கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 14,838 
 

அன்று சனிக்கிழமை.

மதிய தூக்கத்துக்குப் பின் எழுந்த இளங்கோ, நேராக சமையல்கட்டுக்கு வந்தான். மனைவி சுமதி தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

‘என்ன சுமதி! எல்லாம் ரெடியா?’

‘நாங்க எல்லோரும் ரெடிங்க. நீங்க தான்……’

‘இன்னும் பத்து நிமிஷத்தில் நா ரெடியாயிடுவன்’ சொல்லி விட்டுப் போன இளங்கோ, சொன்னதை விட விரைவாக வந்தான்.

வராண்டாவில் இளங்கோவின் அம்மா காமாட்சி சோகமாக உட்காந்திருந்தாள்.

அப்பொழுது தேனீர் கப்புகளோடு வந்த சுமதியைப் பார்த்து இளங்கோ கேட்டான், ‘அம்மாவின் உடுப்புகள் எல்லாம் எடுத்தாயிட்டா?’

‘இதோ இரண்டு பெட்டிகளில் எடுத்திருக்கிறனுங்க’ வராண்டாவில் இருந்த பெட்டிகளைக் காட்டினாள்.

விளையாட்டுப் பொருட்களில் மனம் லயித்திருந்த இளங்கோ, சுமதியின் ஓரே வாரிசு பிரியா,

‘ஏம்பா பாட்டி எங்க போறாங்க?’ என்றாள் திடுமென.

‘பிறகு சொல்றுறன் முதல்ல பாட்டிக்கு ஒரு கிஸ் கொடு’ இளங்கோ.

குழந்தை ஒடிச் சென்று பாட்டியை இறுக அணைத்து முத்தம் கொடுத்தது. எந்தவித பிரதிபலிப்புமின்றி ஜன்னலினூடாக வெறுமையாக இருந்த தனது அறையை வெறித்துப் பார்த்தபடியிருந்தாள் காமாட்சி. பாட்டியிடம் வேறுபாட்டை உணர்ந்த பிரியா தாய், தந்தை இருவரது முகத்தையும் மாறி மாறிப் பார்த்தாள்.

‘சரி சரி காரில போய் ஏறு பிரியா’ நிலைமையைச் சமாளிக்க முயன்றான்; இளங்கோ.

வழமையாக பிரயாணம் செய்கின்றபோது ‘அப்பாவிற்கு பக்கத்திலதான் இருப்பன்’ என்று அடம்பிடிக்கும் பிரியா, அன்று பாட்டியின் பக்தத்தில் அமர்ந்திருந்தது மட்டுமல்லாது பாட்டியின் தோளில் தனது தலையை சாய்த்து அமர்ந்திருந்தாள். அவள் பிஞ்சு முகத்தில் குழப்பத்தின் சாயல்

‘பாட்டி நீங்க எங்க போறீங்க?’

‘முதியோர் இல்லத்துக்கு’

‘முதியோருன்னா யாரு பாட்டி…….’

‘என்னைப் போல வயது போனவை’ என்ற பாட்டி தொடர்ந்தாள்.

‘எனக்கு முன்னம் போல ஓடியாடி வேலை செய்ய முடியாது. இந்த ‘மிசின்’ யாருக்கும் இனி பயன்படாது. அதுதான் என்னை தூக்கிப் போடுகினம்’. தனக்குள் பேசிக்கொண்டாள் காமாட்சி.

பிரியா பாட்டியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். பாட்டியின் முணுமுணுப்பு பிரியாவுக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது.

திரும்பி தாயின் முகத்தைப் பார்த்த இளங்கோவின் கால்கள் ‘ஆக்சிலேட்டரை’ வேகமாக அழுத்தின.

‘ஏன் பாட்டி………………..’ என்று ஏதோ சொல்ல வாயெடுத்தாள் பிரியா.

‘ஏய் பிரியா, சும்மா இருக்கமாட்டியா? பேசாம வாயை மூடிக்கிட்டு வா’ அடக்கியது சுமதியின் குரல். தொடர்ந்து. காரினுள் அமைதி நிலவியது. அந்த இறுக்கத்தை தளர்த்த கார்க்கண்ணாடியை சற்று கீழே இறக்கினான் இளங்கோ. ஈரப்பதம் இல்லாமல் சூடாக இருந்த காற்று அவன் முகத்தில் மோதியது.

‘என்ன இளங்கோ? என்னும் ரொம்ப தூரம் போகனுமா? இருந்து இருந்து முதுகு நோகுதுதடா’ நடுங்கும் விரல்களால் கோடிட்டுக்காட்டிய முதுகுத் தண்டை முனகியபடி வருடினாள் காமாட்சி.

‘இல்லையம்மா இந்தா ‘ரவுண்டானா’ வந்திருச்சு. இனி பக்கம் தான்’

என்ன தோன்றியதோ பாட்டியைப பார்த்து பிரியா கேட்டாள். ‘பாட்டி அப்பாவுக்கும், அம்மாவுக்கும் உங்களை மாதிரி வயசானபிறகு நான் இங்க தான்கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ன?’

சுருக்கென்றது இளங்கோவுக்கு.

கணவன், மனைவி இருவர்களது கண்களும் ஒருமுறை சந்தித்து மீண்டன.

‘ரவுண்டாவுக்குள்’ காரைத் திருப்பிய இளங்கோ, போக வேண்டிய வீதிக்கு காரை செலுத்தாது ‘ரவுண்டாவில்’ ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டை நோக்கி காரைத் செலுத்தினான்.

‘ஏம்பா பாட்டிய முதியோர் இல்லத்தில விடலயா?’ ஆச்சரியமாய் கண்களை விரித்தாள் பிரியா.

‘பாட்டி இனி நம்ம வீட்டிலதான் இருப்பாங்க’ என்ற இளங்கோவின் குரலில் ஒரு உறுதி தெரிந்தது.

பின்னிருக்கையில் இருந்து, ‘உம்’ என்று ஒரு நீண்ட பெருமூச்சு வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *