“அத்தே, இந்த மாசத்துலேருந்து எனக்கு இன்கிரிமெண்ட் வரும். பவானிக்காக நகைச்சீட்டில் சேரட்டுமா?” என்ற கங்காவை ஏறிட்டுப் பார்த்த கமலா, “ஆமா கங்கா, ஒன் தங்கச்சிக்குத் தான் யார் இருக்கா, ஒன் அம்மா ஒத்தை ஆளா என்ன செய்வா? நீயும் என் புள்ளையும்தான் பவானிக்குக் கல்யாணம் காட்சி செய்யணும்…தாராளமா சீட்டுல சேரு’’ என்றாள்.
“நீங்க மாமியாரக் கிடைக்கறதுக்கு நா குடுத்து வச்சிருக்கணும், அத்தே. என் கல்யாணத்தின் போதும், நீங்க அது வேணும், இது வேணும்னு
நச்சரிக்கலே. இப்பவும் என் தங்கச்சி கல்யாணத்துக்குக்கு உதவி செய்து பெருந்தனைமையா பேசுறீங்க’’ என்று கங்கா தெரிவித்தாள்.
பவானிக்கு கல்யாண ஏற்பாடு தொடங்கியது. மாப்பிள்ளை வீட்டார், ”பொண்ணுக்குப் பதினந்து பவுன் போடுங்க’’ என்று கறாராய்ச்
சொன்னார்கள்.
கங்கா, ‘’மாமி, இப்போதைக்குப் பத்து பவுன் நகை போடுறோம்…தீபாவளியின் போது மீதியைச் செய்றோம்’’ என்றதற்கு அவர்களும் சம்மதிக்க திருமணம் சிறப்பாய் நடந்தது.
கணவன் வீட்டுக்குக் கிளம்பும்போது, பவானி, அக்காவிடம், ‘’அக்கா, தீபாவளி வரைக்கும் காத்திருக்காதே, சீக்கிரமே நகைக்கு ஏற்பாடு
பண்ணிடு’’ என்ற போது கங்கா முகத்தில் சலனமேயில்லை.
– மு.சிவகாமசுந்தரி (பிப்ரவரி 2013)