைவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பார்வதி அந்தச் சுவாலைக்குள் தனது பார்வையைச் செலுத்திய வண்ணம் நின்றிருந்தாள்.

கனகரத்தினம் அவள் அருகில் வந்து அவளது கையைப் பற்றித் தான் கொண்டுவந்த பணநோட்டுகளை அவளது கைக்குள் திணித்தார்.

“எனக்குப் பயமாயிருக்கு, நீங்கள் போயிட்டு வாருங்கோ” பார்வதி பதட்டத்துடன் கூறினாள்.

“ஏன் பார்வதி என்னைக் கலைக்கிறாய்? நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை, இப்ப இங்கை ஒருத்தரும் வரமாட்டினம்.”

கனகரத்தினம் அவளது கையிலே திணித்த பணநோட்டுகள் நிலத்திலே விழுந்து சிதறின.

அடுப்பிலிருந்து சுவாலை பெரிதாக வீசியது. அந்த அனலின் வெப்பத்தைத் தாங்க முடியாது பார்வதி விலகிப்போக முயன்று கொண்டிருந்தாள்.

“ஐயோ, என்னை விட்டிடுங்கோ” அவள் கனகரத்தினத்திடம் கெஞ்சினாள்.

கனகரத்தினத்தின் பிடி அவளை இறுக்கியது. பார்வதி ஆவேசத்தோடு அவரது பிடியிலிருந்து திமிறினாள்.

கனகரத்தினத்திற்கு அவளது எதிர்ப்பு எரிச்சலைக் கொடுத்தது.

“என்னடி, நீ சுந்தரத்தோடை ஓடிவந்தவள்தானே… என்னைக் கண்டால்தான் உனக்குக் கசக்குதோ?”

அவர் அப்படிக் கூறியபோது பார்வதிக்குக் கோபம் பொங்கியது. அவள் பத்திரகாளியானாள். என்றுமில்லாத அசுரபலம் அவளுக்குள் புகுந்துகொண்டது. கனகரத்தினத்தை வெறியோடு தள்ளினாள். கனகரத்தினம் நிலைதடுமாறித் தள்ளாடினார். அதே வேகத்தோடு அவள் அவரைச் சமையலறையின் பின்கதவு வழியாக வெளியே தள்ளிக் கதவைப் படீரெனச் சாத்தி பூட்டிவிட்டாள்.

பார்வதிக்கு மூச்சுவாங்கியது. அவள் விம்மி விம்மி அழுதாள்.

அடுப்பிலிருந்த சுவாலை இப்போது தணிந்து அவிந்து சாம்பராகியது.

பார்வதி விம்மும் சத்தம் வெளியே நின்றுகொண்டிருந்த கனகரத்தினத்தின் காதுகளிலும் விழுந்தது. அவர் ஆத்திரத்தாலும் அவமானத்தாலும் துடித்தார். அவரது குடை பணம் யாவும் உள்ளேயிருந்தன. தனது விருப்பம் நிறைவேறாமலே அவற்றை இழந்துவிடக் கனகரத்தினம் விரும்பலில்லை. ஆனாலும் அப்போது அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேறொருநாள் தனது பொருட்களைச் சாவதானமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நினைவில் அவர் மெதுவாக எழுந்து தனது வீட்டை நோக்கி நடந்தார்.

பார்வதி மிகவும் சோர்ந்து போயிருந்தாள். அவளிடத்தில் இப்போது அளவில்லாத வெறுப்புணர்ச்சி ஓங்கிநின்றது. கனகரத்தினம் இப்படி நடக்கக்கூடியவரென அவள் கனவிலும் கருதியதில்லை. அவர் முன்பு எவ்வளவோ நல்லவராக இருந்தார். திடீரென எப்படி அவருக்கு இந்த கோணற்புத்தி ஏற்பட்டது?

தன்னிச்சைப்படி ஒருவனோடு ஓடிச்சென்று வாழும் பெண்களை எல்லோருமே பலவீனமானவர்கள் என்றுதான் எண்ணுகிறார்கள். ஒழுக்கங்கெட்டவர்கள் என்றுதான் கணிக்கிறார்கள். அதனாலேதான் கனகரத்தினமும் தன்னிடத்தில் அப்படி நடந்து கொண்டாரா? எனப் பார்வதி யோசித்தாள். தான் சுந்தரத்தோடு ஓடிச்சென்று தனியாக வாழ்க்கை நடத்துவதினாலேதான் அந்த நல்ல மனிதரின் மனதிலும் கெட்ட சிந்தனைகள் ஏற்பட்டதோவென எண்ணி அவள் மனம் குமைந்தாள்.

தனது தாயாருடனும் சகோதரிகளுடனும் தான் வாழ்ந்த காலத்தில், கனகரத்தினம் தன்னிடம் எவ்வளவு கண்ணியமாக நடந்துகொண்டார் என்பதை இப்போது பார்வதி எண்ணிப் பார்த்தாள்.

பெற்றோரின் விருப்பப்படி திருமணஞ்செய்து குடும்பம் நடத்தும் தனது சினேகிதிகள் ஒவ்வொருவரையும் அவள் தனது நினைவில் நிறுத்தினாள். அவர்கள் இன்று எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் சிறிது கஷ்டம் ஏற்பட்டாலும் உதவி செய்வதற்கு தாய் தந்தையர்களும் சுற்றத்தவர்களும் முன்வருகிறார்கள். ஆனால் இன்று தனக்கு உதவி செய்ய யாருமே முன்வராதபடி தனது வாழ்க்கையைத் தானே அமைத்துக் கொண்டதற்காக அவள் மிகவும் வேதனைப்பட்டாள். பார்வதிக்குத் தனது தங்கை பானுமதியின் நினைவு ஏற்பட்டது. காலையில் அவள் எவ்வளவு பாராமுகமாக நடந்துகொண்டாள்! தனது குடும்ப கௌரவத்தையும் அழித்து, ஓடிப்போனவளின் தங்கைகள் என்ற பெயரையும் தனது சகோதரிகளுக்கு ஏற்படுத்தி, அவர்களது வாழ்க்கையையும் பிரச்சினைக்குள்ளாக்கிவிட்ட தனது மடைமையை எண்ணி அவள் கண்ணீர் விட்டாள்.

வாழ்க்கையைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ளாத பருவத்தில், அவசரமான முடிவுக்கு வந்ததனால் தனது வாழ்க்கையே கோணலாகிவிட்டதோ என எண்ணி அவள் குழப்பமடைந்தாள்.

சிந்தித்துச் சிந்தித்து மூளையே வெடித்துவிடும்போல இருந்தது பார்வதிக்கு. இனி எதைப்பற்றியுமே சிந்திப்பதில் பயனில்லை என்று நினைத்து அவள் எதையுமே வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளத் தயாரானாள்.

கனகரத்தினம் அவளிடம் கொடுத்த பணநோட்டுகள் நிலத்திலே சிதறுண்டு கிடந்தன. அவற்றைப் பொறுக்கிச் சுக்கல்நூறாகக் கிழித்து அடுப்புக்குள் போட்டுவிடவேண்டும் என்ற வேகம் ஒருகணம் அவளுக்குள் துளிர்த்தெழுந்தது.

ஆனாலும் அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். கணவனின் உயிரைக் காப்பாற்ற அவளுக்கு அந்தப் பணம் அதிமுக்கியமான தேவையாகிவிட்டது.

தன்னைத் தாயுடனும் சகோதரிகளுடனும் ஒற்றுமையாக்கி வைக்கக் கூடிய கனகரத்தினத்தைப் பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதற்காக அவள் இப்போது பெரிதும் வருந்தினாள்.

மறுநாள் பார்வதி ஆஸ்பத்திரிக்குச் சென்று தனது கணவனுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொடுத்து விட்டு வந்ததில் பெரிதும் ஆறுதலடைந்தாள்.

அன்றிரவு பார்வதி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த போது வெளியே கதவு தட்டப்படும் ஓசைகேட்டது. கனகரத்தினந்தான் அப்படிப் பதட்டமின்றி நிதானமாகக் கதவைத் தட்டுவார் என்பது பார்வதிக்குத் தெரியும்.

கனகரத்தினம் வெளியே நின்றுகொண்டிருந்தார். நேற்று நடந்த நிகழ்ச்சியைப் பார்வதி முறையிடுவதற்கு அவளுக்கு யாருமே இல்லை என்பது அவருக்குத் தெரியும். அதனாலேதான் அவர் துணிவுடன் அங்கு வந்திருந்தார்.

தான் அங்கு வந்ததைப் பார்வதி அறிந்ததும் கதவைக் கூடத் திறக்கமாட்டாள் என்றுதான் கனகரத்தினம் நினைத்தார்.

ஆனால் பார்வதியோ கோணலாகிவிட்ட தனது வாழ்க்கையை நினைத்து வருந்தி, அதனால் ஏற்பட்ட விரக்தியையும் வெளிக்காட்டாது கதவைத் திறந்தாள்.

– வீரகேசரி 1971.

– அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், முதற் பதிப்பு: மே 1998, மல்லிகைப் பந்தல் வெளியீடு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *