கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 20,498 
 

அருணாவைப் பத்து வருடங்களாக எனக்குத் தெரியும். அதாவது அப்பா இறந்துபோன தினத்திலிருந்து.

ராத்திரி தூங்கப் போகும்போது அப்பா, அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்க்கும்போது உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். அருணாதான் அதை முதலில் பார்த்தாள். அப்போது அவளுக்கு வயது எட்டு.

அவளுடைய போராட்டங்கள் அன்று ஆரம்பித்தன.

அப்பாவிற்கும் அண்ணாவிற்கும் எப்போதும் சண்டை யாருடைய கட்சி சரியென்று இப்போதும் தீர்மானமாகச் சொல்வதற்கில்லை. அண்ணா சிகரெட் பிடிப்பான். காலை ஏழு மணி, பகல் ஒன்றரை மணி, மாலை மூன்று மணி என்று சொல்லி வைத்த மாதிரி தெருமுனைக்குச் சென்று திரும்புவான். திரும்பி வரும்போது அவனிடமிருந்து ஒரு விநோத வாசனை வரும். “ என்னடா இது, புகையிலை நாத்தம் ? ” என்பார் அப்பா. பதில் இராது.

சிகரெட் பிடிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாத அப்பாவினால் காதலை எப்படித் தாங்கிக் கொள்ள இயலும் ? அண்ணாவின் காதல் கடிதத்தை, பத்மாவின் அப்பா எடுத்துக் கொண்டு வந்து முகத்தில் வீசியபோது அவசியமில்லாமல் அப்பா குன்றிப் போனார். வீட்டிற்குள் நுழையாதே என்று அண்ணாவைப் பார்த்து உறுமினார். அண்ணா கெஞ்சுவான் என்று நினைத்தார் போலும். அவன் வாசல் நிலையிலேயே நின்று அவரை வைத்த கண் வாங்காமல் அரை நிமிடம் பார்த்தான். பின் விடுவிடுவென்று உள்ளே நடந்தான். தன் ஆணை தன் கண் முன்னாலேயே பொடிப் பொடியாய் நொறுங்குவதை அப்பா உணர்ந்தார். அதிர்ச்சியோடு அவன் பின்னாலேயே ஓடி பிடரியில் அறைந்தார். அவன் திடுக்கிட்டுத் திரும்பியபோது முகத்திலும் இரண்டு மூன்று அடிகள் விழுந்தன. தற்காப்பு என்று நினைத்துச் செய்தானோ, அல்லது கோபம்தானோ – அண்ணா, அப்பாவை ஓர் அரை விட்டான். பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அன்றைக்கு ராத்திரி அப்பா கயிற்றை மாட்டிக் கொண்டார்.

அப்பாவின் சாவிற்கு அண்ணா வரவில்லை. பத்மாவை இழுத்துக்கொண்டு போயிருப்பானோ என்று ஊர் முழுக்கச் சந்தேகம். உறவுக்காரப் பெரிய மனிதர்கள் பத்மாவின் வீட்டிற்குச் செல்லத் தயங்கினார்கள். முகத்தில் கடிதத்தை வீசிய பத்மாவின் அப்பா, யார் எவர் என்று பாராமல் தணலை வாரிக் கொட்டுவார் என்று எல்லோருக்கும் பயம். கட்டாயம் பத்மா வீட்டை விட்டுப் போயிருப்பாள். அப்படிப் போயிருந்தால் ஒரு புயல் நிச்சயம் என்று எல்லோரும் பயந்தார்கள். அருணா

‘ வாருங்கள், மாமா, ’ என்ற என்னை அழைத்துக்கொண்டு பத்மாவின் வீட்டிற்குப் போனாள். வாசற்படியில் நின்று குரல் கொடுத்தாள். குரல் கேட்டுக் கதவைத் திறந்தது பத்மாதான்.

அருணாவின் இந்தத் தீரத்தை நான் பின்னர் அநேகம் தடவைகள் சந்தித்தேன். உறவினர் வீட்டில் ஒண்டிக் கொண்டு அவள் வளர்ந்த வருடங்களில் அவமானப்பட நேர்ந்தபோதெல்லாம், கண்ணீர் சிந்தாமல் பல்லைக் கடித்துக் கொண்டு துக்கம் முழுங்கிய நேரங்களில் ; சமையல், நீச்சல், சைக்கிள் மூன்றும் கற்றுக் கொண்டால், உலகத்தின் எந்த மூலையில் வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று நான் சொன்னதை நம்பி சைக்கிள் கற்றுக் கொண்டதைத் தெருப் பையன்கள் கேலி செய்தபோது; வேலைக்குப் போய்த் திரும்பிய பின்னர் இரவு ஏழு மணிக்கு மேல் டைப்ரைட்டிங் படிக்கப் போன இடத்தில், இன்ஸ்ட்ரக்டர் தோள் மீது கை வைக்க, கால் செருப்பைக் கழற்றிக் காண்பித்தபோது… அப்படிப் பற்பல தருணங்களில் அவளின் தீரத்தைச் சந்தித்தேன்.

சரியோ தவறோ, அந்த வீட்டில் எல்லா முடிவுகளையும் அருணாவே எடுத்தாள். ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திக்கொண்டு, திருவான்மியூரில் ஒரு பட்டறையில் காயில் சுற்றினாள். இரண்டு வருடம் கழித்து திருப்பதிக்குப் போய் மெட்ரிக் எழுதினாள். மெட்ரிக் முடித்த பின் பெர்சனல் செகரட்டரி கோர்ஸில் சேர்ந்தாள்.

காயில் சுற்றுகிற வேலை, டைப் அடிக்கிற வேலையாக மாறியது. ஆறு வருடத்தில் பத்து கம்பெனி மாறினாள். “ என்ன அருணா இது, தடால் தடால் என்று வேலையை விட்டு விடுகிறாய் ? ” என்ற கேள்விக்கு, “ வேலையில் தொடர்ந்தால் இருபத்தி ஐந்து ரூபாய் இன்கிரிமெண்ட், வேலை மாறினால் ஐம்பது ரூபாய் சம்பளம் அதிகம். எது தேவைலை ? என்று எதிர்க் கேள்வி வீசினாள்.

வாழ்க்கை எப்போதும் வெய்யில் காலமாகவே போய் விடுவதில்லை. வசந்தங்களும் வருவதுண்டு. அருணாவின் வசந்தத்திற்குச் ஜெயச்சந்திரன் என்று பெயர். வேலை, சம்பாத்தியம், குடும்பம் என்று ஆண் பிள்ளையைப் போல் ஓடிக் கொண்டிருந்தவளைப் பெண்ணாக்கி நாணச் செய்தவன் அவன்.

தன்னுடைய பெயருக்குக் கடிதம் வந்திருப்பதை எண்ணி வியந்துகொண்டே கவரை உடைத்தவள், அது பிறந்த நாள் வாழ்த்து என்பதை அறிந்து காலண்டரை நிமிர்ந்து பார்த்தாள். ஆமாம், அது அவள் பிறந்த தினம்தான்…. பள்ளிக்கூட சர்டிஃபிகேட்படி. பதினெட்டு பிறந்த தினங்கள் வந்து போய்விட்டன. ஆனால் இதுவரை யாரும் ‘ மெனி ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே ’ என்று கை குலுக்கியதில்லை.

‘ தீர்காயுசா இரும்மா ’ என்று வாழ்த்துச் சொன்னதில்லை. கேக் வெட்டியதில்லை. பாயசம் குடித்ததில்லை. புதிது அணிந்ததில்லை. கோயிலில் அவள் பெயரில் அர்ச்சனை நடந்ததில்லை. பதினெட்டு வருடங்களாக இல்லாமல் இன்று ரோஜாப் பூக்கள் சிரிக்கும் வெளிநாட்டு கார்டு. யார் ?

மனத்தை கேள்வி மொய்த்தது. யார் என்று அறிந்து கொள்ளவிட்டால், தலை வெடித்துவிடும் போல் பரபரத்தது. கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வாரம், பத்து நாள் என்று அநேகமாக மறந்துவிட்டபோது பக்கத்து சீட் ஜான்ஸி, “ ம்க்கும், இதற்கு ஒன்றும் குறைச்சலில்லை, ” என்றபடி குப்பைத் தொட்டியில் வீசியதைப் பார்த்தாள்.

ரோஜாப்பூக்கள் சிரிக்கும் வெளிநாட்டுப் பிறந்தநாள் கார்டு !

“ என்ன ஜான்ஸி ? ”

இந்த ஆபீஸில் கிராக் ஒண்ணு இருக்குது. யாருக்குப் பிறந்த நாள்ன்னாலும் வாழ்த்து ஒண்ணு அனுப்பிச்சிடும். ”

“ யாரு அந்தக் கிராக் ? ”

“ ஜெயச்சந்திரன்னு ஒண்ணு வருமே, பார்த்ததில்லே ? உசரமா, கிழவன் மாதிரி ஃபுல் ஆர்ம் ஷர்ட் போட்டுக்கிட்டு … ”

ஃபுல் ஆர்ம் ஷர்ட் போட்ட கிறுக்கனைப் பார்க்க ஆவல் இழுத்தது. தண்ணீர் குடிக்கப் போவது போல் எழுந்திருந்து போனாள்.

“ தாங்க்ஸ் , ” என்ற குரலுக்கே அவன் திடுக்கிட்டான்.

“ எதுக்குங்க ? ”

“ ரோஜாப் பூக்களுக்கு . ”

பெண் பிள்ளை போல அவன் நாணினான்.

“ பர்த் டேயை எப்படிக் கண்டுபிடிச்சீங்க ! ”

“ பெர்சனல் டிபார்ட்மெண்ட் வேலையில் இருந்துகிட்டு இதைக்கூடக் கண்டுபிடிக்க முடியலைன்னா எப்படி ? ”

“ இப்படி எல்லோருக்கும் அனுப்புவீங்களா ? ”

“ எனக்கு இருபத்திரெண்டு வயசாச்சு. இன்னிக்கு வரைக்கும் ஒரு பர்த்டே கார்டு வந்ததில்லை. வந்ததில்லைன்னு அழுவானேன் ? நாமதான் நாலு பேருக்கு அனுப்புவோ மேன்னு ஆரம்பிச்சேன். ”

அருணாவிற்குச் சுரீரென்றது. நமக்கும்தான் இத்தனை நாள் வாழ்த்து வந்ததில்லை. ஆனால் நாம் வாழ்த்து அனுப்பி வைப்போம் என்று ஏன் தோன்றவில்லை? சட்டென்று ஜெயச்சந்திரன் மீது மலைபோல மதிப்பு ஏற்பட்டது. “ நீங்க விர்கோவா, சாஜிட்டேரியஸ்ஸா ? ”

“ அ ! அவ்வளவு சுலபமா பர்த்டேயைத் தெரிஞ்சுக்கலாம்னு பாக்காதீங்க. வாழ்த்துச் சொல்ற சந்தோஷம் போதுமுங்க எனக்கு ”

முதன்முறையாக அந்த வருடம் அவன் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்து வந்தது.

“ இது வெறும் அட்மிரேஷனா? இல்லை, காதல் என்று எடுத்துக் கொள்வதா ? என்று நான் கேட்டபோது அருணா, சிரித்து முகம் சிவந்தாள். இத்தனை நாள் பொதி சுமந்த தோளுக்கு இப்போது மாலை விழுந்ததே என்று என் மனசு சிரித்தது.

அதற்கப்புறம் அருணாவிற்கு என்னைப் பார்க்க அவகாசம் இல்லை. அவ்வப்போது போனில் பேசினாள். ஒரு நாள் ஜெயச்சந்திரனைக் கூட்டி வந்து அறிமுகம் செய்து வை என்று சொன்னேன். ஆகட்டும் ஆகட்டும் என்று சொல்லிச் சொல்லி நாட்கள் பறந்தன. அல்ல, நாட்கள் அல்ல, வருடங்கள். இரண்டு வருடங்கள்.

அருணாவின் முகமே அவன் மனத்தைக் காட்டிக் கொடுத்தது. தொட்டால் ஒடிந்து விடுவதுபோல நொய்ந்து போன மனம்.

“ என்ன அருணா, வழி தெரிந்ததா ? ”

“ என்னோட எல்லா வழிகளுமே சுவரில் முடிகிறது மாமா. ”

“ என்னம்மா ? ”

“ அவர் நல்லவர்தான். ரொம்ப ரொம்ப நல்லவர். எல்லோருக்கும் நல்லவர். அதனால்தான் அவங்க அம்மா கிழிச்ச கோட்டைத் தாண்ட முடியலை. ”

சொல்லும்போதே அருணா உடைந்தாள். கையைப் பிடித்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். பத்து வருடங்களாக எதற்கும் அழுதிராத அருணா விசும்பி அழுதாள்.

பாளம் பாளமாக எத்தனையோ பாறைகளைச் சுமந்து கொண்டு தீரத்துடன் முன்னேறிய பெண், ஒரு மயிலிறகின் கனம் தாங்க மாட்டாமல் முறிந்து விழுந்ததைப் பார்த்து வார்த்தைகள் அற்று ஸ்தம்பித்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *