யாருப்பா அது? – ஒரு பக்க கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 35,104 
 

‘ பிரபல சினிமா தயாரிப்பாளர் சின்னான் குத்திக் கொலை ! ‘ தினசரிகளை புரட்டிய சினிமா வட்டாரமே அதிர்ந்து.

ரொம்பத் தங்கமான ஆள். முதல் படத்திலேயே சூப்பர், டூப்பர் கொடுத்து பணத்தை ஒன்றுக்குப் பத்தாக அள்ளி குறுகிய காலத்திலேயே பெரிய தாயாரிப்பாளராக வளர்ந்தவர்.

அவருக்கு எதிரி..! – நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை,.

” கொலை செய்தவன் யாராய் இருக்கும்….? ” – ஊட்டியில் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்த பேர் சொல்லும் பெரிய இயக்குனர்களில் ஒருவனான கணேஷ் படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுக் கேட்டான்.

” இப்போ… இந்தத் தொழிலிலும் ரௌடிங்க நுழைஞ்சிட்டாங்க சார். அன்னைக்குப்.. பெங்களூருல ஒரு ஒளிப்பதிவாளர் கொலை . நேத்திக்கு… மும்பையில் ஒரு தயாரிப்பாளர். இன்னைக்குச் சென்னை.! நாளைக்கு எங்கே,. யாரோ…? ” – உதவி இயக்குனர் உத்தமப்புத்திரன் சர்வசாதாரணமாகச் சொன்னான்.

கேட்ட கணேசுக்கு உள்ளம் நடுங்கியது.

” என்னப்பா ! நான் ஒன்னு கேட்டா நீ ஒன்னு சொல்லிப் பயமுறுத்தறே..? ! ” உதறலுடன் சொன்னான் .

” நிலமை அப்படி சார் . இன்னைக்கு……இந்தத் தொழில்ல கந்து வட்டி , கதர் வட்டி ,கொலை, கொள்ளைக்காரனெல்லாம் உள்ளே புகுந்துட்டானுங்க….இன்னைக்குப் பணம் கொடுத்தா எவனையும் கொல்ல கூலிகளும் அதிகம் பெருத்துட்டானுங்க.. எவன் ..என்னக்கு யாரைப் போடப்போறான்னு யாருக்கும் தெரியாது. ” அவன் மேலும் சொல்லி அவரைக் கதறடித்தான்.

” சரி. சரி. பேக் அப் ! செத்தவருக்கு இரங்கல் ! ” கணேஷ் தன் நடுக்கத்தை வெளிக்காட்டாமல் சொன்னான் .

படைப்பிடிப்பிற்கு உற்சாகம் ! – மூட்டைக் கட்டினார்கள் .

அறைக்கு வந்ததும் கணேசுக்கு மனசு சரி இல்லை.

அலமாரியைத் திறந்து உயர்ரக மது, முந்திரி வறுவல், கண்ணாடிக் கிளாசை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான் .

மூன்றாவது சுற்றுத் தொட்டபோது கண்கள் லேசாக சொருகியது.

அதே சமயம்… அறைக்கதவை எவரோ தட்டினார்கள்.

” எஸ்..! ” தள்ளாட்டத்துடன் எழுந்தான் .

சமாளித்துக் கொண்டு நடந்து கதவைத் திறந்தான் .

” வணக்கம் சார். ! ” – எவனோ ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான்.

” யாருப்பா நீ..? ”

” கொலையாளி..! ” வந்தவன் கதவைத் தாளிட்டான்.

” கொலையாளியா….ஆஆ….!! ” – கணேசுக்குப் போதை பறந்தது.

” ஆமாடா…! நாலு வருசத்துக்கு முன்னால.. வாய்ப்புத் தேடி அலைஞ்ச ஒரு பொண்ணைப் புடிச்சி, கற்பழிச்சு , நீலப்படம் எடுத்தீங்களே…! அவளோட புருசன் நான் . மொதல்ல படம் புடிச்ச கேமரா மேனைக் கொன்னேன். நேத்திக்குத் தயாரிப்பாளர், இன்னைக்கு இயக்குனர் நீ..! ” கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் கத்தியை எடுத்து ஆவேசமாக அவன் வயிற்றில் சொருக….

‘ஹக் ! ‘ – கணேஷ் கத்தக்கூட திராணி இல்லாமல் தரையில் சாய்ந்தான் !

நாலு உதை உதைத்துக் கொண்டு தன் கடைசி மூச்சை விட்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *