காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை!

3
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 19,419 
 

பெரியவர் நிறைக்குலத்தானுக்கு இன்று நிச்சயமாகக் கடைசி நாள்தான்!

‘நிறைக்குலத்தான்’ – இந்தப் பெயரை, ஒரு முறை உங்களின் வாய் திறந்து நாக்கைக் கடித்து ஒலி எழுப்பிச் சொல்லிப் பாருங்களேன். பெரிய ஓர் ஆலமரம், அந்தப் பெயர் முழுவதும் தன் நிழல் பரப்பி இருப்பதுபோல உங்களுக்குத் தோன்றும். ஆனால், அந்த ஆலமரம் விழுதுகள் இல்லாத ஆலமரமாக, இலைகள் இல்லாத ஆலமரமாக, துளி பச்சைகூட இல்லாத ஆலமரமாக, பங்குனி வெயிலில் எப்போது வேண்டுமானாலும் பற்றி எரிகிற மொட்டை ஆலமரமாக இருந்தால் எப்படி இருக்கும்? நினைத்துப் பார்த்தாலே உங்கள் கண்கள் தீப்பிடித்து எரிந்து கசங்குகின்றனதானே! அப்படி ஒரு மொட்டை ஆலமரம்தான், பெரியவர் நிறைக்குலத்தான். அவரின் சரியான வயது தெரியவில்லை. நரைத்த நரையையும் சுருங்கிய உடலையும் வைத்துச் சொன்னால், பெரியவரின் பிறப்பு எப்படியும் இந்தியச் சுதந்திரத்துக்கு முன் நிகழ்ந்ததாக இருக்க வேண்டும்.

Kattu1

முதலில், ஊரில் உள்ளவர்களுக்கு முடி திருத்துவதற்காகத்தான் நிறைக்குலத்தானைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அப்புறம் எப்படியோ அவருக்கு எட்டுக் கை, நான்கு கால், ஆறு கண்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, அறுந்த செருப்பு தைப்பது, ஊர் துணி துவைப்பது, இறந்தவர்களுக்குத் தேர் கட்டி, சடங்கு செய்து, சங்கு ஊதுவது, புரியாத சில நோய்களுக்குப் புரியாத வைத்தியங்களைப் பார்ப்பது என, எல்லா வேலைகளையும் அவருக்கே கொடுத்துவிட்டார்கள்.

ஆரம்பத்தில், ஊருக்கு வெளியே எல்லை பேச்சியம்மன் கோயிலுக்குப் பின் ஒரு குடிசை போட்டுக்கொடுத்து, பெரியவரைத் தங்கவைத்திருந்தார்களாம். அப்போது ஆழ்வார்தோப்பில் இருந்து ஐஸ் விற்க வந்த கிழட்டு ஐஸ்காரன் ஒருவனின் குளிர்ச்சியான மரத்துப்போன விரல்களின் வழியே ஊருக்குள் புகுந்து, சேமியா ஐஸ்களை வாங்கி நக்கிச் சொட்டாங்கி போட்டுக்கொண்டிருந்த குழந்தைகளின் உச்சி முடிக்குள் குடியேறி குழந்தைகளைப் பைத்தியம் பிடிக்கவைத்ததாம் ஒரு பிசாசு. அது ‘ஆத்துரங்கால் அமலிசொக்கி’தான் என்பதைக் கண்டுபிடித்து, அரைக் கிலோ மைதா மாவில் ஓர் உலக்கை செய்து அவளை அடித்து விரட்டியதில் இருந்து பெரியவர் நிறைக்குலத்தானை பில்லி-சூன்ய வைத்தியராக்கி, ஊருக்கு நடுவிலே வாசகசாலைக்குப் பின்னாடியே ஊர் பொது ஓட்டு வீட்டில் தங்கவைத்தார்களாம். அதன் பிறகு அவ்வளவு பெரிய ஊரின் மையப்புள்ளியே நிறைகுலத்தான்தான். அவரைச் சுற்றியே ஊர் இயங்கியிருக்கிறது; வாழ்ந்திருக்கிறது.

முடி திருத்தும் நாசுவணனான தன்னை, ஊர் துணி வெளுக்கும் வண்ணாரனான தன்னை, அறுந்த செருப்பு தைக்கும் சக்கிலியரான தன்னை, இறப்புத் தேர் கட்டும் வெட்டியானான தன்னை, ஊருக்கு மத்தியில் ஊரின் வாசகசாலைக்குப் பக்கத்திலே ஊர் பொது வீட்டுக்குள்ளே தங்கவைத்திருக்கும் அந்த ஊரின் பெருமை, சிறுமை குறித்து எந்தக் கேள்வியும் எந்தக் குற்றமும் எப்போதும் பெரியவரிடம் இருந்தது இல்லை.

ஆனால், அவரை அப்படியே நிறை மனிதனாக, மூத்த மனிதனாக, அந்த ஊரின் முதல் மனிதனாக ஏற்றுக்கொண்ட அந்த ஊர் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும், ஆடு – மாடுகளுக்கும், வயல்வெளி எலிக்குஞ்சுகளுக்கும் இவ்வளவு ஏன்… அந்த ஊர் தெய்வங்களுக்குக்கூட அந்த நாளில் இருந்து இப்போது பெரியவரின் ஆகக் கடைசி நாளான இன்று வரை, ஒரு கேள்விக்கு மட்டும் பதில் இல்லாமல் இன்னும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ முறை எவ்வளவோ பேர் கேட்டுப் பார்த்தும், கெஞ்சிப் பார்த்தும், இன்னும் சரியான பதில் கிடைக்காமல் ஊர் வாசகசாலையின் பழைய கதவு இடுக்கில் சிக்கி, அவ்வப்போது கிரீச் என்று சத்தமிட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கேள்வி இதுதான்.

‘எதுக்கு இந்த மனுசன் இவ்வளவு வயசாகியும் கல்யாணம் பண்ணிக்காம, குழந்தை பெத்துக்காம தனியா மொட்டையா அலையிறாரு? ஏன் இப்படிப் பொம்பளைங்களைக் கண்டா ஓட்டமா ஓடுறாரு?’ என்பதுதான் அந்த மொத்த ஊருக்கும் பெரியவரிடம் இருந்த ஒரே கேள்வி.

Kattu2

பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள்… என எல்லோரும் கேட்டுக் கேட்டு அலுத்துப்போன கேள்வி. ஊர் பெண்கள் பேயாக, பிசாசாக நடித்து நாக்கைத் துருத்திக்கூடக் கேட்டுப் பார்த்துவிட்டார்கள். எல்லோருக்கும் பதிலாகக் கொடுத்த அதே பிசிறு தட்டாத, பங்கம் இல்லாத அந்தச் சிரிப்பைத்தான் பெரியவர் பேய், பிசாசுகளுக்கும் பதிலாகக் கொடுத்தார்.

வேறு வழி இல்லாமல் கடைசி ஆயுதமாகத்தான் சிறுவன் முத்துவிடம் சொல்லி அந்தக் கேள்வியை அப்படியே பெரியவரிடம் கேட்கச் சொன்னார்கள். ஆமாம்… முத்து கேட்டால் ஒருவேளை பெரியவர் வாய்த் திறந்தாலும் திறக்கலாம். அதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றன.

”எங்க எல்லாருக்கும் முடி வெட்டிவிடுறியே தாத்தா… உனக்கு யாரு முடிவெட்டிவிடுவா?” – இதுவரை யாருமே கேட்காத கேள்வியை, 10 வயது இருக்கும்போது முத்துதான் நிறைக்குலத்தானைப் பார்த்துக் கேட்டான்.

”தாத்தனுக்குப் பேரன்தான் முடி வெட்டிவிடணும். நீ வெட்டிவிடுறியா?”

”எனக்குத்தான் முடி வெட்டத் தெரியாதே!”

”வித்தையை நான் சொல்லித்தாறேன்… கத்துக்கிறியாடே!”

”ம்ம்ம்… நீ சொல்லித்தந்தா கத்துக்கிறேன் தாத்தா” என்று இருவரும் விளையாட்டாகப் பேசி முடித்த அன்றைக்கே, சிறுவன் முத்துவுக்குக் கத்தரியைப் பிடிக்கக் கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டார் பெரியவர். பையன் முத்துவும் சளைத்தவன் இல்லை. மூன்றே வாரங்களில் முழு வித்தையையும் கற்றுக்கொண்டு ஊருக்கு மத்தியில் நிறைக்குலத்தானை உட்கார வைத்து முழு முகச்சவரம் செய்தான்.

‘இன்னும் பேய், பிசாசு ஓட்ற வித்தையை மட்டும் கத்துக்கிட்டான்னா, பெரியவரோட முழு வாரிசா முத்து மாறிடுவான்’ என்று ஊர் முழுவதும் அப்பவே பேசவைத்துவிட்டான். ஆனால், பெத்த பிள்ளை சவரக் கத்தி பிடிக்க, முத்துவின் தாய்-தகப்பன் சம்மதிக்கவில்லை. அடிச்சி விரட்டி, குளத்து வேலைக்கு அனுப்பிவிட்டார்கள். ஆனாலும், பெரியவர் தத்து எடுத்து ஒளிச்சு வளர்த்த கக்கத்துப் பிள்ளை முத்து என்பது ஊருக்கே தெரியும். அதனால்தான் அவர்கள் கடைசி நம்பிக்கையாக முத்துவைக் கேட்கச் சொன்னார்கள்.

அன்று, சின்ன ஆலமரத்தின் நிழலில் வைத்து பெரியவருக்கு முகச்சவரம் செய்துகொண்டிருந்தான் முத்து. கன்னம் இரண்டையும் மழித்து அப்படியே தாடைக்கு வரும்போது, மேலும் கீழுமாக ஏறி இறங்கிக்கொண்டிருந்த பெரியவரின் தொண்டைக்குழியைப் பார்த்துக்கொண்டே கேட்டான்.

”ஏதோ ஒரு பெரிய உண்மையை இன்னும் யாருகிட்டயும் சொல்லாம ஒளிச்சு வெச்சிட்டுருக்க நீ!”

”என்னடே சொல்ற… என்ன உண்மை?”

”உன் தொண்டையைப் பார்த்தாலே தெரியுதே! விஷம் முழுசா மேல ஏறி, நீலக்கலரா மாறி, இறங்கவும் முடியாம ஏறவும் முடியாம அது தவியாய்த் தவிக்கிறது! ஊருக்கே தெரிஞ்சுபோச்சு… எனக்கு மட்டும் தெரியாம இருக்குமா என்ன?”

பெரியவர் பதிலே சொல்லவில்லை. தன் கழுத்துக்குப் பக்கத்தில் இருந்த முத்துவின் கத்தியை மெதுவாக இடது பக்கமாக நகர்த்தி வைத்தார். பின்பு, அந்தக் கத்தியை அவன் கையில் இருந்து பிடுங்கி, தானாகவே தன் தாடையை வேகமாகச் சவரம் செய்துகொண்டு முகத்தைக் கழுவிவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினார்.

”எப்பவும் போல, எதுவும் சொல்லாம போறல்ல. போ… போ! இனிமே உங்கிட்ட நான் வர மாட்டேன்; பேச மாட்டேன். ‘நான் செத்தா நீதான் முத்து எனக்குக் கொள்ளி வைக்கணும்’னு சொல்லிட்டு, என்கிட்ட ஏதோ இன்னும் சொல்லாம ஒளிச்சுவெச்சிருக்க. நான் ஏன் உனக்குக் கொள்ளி வெக்கணும்? இனி நீ யாரோ… நான் யாரோ!” என்ற முத்து, நிலத்தைப் பார்த்தபடி குனிந்துகொண்டான்.

இவ்வளவு வேகமாக, படபடவெனப் பேசுவான் என்று பெரியவர் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் நிலைகுலைந்துதான் போய்விட்டார். முத்துவைப் பார்த்தார். ‘இன்னைக்கு ஒரு முடிவு தெரியாமல் முகத்தை நிமிர்த்த மாட்டேன்’ என்பதுபோல குனிந்துகொண்டு நின்றான். அவனுடைய தாடையைப் பிடித்து முகத்தை உயர்த்தினார். சிறுவன் என்றாலும் விவரமானவன் என்பதால், முத்து தன் கண்களை இறுக்க மூடிக்கொண்டான்.

”கண்ணைத் திறடே…”

”நீ சொன்னாத்தான் திறப்பேன்!”

”என்ன சொல்லணும்… சொல்லு!”

”நீ எதுக்கு கல்யாணமே பண்ணிக்கல? என்னை மாதிரி ஏன் ஒரு புள்ள பெத்துக்கல?”

”ஓ… அதுவா! அதைச் சொன்னா எனக்கு அழுகை வரும் பரவாயில்லையா?”

”பரவாயில்லை. ஒரு நாள்தானே, பக்கத்துல வேற ஆளும் இல்ல. அழுக வந்தா, அழுதுட்டு போ!”

”அழுதுக்கிட்டு இருக்கும்போதே, செத்தாலும் செத்துப்போய்டுவேன்… என்ன செய்வ?”

”பரவால்ல… சொல்லிட்டுச் செத்துப்போய்டு!”

”அது சரி. கத்தரி பிடிச்சுப் பழகிட்டல்லா… மனுசன் மனசும் உனக்கு இனி மசுரு மாதிரிதான தெரியும். சரிடே சொல்றேன். கண்ணைத் திற!”

முத்து, மெதுவாகக் கண்களைத் திறந்தான். இரண்டு கைகளாலும் முகத்தை ஒரு முறை அழுத்தித் துடைத்துவிட்டு, 35 வருடங்களாக ஊரே கேட்ட கேள்விக்கு, தொண்டையைச் செருமியபடி சிறுவன் முத்துவிடம் பதில் சொல்லத் தொடங்கினார் நிறைக்குலத்தான்.

” ‘நினைப்பு’னா உனக்கு என்னன்னு தெரியுமாடே?”

”நினைப்புனா ஆசைதான?”

”முதல்ல நானும் அப்படித்தான்டே நினைச்சேன். ஆனா, அது அப்படி இல்லடே. இனிமே அப்படிச் சொல்லாத. நினைப்புனா அது ஒரு வாழ்க்கைடே. எனக்கு அப்படித்தான் சொல்லத் தோணுது. இப்போ முழுசா வாழ்ந்து பார்த்த பிறகு, நிச்சயமா அதுதான் உண்மைனும் தெரியுது.

Kattu3

கடைசியாப் பார்த்த ஒரு பொண்ணு முகம், மாறாம, முடி நரைக்காம, சிரிச்ச பல்லு சிரிச்ச மாதிரியே, பார்த்த கண்ணு பார்த்த மாதிரியே நம்ம புத்திக்குள்ள அப்படியே குத்தவெச்சுக்கிட்டு இருந்தா… அதை வெறும் ‘நினைப்பு’னா சொல்ல முடியும். நம்ம வாழ்க்கைனுதானடே சொல்லணும். பார்க்கிற பொண்ணெல்லாம் பொண்டாட்டியாத் தெரியுற வயசுல, ஒரே ஒரு பொண்ணு மட்டும் நம்மளை அள்ளிட்டுப் போற தேவதையாட்டம் தெரிஞ்சா, மனசுக்குள்ள ஒரு கிறுக்கு வருமே… அந்தக் கிறுக்குதான்டே எனக்கும் வந்துச்சு.

அப்போலாம் கருங்குளம் வெங்கடாசலம் ஐயருக்குச் சவரம் செய்ய நான்தான் போவேன். அவங்க வீட்டுக் கொல்லைப்புறத்துல வைச்சுதான் முகச்சவரம் செய்வேன். அங்க இருந்து பார்த்தா ஐயரு வீடு, எனக்குக் குகை மாதிரி தெரியும். உள்ள அலையுறவங்க எல்லாரும் நரி மாதிரி தெரிவாங்க. அவருக்கு நிறைய நாள் சவரம் பண்ணிருக்கேன். அவரையும் அவங்க வீட்டு வேலைக்காரங்களையும் தவிர, வேற யாரையும் நான் ஒரு நாளும் பார்த்தது இல்லை.

ஒருநாள், அந்தக் குகைக்குள்ள இருந்து ஒரு பொண்ணு சிரிக்கிற சத்தம் கேட்டுச்சு. அப்புறம் ஒரு பூனைக்குட்டி சத்தம். மறுபடியும் சிரிப்புச் சத்தம். மறுபடியும் பூனை சத்தம். இப்படியே அந்தப் பொண்ணும் பூனையும் சேர்ந்து சிரிக்கிற, அதுவரைக்கும் நான் கேட்காத ஒரு மாதிரியான மனசைப் புரட்டுற சத்தம் என் புத்தி முழுசா விஷம் மாதிரி அன்னைக்கே பரவிருச்சு.

உடனே, அடுத்த நொடியே அந்தப் பொண்ணையும், அந்தப் பூனையையும் பார்க்கணும்னு மனசு பேதலிக்க ஆரம்பிச்சுட்டு. ஆனா, அது எப்படி ஒரு நாசுவணன், ஒரு ஐயர் பொண்ணையும் ஐயர் வீட்டுப் பூனையையும் அவ்வளவு சீக்கிரத்துல பார்க்க முடியும்? எந்த வழியும் இல்லாம ஒரு வருஷமா பூனையும் பொண்ணும் கலந்து விரவி காத்துல வர்ற சிரிப்பை மட்டுமே கேட்டுக் கேட்டு, உடம்பு முழுக்க விஷம் ஏறிப்போய்த் திரிஞ்சேன். ‘எப்படா… கடவுள் கண்ணைத் திறப்பான்; அந்தப் பொண்ண கண்ல காட்டுவான்’னு வெறி பிடிச்சு அலைஞ்சேன். கடைசியா ஒருநாள் என் மேல இரக்கப்பட்டானோ என்னவோ, அந்தக் கடவுள் கொஞ்சம் கருணை காட்டி கண்ணைத் திறந்தான்.

முதல் அதிர்ஷ்டமா, அந்தப் பூனையை மட்டும் ஐயர் ஒரு பையில போட்டு கொல்லப்புறத்துக்குத் தூக்கிட்டு வந்தார்.

‘ஏப்பா… இந்தப் பூனைக்கு எவனோ தெருவுல போற பய வாயக் கட்டிப்புட்டான்பா. எதுவும் சாப்பிடவும் மாட்டேங்குது… எந்தச் சத்தமும் போட மாட்டேங்குது. கொஞ்சம் என்னன்னு பாரேன். பூனையோட பேசாம என் மக தவிச்சுக்கிடக்கா!’ என்றார் ஐயர்.

என் மண்டைக்குள் தொந்தரவு செய்து கொண்டிருந்த பூனை சத்தத்தை வைத்தும், கொல்லைப்புறத்தில் கிடந்த ஒரு கொத்துப் பூனை முடியை வைத்தும், நான் அந்தப் பூனையின் வாயைக் கட்ட கொல்லைப்புறத்தில் இருந்தே முணுமுணுத்த மந்திரம் பலிச்சிருந்தது. அப்போதுதான் பிறந்த ஒரு பூங்குழந்தை போல கண்ணை மூடிக்கிடந்த பூனையைக் கையில் வாங்கி, பக்கத்தில் கிடந்த ஓலை மிட்டாய்க் கொட்டான் ஒன்றுக்குள் அதன் தலையைச் செருகி, கொட்டானில் உள்ள ஓட்டை வழியாக என் ஆள்காட்டி விரலால் அதன் காதுக்குள் தண்ணீரை ஒரு சொட்டு விட்டு மந்திரத்தை முணுமுணுக்க, பூனை தலையைச் சிலுப்பி ‘மியாவ்…’ என்றதும் ஐயருக்கு அவ்வளவு சந்தோசம்.

‘எம்மா காமாட்சி… உம் மவள ஓடி வரச் சொல்லு. இங்க வந்து பாருங்க… பூனைக்குச் சரியாயிடுச்சு’ என்று ஐயர் சொன்னதும், என் வாழ்வின் முழு அதிர்ஷ்டமும் அடுத்தடுத்து நிகழத் தொடங்கியது.

என் புத்திக்குள்ள இருந்து அதுவரைக்கும் சிரிச்சுட்டே இருந்த அந்தப் பொண்ணு, அந்த வீட்டுக்குள்ள இருந்து எப்படி வந்தா தெரியுமா? ஓடி வந்தாடே! முத்து… நம்ம பழைய கத்தரி மேல சத்தியமாச் சொல்றேன். அது பொண்ணே இல்லடே. என் கையில் இருந்து அந்த மிட்டாய்க் கொட்டானோடு அந்தப் பூனையை வாங்கிட்டு என் முகத்தைப் பார்க்காம முழுசா என் ரெண்டு கண்ணை மட்டும் பார்த்து, அவ கண்ல கண்ணீர் தேங்கக் கைகூப்பி நன்றி சொல்ற மாதிரி, பாதி உதடு பல்லுல ஒட்ட, ஒரு சிரிப்புச் சிரிச்சா பாரு… உன்கிட்ட அதை எப்படிச் சொல்றது? என் உடம்பு முழுக்க அந்த நிமிசமே ஆயிரம் காடை றெக்கைகளை முளைக்க வெச்சுட்டா!

பக்கத்துல போய்ப் பார்த்த பிறகுதான் தெரியுது, அவ ஐயர் வீட்ல வாழ்ற நம்ம காட்டுப்பேச்சிடே. கருவிழி ரெண்டும் அப்படி இருக்கு பாத்துக்கோ. வெறிச்சிப் பார்க்கிறவனை ஓட ஓட விரட்டிக் கொல்ற கொள்ளை அழுகுடே. அப்படியே பூனையை வாங்கிட்டு உள்ளே போய் அந்தக் குகைக்குள்ள இருந்து மறுபடியும் அந்தப் பழைய சிரிப்பைச் சிரிச்சா பாரு… யாரோ தொட்டுச் சுருங்கிப்போன தொட்டாச்சிணுங்கியை கடவுள் வந்து மறுபடியும் தொட்டு விரியவைப்பாராமே! அப்படி அடுத்த நொடியே அவ்வளவு பெருசா விரிஞ்சுபோச்சு என் மனசு.

அப்புறம் விடிஞ்சாலும் அடைஞ்சாலும் ஏதாவது காரணம் சொல்லி, ஐயர் வீட்டுக் கொல்லைப்புறத்துக்குத்தான் போவேன். அந்தக் குகைக்குள்ள இருந்து அதே சிரிப்புச் சத்தம் கேக்கும். நின்னு தலை கிறுகிறுக்கக் கேப்பேன். நான் நிக்கிற இடம் மட்டும் என்னோட சேர்த்து சுத்துற மாதிரி இருக்கும்.

திடீர்னு ஒருநாள், காது ரெண்டும் அடைச்ச மாதிரி அந்தச் சிரிப்புச் சத்தம் நின்னுபோச்சு. பூனை சத்தமும் கேக்கல; அவ சத்தமும் கேக்கல. இப்படி ஒரு மாசமா உலகத்துல எந்தச் சத்தமுமே கேக்காத மாதிரி ஆகிருச்சு. எட்டிப் பார்த்தா, அந்தக் குகைக்குள்ள நரிங்க நடமாட்டம் மட்டும்தான் தெரியுது. என்னோட பூனைங்க நடமாட்டம் சுத்தமா இல்லை.

வீட்டுக்குப் பின்னாடி வேலைக்காரங்க கூட்டிப் பெருக்குன குப்பையில பூனை முடியும் இல்லை… அவ முடியும் இல்லை. தாழம்பு வாசம் இல்லாத காட்டுக்குள்ள நாகப்பாம்பு சிக்கிக்கிட்டு எப்படிக்கிடந்து ஊர்ந்து அலையும்? அப்படிக் கிறுக்குப் பிடிச்சுப்போச்சுடா எனக்கு. என்ன செய்யுறதுனு தெரியாம, ரொம்பத் தயங்கித் தயங்கி ஐயர் வீட்டு வேலைக்காரங்ககிட்ட போய் விசாரிச்சதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது… அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமாகி ஒரு மாசம் ஆகிருச்சினு.

நான் பின்னாடி அவங்க வீட்டுக் கொல்லைப்புறத்துல நின்னு, அவ சத்தம் போட்டுச் சிரிக்க மாட்டாளா, அப்படியே வெளிய பூனைக்குட்டி யோட வர மாட்டாளானு ஏங்கிட்டு இருந்த என்னைக்கோ ஒரு நாள்லதான் அவளுக்கு முன் வாசல்ல கல்யாணம் ஆகிருக்கு. கல்யாணம் ஆகிப் போனவ, சும்மா போகல… அந்தப் பூனையையும் கொண்டுபோய்ட்டா போல.

‘ஐயர் வீட்டுக்கு முன்னாடி அந்தத் தெருவுல நடந்து போய், என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்க முடியாத சாதியில போய்ப் பிறந்துட்டோமே!’னு அன்னைக்குத்தான்டா உடம்பும் உசுரும் நடுங்க, என்னை நானே அடிச்சிக்கிட்டு அப்படி அழுதேன். அன்னைக்கு மட்டுமா… இப்பவும் நடுராத்திரி எங்க பூனை சத்தம் கேட்டாலும், பொண்ணுங்க சிரிப்பு சத்தம் கேட்டாலும் தானா அழுகை வந்துடுது.

அப்புறம் எப்படி அடுத்தவளை கல்யாணம் பண்ணிக் குடும்பம் நடத்த? அதுதான் அஞ்சாறு பூனைக்குட்டிகளை வீட்டுக்குள்ள புடிச்சுப் போட்டு, அதுங்ககூட வாழப் பழகிட்டேன். இதை ஊர் முழுசுக்கும் சொல்லி, ‘பாருடா முடிவெட்ட வந்த நாசுவணன், ஐயர் பொண்ணு மேல ஆசை வைச்சானாம். எவ்வளவு கொழுப்பு…’னு மொத்த ஊரும் பேசணுமா? அதான் யார்கிட்டயும் சொல்லலை. நல்லா இருப்ப… நீயும் யார்கிட்டயும் சொல்லாதடே” – ஒரு மூச்சில் தன் கண்களில் இருந்து நீர் சொட்டுவதற்குள் அத்தனையும் சொல்லி முடித்துவிட்டார் பெரியவர்.

எல்லாவற்றையும் ‘உம்’ கொட்டாமல் கேட்டுக்கொண்டிருந்த முத்து, அவர் மீது துளி இரக்கமும் இல்லாமல், இன்னொரு கேள்வியையும் அவசர அவசரமாகக் கேட்டான்.

”அதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணை நீ போய்ப் பார்க்கவே இல்லையா? உனக்குப் பார்க்கணும்னு தோணலையா?”

”தோணும். தினமும் வயித்துல பசியெடுக்கிறது மாதிரி மனசுல பசியெடுத்துக் கூப்பாடு போடும். பார்த்தே ஆகணும்னு தோணும். எங்க இருக்கா, யார்கூட இருக்கா எல்லாம் தெரியும். எந்திரிச்சா, ஓடிபோய்ப் பார்க்கிற தூரம்தான். ஆனா, அந்தத் தெருவுக்குள்ள நான் போக முடியுமா… விடுவாங்களா என்னை..? அந்த நேரத்துல பூனைக்குட்டியோடு பூனைக்குட்டியா மாறி ‘மியாவ்… மியாவ்..!’னு கத்திக் கதவு இடுக்கிலே என் காலத்தைத்தான் கழிக்க முடிஞ்சது!”

Kattu4

”சரி… அப்போதான், அந்தத் தெருவுக்குள்ள நீ போகக் கூடாது. இப்போதான் யார் வேணும்னாலும் போலாமே. எல்லாத்தையும் அடிச்சு நொறுக்கிட்டாங்களே! வா… இப்போ போய்ப் பார்ப்போம்.”

”இப்போவா… போடா! சின்னப் பையன் சகவாசம்கிறது சரியாத்தான் இருக்கு!”

”ஏன்… அந்த அம்மா வயசாகி செத்துப் போயிருப்பாங்கனு பயப்படுறியா?”

”வாயை மூடுடா… தினமும் ஒவ்வொரு அடுப்புல ஒவ்வொரு சட்டியில கொதிக்கிற நானே உசுரோட இருக்கேன். அவ மாட்டு மடியில காலத்துக்கும் கசியாம உறைஞ்சுபோன ரத்தம்டா… அவளுக்கு எதுவும் ஆகிருக்காது. நிச்சயமா அப்படியே இருப்பா!”

”அப்படினா வா போய்ப் பார்ப்போம்.

நீ பார்க்கிறியோ இல்லையோ… நான் அவங்களைப் பார்த்தே ஆகணும்… வா!”

முத்து, தீர்மானமாக நிறைக்குலத்தானை சைக்கிளில் ஏற்றி மிதிக்கத் தொடங்கிவிட்டான். 35 வருடங்கள் கழித்து நிறைக்குலத்தானுக்கு ரொம்ப நெருக்கமாகக் கேட்ட அந்தச் சிரிப்புச் சத்தம், முத்துவின் புத்திக்குள்ளும் கேட்கத் தொடங்கியிருந்ததோ என்னமோ.

அவன் சைக்கிளை திருக்களூரைப் பார்த்து வேகவேகமாக மிதித்துக்கொண்டு போனான். ஐயர் தெருவுக்குள் சைக்கிள் நுழைந்ததுமே பெரியவருக்கு உடம்பு முழுவதும் அதே ஆயிரம் காடைகளின் றெக்கைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.

‘இப்போது எப்படி இருப்பாள் அந்தக் காட்டுப்பேச்சி? நிச்சயமாக என்னைப் போல அவளுக்கும் முடி நரைத்திருக்கும், கை-கால் எல்லாம் ஆட்டம் கண்டாலும் கண்டிருக்கும், எனக்குக் கடவாய் பற்கள் விழுந்தனபோல, அவளுக்கும் முன் பற்கள் விழுந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. எது எப்படி இருந்தாலும் அந்தக் கண்கள் அவ்வளவாக மாறியிருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

நிச்சயமாக அந்த ஒளி அப்படியேதான் இருக்கும். ஒரு பூனையைப் போல கத்தினால், அது என்னைப் பார்த்து இன்னும் பிரகாசமாக ஒளி காட்டினாலும் காட்டும். வாசலில் உட்காந்திருப்பாளா..? ஐயர் வீட்டு வயசான பெண்கள் எல்லாம் வாசலில்தான் கால் நீட்டி அமர்ந்திருப்பார்கள். இவளும் இருப்பாள்… நிச்சயம் இருப்பாள்’ – நினைக்க நினைக்க நிறைக்குலத்தானின் உடம்பு குறுகுறுத்தது. அந்தச் சைக்கிளில் இருந்து மேலெழும்பி ஒரு காடை பறப்பதுபோல் இருந்தது அவருக்கு. இந்த ஏழு கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து வருவதற்கு, 35 வருடங்கள் ஆகியிருக்கின்றன அவருக்கு.

தெருவுக்குள் நுழைந்துவிட்டார்கள். மூன்று தெருக்களிலும் நின்று நிதானமாக வாசலில் அமர்ந்திருக்கும் மூதாட்டிகளின் முகங்களைக் கூர்ந்து பார்த்தவாறு தேடிவிட்டார்கள். எல்லா தெருக்களிலும் வாசலில் நிறைய மூதாட்டிகள் கால் நீட்டி இருந்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் அந்தப் பெண் இல்லை. நிச்சயமாக எந்தப் பெண்ணிடத்திலும் நிறைக்குலத்தானைச் சிலிர்க்கவைக்கிற அந்த ஒளி இல்லை. இன்னும் ஒரே ஒரு தெருதான் மிச்சம் இருக்கிறது. ‘அந்தத் தெருவுக்குள் அந்தப் பூனைச் சிரிப்பு, பாட்டி’ நிச்சயம் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு, முத்து சைக்கிளை மிதித்தான். பெரியவர் நிறைக்குலத்தான் சைக்கிளில் இருந்து குதித்து இறங்கி, சைக்கிளைத் தடுத்து நிறுத்தினார்.

”ஏன்… என்னாச்சு இந்த ஒரு தெருதான் பாக்கி இருக்கு. வா… பார்த்துரலாம்!”

”இல்ல… வேண்டாம்டே. ஒருவேளை இந்தத் தெருவுல இல்லண்ணா!”

”அதெல்லாம் இருப்பாங்க!”

”ஆமா, இந்தத் தெருவுலதான் அவ இருக்கானு நானும் நம்புறேன். அது உண்மையா இருக்கணும்னா, நாம தெருவுக்குள்ள போய்த் தேடக் கூடாது. ஆமாடே, அவ உயிரோட இல்லைனு தெரிஞ்சுட்டா, அதுக்கு அப்புறம் எப்படி வாழணும்னு நான் இன்னும் யோசிக்கலடே. வேணாம் வா. அவ இங்கதான் இருக்கானு நாம நம்புவோம். வா போயிடலாம் முத்து!”

ஆரஞ்சு மிட்டாய்க்குக் கை நீட்டும் ஒரு குழந்தையைப் போல கெஞ்சிய பெரியவரின் முகத்தைப் பார்த்த முத்து, அதன் பிறகு எதுவும் பேசவில்லை.

அவரை எப்படிக் கூட்டிக்கொண்டு போனானோ, அப்படியே கூட்டிக்கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டான். வந்தவுடன் உடல் முழுவதும் பூனைகளைப் பரப்பி, மனம் முழுவதும் அந்தச் சத்தங்களைப் பரப்பி அன்று கட்டிலில் படுத்தவர்தான்… இன்னும் எழுந்திருக்கவில்லை.

மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்று அவருக்குக் கடைசி நாள் என்று அவருக்கே தெரிந்துவிட்டது. மூச்சுவிட முடியவில்லை. உடல் அசையவில்லை, கண்களுக்கு, காட்சிகள் புலப்படவில்லை. புத்திக்குள் மட்டும் பூனை சத்தமும், அவளின் சத்தமும் கேட்கின்றன. அது, எப்போதும் இல்லாத அளவுக்கு அவரின் கபாலத்தை உடைக்கச் செய்யும் அளவுக்குச் சத்தமாகக் கேட்கிறது. இதுக்குத்தான் நிறைக்குலத்தான் காத்திருந்தார் போல. இப்படித்தான் அவர் சாவு அமைய வேண்டும் என்று விரும்பினார் போல.

திடீரென்று அந்தப் பெண் அந்தப் பூனையோடு இப்போது அவர் மார்பின் மீது சாய்ந்து சிரிக்கிறாள். ஆச்சர்யம்… அவளுக்கு இன்னும் வயதாகவில்லை. முடி நரைக்கவில்லை. பெரியவருக்கு வரும் கண்ணீரைத் துடைக்காமல் சிரித்துக்கொண்டே இருக்கிறாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் பெரியவருடைய மூக்கின் இடது குழலை தன் விரலால் அடைத்தாலும் அடைத்துவிடுவாள். பெரியவரும் அதை எதிர்பார்த்துதான் மூக்கை விடைத்துக்கொண்டு விழி இரண்டிலும் இவ்வளவு நீர் கசிய இப்படிப் படுத்திருக்கிறார் போல.

ஆனால், முத்து வரும் வரை அவர் உயிர் பிரியக் கூடாது. அவன் வந்துதான் அவரின் கண்ணீரைத் துடைக்க முடியும். அவன் அந்தக் கண்களைத் துடைத்து அவர் கைகளை எடுத்து ஒரு பூனைக்குட்டியைக் கொஞ்ச நேரம் வருடச் செய்து, சரியான நேரத்தில் அவர் கண் சிமிட்டும்போது அவரின் கை விரல்களை அவன் இறுக்கப் பிடிக்க, கன்னியில் இருந்து விடுபட்ட காடையைப் போல அவர் பறந்து போக ஆயத்தமாகும்போது, அவசர அவசரமாக அந்தப் பூனைச் சிரிப்புச் சிரிக்கும் காட்டுப் பேச்சியின் பெயரை அவன் காதில் மட்டும் அவர் சொல்லிவிட்டுப் போகக்கூடும்.

ஆனால், முத்துதான் இன்னும் வரவில்லையே..!

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

3 thoughts on “காட்டுப்பேச்சிகள் காடுகளில் வசிப்பதில்லை!

  1. அதென்னவோ எல்லா சாதி ஆண்களுக்கும் பிராமணப் பெண்ணையே காதல் செய்கிறார்கள்.

  2. Superb emotional story. Which reveals untouchability & caste in quality breaks feelings of comman man. Great & sensitive narration.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *