(எனக்குத் தெரிந்த‌)ஒரு நடிகையின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 14,473 
 

பரம ரகசியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ரகசியம் என்பதை எழுதி வைத்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடாதா என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். ஒரு விஷயம் ஊரில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்துவிட்டாலும் கூட ஒரே ஒருவனுக்கு மட்டும் தெரியாமல் மறைத்தால் அதுவும் ரகசியம்தானே. இதுவும் அப்படியான ரகசியம்தான்.

இந்த விஷயத்தை நீங்கள் எல்லோரும் தெரிந்து வைத்தாலும் கூட பரவாயில்லை. உங்களுக்குத் தெரிந்த விஷயம் தீப்திக்கு ம‌ட்டும் தெரிந்துவிடக் கூடாது.

தீப்தி என்னுடன் ப‌டித்த‌வ‌ள்தான். த‌ற்பொழுது ந‌டிகையாகிவிட்டாள். ந‌டிகை என்றால் டிவி சீரிய‌லில் இல்லை. திரைப்ப‌ட‌ங்க‌ளில் நடித்து முக்கியமான வாரப்பத்திரிக்கைகளின் நடுப்பக்கங்களை அலங்கரிக்கும் சினிமா நடிகை. ஆனால் தீப்தி என்ற‌ பெய‌ரில் இல்லை. உங்க‌ள் மேல் ந‌ம்பிக்கை இருக்கிற‌துதான் என்றாலும், தீப்தியின் த‌ற்போதைய‌ பெய‌ரை உங்க‌ளிட‌ம் சொல்ல எனக்கு விருப்ப‌மில்லை. இந்த‌க் க‌தையை முடிக்கும் போது உங்களில் சிலர் தீப்தி யார் என்று க‌ண்டுபிடித்து விடும் வாய்ப்பிருக்கிற‌து.

நான் எட்டாவது படிக்கும் போது நாங்கள் படித்த சசி அண்ணன் டியூசனில் தீப்தியும் சேர்ந்தாள். நாங்கள் காட்டுப் பள்ளிக்கூடத்தில் வெறும் காலோடு கில்லி ஆடிவிட்டு காலையில் அம்மா கொடுத்த‌ எட்டணாவிற்கு இலந்தப் பொடி வாங்கிக் கொண்டு புழுதியப்பியபடி டியூசனுக்கு வருவோம். காலையிலேயே நாக்கையும், ஆசையையும் அடக்க முடியாமல் ஏதாவது வாங்கித் தின்றிருந்தால், சாயந்தரமாக் ஏதாவது தின்ன வேண்டும் என்றிருக்கும் போது யாரிடமாவது ‘துளியூண்டு’ பொடி வாங்கி நக்கிக் கொள்வோம்.

தீப்தி எங்களை மாதிரி இல்லை. அமலா மெட்ரிகுலேஷனுக்கு ஆட்டோவில் போய்த் திரும்புவாள். பள்ளி முடிந்து வந்தவுடன், கைகால் கழுவி, துணி மாற்றி, தலை சீவி, பவுடர் அடித்து ‘ஜம்’ என்று டியூசனுக்கு வருவாள். சில நாட்களுக்கு ஜாதிமல்லி பூ வைத்துக் கொண்டு வருவாள். அந்த மல்லிப்பூ வாசமும், பவுடரின் நறுமணமும் எனக்கு மிகப்பிடித்ததாக இருக்கும்.

அவளோடு பேசுவதற்கான தைரியத்தைக் கூட எங்களுக்கும் அவளுக்கும் இருந்த வித்தியாசங்கள் தடுத்து வந்தன. அவள் எங்களோடு சேர்ந்தால் பன்றிக் குட்டிகளோடு பசு சேர்ந்து சுற்றுவதைப் போல ஆகிவிடும். ‘கருவாயன்’ குமார் எல்லாம் தெரிந்தவன் போல நடந்து கொள்வான், எங்களோடு திரியும் போது எருமை மாதிரி இருந்தாலும், பெண்களைப் பார்த்தவுடன் பெரிய மனுஷத்தனத்தை அவிழ்த்து விடுவான். ‘ஆய்ஷ்மன் பவ’ என்று சமஸ்கிருத வார்த்தையை தெரிந்து வைத்துக் கொண்டு அலம்பல் செய்து கொண்டு திரிந்தான். தீப்தியிடம், இந்த மந்திரத்தை நோட்டுகளில் எல்லாம் எழுதி வைத்தால் நன்றாக படிப்பு வரும் என்று சொன்னான். அவளும் எழுதிக் கொண்டாள். கருவாயன் ஹீரோவைப் போல‌ சுற்றித் திரிந்தான். அவனை விடவும் நான் கொஞ்சம் சிவப்புதான். இருந்தாலும் என்னுடன் அவள் பேசவே இல்லை.

கொஞ்ச நாளில் ‘கருவாயன்’குமார் பெரிய அண்ணன், ‘கூளையன்’ சரவணன் சின்ன அண்ணன், தீப்தி தங்கை என்று உறவு முறை அமைத்துக் கொண்டு, அவர்கள் தனிக்குழுவாக அமர்ந்து படித்து ஒப்பித்து பார்த்துக் கொள்வார்கள். கருவாயனுக்கும், கூளையனுக்கும் கையெழுத்து வேறு அழகாக இருக்கும். என் கையெழுத்தை பார்த்து ‘கோழி குப்பையை கிளறிய‌து’ போல இருப்பதாக ராமசாமி வாத்தியார் குட்டு வைப்பார். இது வேறு எனக்கு எரிச்சலாக இருக்கும். மற்ற பையன்கள் இந்த விவாகாரத்தை எல்லாம் கண்டுகொள்ளவில்லையென்றாலும் எனக்கு காதில் புகை வந்து கொண்டிருந்தது.

பிரகாஷ் என்னிடம் வந்து ‘டேய் அவுங்க மூணு பேரும் லவ்ஸ் பண்ணிக்கிறாங்களாமாடா’ என்றான். அந்தச் ச‌மயத்தில் ‘லவ்ஸ்’ன் அர்த்தம் ‘கெட்ட வார்த்தை’தான். ‘போடா..அவுங்க அண்ணன் தங்கச்சிடா’ என்று சொன்னேன். இதைச் சொல்வது எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. ஆனால் பிரகாஷ் ஏதோ சொல்லிவிட்டு போய்விட்டான். இதன் பிறகு எப்படியாவது அவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும் இருந்தது.

என் எட்ட்ணா இலந்தப் பொடியை கருவாயனுக்கும், கூளையனுக்கும் கொடுக்க ஆரம்பித்தேன். நான் தீப்தி கூடப் பழகத்தான் இவர்களுக்கு வாங்கித்தருகிறேன் என்பதை கருவாயன் எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டான். ‘எங்க கூட நீ பிரண்டா இருந்துக்கலாம். ஆனா எங்க தங்கச்சி கூட நீ சேரக் கூடாது. ஏன்னா நாங்கதான் அவளை நல்லபடியா பார்த்துக்கணும்ன்னு குமார் சொல்லி இருக்கான்’ என்று கூளைய‌னை தூதாக‌ அனுப்பி சொல்ல‌ச் சொன்னான். எனக்கு வந்த கோபத்திற்கு கூளையன் பல்லைத் தட்டிவிட வேண்டும் போலிருந்தது. வேறு விஷ்யமாக இருந்தால் என் பொடியை எல்லாம் ‘கக்குங்கடா’ என்று சண்டை போட்டிருக்கலாம். இதற்கு சண்டையும் போட முடியாது. தீப்தியிடம் உனக்காகத்தான் சண்டை போட்டோம் என்று பாசமாக பேசி என்னை வில்லனாக்கிவிடுவார்கள்.

கால்பரீட்சை விடுமுறை சமயத்தில் எப்படியோ தீப்திக்கு நண்பனாகிவிட்டேன். எப்படி ஆனேன் என்று இப்பொழுது யோசித்தால் ஞாபகம் வரவில்லை. தீப்தியின் அம்மா பேங்க் வேலை, அப்பா கரண்ட் ஆபிஸில் வேலை என்பதால் இரண்டு பேரும் பகல் நேரத்தில் இருக்கமாட்டார்கள்.

கருவாயனும், கூளையனும் ‘சீன் பாத்’ எடுக்க வாய்க்காலுக்கு போய்விடுவார்கள். ‘சீன் பாத்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெண்கள் மார்பை மறைக்கும்படி பாவாடையைக் கட்டிக் கொண்டு வாய்க்காலில் குளிப்பதை வேடிக்கை பார்ப்பது. வயலில் வேலை செய்யும் பெண்கள்தான் குளிப்பார்கள். எனக்கும் போக ஆசையாக இருக்கும் என்றாலும் தீப்தி கூட பேசுவதற்காக நான் போக மாட்டேன்.

சரி இதுவா முக்கியம்? ப்ள்ஸ் ஒன் படிக்கும் போது தீப்தியின் பக்கத்து வீட்டுக்கு அவர்களின் தூரத்துச் சொந்தக்காரக் குடும்பம் குடி வந்தது. மாமா என்று சொன்னாள். அவர்களின் மகன் படு அசிங்கமாக இருந்தான். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே அவள் ‘பெரிய மனுஷி’ ஆகிவிட்டாள் என்று எங்களோடு பழகுவதை குறைத்துக் கொண்டாள்.

ஆனால் அவர்களின் மாமா குடும்பம் வந்த பிறகு அந்த வீட்டீற்கு போகும் போதும், வரும் போதும், பொதுக் குழாயருகில் கிரிக்கெட் விளையாடும் போது பார்த்துச் சிரிப்பாள். கொஞ்ச நாட்களுக்குள்ளாக‌ தீப்தி வீட்டில் அடிக்கடி பெரும் சண்டை நடக்க ஆரம்பித்தது. பிளஸ் டூ பாதி வருடம் கழிந்த பிறகு தீப்தியின் அம்மா தீயில் கருகிப் போனார். நான் தகவல் தெரிந்து ஓடி பார்க்கும் போது, அவரை உடம்பில் துணியில்லாமல் வாழையிலை மீது படுக்க வைத்திருந்தார்கள்.

தீப்தி அழுது கொண்டிருந்தாள். நான் அதுவரை நிர்வாணமாக ஒரு பெண்ணையும் பார்த்ததில்லை என்பதால் வருத்தத்தை மீறி காமப்பார்வை பார்த்தேன். எனக்கு நான் தவறு செய்வதாகத் தோன்றியது. ஆனால் நகராமல் நின்று கொண்டிருந்தேன்.

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற மூன்று நாட்களில் தீப்தியின் அம்மா இற்ந்துவிட்டார். தீப்தி அவளின் மாமா பையனைக் காதலித்திருக்கிறாள். இருவரும் அவர்கள் வீட்டிற்கு தெரியாமல் சென்று பாரியூர் கோவிலில் திருமணம் செய்திருக்கிறார்கள். அந்தப்பையனின் அம்மா நடத்தை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். அவளின் குடும்பமே ‘தறிகெட்ட’ குடும்பமாம். இதனால் தீப்தியின் அம்மா இவ‌ர்களின் காதலை எதிர்த்திருக்கிறார். அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டது தெரிந்ததும் மனமுடைந்து தீயிட்டுக் கொளுத்திக் கொண்டாராம்.

ஆனால் வேறு மாதிரியும் ஒரு பேச்சு இருக்கிறது. தீப்திக்கு எப்படியாவது தன் அண்ணன் மகனை திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என அவளின் அம்மா முயன்றிருக்கிறார். இதனை தீப்தியும், அவளது அப்பாவும் எதிர்த்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தை முற்றிப் போய் தீப்தியின் அப்பா கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதனால் கோபம் வந்து தீயீட்டுக் கொண்டாராம். இந்தக் இரண்டு கதைகளையும் “விருமாண்டி” பட ஸ்டைலில் இன்னொரு நாள் சொல்கிறேன்.

இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தீப்தியும் அவரது அவளது அப்பாவும் சென்னை சென்றுவிட்டார்கள். தீப்தி ப்ளஸ் டூ தேர்வு கூட எழுதியிருக்கவில்லை. நாடகமாக இருந்தால் கதையின் இந்த இடத்தில் திரை விழ வேண்டும். திரை விலகும் போது, தீப்தி அஜீத் அல்லது விஜய்யுடன் ஆட்டம் போட்டிருக்க வேண்டும். ஆனால் க‌தை இங்கு முடிய‌வில்லை.

தீப்தியின் அம்மா இரண்டு கதையிலும் வருவது போல தானாக கொளுத்திக் கொள்ளவில்லை. தீப்திதான் கொளுத்தினாள். சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வாங்கித்தருவதாக அவளின் மாமா சொன்ன போது தீப்தியின் அம்மா தெரிவித்த மறுப்புக்கான தண்டனைதான் இது.

இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும். எப்படி உனக்கு தெரியும் என்று கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். கேட்டாலும் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

– அக்டோபர் 10, 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *