அம்மாவின் புலம்பல்கள்

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 9,441 
 

கையில் மடக்கி வைத்திருந்த கம்பை விரித்து நீட்டினான் வீரையன். கம்பி நேராக நீண்டு நின்றது. தமக்கு முன்பாக இருந்த தரையில் கம்பைத் தட்டி லேசாக அழுத்தினான். கம்பி நேராக இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்ட அவன் முன் நோக்கி நடந்தான். கம்பி தரையில் படும் ஓசை வித்தியாசத்தை அவனது காது கவனித்துக்கொண்டிருந்தது. டப்… டப்… என்று தரையில் படும் ஓசை சரியாக அவனது காதுக்குத் தெரியும். அந்த ஓசை தரும் ஒலியில்தான் அவனது வாழ்க்கைப் பயணம் நடைபோடுகிறது.

அம்மாவின் புலம்பல்கள்தனியாக நடந்து போவதில் வீரையனுக்குச் சிரமம் எதுவும் கிடையாது. பழக்கப்பட்டதுதான். ஆனால் ஒரு வருட காலமாகத் தமக்குத் துணையாக வந்த மனைவியின் துணை பறிபோனது அவனது மனத்தில் .உறுத்திக்கொண்டு தான் இருக்கிறது. வீரையனுக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. கண் இல்லாத ஒருவனைக் கல்யாணம் செய்வதற்கு எந்தப் பெண்தான் விரும்புவாள். அதனால் கல்யாணமே வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தான். கண் இல்லாத ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்வதற்கும் அவன் விரும்பவில்லை. இரண்டு பேருக்கும் கண் இல்லை என்றால் எதிர்காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ? என்ற சந்தேகத்தால் தான் அதைத் தவிர்த்துவிட்டான்.
வீரையனின் அம்மா இலட்சுமிக்குத் தமது மகன் தனிக்கட்டையாக இருப்பது பிடிக்கவில்லை. தமக்குப் பிறகு அவனைப் பார்த்துக் கொள்வதற்கு ஒரு பெண் வேண்டும் என்ற எண்ணத்தால் அடிக்கடி வற்புறுத்திக்கொண்டிருந்தாள்.. கண் உள்ள மகன் என்றால் அவனை இவ்வளவு தூரம் வற்புறுத்தியிருக்கமாட்டாள். இவன் காலம் எல்லாம் எப்படித் தவிப்பானோ என்ற தவிப்பினால்தான் ஒரு வருடத்திக்கு முன்பு ஜோதியைப் பேசி முடித்தாள்.

ஜோதி நல்ல பெண்தான்.

அம்மா உயிருடன் இருக்கும்வரை வீரையனை நன்றாகத்தான் பார்த்துக்கொண்டாள். ஆறு மாதத்துக்கு முன் அவள் இறந்தபிறகுதான் பிரச்னை ஆரம்பமானது. கிராமத்தில் இருக்கும் தாயையும், தந்தையையும் தமது வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜோதி சொன்னது வீரையனுக்குப் பிடிக்கவில்லை. தாம்பரம் ரயில் நிலையத்தில் வீரையன் நடத்திவரும் ஃபோன் பூத்தைத் தவிர வேறு எந்த வருமானமும் அவனுக்குக் கிடையாது.அவனது அம்மா இருக்கும்வரை அருகில் உள்ள மளிகை கடையில் அரிசி, பருப்பு, உளுந்து போன்றவற்றைச் சுத்தம் செய்துகொடுத்துக் கொஞ்சம் சம்பாதித்தாள். இலட்சுமி இறந்தபிறகு அந்த வருமானம் போய்விட்டது. இந்த ஃபோன் பூத்தில் வருகின்ற வருமானத்தில் இரண்டு ஜீவன்கள் வயிற்றைக் கழுவுவதே கஷ்டம். இதில் ஜோதியின் தாயும் தந்தையும் சேர்ந்துகொண்டால் குடும்பத்தை எப்படி நடத்துவது என்ற கவலை வீரையனுக்கு.
எதையும் நேரடியாகக் கேட்டுவிடும் பழக்கம் வீரையனுக்கு. நேரடியாகவே கேட்டுவிட்டான்.
உங்க அம்மாவும் அப்பாவும் இங்கே வந்தா அவங்களும் ஏதாவது வேலை செய்யணும்.
கிராமத்தில் இருந்து வர்றவங்களுக்கு இங்க என்ன வேலை தெரியும்?
அப்ப கிராமத்திலேயே இருக்க வேண்டியதுதானே!
அவங்க பெத்தபுள்ளை நான் ஒருத்தி, என்னை விட்டுட்டு அவங்க எப்படி அங்கே தனியா இருப்பாங்க?
இன்னைக்கு வரைக்கும் தனியாத்தானே இருந்தாங்க… அதைப்போல இருக்கவேண்டியதுதானே!
இன்னைக்கு வரைக்கும் ஒங்க அம்மா இருந்தாங்க. அதனால் அவங்க அங்கேயே இருந்தாங்க. இப்பதான் இங்க யாரும் இல்லையே!
அப்ப ஒங்க அம்மாவை மளிகைக்கடையில் போய் எங்க அம்மா செஞ்ச வேலையச் செய்யச் சொல்லு… என்று வீரையன் சொன்னதுதான் தாமதம். ஜோதிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை.
எங்க அம்மாவை மளிகைக் கடைக்கா? ஒங்க அம்மாவும் எங்க அம்மாவும் சமமா? என்று என்னென்னவோ பொரிந்து தள்ளிவிட்டாள்.
அன்றைக்குத் தொடங்கிய பிரச்னை ஆறு மாதமாய்ப் புகைந்து கொண்டிருந்தது. இரண்டு நாளைக்கு முன் புறப்பட்டுவிட்டாள் ஜோதி. குருட்டுப் பய ஒன்னோட வாழறதைவிட வாழாவெட்டியா இருந்துட்டுப் போறேன். நீ என்னை எடுத்தெறிஞ்சிப் பேசறதைக் கேட்டுட்டு நான் இருக்கணுமா? என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டு விட்டாள்.
வீரையனுக்கும் அவளைத் தடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. தன் தாயையும் அவள் தாயையும் பேதப்படுத்திப் பார்ப்பவளை இப்போது தடுத்து நிறுத்தினாலும் பிரச்னை தீராது என நினைத்ததால் விட்டுவிட்டான்.
இரண்டு நாளாக ரயில் நிலையத்துக்குத் தனியாக நடந்து வருகிறான். இந்த நடையில் அவனுக்கு எந்தச் சிரமமும் இல்லை. ரோடும் ரயில்வே தண்டவாளமும் அவனுக்கும் அவனது கம்புக்கும் பழக்கப்பட்டவைதான்.
மூன்றாம் பிளாட்ஃபாரத்தில் இருந்த ஃபோன் பூத்தைத் திறந்து. அங்கிருந்த இரண்டு ஃபோனையும் பில்லிங் மெஷினையும் துடைத்தான். அருகில் செருகி வைத்திருந்த ஊதுபத்தியை எடுத்துப் பற்றவைத்து ஃபோனுக்கு அருகே செருகி வைத்தான். ஊதுபத்தியின் மணம் அவனது மூக்கினை நிறைத்தது.
இன்னும் காலையில் டிஃபன் சாப்பிடவில்லை என்பது வீரையனுக்கு அப்போதுதான் தோன்றியது. அம்மா இருந்தவரையும் சரி… ஜோதி இருந்தவரையும் சரி… சாப்பாட்டுக்கு என்று வீரையன் அலையவில்லை. காலையில் வீட்டில் டிஃபன் சாப்பிட்டுவிட்டு ஜோதியுடன் புறப்பட்டுவிடுவான். ரயில் நிலைய வாசலில் அவனை விட்டு விட்டு அருகில் உள்ள காய்கறிக் கடையில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு போவாள். மத்தியானம் ஒரு மணிக்கு டாண் என்று சாப்பாடு கொண்டு வந்து விடுவாள். சாயங்காலம் நான்கு மணிக்கு ஒரு டீ சாப்பிட்டுவிட்டான் என்றால் ராத்திரி பத்து மணிவரை அது தாக்குப் பிடிக்கும். பத்து மணிக்கு வீட்டில் சப்பாத்தியோ தோசையோ சாப்பிடுவான்.

இப்போது இரண்டு நாளாகத்தான் ஹோட்டலில் சாப்பிடுகிறான். நேற்று ராத்திரியே ஹோட்டல் சாப்பாடு வேண்டாம் வேண்டாம் என்பதுபோல கடாமுடா என்று வயிறு சத்தம் போடத் தொடங்கிவிட்டது. காலையில் கொஞ்சம் பரவாயில்லை. அதற்காக டிஃபன் சாப்பிடாமல் இருக்க முடியுமா? ஷட்டரை இழுத்துவிட்டு அதே பிளாட்ஃபாரத்தின் கடைசியில் இருக்கும் டிஃபன் சென்டருக்குப் போய் நான்கு இட்லி சாப்பிட்டான்.
வயிறு நிறைந்ததுபோல் இருந்தது. திரும்ப வந்து உட்கார்ந்தவுடன் வயிற்றுக்குள் டிரெயின் போகும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. என்னடா இது வம்பாப் போச்சு…? சாப்பிடாம இருக்கவும் முடியலை. சாப்பிட்டா வயிறு ஏத்துக்கவும் மாட்டேங்குது… இது பெரிய பிரச்னையா போச்சே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது இரண்டு பேர் வந்து ஃபோன் பேசினார்கள்.

அவர்கள் பேசும்வரை அமைதியாக இருந்த வயிறு மீண்டும் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டது. இதற்குமேல் தாக்குப்பிடிக்க முடியும் என்று வீரையனுக்கு தோன்றவில்லை. மீண்டும் ஷட்டரைப் போட்டுவிட்டுக் கையில் கம்பை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான்.

காலையில் சாப்பிட்ட இட்லிக்கே இவ்வளவு ஒத்துழையாத வயிறு மத்தியான சாப்பாட்டை எப்படி ஏற்றுக்கொள்ளும் என்று கவலையாக இருந்தது. மெதுவாகச் சமையல் கட்டு பக்கம் போனான். கேஸ் ஸ்டவ், பாத்திரங்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.பல பிளாஸ்டிக் டப்பாக்களில் சமையலுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் போட்டு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தான். சீரகம், நல்ல மிளகு, கடுகு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள் என்று எல்லாம் இருப்பதைப் பார்த்தான். ஒவ்வொரு டப்பாவாகத் திறக்கும்போது வந்த வாசனையே அவனுக்கு அவற்றின் பெயரைத் தெரிவித்தன.

வீரையனுக்கு அம்மாவின் நினைவு வந்தது. மண்ணெண்ணெய் ஸ்டவ்வைப் பற்றவைத்துக் கொண்டு, அவள் சமைத்துப் பட்ட கஷ்டம் எல்லாம் அவனுக்குக் குரல் ரூபத்தில் காட்சியளிக்கத் தோன்றியது. அம்மா சமைக்கும்போது பெரும்பாலும், வீரையன் பக்கத்தில்தான் இருப்பான். கண்ணில்லாத அவனுக்கு வீடுதான் உலகம். அம்மாதான் எல்லாம். அம்மா இருக்கும் இடங்களில் எல்லாம் அவனும் இருப்பான், அம்மா இருக்கும் இடம் சமையல் அறை என்பதால் பெரும்பாலும் அவனும் அங்கேதான் இருப்பான்.
அம்மா சமைக்கத் தொடங்கி விட்டால் புலம்பிக்கொண்டே இருப்பாள். புலம்பல் என்றால் மெதுவாக அல்ல. சத்தம்போட்டுப் புலம்பிக்கொண்டே சமைப்பாள்.

ரசச் சட்டி எங்கேன்னு காணலையே… என்று சொல்லிக்கொண்டே ஓ இங்கே வெச்சுருக்கேன்னா சரி… சரி… இதை அடுப்புல வச்சா சமையல் முடிஞ்சு போயிடுமா என்ன? அது அதைப் பக்குவமா செஞ்சாதான் சமையல். கைக்கு வந்ததை அள்ளிப் போட்டா ரசம் வந்துடுமா? ம்… ம்கூம்… என்று சொல்லிக்கொண்டே இந்த எண்ணெய்க் குப்பியைக் காணலியே… என்பாள்.இங்க இருக்கா… இந்த எண்ணெயைச் சட்டியில் ஊத்தணும்… அது கொதிக்கறதுக்குள்ளால கடுகையும் உளுத்தம் பருப்பையும் போடணும்… இந்தக் கரண்டி எங்கே… கிண்டிவிட்டாதான் ஒரே சீரா பொரியும் என்றபடி கரண்டியால் கிண்டுவாள். கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டாதான் ரசம் மணக்கும். புளியைக் கரைச்சி வைச்ச எனக்கு, தக்காளியை வெட்டிப் போடணுங்கறது மறந்து போச்சே என்று தக்காளியை வெட்டி போடுவாள். எல்லாத்தையும் எடுத்து அப்படியே கொதித்துக்கொண்டிருக்கும் சட்டியில் கொட்டுவாள். உப்புப் போடலியே என்று நினைவு வந்தவள் போல் உப்பை எடுத்துப் போடுவாள்.

உப்பைப் போடுவதற்கு முன்னும் புலம்புவாள். உப்பு வெலை கொறைவுன்னு அள்ளிப் போட்டுடவா முடியும்… ஒரு செம்பு தண்ணின்னா ஒரு கை உப்புதான் போடலாம்… அப்பதானே வாயிலே வைக்கமுடியும். சரி… சரி… கொதிச்ச உடனே எறக்கணும்… அப்பதான் ரசத்துக்கே மணம் போகாது என்று இறக்கி வைப்பதுவரை புலம்பிக்கொண்டே அம்மா சமையல் செய்ததை நினைத்துப்பார்த்தான் வீரையன். என்ன சமையல் செய்தாலும் இப்படித்தான் புலம்புவாள். அப்போது எல்லாம் வீரையனுக்கு அம்மா புலம்புவது பிடிக்காது. எரிச்சலாய் இருக்கும்.

இப்போது ஒவ்வொரு டப்பாவாக எடுத்துப் பார்க்கும்போது சாம்பார் வைப்பதும் ரசம் வைப்பதும் படம்போல் அவனது மனக்கண்ணில் ஓடியது. ஹோட்டலில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான் வீரையன்.

இப்போதுதான் அவனுக்கு அம்மா புலம்பியதன் அர்த்தம் தெரிந்தது. எனக்குச் சமையலின் எல்லா நுணுக்கத்தையும் புரிய வைப்பதற்காகத்தான் அப்படிப் புலம்பியிருக்கிறாள் என்று நினைத்தபடியே அம்மாவின் தீர்க்கதரிசனத்தில் சமைக்கலானான் வீரையன்.

– முகிலை இராசபாண்டியன் (ஜனவரி 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *