கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 12,195 
 

பையன் கடையைத் திறந்து வைத்திருந்தான். வாசலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சேரை எடுத்துப்போட்டு, அன்றைய தினசரியை விரித்துப் படிக்கத் தொடங்கினார் கடைக்காரர். செய்திகள், மனதில் பதியவில்லை; வட்டெழுத்துக்கள் போலவும் பிராமி எழுத்துக்கள் போலவும் கண்களில் பூச்சி காட்டின.

பையன் சாமி படத்துக்குப் பத்தி பொருத்துவதற்காக வத்திப்பெட்டியுடன் தயாரானான். கடைக்காரர் எப்போது கடைக்கு வந்தாலும் பத்தி பொருத்தி, சாமி படத்துக்குக் காட்டிவிட்டுத்தான் உட்காருவார். இன்று ஏனோ மனநிலை கெட்டிருந்தது. நான்கு நாட்களில் தீபாவளி. கடைக்கு வரும் சமையல்காரர் களுக்கு போனஸ் தந்தாக வேண்டும். ஆளுக்குத் தக்கபடி தரவேண்டும். அதற் காக ஓர் உத்தியை, ஒவ்வொரு வருஷ மும் கையாண்டு வந்தார். அவர்கள் கடைக்கு வந்து கேட்ப தற்குள், போனஸ் பணத்தை வீட்டுப் பெண்களிடம் சேர்ப்பித்துவிடுவார். அது நல்ல பலன் தந்தது. யாராவது ஒன்றிரண்டு பேர் மட்டுமே கடைக்கு வந்து வாங்கிக்கொண்டு போவார்கள்.

கடைஅன்று இரண்டு பேருக்கு போன் செய்து வரச் சொல்லியிருந்தார். பேப்பரைப் பார்த்துக்கொண்டிருந்தவருக்கு போன் வந்தது. தாளை மடித்து ஓரமாக வைத்துவிட்டு போனை கையில் எடுத்தார். ’50 பேருக்கு அசைவம் சமைக்கணுமாம். நல்ல ஆளா பார்த்து அனுப்புச்சு வையி… சேர் டேபிளும் வேணும். நம்ம கடையிலையே எடுத்துக்கிடலாம்’ – பேசியவர் கொக்கி போட்டார். ‘குடிக்காத ஆளா இருக்கணும். சபரி மஹால்ல ஒரு பொம்பள மாஸ்டரு வேலை பாத்துச்சே..?’

‘முனியம்மாவா..? வரச் சொல்றேன்’. தொடர்ந்து முனியம்மாவுக்கு போன் செய்தார். 10 நிமிடங்களில் முனியம்மா கடைக்கு வந்தார்.

”பெரிய வேலை ஒண்ணு வந்துருக்குமா…” – கடைக்காரர் சொன்னார். இடையில் கடைப் பையன் தந்த கவரைப் பிரித்து எண்ணிக்கூடப் பார்க்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியமானது, வேலைக்கான தகவல். எனவே, கவரை வலது கையில் வாங்கியவுடன் அப்படியே கைகளுக்குள் மடக்கி, சுபாவமாக ஜாக்கெட்டுக்குள் செருகிக்கொண்டாள்.

”பேசிவிடுங்கண்ணே பாத்துரலாம்” என்றாள்.

சமையல் வேலை என்பது இப்போது எல்லாம் யாராவது ஒரு நபரை முன்வைத்தே வருகிறது. காரணம், சமையல்காரர்கள்தான்; அவர்களது பழக்கவழக்கங்கள்தான். வேலைக்குப் பேசி அட்வான்ஸ் வாங்கும்போது ஆரம்பித்து வேலைத்தளத்தில் நுழையும்போதும், வேலையின் போதும், வேலை முடித்து சம்பளத்தை வாங்கிய பிறகும் ஒரே ஊத்துதான். அன்றோடு சாராயக் கடையை மூடிவிடுவதுபோல நினைத்து, வீடு எது… ரோடு எதுவெனத் தெரியாமல் குடித்துக் கிடக்கும் வேலைக்காரர்களை எப்படி நம்புவார்கள்?

‘உன்னை நம்பித்தேன் பார்ட்டிகிட்ட சொல்லிருக்கேன்’- கல்லாவில் உட்கார்ந்திருந்தவர் அப்படியே நெட்டி முறித்துச் சோம்பல் கழித்தார். அவளது எண்ணம்போலவே பேசினார். உயர்த்திய கைகளுக்கு மேல் காற்றாடி தட்டியது.

கடை முழுக்கப் பெரியப் பெரிய அலுமினிய தேக்சாக்கள் ஒன்றுக்குள் ஒன்றாக செட் போடப்பட்டு, ஒன்றின் மேல் ஒன்றாக ஆள் உயரத்துக்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. தவிர, பிளாஸ்டிக் சேர்கள் ஒருபுறம், டைனிங் டேபிள்கள், ஏணி வைத்து ஏறும் உயரத்துக்கு மர செல்ஃப்கள் அமைக்கப்பட்டு அதனுள் எவர்சில்வர் வாளிகள், குண்டா, பேஷன்கள், கேத்தல்… என அத்தனை பொருட்களும் ஏற்றப்பட்டிருந்தன.

மாராப்புத் துணியைச் சரிசெய்துவிட்டு, முந்தானை நுனியை இழுத்து இடுப்போடு நிறுத்திப் பிடித்தபடி கடைக்காரரின் மேசை விளிம்பை ஒட்டிவந்து நின்றுகொண்டாள். ‘ணேய்… எந்தக் கவலையும் இல்லாம சொல்லிவிடுண்ணே. இதுவரைக்கும் நீங்க பேசிவிட்ட எந்த வேலையிலயாச்சும் கொற கண்டுருக்கீகளா? வேலண்டு பேசியாச்சுனா, எனக்குக் கண்ணுறக்கம் வராதுணே.’

கடையில் ஏழெட்டு சமையல் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். முனியம்மாவின் புருஷனும் ஒரு மாஸ்டர்தான். அவனுக்கு கிட்டத்தட்ட 20 வருடங்கள் சர்வீஸ். முனியம்மாவைக் கல்யாணம் கட்டும்போதே அவன் மாஸ்டர்; நல்ல வேலைக்காரனும்கூட. ஆனால், எத்தனை சம்பாதித்தாலும் பிராந்தி பாட்டில்களாகத்தான் கொண்டுவந்து அடுக்குவான். 10, 15 நாட்களுக்கு ஒருதரம் பெரிய கட்டைப்பை நிரம்பக் காலி பாட்டில்கள் சேர்ந்துவிடும். ஒரு மாசமானால் உரச் சாக்கில் அடுக்கி, ஆட்டோ பிடித்துதான் பழைய இரும்புக் கடைக்குப் போகவேண்டிவரும்.

ஒரு கட்டத்தில், இனியும் சுதாரிக்காவிட்டால் தானும் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்கவேண்டிவரும் என்பதைப் புரிந்துகொண்டு, புருஷனோடு தானும் வேலைக்குப் போகத் தொடங்கினாள் முனியம்மா. ஒரு வருஷத்தில் வேலையின் நுணுக்கங்கள் முனியம்மாவின் கைக்கு வந்தன. தனியாகக் ‘குதுப்பி’ பிடித்துக் கிண்டத் தகுதியானாள். வேலை தருபவர்களுக்குக் குடிகாரனோடு பேரம் நடத்துவதைவிட முனியம்மாவோடு பேசுவது எளிதாக இருந்தது. முனியம்மாவும் ஆள் தெரிந்து பேசப் பழகிக் கொண்டாள்.

‘அதனாலதேன் உன் வீட்டுக்காரன்கிட்ட சொல்லாம… உன்கிட்ட சொல்றேன்.”

‘அதனால ஒண்ணும் பிரச்னை இல்லண்ணே.யார் பேசினாலும் ரெண்டு பேருந்தான வேலைக்குப் போவோம்.’

‘பார்ரா… புருஷனை விட்டுக்குடுக்க மாட்டேங்குற!’

அந்த நேரம் கைலியை வரிந்து கட்டியபடி கடைக்கு சாரதி மாஸ்டர் வந்தார்.

‘என்னம்மா முனி… நீயும் உம் புருஷனுமாத்தேன், ஊர்ல இருக்க வேலையப் பூரா பங்கு போட்டுக்கப் பாக்குறீக போல’ – எகத்தாளமாகப் பேசியபடி ஒரு சேரை எடுத்துப்போட்டு உட்கார்ந்தார்.

‘ஆமா… ஊர்ல பாதிய வாங்கிப் போட்ருக்கோம். நீ வந்து ஒரு பங்கு வாங்கிக்க.’

‘எங்குட்டோ நல்லாருந்தா சரிதாம்மா. ஒரு சமையல்காரன் நல்லாப் பொழக்கிறான்னா… நமக்குப் பெருமைதானே. என்னாண்ணே நான் சொல்றது?’

‘யே… புருஷனும் பொண்டாட்டி யும் சேந்து பாடுபடுறாக… சம்பாதிக்கிறாக. அது புடிக்கலையாப்பா உனக்கு?’

‘ம்… நல்லா கேளுங்கண்ணே. ஊருக்குள்ள இதே மாதிரிதான் கரிப்பாக் கரிச்சுக் கொட்றாய்ங்க.’

‘நா எதுக்குக் கரிச்சுக் கொட்றேன். நீ மட்டும் அடுத்தவக வாய்ல விழாம, அடுத்தவக வேலையைப் புடுங்காம இருந்தாச் சரி’ – வில்லங்கமான வார்த் தையைவிட்டார் சாரதி. அவ்வளவு தான்… அதுவரை அமைதியாக இருந்த முனியம்மா, தீயை மிதித்த குரங்குபோல விர்ரென எழுந்தாள்.

‘ஆர் வேலையப்பா நாங்க புடுங்குனோம்? எங்கே ஒண்ணு சொல்லு. உனக்குத் தாலி கட்டி உள்ளங்கையில சோறாக்கிப் போடுறேன்.’

‘என்னா… அடிச்சுப்போடுற மாதிரி வர? நீ இல்லைனு சொல்லு..?’ – கேட்டுவிட்டு விரல்களை விரித்து வைத்துக்கொண்டு பட்டியலிடுவதுபோல ஒவ்வொன்றாகச் சொன்னான். கடைக்காரருக்கு ரொம்பக் கஷ்டமாகப்போனது. வாடகைப் பாத்திரக் கடையில் இது ஒரு பெரும் துன்பம். மற்ற வியாபாரக் கடைகளைப் போல, சரக்கைக் கொடுத்தோமா விற்று காசாக்கினோமா என்ற நிம்மதி இருக்காது. ஒருசில நபர்களை நம்பிய பிழைப்பு.

அதனால் அவர்களை எவ்வளவு தாங்கவேண்டுமோ அவ்வளவையும் செய்தாக வேண்டும். எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரிடமும் அக்கறை உள்ளவர் மாதிரி பேச வேண்டும். ஒருவரை வைத்து, ஒருவரைத் தூக்கிப் பேசவோ, தாக்கிப் பேசவோ செய்வது என்பது, தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதுபோல.

‘என்னப்பா காலையில வந்து இப்பிடிப் போட்டு வாங்கிக்கிட்டிருக்க? சித்த பேச்சைக் கொற சாரதி!’

‘உன்னைய வேலைக்குக் கூப்பிட்ட எடத்துல நான் போய் நின்னு வேலையப் பாத்தேன்னா, செருப்பைக் கழட்டி அடி. அதை விட்டுட்டு மானாங்கன்னியாப் பேசுனா, நல்லா இருக்காது ஆமா.’

‘முனிம்மா… நா ஒராள் பேசறேன்ல. மெடிக்கல்காரர் வீட்ல வருஷம் பூரா வேலை பாக்குறது யாரு? நீயா… இல்ல உம் புருசன் பாத்தானா? அவுக வீட்ல நிச்சயதார்தத்தில் இருந்து, காதுகுத்து, சடங்கு அத்தனைக்கும் நான்தேன் போவேன். இன்னிக்கி நீ போய்ப் பேசிருக்க.’

‘அத அவககிட்ட போய் கேளுப்பா, ‘என்னைய ஏன் கூப்புடலை?’னு… அதவிட்டு என்கிட்ட வந்து ஒரண்டை இழுக்குற… இது சரியில்ல சாரதி!’

‘அப்புறம்…’ என்று அடுத்து ஒன்றைச் சொல்ல வந்தவரைக் கைப்பிடித்து நிறுத்திய கடைக்காரர். ‘இப்ப என்னா… காலையில சண்டை போடணும்னே கடைக்கு வந்தியா?’ என்று மறித்தார்.

‘நா எதுக்குண்ணே சண்டை போடுறேன்? உங்க கடைப் பையன்தான் கூப்பிட்டான்; வந்தேன். நமக்கு என்னண்ணே, வேலை

செஞ்சாக் காசு… இல்லாட்டி நிம்மதியா வீட்ல கஞ்சியைக் குடிச்சுட்டு உங்க கடையில உக்காந்து பொழுதைப் போக்கிட்டுப் போகப்போறேன்.’

கடைப் பையன் வந்து சாரதிக்கு ஒரு கவரைக் கொடுத்தான்.

‘போனசா…’ எதிர்பார்த்தவன்போல இரு கைகளையும் ஆவலுடன் நீட்டி வாங்கினான். உள்ளே கைவிட்டு எவ்வளவு என எண்ணிப் பார்க்க மனசு துடித்தாலும், ஏதோ ஒரு கௌரவம் தடுத்தது. அமுக்கிப் பார்த்துக்கொண்டான்; அனுமானிக்க முடியவில்லை.

‘சரி கௌம்பு…’ – கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக சாரதியை எழுப்பினார் கடைக்காரர்.

‘இப்பக்கூட கடைக்காரர் கூப்பிடப் போய்தேன் வந்தேன்… கேளு. இந்தா, ஒரு வேலை சொல்றாரு… செய்யப்போறோம். அதை விட்டுட்டு எங்கடா புது வீடு கட்றாங்க… எப்படா கல்யாணப் பந்தல் போட்றாங்கனு, ஊர் எல்லாம் உளவு பாத்துட்டு வேலை கேட்டுத் திரியல!” – உணர்ச்சிப்பெருக்கில் முனியம்மா, கடைக்காரரை மாட்டிவிட்டாள். கடைக்காரருக்கு, முகம் பேய் அறைந்ததுபோல மாறிவிட்டது.

சாரதி எரித்துவிடுபவன்போல அவரைப் பார்த்தான். ‘தெரியும்ணே… நீங்கதானா அது? இப்பிடிச் செய்யாதீங்கண்ணே. ஒரு கண்ணுல வெண்ணெய் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பும் தடவாதீங்கண்ணே. கடைக்கு வர்ற எல்லாரையும் ஒண்ணுபோல பாருங்க. கடைக்கு வர்ற கஸ்டமரைப் பூரா மாத்திவிட்றாதீங்க.’

அதன் பிறகுதான் முனியம்மா, ‘சே… அவசரப்பட்டுட்டோமே!’ எனச் சட்டென இறுகிக்கொண்டாள்.

‘இங்க பாரு சாரதி, நா என்னத்துக்கு ஒருத்தர் வேலையை இன்னொருத்தருக்கு மாத்திவிடப் போறேன்? எல்லாருந்தாப்பா வேணும்.’

‘இல்லண்ணே… உங்களைப் பத்தி நிறையச் சொன்னாங்க. நா நம்பல. ஆனா, இப்படி ஒரு கடைக்காரரு மோசடி செய்யக் கூடாது’- கவரை அண்ட்ராயருக்குள் செருகிக்கொண்டான்.

‘நா எதுக்கு மோசடி செய்யப்போறேன்? வீணா வம்பை வளக்காத.’

‘நானா வம்பு கட்றேன்… இந்தா, கூப்பிட்டுவிட்டுருக்கீங்கள்ல? அந்தப் புள்ளையே சொல்லுதே.’

‘யே… பார்ட்டிதான்யா முனியம்மாவைப் பேசிவிடுங்கனு கேட்டாங்க, அதை வெச்சுத்தேன் கூப்பிட்டேன். யாரைக் கூப்பிடுறாங்களோ அவகளைத்தானப்பா பேசிவிட முடியும்.’

‘இல்லண்ணே… கொஞ்ச நாளாவே நானும் பாத்துட்டேன். முந்தி மாதிரி இல்ல நீங்க. ஆனா, அடுத்தவன் வயித்துல அடிக்காதீங்க. இனி அவங்கள வெச்சே கடையை நடத்துங்க. தீவாளிக்குப் பெறகு நா உங்க கடைக்கு வர மாட்டேன்.’

இதுதான் அவர்களிடம் உள்ள பிரச்னை. சட்டென அத்தனை நல்லதுகளையும் விநாடியில் உதறிவிடுவார்கள். உதறுவதற்குச் சந்தர்ப்பம் எதுவெனத் தேடிக்கொண்டிருப்பது போலவும், அவர்களது நடத்தை, மனம் பதறச்செய்யும்.

‘சாரதி… லூஸு மாதிரி பேசக் கூடாது!’ – இந்த நேரம் எத்தனை மோசமாகத் திட்டினாலும் கவலைப்பட மாட்டார்கள். ‘சாரதியைக் கூப்பிட்டுப் பேசிவிடுங்கனு சொல்ற எடத்துல வேற யாரவாச்சும் கோத்துவிட முடியுமா?, இல்லை அப்பிடி என்னைக்காச்சும் நான் சொல்லிருக்கேனா?’

‘ணே… நீங்க கடைவெச்ச நாள்லேர்ந்து…’ என ஆரம்பிக்கும்போதே சாரதிக்குக் கண்களில் நீர் பொங்கியது. ”எத்தனையோ கடையில அட்வான்ஸா 1,000 2,000 ரூவா தர்றதா ஆசைகாட்டிக் கூப்பிட்டாங்க. உங்களுக்கும் தெரியும். ஆனா, சொந்த அண்ணன் மாதிரிதானே நா உன்கிட்ட நடந்துக்கிட்டேன். இப்படி பொம்பளைப் பக்கம் சாஞ்சுட்டீங்களே?’

கடைக்காரர்கள் எல்லோரும் சுயநலக்காரர்கள் என்ற எண்ணம் சாரதிக்கு அந்த நேரத்தில் உருவா கியது. வேலையாள்தான் பற்றோடும் பாசத்தோடும் இருக்கிறார்கள். இவர்கள் வேஷக்காரர்கள். கடைக்காரரைப் பார்க்கவே வெறுப் பாக இருந்தது. முகத்தைச் சுளித்துப் பேசினான். ‘கடைசீல ஒரு பொம்பளகிட்ட என்னைத் தோக்கடிச்சிட்டீகளே…’ – மறுபடி மறுபடி சொன்னான்.

‘இந்தா பாரு சாரதி… எதையும் உன்னளவுல பேசிக்க. சும்மா இருக்க மாட்டாம பொம்பள கிம்பளனு பேச்சு வந்துச்சு, கீசரி மேசரி ஆகிப்போகும்’ என்று தனது ஆட்டத்தைத் தொடங்கினாள் முனியம்மா. இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவன்போல ஒரு தயாரிப்பு இருந்தது அவனிடம். கடைக்காரர் பதறினார். ‘என்னா முனியம்மா… நீயும் கூறுகெட்டத்தனமாப் பேசுற? நீயும் கௌம்பு. போ… போ.’

‘இல்லண்ணே… இன்னிக்கு இதுக்கு ஒரு புள்ளி வைக்கணும்ணே. ஊர்ல எல்லாப் பயலும் ஒரு மாதிரியாத்தான் ஊதிக்கிட்டுத் திரியுறாய்ங்க. பொம்பளைனா அம்புட்டு எளக்காரமா? வம்பாடுபட்டு, தீயில வெந்துதான்யா நாங்களும் காசை வாங்குறோம். எந்த ஒரு மகராசனும் சும்மா உக்காரவெச்சுக் குடுத்திர மாட்டாங்க. வேணும்னா நீயும் பேசி வேலையைப் பாரு!’

‘என்னம்மா… வரிஞ்சுகட்டிக்கிட்டு வர்ற.

கடை2நீ என்ன அம்புட்டுப் பெரிய ரவுடியா?’ உண்மையிலேயே முனியம்மா அடிக்கக்கூடப் பயப்படாத பொம்பளைதான் என்பது சாரதிக்குத் தெரியும். அதனாலேயே தள்ளி நின்றுதான் பேசினான். முனியம்மாவின் புருஷன் கைகால் வீங்கிவரும்போது எல்லாம், அவளது பலம் என்ன என்பதை எல்லோரும் கண்டிருக்கிறார்கள்.

‘சாரதீ…’ – கடைக்காரர் சற்று உரத்துக் குரல் எழுப்ப வேண்டி வந்தது. தனது கடையில் அடிதடி, தள்ளுமுள்ளு நடந்தால், ரொம்பவும் அசிங்கப்பட வேண்டும். சாரதியின் புஜத்தைப் பிடித்து இழுத்தார். ‘தயவுசெஞ்சு போயிட்டு அப்பறமா வா…’

‘கைய விடுங்கண்ணே…’ – விசும்பினான். ‘நான் போகத்தேன் போறேன். இம்புட்டு வெசமான ஆளா இருக்கீங்க. இனிமே இந்தப் பக்கம் எட்டிப் பாக்க மாட்டேன். பாக்கி காசு இருந்தா கணக்குச் சொல்லுங்க. கடைப் பையன்கிட்ட குடுத்துவிடுறேன்!” – போனஸ் கவரை எடுத்துச் சட்டை சேப்பில் செருகியபடி நடந்தான்.

”கைல வெச்சிருக்க காசைக் குடுத்து கணக்கை வெட்டிட்டுப் போகவேண்டியதானே… இவருக்குக் கடைப்பையன்கிட்ட சொல்லி விடணுமாக்கும். பெரிய ஜில்லா தாசில்தாரு…’ என்று சத்தமாகப் பேசிய முனியம்மா, ‘விடுங்கண்ணே எங்க போயிருவாக? அலைஞ்சு, தணிஞ்சு, தானா அடுப்படிக்கித்தேன் வரும் பாருங்க…’

‘ஸ்சோ…’-தலையைப் பிடித்துக்கொண்டு கல்லாவில் உட்கார்ந்தார் கடைக்காரர்.

‘இன்னும் யாருக்குப்பா போனஸ் தரவேண்டியிருக்கு? போனைப் போட்டு வரச் சொல்லு…’ என்றவர், ‘வேணாம்… அவுகவக வீடு தெரியுமா? தெரிஞ்சா நேர்ல போய் குடுத்துட்டு வந்துரு… ச்ச…’ என்று நொந்துகொண்டார்.

‘யேண்ணே… வலிய கொண்டுக்குப் போயி குடுக்குறீக? வந்து வாங்கிட்டுப் போகட்டும்ணே.’

‘ஆமாண்ணே. நேர்ல போனா இம்புட்டுத்தானானு எங்கூட சண்டைக்கு வருவாங்க’ – கடைப் பையன் மருகினான்.

‘அதான…’

‘அய்யா…’ – கடை வாசலில் காக்கி டவுசர் சட்டையும், தலையில் உருமாத் துண்டுமாக துப்புரவு ஆட்கள் நோட்டோடு நின்றிருந்தார்கள்.

‘போனஸு…’

‘சாக்கடை அள்றவகளுக்குத்தான? நேத்தே வாங்கிட்டுப் போய்ட்டாகளே!’ – கடைப் பையன் தனது கைச் சிட்டையை எடுத்துச் சரிபார்த்தான்.

‘அது சாக்கடை அள்றவுக. நாங்க வண்டி தள்ளிட்டுப் போற செக்சன். நம்ம கடை முன்னால ஒரு குப்பை நிக்கவிட மாட்டம்ங்க.’

‘இனி தூக்கித் தட்டுறதுக்கு ஏதும் ஆள் இருக்காப்பா…’ முனியம்மா கேட்டாள்.

அதற்குள் கடைக்காரர் அவர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பினார்.

‘நோட்ல எழுதீருங்கய்யா…’ நோட்டை நீட்டினர்.

‘வேணா வேணா… பரவால்ல.’

‘இல்லங்கய்யா… எங்களுக்குக் கணக்கு வேணும்ல.’

‘நீங்களா எழுதிக்கங்கப்பா. எழுதத் தெரியாதா?’ – முனியம்மா சவுண்டாகப் பேச, அவர்களுள் ஓர் ஆள் நோட்டை விரித்து எழுதிக்கொண்டார்.

‘வர்றோங்கையா…’ வணக்கம் சொல்லி நகர்ந்தனர்.

தீபாவளி வந்துவிட்டால், எதையும் யோசிக்காமல் ஒரு தொகையை ஒதுக்கி வைத்துவிட வேண்டும். அது பெட்டிக்கடையாக இருந்தாலும் சரி, பலசரக்குக் கடையாக இருந்தாலும் சரி. ரோட்டு மேலே கடை வைத்துச் செய்கிற தொழிலுக்கு ஏற்றாற்போல் ஆட்களைச் சந்திக்க முடியும். இந்த நேரத்தில்தான் நாம் யார் யாரை நம்பி இருக்கிறோம், நம்மைச் சார்ந்தவர்கள் யார் யார் என்பது துல்லியமாகத் தெரியும். அதிலும் இதுபோல குறிப்பிட்ட சிலரை நம்பிய வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை ஓர் அளவேணும் திருப்திப்படுத்தாவிட்டால், தீபாவளி கழிந்ததும் உடனடியாகக் கடை மாறுகிற சம்பவம் நடைபெறும். ஒன்றிரண்டு பேர்தான் நட்புக்கும் பாசத்துக்கும் அல்லது இயலாமையால் ஒரு கடையையே தொடர்பு வைத்துக்கொள்வது, சரக்கு எடுப்பது என்பதைச் செய்வார்கள்.

‘சரிங்கண்ணே… சங்கடப்படாதீக. சுத்தி முத்தி எங்க போனாலும் எல்லாப் பசங்களும் நம்ம கடைக்குத்தாண்ணே வருவாங்க’ – தான் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ என்ற எண்ணம் எழும்பிய நேரத்தில், கடைக்காரருக்கு ஆறுதலாகப் பேசினாள் முனியம்மா.

”பாப்பம்…” – கடைக்காரரின் ஒற்றை வார்த்தைப் பதிவால் விசனப்பட்ட முனியம்மா, சில நிமிடப் பொழுதுகளின் மௌனக் கழியலில் ‘நா கௌம்புறேண்ணே. போன் பண்ணுங்க…’

‘ரைட்டு… நான் சொன்ன வீடு தெரியும்ல? மதிய சாப்பாட்டுக்குப் பெறகு போய்ப் பேசு.முடிஞ்சா அட்வான்ஸைப் புடிச்சுரு’ என்றபோது முனியம்மாவின் புருஷன் வந்தான்.

‘வணக்கம்ணே…’ என்று சலாம் வைத்தான்.

‘வாய்யா… நீயும் வந்துட்டியா?’ – இன்னோர் அத்தியாயம் தொடங்குவதுபோல உணர்ந்தார்.

‘நீ… என்னா?’ – முனியம்மா புருஷனைப் புருவம் உயர்த்தி விசாரித்தாள்.

‘ம்… கார்த்தியலுக்கு ஒரு வேலை இருக்குனாக.பாத்துட்டுப் போலாம்னு கறிக்கடையில உக்காந்திருந்தேன்.’

அவன் பொய் சொல்வது முனியம்மாவுக்குப் புரிந்தது. வெளியில் சுற்றிக்கொண்டிருந்தவன் கடையில் போனஸ் தருவதைக் கேள்விப்பட்டு வந்திருக்கிறான். ஜாக்கெட்டில் இருந்த பணத்தைப் பத்திரப்படுத்திக்கொண்டாள்.

‘வேலை பேசிட்டு வந்துட்டியா?’

‘ஆள் வரலை… சாயங்காலமாப் போவணும்.’

‘தண்ணியடிக்க ஆள் சேராமச் சுத்திப்புட்டு வர்ற. என்னாண்டு கேட்டா, வேலை பேசப் போனேன்ற. உம் மொகரக்கட்டைக்கிக்கூட வேலையைப் பேசிவிட்ருவாய்ங்க…’

‘யே முனிம்மா… சத்தியமாடி’ என்று முனியம்மாள் தலையில் கைவைத்துச் சொன்னான்.

‘யே… கையை எடு. பொய்ச் சத்தியம் பண்ணி என்னையைப் பொலி குடுத்திராத.’

‘சரி… என்னா சாரதிப் பயலைத் திண்டுமுண்டாப் பேசிவிட்டுட்டியாம்ல..?’

‘உனக்குச் சாராயம் வாங்கிக் குடுத்தானாக்கும்?’ – கேள்விக்குக் கேள்வி பதிலாக வந்தது.

‘சேச்சே… காலையில எந்திருச்சு டீகூட குடிக்கலை. பாரு…’ வாயை ஊதிக் காண்பித்தான்.

முகத்தைத் திருப்பியவள், ‘சீ… ஊத்த வாய அங்குட்டுக் கொண்டுபோய் ஊது. காரணம் இல்லாம நீ சப்போர்ட் பண்ண மாட்டியே?’ என்றாள்.

‘போனஸ் குடுங்கண்ணே…’ – முனியம்மாவை விட்டுவிட்டு அவன் கடைக்காரரிடம் வந்து நின்றான். அவன் பின்னாலேயே வந்த முனியம்மா, அவன் தோளைப் பிடித்து இழுத்தாள். ”அங்க எங்க போற… குடுத்துட்டாரு.’

‘ரெண்டு பேருக்குமா?’

‘இல்ல… ங்கொய்யா, சின்னப்பச்சி, பெரியப்பச்சி… எல்லாருக்கும் தனித்தனியாத்தேன்.’

‘யே லூஸு… நீ, நானு ரெண்டு மாஸ்டருல… ரெண்டு கவர் தர வேணாமா?’

‘யே… தீவாளி அன்னிக்கு வந்து நீ செலவுக்கு வாங்கிக்கப்பா…’ – கடைக்காரர் சடவாகப் பேசினார்.

‘வேணாண்ணே… அதெல்லாம் தராதீக. டெய்லி ஊத்துதுக. அன்னிக்கி ஊத்தாட்டி நட்டமாப்போகுதாக்கும்?’

‘எவ்வளவு குடுத்தாரு..?’ – ஜாக்கெட்டுக்குள் இருக்கும் பணத்தைக் கைப்பற்ற ஆவல் கொண்டு அவளை மொய்த்தான்.

அவள், மாராப்பை நன்கு இழுத்துவிட்டு இடுப்புச் செருகலை இறுக்கிக்கொண்டாள். ‘போனஸுங்கிறது கடைக்காரர் பிரியப்பட்டுத் தர்றது. நாம என்னா அவர்கிட்ட சம்பளத்துக்கா வேலை பாக்குறோம்? எடுக்கிற பாத்திரத்துக்குத்தா கமிஷன் குடுத்தர்றார்ல? ஒருத்தரப்போல ரூவாயை சேப்புல வெச்சுக்கிட்டு கெஞ்ச விடுறாரா? கவர்ல போனஸு போட்டுக் கூப்பிட்டுக் குடுத்துர்றாரு.’

‘இருந்தாலும் நீங்க பொம்பளைகிட்ட குடுக்குறது தப்புண்ணே.’

‘அப்ப நீயும் கடை மாத்தப்போறியா?’ – அவர்கள் பேச்சில் தலையிடாமல் இருந்த கடைக்காரர், தன் முறை வந்ததும் வாய் திறந்தார்.

‘ச்சே… அதெல்லாம் இல்லண்ணே.’

‘சும்மா சொல்லு. இப்பத்தேன் சாரதி வந்து காசையும் வாங்கிக்கிட்டு கடை மாத்தப் போறேன்ட்டுப் போயிருக்கான்.’

‘அவன் கெடக்காங்க டுபாக்கூரு… அதெல்லா சட்ட பண்ணாதீங்கண்ணே. குடிச்சா ஒரு பேச்சு, குடிக்காட்டி ஒரு பேச்சு’ – முனியம்மா, சாரதியின் மீது இருந்த வன்மம் தீராது பேசினாள்.

‘இந்தா முனி… இதுதே உன் தப்பு. ஆம்பளகிட்ட அடக்கமாப் பேசவே மாட்டேன்ற.”

‘என்னா… ஆம்பளைனா அக்குள்ல ரெண்டு, தொப்புள்ல ரெண்டு கொம்பா மொளச்சிருக்கு? கடையாச்சேனு அவனைச் சும்மா விட்டேன்.’

முனியம்மாவின் வீறாப்பு, அவனது புருஷனுக்குச் சலிப்பைத் தந்தது. எல்லா இடத்திலும் தன்னை மீறுகிறாள். ‘இருந்தாலும் அவனை என்கிட்ட விட்ருக்கணும். நீயா பேசியிருக்கக் கூடாது. என்னாங்கண்ணே நான் சொல்றது?’ – தன் கருத்துக்கு வலுசேர்க்க கடைக்காரருக்கு அழைப்பு விடுத்தான்.

அவர் வழக்கம்போல மௌனித்தார். இவர்களுக்குள் ஏதோ ஒரு யுத்தம், இதே இடத்தில் நடக்கப்போகும் அறிகுறி அவருக்குத் தென்பட்டது. உறுதியாகும்பட்சத்தில் பேசாமல் கடையை அடைத்துவிட்டுப் போய்விட வேண்டியதுதான்.

‘சொல்லிட்டானாக்கும்? அதெல்லாம்… இந்த முனிம்மாகிட்ட செல்லாது. சாட்சிக்கு வந்தா, உனக்கும் ரெண்டு செருப்படி விழும்.’

திடீர் என முனியம்மாவின் கன்னத்தில் அறைந்தான் அவள் புருஷன். ‘நானும் பாக்குறேன் ஒரேடியாத்தே வாய் பேசுறவ. செருப்பைக்கொண்டு அடிப்பியோ..?’

ஒரு கணம் கன்னத்தைப் பிடித்தபடி நின்ற முனியம்மா… வாசலில் கிடந்த செருப்பை எடுக்கக் குனிந்தாள்.

நிலைமையின் தன்மை உணர்ந்த கடைக்காரர், கடைப்பையனின் துணையோடு இருவரையும் பிரித்து, ஆளுக்கு ஒரு திக்கில் அனுப்பினார்.

ஒரு நிமிடத்தில் திரும்பிவந்த முனியம்மா கடைக்காரரைப் பார்த்துக் கும்பிட்டாள். ‘மன்னிச்சுக்கங்கண்ணே… கடையில வெச்சு இப்படி நடந்துருச்சு’ என்றாள்.

”சரி சரி” எனத் தலையாட்டினார் கடைக்காரர்.

‘சாயங்காலம் பேசிட்டு வந்து சொல்றேண்ணே…’ எனக் கிளம்பினாள்.

‘நம்ம கடையிலதான் பாத்திரம் எடுக்கணும். அதுக்கும் சேத்துப் பேசிரு!’

சொல்லும்போதே கடைக்காரருக்குக் குரல் உடைந்தது. கடைப்பையன் தண்ணீர் மொண்டு அவருக்குத் தந்தான்!

– ஜூலை 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *