ஊட்டவுட்டுத் தொரத்த ஆள் வந்தாச்சு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 8,734 
 

மஞ்கள் கதிரவன் கண்ணைக் கரித்தது. மணி நாலிருக்கும் போலிருந்தது. அடுப்பு ஈரவெறகால் புகையைக் கிளப்பியது. கமலா கண்ணைக் கசக்கியபடி முள்ளுக்கட்டை ஒன்றை சொருகினாள்.

அடுத்த கணம், “மடோர்” என்று பானை உடைந்து மூணு படி, நெருச்சு போட்டு காய்ச்சிய சோளக்கஞசி அடுப்பைச்சுற்றி பரவலாய் ஓடியது.

இருபது வயதை கடந்த கமலாவின் நெஞ்சில் “திக்“ என்று பயம் பரவியது. கண்ணில் நீர் வெள்ளமாய் பெருகியது. என்ன பண்ணுவது என்று ஒன்றும் புரியவில்லை. பொழுது சாய்ந்து கொண்டிருந்தது.

தட்டு வணடிகள் வந்து சேர்ந்தன. கணுவாய் சோமையம்பாளையம் சோளக்காட்டுக்கு கதிரறுக்கப்போன தன் சின்னாத்தா வேறே வந்தால் தன்னைக் கொன்றே விடுவாள்.

தட்டுவண்டிகள்லே வர்றவங்களுக்கு சின்னாத்தா கஞ்சி காச்சச் சொல்லியிருந்தாள். மூணுமணிக்கே அடுப்பப்பத்தவச்சு, மூணு படி சோளத்தை ராயிக்கல்லுல போட்டு நெருச்சு, கஞ்சி காச்சத் துவங்கினாள் கமலா. பானைக்கடியில் எங்கேயோ லேசா விரிசல் விட்டிருக்கும் போலிருந்தது. கஞ்சி வெந்ததும் இறக்கி வைக்கலாம் என்றிருந்தாள்.

இப்படியாகும் என்று யார்கண்டா?

நல்லாம்பாளையம் கிராமத்தில் கமலாவின் அப்பா வீராசாமி பெருந்தனக்காரர்.அந்தஊரில் அவர்கள் வீடுதான் அரண்மனை மாதிரி.

பெரிய வீடு. பின்னால் மூன்றேக்கராவில் காய்கறி தோட்டம். தானி யங்கள் காயப்போட விஸ்தாரமான சிமெண்ட்தளங்கள் ஓரமாய் பெரிய கவலைகிணறு.எந்நேரமும் மோட்டர்தண்ணி வயலுக்கு பாய்ந்து கொண்டே இருக்கும்.

“அடிஏண்டி பனமரமாட்டம் நிக்கிறே? மலங்க மலங்க முழிக்கறே கண்ணுல வேறே தண்ணி. என்னத்தப் பண்ணினே. சொல்லித்தொலை.பொழுது சாஞ்சாச்சு. தட்டுவண்டிக வேறே வந்தாச்சு. கருதறுக்கப் போன உன்ற சின்னாத்தா வேறே வந்துருவாளே. சொல்லுடீ.” -என்று பக்கத்தூட்டு பங்கஜக்கா கேட்டதும் கமலத்திற்கு கொஞசம் துணிவு வந்தது.

அதுவரை சும்மா இருந்தவள் லேசான விசும்பலுடன்,“அது வந்துக்கா….வந்து……”

“சொல்றீ சிறிக்கி வயசுதா இருவதாகுது. ஒரு வேக்கியானத்தையும் காணம்.”

“தட்டுவண்டிலே வர்றவங்களுக்கு சின்னாத்தா கஞ்சி காச்சச் சொல்லியிருந்தா. நானும் மூணுமணிக்கே அடுப்ப பத்தவச்சு கஞ்சி காச்சுனே பானைக்கடியிலே எங்கியோ லேசா தூறுட்டிருக்கும் போலிருக்கு கஞ்சி வெந்து வர்ற சமயம் பளோர்னு சட்டி ஒடைஞ்சு முச்சூடும் கொட்டிப் போச்சுக்கா.”

“ஓகோ அவ்வளவு போதுமே. உங்க சின்னாத்தாளுக்கு இன்னிக்கி நீ அவ்வளவுதான். வெறகு கட்டை பொளக்கப் போகுது. எத்தன படி சோளம் போட்டே.”

“மூணுபடிக்கா.”

“மூணுபடியா உன்னய இன்னிக்கி ஊட்ட விட்டே தொரத்துனாலும் தொரத்திடுவா. பாரு. நானு மன்னாடும் சொல்லிட்டுதானே இருக்கேன். பாத்து பதவிசா நடந்துக்கண்ணு. நீ எங்கே உருப்படப்போறே. என்னக்கின்னாலும் ஒருநா உன்னை ஊட்டவுட்டு தொரத்ததான் போறா. அந்த கோவில் மேட்டு செல்லாயி சீரழிஞ்சா மாதிரி சீரழிஞ்சு ரோட்ரோடா அலையத்தான் போறே.” -என்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டு,

“ பொறைக்கு கொஞ்சம் மோர் குட்றீ.”

கமலாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பத்துவயதில் தாயை இழந்த கமலாவுக்கு மறுவருடமே சின்னாத்தா வந்து சேர்ந்தாள்.

இதுவரை பட்ட துன்பம் இவ்வளவு என்று சொல்ல முடியாது. நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்று அடியும் உதையும் வார்த்தைகளும் வசவுகளும் வாங்கி வாங்கி மறத்துப் போனது.

இப்போதைய புதிய கவலை. நொடிக்கு நூறுதரம்.

“உன்னை ஊட்டஉட்டு தாட்றன்னைக்குதான் எனக்கு விடிவுகாலம்” என்கிறாள். எதேச்சையாய் பக்கத்து வீட்டு பங்கஜத்திடம் இதுபற்றி விசாரிக்கப் போக, அவள் இதையே பெரிசு படுத்தி ஓடிப்போன செல்லாயிக்கு நேர்நத கதிகளை கதைகதையாய் மீண்டும் ஒருமுறை கூறி பயமுறுத்தத் துவங்கினாள்.

மாட்டு ஜலங்கைகள் ஒலிக்க நான்கைந்து வில்லுவண்டிகள் வரிசையாய் தோட்டத்தில் நுழைந்தன.

“ஏண்டி மச மசன்னு நிக்கறே .போ சீக்கிரமா மூஞ்சியக் கழுவீட்டு, தலையக்கட்டு. பொட்டீல உன்ற சீருக்கெடுத்த பட்டு சீலைய எடுத்து கட்டிக்க உன்னைய பொண்ணு பாக்க வந்திருக்காங்க.” என்று அவசரப்படுத்தினாள் சின்னாத்தா.

மறுபடியும் அசையாமல் நின்ற கமலத்தைப் பார்த்து, “என்னடி சொல்லிட்டேயிருக்கேன்.”

“சின்னாத்தா கஞ்சிப்பானை ஒடஞ்சுபோச்சு.”

“எனக்குத் தெரியுமடி காலையிலேயே சொல்லணும்னிருந்தேன். அது தூறுட்டுப் போச்சு. தட்டுவண்டகாரங்கள அய்யர் கடையிலே சாப்பிடச் சொல்லி பணங்கொடுத்துட்டேன். போனது போகட்டும் நீ நல்லவிதமா அவிங்க போற வரைக்கும் ஒழுங்கா நடந்துக்க.”

இப்படி பேசுவது சின்னாத்தா தானா இதுவரை இல்லாத புதிய பாசத்தோடு பேசுவது கமலாவுக்கு வியப்பாகவும் இதமாகவும் இருந்தது.

நிஜமாகவே நல்ல வாழ்வு வந்துவிட்டதா? என்று சந்தோசப்பட்டாள். கை கால்கழுவ கிணற்றடிக்கு ஒரு துள்ளலுடன் ஓடிய கமலாவைக் கண்ட பங்கஜம் “என்னடீ ஒரே துள்ளல்”

கமலாவுக்கு சிரிப்பு வந்தது கூடவே, “அக்கா நீ சொன்ன மாதிரியே என்னை ஊட்டவிட்டு தொரத்த ஆளுக வந்துட்டாங்கக்கா”.

“அடிக்கள்ளி அடிச்சனா பாரு அப்பவும் திமிரடங்கலே பாரு.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *