அம்மா போயிட்டு வரேன் – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2016
பார்வையிட்டோர்: 13,440 
 

விஜயாவுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது.

வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் போது இந்த வேலைக்காரி சொல்லிக் கொண்டு போக மாட்டாளோ? ஒரு நாளைப் பார்த்தாற் போல் சத்தம் போடாமல் பூனை மாதிரிப் போய் விடுகிறாளே!

ஏதாவது மிச்சம் மீதியிருந்தால் கொடுக்கலாம். இல்லை, ஏதாவது அதிகப்படியாக வேலையிருந்தால் செய்யச் சொல்லலாம் என்று பார்த்தால், வருவது, செய்வது, வந்த சுவடு தெரியாமல் போய்விடுவது என்று இருக்கிறாளே! இவளை என்ன செய்வது?

இதுதான் விஜயாவின் தலையாய பிரசினையாக இருந்தது. கணவன் வெங்கிட்டுவிடம் சொல்லிப் புலம்பினாள்.

“ரொம்ப நான்றாய் இருக்கிறதே! போகும்போது சொல்லிக் கொண்டு போகாவிட்டால், இவளை யார் கண்காணிப்பது? முதலில் அவளைக் கணக்குத் தீர்த்து அனுப்பு!” என்று முடிவாகச் சொல்லி விட்டான்.

மறுபடியும் அடுத்த வேலைக்காரிக்கான வேட்டை ஆரம்பமானது. கடைசியில் திருப்தியாக ஒருத்தி கிடைத்தாள். முதல் நாள் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, “அம்மா! போயிட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டுச் சிறிது நின்றாள். இவள் “சரி” என்று சொன்ன பிறகே நகர்ந்தாள். விஜயாவுக்குத் திருப்தியாக இருந்தது.

மறு நாளும் இதே போல் தான். ஆனால இந்த முறை விஜயா அவளை நிறுத்தி, முதல் நாள் மீந்து போன சாதமும், குழம்பும் கொடுத்தனுப்பினான்.

அதற்கடுத்த நாள்முதல் சரியாக அவள் சொல்லிக் கொண்டு போகும் நேரத்திற்கு விஜயாவுக்குள் ஒரு சங்கடம் புகுந்து கொள்ள ஆரம்பித்தது.

“அம்மா! போயிட்டு வரேன்!” என்று சொல்லிவிட்டு நிற்கும் அந்த நேரம் அவள் எதையோ எதிர்பார்ப்பதும், தன் வெறும் கையைப் பார்த்துவிட்டு அவள் ஏமாறுவதும், அந்த ஏமாற்றத்திற்குத் தான் காரணமாக இருப்பதும் விஜயாவுக்குப் புரிந்து செய்வதறியாது திகைத்தாள்.

அவள் மனம் முதல் வேலைக்காரி திரும்பி வர பிரார்த்தித்தது.

–குமுதம் ஒருபக்கக் கதை – 9-6-1988ல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *