சஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்

2
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 1, 2013
பார்வையிட்டோர்: 19,326 
 

”கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர்’… அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்!” – சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீர் எனப் பாதியில் இருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களுடைய உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்தில் இருந்து தொடங்கிப் பேசிக்கொண்டே போவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல் நாள் என்ன பேசினோம் என்பது மெள்ள மெள்ள நினைவுக்கு வரும். சஞ்சீவி மாமா பேசுவதுபோலவே அவரைப் பற்றிய தகவல் ஒன்றும் இப்படித் திடீர் என்று வந்தது.

ஒரு வாரமாக திருநெல்வேலியிலேயே இருந்தவன், சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்த்திருக்கலாம்தான். இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கப்போகிறோமே, சென்னைக்குக் கிளம்பும் முன் போய்ப் பார்க்கலாம் என்று அசட்டையாக இருந்தது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை, தொலைபேசியில் வந்த தகவல் உணர்த்திவிட்டது. இத்தனைக்கும் டவுனில் இருந்து ஒரு அழுத்து அழுத்தினால் பதினைந்தே நிமிடங்களில் பாளையங்கோட்டை கோபால்சாமி கோயில் பக்கம் போய்விடலாம். அதற்குப் பக்கத்தில்தான் சஞ்சீவி மாமாவின் வீடு. பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரியில் இருந்து பஸ்ஸில் திரும்பிக்கொண்டு இருக்கும்போது, சமாதானபுரம் பஸ் ஸ்டாப் பக்கத்தில் காதி வஸ்திராலயத்தில் சஞ்சீவி மாமாவின் தலை தெரிந்தால், உடனே இறங்கிவிடுவேன். அருகில் போய் ”மாமா” என்று அழைத்தாலும் உடனே ஏதும் பேசி விட மாட்டார். ஒரு சின்ன சிரிப்பைக்கூட எதிர்பார்க்க முடியாது. சில நிமிடங்கள் கழித்து, அவராகப் பேசத் தொடங்குவார். முரட்டுக் கதரில் முழுக்கைச் சட்டை யும் கதர் பேன்ட்டுமே சஞ்சீவி மாமாவின் உடை. நடு முதுகு வரை புரளும் நீண்ட தலைமுடி. பின்னால் இருந்து பார்க்கிறவர்கள், ஊருக்குள் பேன்ட் – சட்டை யில் ஒரு பெண் போகிறாள் என்று சந்தேகித்து முன்னால் வந்து, சஞ்சீவி மாமாவின் தொங்கு மீசை யைப் பார்த்து முகம் கோணி நாணிப் பின்வாங்குவதைப் பல முறை பார்த்துச் சிரித்திருக்கிறேன். மாமாவுடன் அவருடைய ராஜ்தூத் பைக்கின் பின்னால் உட்கார்ந்து, ஒருமுறை கிருஷ்ணாபுரம் சென்றுகொண்டு இருக்கும்போது, மற்றொரு பைக்கில் ஓர் இளைஞன் எங்களை ரொம்ப நேரமாகப் பின்தொடர்ந்துகொண்டே இருந்தான். கூந்தல் பறக்க மாமா பைக் ஓட்டுவதைப் பின்னால் இருந்து பார்த்தவன், ஒரு முடிவோடு எங்களை முந்தாமல் வந்துகொண்டு இருந்தான். இதைப் புரிந்து கொண்ட மாமா, வேண்டும் என்றே வேகத்தைக் குறைத்தார். ஆனாலும் அவன் அசரவில்லை. கிருஷ்ணா புரம் வந்தவுடன், மாமா ஓரமாக பைக்கை நிறுத்திய பிறகு, வேறு வழி இல்லாமல் கடந்து சென்ற படி திரும்பிப் பார்த்தவன், தன்னை மறந்து ‘ச்சை’ என்றபடி ஆக்ஸிலேட்டரை முறுக்கிப் பறந்தான்.

அன்றைக்கு முழுவதும் கிருஷ்ணாபுரம் சிற்பங்களை சஞ்சீவி மாமா புகைப்படங் களாக எடுத்துத்தள்ளிக்கொண்டு இருந்தார். கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவைதான். ஆனால், அவற்றை சஞ்சீவி மாமாவின் புகைப்படங்களில் அவருடைய கேமரா கோணங்களில் பார்க் கும்போது, அந்தச் சிற்பங்கள் அனைத்தும் ஓர் இனம் புரியாத அழகும் உயிர்ப்பும் அடைந்துவிடும். சிற்பங்கள் மட்டும் இல்லை; மனிதர்களும்தான். மாமாவின் புகைப்படங்களில் சாலை ஓரத்தில் நுங்கு விற்பவர்கள், சா மில்லில் இருந்து மரப் பொடி சுமந்து திரும்புபவர்கள், திருச் செந்தூர் கோயிலில் மொட்டை போட்டு விட்டு சந்தனத் தலையோடு பேருந்தின் ஜன்னல் ஓரம் தூங்குபவர்கள், சின்ன டிரான்ஸிஸ்டரில் பாட்டு கேட்டபடியே மார்க்கெட் பூக்கடையில் பூ சுற்றிக் கொண்டு இருக்கும் பெண்கள், வேண்டா வெறுப்பாக புத்தகப் பை சுமந்து வாடிய முகத்துடன் தளர்ந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், மாலையில் பள்ளி முடிந்து குதூகலத்துடன் துள்ளலாக நடந்துவரும் அதே குழந்தைகள் என சஞ்சீவி மாமாவின் கேமராவில் சிக்கிய முகங்கள் ஏராளம்.

கேமரா மட்டும் அல்ல. கிதார் என்னும் வாத்தியத்தை எனக்கு முறையாக அறிமுகப் படுத்தியவரும் சஞ்சீவி மாமாதான். அதற்கு முன்னால் கிதாரை ‘மூடுபனி’ திரைப்படத்தின் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலில் பிரதாப் போத்தன் கையிலும் இன்னும் வேறு சில இந்தித் திரைப்படங்களிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். கிதாரில் எத்தனை வகைகள் உள்ளன. அவை என்னென்ன என்று சஞ்சீவி மாமாதான் விளக்கினார். மாமா விடம் நான்கைந்து கிதார்கள் இருந்தன. ‘இது அகௌஸ்டிக், இது எலெக்ட்ரிக், இப்படி வாசிக்கறது லீட் கிதார், இப்படி வாசிச்சா பாஸ்’. இவை போக சின்ன கிதார் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்த மாண்டலினும் மாமாவிடம் இருந்தது. ”நம்ம ஊர்ல எல்லாப் பயலுவளும் பேஸ் கிதார்னு சொல்லுதானுவொ. பாஸ் கிதார்னுதான் சொல்லணும்” – மாமா திருத்துவார்.

தேவ் ஆனந்தின் ‘கைடு’ படப் பாடலான ‘தேரே மேரே சப்னே’ பாடலை எல்லாம் கிதாரில் வாசிக்க முடியும் என்பது, சஞ்சீவி மாமா வாசிக்கும்போதுதான் தெரிந்தது. நிறையப் பழைய இந்திப் பாடல்களை கிதாரில் வாசித்துக் காண்பிப்பார். தமிழ்ப் பாடல்களும் வாசிப்பார்தான். அப்படி மாமா அடிக்கடி தன்னை மறந்து ஒரு பாடலை ரகசியக் குரலில் ‘என் கானம் இன்று அரங்கேறும்’ என்று பாடியவாறே ரசித்து வாசிப்பார். அதற்கு முன்னர் அந்தப் பாடலை நான் கேட்டதே இல்லை. ‘இந்தப் பாட்ட மட்டும் இல்ல மாப்ளே… இந்தப் படத்தையும் ஒரு பய பாக்கல. படம் பேரு ‘ஈர விழிக் காவியங்கள்’. ஒவ்வொரு முறையும் அந்தப் பாடலை வாசித்து முடிக்கும்போது ‘ராஸ்கல்’ என்று முணுமுணுக்க மாமா தவறுவது இல்லை.

நான்கைந்து வீடுகள் உள்ள ஒரு காம்பவுண்டின் மாடி அறையில் மாமா தனியாகவே இருந்தார். மாமாவின் மனைவி எதிரே உள்ள பெரிய வீட்டில் தனது சகோதரர்களுடன் வசித்தார். சஞ்சீவி மாமாவுக்கும் அத்தைக்கும் பேச்சுவார்த்தை அறவே இல்லாமல்போனதற்கு, அவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் போனதுதான் காரணம் என்று ஊருக்குள் பேசிக்கொண்டார்கள். ஒரே ஒரு முறை இதுபற்றிப் பேசும்போது மாமா தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோல, ”எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பாத்தாச்சு. கம்ப்ளெயின்ட் என்ட்ட இல்லனு எல்லா டாக்டரும் சொல்லிட்டாங்க. அதுலதான் ஒங்க அத்தைக்குத் தாங்கல” என்றார். அதற்கு ஏற்றாற்போலத்தான் அத்தையின் நடவடிக்கைகளும் இருந்தன. அத்தையின் தகப்பனார் சேர்த்துவைத்திருந்த சொத்துக் கள் போதுமான அளவுக்கு இருந்ததால், யாரையும் எதிர்பார்க்காமல், வீட்டு வாடகை, நிலபுலன்கள் மூலம் வரும் வருமானத்தைவைத்து தன் சகோதரர்களின் குடும்பங்களையும் கவனிக்கும் அளவுக்கு அத்தை செழிப்புடனே வாழ்ந்துவந்தார். மாமாவைப் பற்றிச் சொல்லும்போது எல்லாம் ‘அவன்’ என்று ஒருமையிலேயே சொல்லுவார். மாமாவைவிட அத்தை ஒரு வயது மூப்பு என்றும் ஒரு தகவல் உண்டு. ”என்ன சொல்லுதான் ஒன் மாமன்காரன்?” என்பார். ஆனால், என்னிடத்தில் பாசமாக இருப்பார். வாய் நிறைய ”மருமகனே” என்றழைப்பார். ”நீ பாட்டுக்கு மச்சுல இருந்து அரவம் இல்லாம எறங்கி அவன்கூட ஹோட்டலுக்கு கீட்டலுக்குப் போயிராதெ. சாப்ட்டுட்டுப் போ” என்பார். ”என்னய மட்டும் அத்தைக்கு எப்பிடி மாமாபுடிச்சுப் போச்சு?”- வியப்புடன் மாமாவிடம் ஒரு முறை கேட்டேன். ”நீ என்னய மாரி இல்லாம சாமி கும்பிடுதெல்லா? அதான்” – சிரித்தபடி சொன்னார்.

சஞ்சீவி மாமாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. வைணவக் குடும்பத்தில் பிறந்தவரான மாமா, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ‘நவதிருப்பதி’ கோயில்கள் அனைத் துக்கும் என்னை அழைத்துச் சென்று இருக்கிறார். ஆனால், அங்கும் அவருடைய கேமராவுக்குத்தான் வேலை. சிற்பங்கள், அக்ரஹாரத்துத் திண்ணைகள், ஆடு மாடுகள், மண் தெருக்கள், பழைய வீடுகள், டூரிங் தியேட்டர் போஸ்டர்கள் என எல்லா வற்றையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பார். தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பெருமாள் கோயிலுக்கு ஒரு முறை மாமாவுடன் சென்று இருந்தபோது, மாமா கோயிலுக்குள் வரவே இல்லை. ”நீ போயிட்டு வாடே” என்று சொல்லிவிட்டு, கேமராவுடன் வாசலிலேயே நின்றுகொண்டார். இருட்டுக்குள் இருந்த பெருமாளைப் பார்த்து,

”ஓடும் புள்ளேறி சூடும் தன்துழாய்
நீடுநின்றவை ஆடும் அம்மானே
அம்மானாய் பின்னும் எம்மாண்பும் ஆனான்
வெம்மாவாய் கீண்ட செம்மா கண்ணனே”

– என்று உருகி வணங்கிவிட்டு வெளியே வந்தால், தயிர் விற்கும் ஒரு மூதாட்டியுடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவளைப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருந்தார் மாமா. ஒரு சில தினங்களில் அவற்றை பிரின்ட் போட்டுக் காண்பித்தபடி சொன்னார். ”இந்த அம்மா மொகத்துல இருக்குற சுருக்கங்களப் பாத்தியா? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு கத சொல்லுது, பாரு. அவ ஸ்கின் டோனக் கவனி.”

வழக்கமாக மாமா தென்படும் காதி வஸ்திராலயம், காளி மார்க் கேன்டீன், வ.உ.சி. மைதானம் போன்ற எந்த இடத்திலும் மாமாவைச் சில நாட்களாகப் பார்க்க முடியாமல் போனது. எங்கெல்லாமோ தேடிப் பார்த்துவிட்டு, அத்தையிடமும் கேட்காமல் விட்டுவிட்டேன். ஒரு இடை வெளிக்குப் பிறகு மாமாவின் வீட்டுக்குச் சென்றபோது, மாமாவின் வீட்டில் ராஜ் தூத் நின்றுகொண்டு இருந்தது. உடனே மாமாவைப் பார்க்கச் சென்றால் அத்தை ஏசுவார் என்பதால், சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, மாடி அறைக்குச் சென்றேன். குமார் கந்தர் வாவின் ஹிந்துஸ்தானி சங்கீதம் சன்னமாக ஒலித்துக்கொண்டு இருந்தது. கமாஸ் போன்ற ஏதோ ஒரு வட நாட்டு ராகம். மாமா ஒரு புகைப்படத்தை எடுத்து என் முன்னால் இருந்த சிறிய மர மேஜையில் போட்டார். மாமாவால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மிதா பாட்டீலை நினைவுபடுத்துகிற ஒரு பெண்ணின் புகைப்படம். வியப்புடன் எடுத்துப் பார்த்தேன். ”யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?” இந்தக் கேள்விதான் என்னிடம் இருந்து வரும் என்பதை ஏற்கெனவே அறிந்து இருந்தவராக, ”அவளேதான்” என்றார் மாமா. ”அவளேதான்” என்று அவர் சொன்னது ஸ்மிதா பாட்டீலை இல்லை… சுமி அக்காவை. சுமி அக்காவை சஞ்சீவி மாமா, ஸ்மிதா பாட்டீலாகவே தான் நினைத்தார்.

அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில்வைத்து சுமி அக்காவை முதன்முறையாக எனக்கு அறிமுகம் செய்துவைக்கும்போதும் ”இது ஸ்மிதா” என்றார். பார்த்த மாத்திரத்திலேயே ஆண் பிள்ளைகள் மாதிரி, என் கைகளைப் பற்றிக் குலுக்கியபடி சுமி அக்கா, ”எப்டி இருக்கெ மக்கா?” என்றாள். கழுத்தில், காதில் எதுவும் இல்லை. பளிச் என்ற பவுடர் பூசிய முகம். நெற்றியில் கூர்ந்து கவனித்தால் தென்படுகிற ஒரு துளி சாந்துப் பொட்டு. ”நீங்க சோஃபியா பவுடர் போட்டிருக்கீங்க. கரெக்ட்டா?” என்றேன். சட்டென்று சிரித்தபடி ”அடப் பாவி” என்றாள். சுமி அக்காவுக்கு என்னை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. என்னைவிட நான்கு வயது அதிகமான அவளை ‘சுமி அக்கா’ என்று இயல்பாக என்னால் கூப்பிட முடிந்தது.

சுமி அக்காவுக்கு திருச்செந்தூர் பக்கம் என்றார் மாமா. தாய், தந்தை இல்லாத சுமி அக்கா முதுகலை பட்டப் படிப்பு முடித்திருந்தாள். ஆதரவற்றோர் விடுதி ஒன்றுக்கு மாமா சென்று இருந்தபோது பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. சுமி அக்காவின் வருகைக்குப் பிறகு சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்ப் பது வெகுவாகக் குறைந்து விட்டது. மாமாவும் ”என்னடே ஆளையே காணோம்?” என்று சம்பிரதாயமாகக் கேட்பதோடு சரி. ஒருநாள் மாமா தன் கிதார் ஒன்றின் கம்பிகளைச் சரிபார்த்துக்கொண்டு இருக்க, நான் அவருடைய புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டு இருந்தேன். அது வரைக்கும் மாமாவின் மாடி அறைக்கு வந்தேஅறியாத அத்தை, மூச்சு வாங்க மாடி ஏறி வந்து, அந்த அறையில் ஃபிரேம் போட்டு மாட்டப்பட்டு இருந்த சுமி அக்காவின் கறுப்பு-வெள்ளைப் புகைப்படத்தை எடுத்துக் கீழே போட்டு சுக்குநூறாக உடைத்தார். வேறு எதுவும் பேசாமல் கீழே இறங்கிச் சென்றுவிட்டார். சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு மாமா எழுந்து உடைந்த கண்ணாடித் துண்டுகளை எடுக்கக் குனிந்தார். ”நான் எடுக்கென் மாமா”. மாமாவைத் தடுத்துவிட்டு, ஒவ்வொரு கண்ணாடித் துண்டாகப் பொறுக்கி எடுத்தேன். ‘பூமிகா’ திரைப்படத்தின் ஸ்மிதா பாட்டீலை நினைவு படுத்தும் விதமாகக் கழுத்திலும் காது களிலும் நகை அணிந்து சிரித்தபடி சுமி அக்கா இருக்கும் கிழிந்த, கசங்கிய புகைப் படத்தை மாமாவின் மேஜை டிராயரில் வைத்தேன். மாமா என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் விதமாக கிதார் கம்பிகளில் மும்முரமாக ஏதோ செய்யும் பாவனையில் இருந்தார். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும் சஞ்சீவி மாமாவுக்கும் இடையேயான சந்திப்புகள் குறைந்துபோயின. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்குப் போகும்போது எல்லாம் சஞ்சீவி மாமாவைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். பிறகு, ஏதேதோ காரணங்களால் தொடர்பே இல்லாமல் போய்விட்டது.

பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, மாமாவின் வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டி உள்ளே நுழையும்போது, ஏதோ ஒரு புதிய இடத்துக்கு வருவதுபோலத் தோன்றியது. வீட்டு வாசலில் ஷாமியானா போட்டு நான்கைந்து பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டு இருந்தன. வீட்டுக்கு உள்ளே அத்தை சோஃபாவில் சாய்ந்து இருந்தார். முன்பைவிட உடல் கனம் கூடி இருந்தது. உடன் ஏதேதோ புதிய மனிதர்கள். என்னைப் பார்த்ததும் உடனே அடையாளம் பிடிபடாமல், பிறகு சுதாரித்து, சிநேகப் பார்வை பார்த்து ”வந்துட்டியா? ம்ம்ம், போ. அங்கனயே தான்” என்று மாடியைக் காண்பித்தார்.

சுற்றிலும் கிதார்கள், பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி உட்பட பழைய புத்தகங்களின் வாசனையுடன் கண்ணாடிப் பெட்டிக்குள் சஞ்சீவி மாமா தூங்குவதுபோலக் கண் மூடிப் படுத்திருந்தார். நெற்றியில் சூர்ணம் இடப்பட்டு இருந்தது. அருகில் அத்தையின் சகோதரர் அமர்ந்து இருந்தார். ”வெயில் தாழ எடுத்துரலாம்னு இருக்கோம்” என்றார். நான் பார்க்காத காலங் களில் மாமாவின் முகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன என ஆராயும் விதமாக மாமாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன். ‘நீங்கள்லாம் மெட்ராஸ்ல இருக்கணும் மாமா’. பல முறை சொல்லுவேன். ‘மெட்ராஸ்ல இருந்து?’ எதிர்க் கேள்வி கேட்பார். ‘பெரிய ஆளா ஆயிரலாம்லா’. சிறுபிள்ளைத்தனமாகச் சொல்லியிருக்கிறேன். ‘பெரிய ஆளுன்னா என்னதுடே?’ என்பார். அதற்குள் கீழே இருந்து சத்தம் கேட்டது.

”நவநீதா சீக்கிரம் கீள வா. அந்த முண்ட வந்திருக்கா”. அத்தையின் இன்னொரு சகோதரரின் குரல். என் அருகில் இருந்தவர், ”இந்தா வாரேன்” என்று பாய்ந்து செல்லவும், நிலைமையை உணர்ந்து அவருக்குப் பின்னால் மாடிப் படிகளில் இறங்கி ஓடினேன். காம்பவுண்டுக்கு வெளியே அழுதபடி சுமி அக்கா நின்றுகொண்டு இருந்தார். உடன் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன். சிறு வயது புகைப்படத்தில் சஞ்சீவி மாமா இருப்பதுபோலவே இருந்தான். அத்தையின் சகோதரர்கள் இருவரும் சுமி அக்காவை, ”எங்கெட்டி வந்தெ?” என்று சத்தம் போட்டபடியே நெருங்கினார்கள். அவர்கள் சுமி அக்காவை எதுவும் செய்துவிடக் கூடாதே என்கிற பதைபதைப்பில் நான் அவர் களைத் தாண்டிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்ட சுமி அக்கா, ”மக்கா” என்று என் கைகளைப் பிடித்து, என் மீது சாய்ந்தபடி கதறி அழுதாள். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே வந்து எட்டிப் பார்த்த அத்தை, முறைத்தபடி நிற்கும் தன் சகோதரர்களிடம், ”எல, இங்கெ வாங்க” என்று அதட்டி அழைத்தார். சுமி அக்காவுடன் நிற்கும் என்னைப் பார்த்து, ”மருமகனே, அவள மச்சுக்குக் கூட்டிட்டுப் போ” என்றார்.

– ஏப்ரல் 2012

Print Friendly, PDF & Email

2 thoughts on “சஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்

  1. அருமையான ஒரு சிறுகதை.. நீண்ட நாட்லகுக்கு பிறகு ஒரு நல்ல கதை படித்த திருப்தி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *