ராகவன் சார் ரிட்டயர்டு ஆகி அடுத்த நாளே இரண்டு கம்யூட்டர்,ஒரு ஜெராக்ஸ் மிஷினுடன் மெயின் ரோட்டில் அந்தக் கடையை ஆரம்பிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அவருடைய பக்கத்து ஆபிஸில் வேலை செய்யும் நானும் எதிர்பார்க்கவில்லை!
அவர் அரசாங்க வேலையில் இருக்கும் போதே மிகவும் சின்சியரானவர் என்று பெயர் எடுத்தவர்.ஆபிஸீக்கு முதல்ஆளாக வருபவர் கடைசியில் தான் வீட்டுக்குச் செல்வார்.அவருடைய வேலை முடிந்தாலும் மற்றவர்களுக்கான வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்வார்.அதனால்தான் அவர் ரிட்டயர்டு ஆனவுடன் ஹாயாக ரெஸ்ட் எடுப்பார் என நினைத்தேன். ஆனால் இப்படி ஒரு கடையைத் திறந்து தன்னை மேலும் பிஸியாக்கிக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அவரிடமே அதற்கான காரணத்தைக் கேட்டுவிட எண்ணி அவருடைய கடைக்கு அவர் தனிமையில் இருக்கும் போது சென்றேன்.
என்னுடைய சந்தேகத்தை அவரிடம் கேட்டவுடன் என்னை தீர்க்கமாகப் பார்த்தார்.”தம்பி யாரிடமும் சொல்லி விடாதீர்கள். என் மேல் அக்கறை எடுத்து நீங்க கேட்கிறதால சொல்றேன்.
என் மனைவி ஒரு ராட்சசி! அவளோட அரைமணி நேரம் கூட என்னால பேசிட்டு இருக்க முடியாது சண்டை போட்டு என்னை நிம்மதியா இருக்க விட மாட்டா! அதனால தான் என்னோட கவனத்தை வேலை பார்க்கும் போது ஆபிஸ்லயும் இப்போ இந்த கடையிலயும் செலுத்தி தப்பிச்சுகிறேன்.” என்றார்.
நான் வாயடைத்துப் போனேன்.