கல்யாணம்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 9,012 
 

கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டியாடா என்று அவனை கேட்போம். இரவு 12 மணிக்கு முன்னதாக அவன் வீட்டுக்கு சென்றதாக சரித்திரமேயில்லை. தினமும் பீர், பீச்சு, பிகர், பார்க், சினிமா என்று அலுவலக நேரம் தவிர்த்தும் எந்நேரமும் பிஸியாகவே இருப்பான்.

பெயருக்கு ஏற்றாற்போலவே கிருஷ்ணலீலா தான் தினமும். முருங்கை மரத்துக்கு சேலை சுற்றினால் கூட சைட் அடிக்கும் தெய்வீகக் குணம் அவனுக்கு வாய்த்திருந்தது. சித்தாளுவிலிருந்து சிலுக்கு வரை அவன் ஜொள்ளு விடாத பிகர்களே இல்லை. சிலநேரங்களில் பொறாமையாக இருக்கும். இவனுக்கு மட்டும் எப்படி பிகரெல்லாம் மாட்டுது என்று. ஒரு பிகரைப் பார்த்துவிட்டால் ஏதேதோ மேஜிக்கெல்லாம் செய்து எப்படியாவது அவளிடம் பேசிவிடுவான். அவளை ஒருமுறையாவது சிரிக்க வைத்துவிடுவான்.

“கிளியோபாட்ராவா இருந்தாலும் என்னைப் பார்த்து குறைந்தபட்சம் ஒரு ஸ்மைலாவது அடிப்பாடா” என்று பீற்றீக் கொள்வான். இத்தனைக்கும் பையனின் பர்சனாலிட்டி ரொம்ப சுமார். மாநிறமாக இருப்பான். மூக்கு கொஞ்சம் நீளம். சுமாரான உயரம். வெடவெட உடலுக்கு சற்றும் பொருந்தாமல் லூசாக டிரஸ் செய்வான். ஆளும் கொஞ்சம் லூசுதான் என்பது வேறு விஷயம்.

எப்போதும் அவன் காதல் லீலைகளையே எங்களிடம் பேசிக்கொண்டிருப்பான். ஆறாம் கிளாஸ் படிக்கும்போதே கிருஷ்ணன் காதலித்தானாம். பத்தாம் கிளாஸ் படித்தபோது அவன் கிளாஸ் (கல்யாணமாகாத) டீச்சரை சைக்கிளில் கூப்பிட்டுக் கொண்டு சென்றதிலிருந்து, கிண்டி பார்க்கில் அவனை விட மூத்த பிகரை ப்ரபோஸ் செய்தது வரை கதை கதையாக சொல்லுவான். அவன் சொல்லும் கதைகள் உண்மைதான் என்று அவனுக்கு வரும் டெலிபோன் பேச்சுகள் வாயிலாக அறிந்திருந்தோம்.

அவனுக்கு வரும் டெலிபோன் அழைப்புகள் எல்லாமே ஒரே ரகம் தான். “கிருஷ்ணன் இருக்காரா?” என்று தேனை குழைத்து கேட்பாள்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குரல். ஒருநாள் கல்லூரி மாணவி பேசினாள் என்றால், மறுநாள் எக்ஸ்போர்ட் பிகர் (எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரியும் பிகர்) பேசுவாள். வெரைட்டி வெரைட்டியாக கேர்ள் பிரண்ட்ஸ் வைத்திருந்தான் கிருஷ்ணன். அய்யோ சொக்கா.. சொக்கா… எங்களுக்கெல்லாம் ஒண்ணுகூட அப்போ அமையலே.

ஒருவிஷயத்தில் கிருஷ்ணன் உத்தமன். ஏகப்பட்ட பெண்களுடன் நட்பு, காதல் என்றிருந்தாலும் எல்லாமே வெஜிட்டேரியன் அளவிலேயே இருந்தது. அதிகபட்சமாக சில பெண்களிடம் லிப் டூ லிப் கிஸ் மட்டும் வாங்கியிருக்கிறானாம். அவனே சொன்னான். நம்பித்தான் தொலைக்கவேண்டும்.

மச்சானுக்கு டவுசர் கிழிந்தது கல்பனா விவகாரத்தில் மட்டும் தான். எல்டாம்ஸ் சாலையில் எங்கள் அலுவலகம் அப்போது. ஒருநாள் யதேச்சையாக மாடியில் நின்று ஸ்டைலாக தம்மடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் தடதடவென்று இறங்கி ஓடினான். மீண்டும் தபதபவென்று மேலே ஏறிவந்தான். லைட்டாக பவுடர் போட்டு தலைசீவி மீண்டும் ஓடினான். அந்த வாரம் முழுக்க “ரன் லோலா ரன்” மாதிரி கிருஷ்ணன் ஓடிக்கொண்டே இருந்தான். அப்புறம் சில மாதங்கள் கழித்து அவன் ஓட்டம் நின்றது.

பிறகு ஒருநாள் வேலுமிலிட்டரி ஒயின்ஷாப்பில் தான் கண்களில் நீர்பனிக்க அந்த ரகசியத்தை உடைத்தான். கல்பனா என்ற பிகரை கண்டவுடனேயே காதல்வசப்பட்டு எவ்வளவோ திருவிளையாடல்களை நிகழ்த்தியும் அவள் புறக்கணித்து விட்டாளாம். முதன்முறையாக ஒரு பெண்ணால் புறக்கணிக்கப்பட்ட வேதனை அவன் வார்த்தைகளில் தெரிந்தது.

காலச்சக்கரம் உருண்டு தொலைத்தது. அந்த அலுவலகம் எதிர்பாராத வகையில் இழுத்து மூடப்பட்டதால் திசைக்கு ஒன்றாக பறந்தோம். கிருஷ்ணனையும், அவனது பிகர்களையும், பீர் அடித்துவிட்டு அவன் செய்த அலம்பல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து ஒரு கட்டத்தில் முழுக்க கிருஷ்ணனையே மறந்துவிட்டேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் நான் வேலைபார்க்கும் துணிக்கடைக்கு கிருஷ்ணன் வந்தான். புதியதாக பைக் வாங்கியிருக்கிறான். முன்பெல்லாம் டிவிஎஸ் சேம்ப் இல்லையென்றால் ஒரு ஓட்டை சில்வர் ப்ளஸ்ஸில் வருவான். பீர் புண்ணியத்தால் கொஞ்சமாக சதை போட்டிருந்தது. ஒட்டிப்போயிருந்த அவன் கன்னம் கொஞ்சம் பூசினாற்போல தெரிந்தது.

“எனக்கு கல்யாணம்டா மச்சான்!” மகிழ்ச்சியோடு சொன்னான்.

“ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணன். லவ் மேராஜா? ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ்லே சைன் பண்ணனுமா?”

“இல்லேடா. அரேஞ்ச்டு மேரேஜ் தான்”

ஆச்சரியமாக இருந்தது. கடைசியாக அவன் லவ்விக்கொண்டிருந்த விஜியையும் கழட்டி விட்டுவிட்டான் போலிருக்கிறது.

“விஜிக்கு என்னடா ஆச்சி?”

“அவளுக்கு கல்யாணம் ஆயி ஒரு குழந்தை இருக்குடா!”

பரஸ்பர விசாரிப்புகள், புதிய வேலை, பழைய நினைவுகள் பற்றிய பேச்சுகள் முடிந்ததும் பத்திரிகையை கையில் திணித்து விடைபெற்றான். அவன் கல்யாணத்துக்கு போகமுடியவில்லை. தொலைபேசியில் மட்டும் வாழ்த்து தெரிவித்தேன்.

சிலமாதங்களுக்கு முன்பு சைதாப்பேட்டை சிக்னலில் கிருஷ்ணனை பார்த்தேன். ரொம்ப அடக்க ஒடுக்கமாக பைக்கில் உட்கார்ந்திருந்தான். பில்லியனில் கொஞ்சம் ஒல்லியாக இருந்தது அவன் மனைவியாக இருக்கும். முகமெங்கும் மஞ்சள் பூசியிருந்தாள். கிருஷ்ணனின் மனைவியை பார்த்ததுமே புரிந்தது. வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்கு போகக்கூடிய பெண், ராமநாராயணன் படங்களில் வருவது போல அம்மன் பக்தையென்று.

கிருஷ்ணனுக்கு கை காட்டினேன். பார்த்து வெறுமனே ஒரு வெற்றுச் சிரிப்பு சிரித்து “நல்லாயிருக்கியாடா?” என்று கேட்டான். அதற்குள் சிக்னல் விழுந்துவிட அவனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிருஷ்ணனின் மனைவி என் குறித்து ஏதோ கேட்டிருக்க வேண்டும். என்னை லேசாக திரும்பிப் பார்த்து சினேகமாக சிரித்துவிட்டு ஏதோ சொல்லிக்கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டு சென்றான்.

சென்றவாரம் கிருஷ்ணனை தி.நகரில் பார்த்தேன்.

“நல்லாயிருக்கியாடா. அவசரமா கெளம்பணும்” என்றான்.

“ஏண்டா பேசக்கூட நேரமில்லையா உனக்கு”

“நீ வேற டைம் இப்பவே 9 ஆவுது. 10 மணிக்கு மேல போனா ராட்சஸி வீட்டை ரெண்டாக்கிடுவா!”

“இரு மாப்பிள்ளை. ஒரு பீராவது அடிச்சிட்டு போலாம்”

“பீரா? மச்சான் சொன்னா நம்பமாட்டே இப்பவெல்லாம் தம்மு கூட மாசத்துக்கு ஒண்ணு தான் அடிக்கிறேன்”

“நெஜமாவா? அப்புறம் விஜி, அனுவெல்லாம் எப்படிடா இருக்காங்க?”

“அவங்களையெல்லாம் நினைக்கிறதே இல்லடா. எந்தப் பொண்ணையும் இப்போவெல்லாம் தலைநிமிர்ந்து கூட பாக்குறதில்லே”

“அடப்பாவி.. இவ்வளவு சீக்கிரம் நல்லவனாயிட்டியே? எப்படிடா?”

“ம்ம்ம்… ஒரு கல்யாணத்தை பண்ணிப்பாரு புரியும்” அவசரமாக கையில் ஏதோ பையை எடுத்துக் கொண்டு ஓடினான். பொண்டாட்டிக்கு புடவை வாங்கியிருப்பான் போலிருக்கிறது.

“இவனுக்கு தேவைதான்!” மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

– செப்டம்பர் 2009

Print Friendly, PDF & Email

1 thought on “கல்யாணம்!

  1. நல்ல கால்கட்டு, நல்ல கதை! இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்கள்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *