கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: கிரைம் த்ரில்லர்
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 71,411 
 

இருபத்து மூன்றாம் தேதி காலை, ஒன்பது மணி.

உடம்பை வருடும் குளிருடன் பெங்களூர் நகரம் மெல்ல இயங்க ஆரம்பித்திருந்தது.

க்ரைம் இன்ஸ்பெக்டர் ரங்கநாத் தன் அலுவலக அறையில் அன்றைய பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

வாசலில் நிழலாடவே நிமிர்ந்து பார்த்தார். உள்ளே வந்த ஒரு நாகரீகமான இளஞன், முகத்தில் ஏராளமான சோகத்துடன், “இன்ஸ்பெக்டர், ஐ யாம் பாஸ்கர். நேற்று மாலையிலிருந்து என் மனைவியைக் காணவில்லை. நீங்கள்தான் எப்படியாவது அவளைக் கண்டுபிடித்துத் தர வேண்டும்” – குரல் உடையச் சொன்னான்.

இன்ஸ்பெக்டர் ரங்கநாத் சுறுசுறுப்பானார்.

“மிஸ்டர் பாஸ்கர், உட்கார்ந்து, அமைதியா, எல்லாத்தையும் விவரமாச் சொல்லுங்க.”

“சார், நேற்று நான் ஆபீஸ் முடிந்து ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியிருந்தது. என்னிடமிருந்த டூப்ளிகேட் சாவியின் உதவியால் உள்ளே சென்றேன்… என் மனைவி வீட்டில் இல்லாததை நான் இயல்பாக எடுத்துக் கொண்டேன். சினிமா போயிருக்கலாம் அல்லது தெரிந்தவர்கள் வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என நினைத்தேன். ராத்திரி முழுக்கத் தூங்காது காத்திருந்தேன் இன்ஸ்பெக்டர். அவள் வரவில்லை. இன்று காலை என் ஆபீஸூக்கு போன் பண்ணி லீவு சொல்லிவிட்டு நேராக உங்களிடம் வந்திருக்கிறேன். எனக்கு பயமா இருக்கு இன்ஸ்பெக்டர்.”

“எங்கு வேலை செய்யறீங்க?”

“காதம்பரி இன்டஸ்ட்ரீஸ் ஜெனரல் மானேஜர்.”

“உங்க மனைவியின் பெயர்?”

“வித்யா.”

“வயது?”

“இருபத்தேழு.”

“ஓகே, ஒரு கம்ப்ளெயிண்ட் எழுதிக் கொடுங்க.”

பாஸ்கர் எழுதிக் கொடுத்தவுடன், இன்ஸ்பெக்டர் தொப்பியை அணிந்து கொண்டார். எழுந்து நின்று பெல்டை சரி செய்து கொண்டார்.

‘வாங்க பாஸ்கர், உங்க வீட்டுக்குப் போகலாம்.”

வீட்டின் முன்பு விதவிதமான பூஞ்செடிகள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. பக்கவாட்டில் பெரியதாக கார் காரேஜ் இருந்தது. சுற்றிலும் தோட்டம், உள்ளே மூன்று பெட்ரூம்களுடன் வீடு பெரியதாக இருந்தது.

“பாஸ்கர் உங்க மனைவியின் சொந்த ஊர் எது?”

“மெட்ராஸ்”

“ஒருவேளை மெட்ராஸ் போயிருக்கலாமே…”

“இல்ல சார், இன்னிக்கு காலைல எஸ்.டி.டி. போட்டு அவள் வீட்டிற்கு தற்செயலாகப் பேசுவது போல் பேசினேன். அவள் மெட்ராஸ் செல்லவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்தான் உங்களிடம் வந்தேன்…அவள் வீட்டிற்கு இன்னமும் விஷயம் தெரியாது.”

“உங்களுக்குள்ள சமீபத்தில் பெரிய சண்டை, கோபம் ஏதாவது…?”

“இல்லை இன்ஸ்பெக்டர்.”

ஹாலில் இருந்த தொலைபேசியை எடுத்து, கன்ட்ரோலுடன் தொடர்பு கொண்டு, வித்யாவைப் பற்றிச் சொல்லி தேடச் சொன்னார். பாஸ்கரிடமிருந்து அவனது விஸிட்டிங் கார்டையும், வித்யாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்றையும் கேட்டு வாங்கிக் கொண்டார்.

கிளம்புமுன், “பாஸ்கர், கவலைப் படாதீங்க. நாங்க எப்படியும் வித்யாவைக் கண்டுபிடித்து விடுவோம்…தேவைப் பட்டால் உங்களை கான்டாக்ட் பண்றேன்” என்றார்.

“சார், நான் ஆபீஸ் விஷயமாக இன்று மாலை ஐந்து மணி ப்ளைட்டில் பாம்பே செல்ல வேண்டும், நாளை மாலை திரும்பி விடுவேன்…” அனுமதி கேட்கும் பாவனையில் சொன்னான் பாஸ்கர்.

ஒரு நிமிடம் யோசித்த இன்ஸ்பெக்டர், நாளைதான் திரும்பி வந்துவிடுகிறானே என்கிற நினைப்பில் “நோ ப்ராப்ளம், போயிட்டு வாங்க” என்றார்.

பாஸ்கர் உடன்வர வெளியே வந்தார். “பாஸ்கர், உங்க காரில் ஸ்டேஷன் வரை ஒரு ட்ராப் வாங்கிக்கறேன் !”

“ஓ ஷ்யூர்.”

இன்ஸ்பெக்டர் காரில் ஏறிக்கொள்ள, பாஸ்கர் கதவைச் சாத்தினான்.

கார் கிளம்பியதும் இன்ஸ்பெக்டர் டிரைவரை நோட்டம் விட்டார்.

“உன் பேரென்னப்பா?”

“ரமேஷ் சார்.”

“ரமேஷ், இந்தக் கார் பாஸ்கரின் சொந்தக் காரா?”

“இல்ல சார், கம்பெனி கார்.”

“நீதான் அவருக்கு டிரைவரா?”

“ஆமா சார்.”

“எத்த்னை வருஷமா அவருக்கு கார் ஓட்டறே?”

“ரெண்டு வருஷமா சார்.”

“லாக் புக்கெல்லாம் மெயிண்டெய்ன் பண்றதுண்டா?”

“ஆமா சார்.”

“நேத்து சாயங்காலம் என்ன ட்யூட்டி உனக்கு?”

“ஆபீஸ்லேர்ந்து மிஸ்டர் பாஸ்கரை ஏழரை மணி வாக்கில் அவர் வீட்டில் ட்ராப் செய்துவிட்டு, க்ளோஸிங் கிலோ மீட்டர் ¡ரீடிங் எழுதி அவா¢டம் கையெழுத்து வாங்கியதும் கார் சாவியைக் கொடுத்துவிட்டு நான் என் வீட்டுக்குப் போயிட்டேன் சார்.”

“இன்னிக்கு காலைல நீதானே வண்டிய எடுத்த?”

“ஆமா சார்.”

“வண்டி எடுக்கும்போது ஓப்பனிங் கிலோ மீட்டர் ¡ரீடிங் எழுதுவதான?”

“ஆமா சார். எழுதினேன்”

“லாக் புக்கை எடு பார்க்கலாம்.”

டாஷ்போர்டைத் திறந்து எடுத்து இன்ஸ்பெக்டா¢டம் கொடுத்தான். இன்ஸ்பெக்டர் புரட்டிப் பார்த்தார். நேற்று க்ளோஸிங் கிலோ மீட்டர் 20018. இன்று ஓப்பனிங்கில் 20026 என்று இருந்தது. டிரைவர் இல்லாமல் வண்டி எட்டு கிலோ மீட்டர் ஓடியிருப்பதைப் புரிந்து கொண்டார்.

“பாஸ்கருக்கு கார் ஓட்டத் தெரியுமா?”

தெரியும் சார், ஆனா எப்பவாச்சும்தான் ஓட்டுவார்.”

ஸ்டேஷனில் இறங்கிக் கொண்டார்.

உடனே தொலைபேசியில் பாஸ்கருடன் தொடர்பு கொண்டார்.

“பாஸ்கர் உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?”

“தெரியும் சார், ஆனா டிரைவர் இருக்கறதுனால அக்கேஷனலா ஓட்டுவேன்.”

“நேத்து ராத்திரி உங்க கார்ல எங்கே போனீங்க?”

“நேத்தா… ராத்திரி எங்கேயுமே போகல சார், என் மனைவிக்காக வீட்டிலேயே காத்திருந்தேன்.”

“அப்ப வேற யாருக்காவது கார் குடுத்தீங்களா?”

“இல்ல, யாருக்கும் தரல்ல.”

“ஆல்ரைட் பாஸ்கர், தேவைப்பட்டா மறுபடியும் உங்களைக் காண்டாக்ட் பண்றேன்.”

இன்ஸ்பெக்டருக்கு பாஸ்கரின் மீது முதன் முதலாகச் சந்தேகம் ஏற்பட்டது.

தனது உதவியாளரைக் கூப்பிட்டு, காதம்பரி இன்டஸ்ட்¡ரீஸ் சென்று பாஸ்கரைப் பற்றிய விவரங்களை ரகசியமாகச் சேகரிக்கச் சொன்னார்.

கன்ட்ரோலுடன் தொடர்பு கொண்டு, வித்யாவைப் பற்றி ஏதாவது தெரிந்ததா என்று விசாரித்தார்.

மதியம் ரயில்வே ஸ்டேஷன் சென்று, முந்தைய தினம் புறப்பட்டுச் சென்ற அனைத்து ரயில்களின் ரிசர்வேஷன் சார்ட்களைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார்.

பெங்களூர் ஏர்போர்ட்டில் சார்ட்டைப் பார்த்தபோது, வித்யா பாஸ்கரின் பெயர் முதல் நாள் – அதாவது 22ம் தேதி இரவு, ‘I.C. 510 இரவு எட்டு மணி’ என்று மெட்ராஸ் ப்ளைட்டில் இருந்தது.

ஏர்போர்ட் டியூட்டி ஆபீஸா¢டம் சென்று டிக்கெட்டின் கார்பன் பிரதியை வாங்கிப் பார்த்தபோது டிக்கெட் டிராவல் ஏஜன்ஸி மூலமாக வாங்கப்படாது, பணம் கொடுத்து வாங்கப் பட்டிருப்பதை அறிந்து கொண்டார்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு திரும்பி வந்தார்.

மெட்ராஸ் போலீஸ¤டன் தொடர்புகொண்டு, வித்யாவைப் பற்றிய விவரங்களைச் சொல்லி, அவளைத் தேடும்படி கேட்டுக்கொண்டார்.

காதம்பரி இன்டஸ்ட்¡ரீஸ் சென்றிருந்த உதவியாளர் மாலை ஐந்தரை மணிக்கு திரும்பி வந்து இன்ஸ்பெக்டரிடம், “சார், பாஸ்கர் ஜெனரல் மானேஜராக இருக்கிறார். அவருக்கும் அவர் செகரட்டா¢ திவ்யாவுக்கும் ரொம்ப நெருக்கமாம். சில சமயம் பாஸ்கர், ஜெயநகரில் உள்ள அவள் வீட்டிலேயே இரவு தங்குவதுண்டாம். திவ்யா ஒரு மாதிரியான பெண்ணாம்.

பாஸ்கரின் மனைவி வித்யாவுக்கு, இந்தத் தொடர்பு தெரிய வந்ததிலிருந்து அவர்களிடையே அடிக்கடி சண்டைகூட வருவதுண்டாம்…இதுதான் சார் திவ்யாவின் ஜெய நகர் முகவா¢.”

அவன் தந்த பேப்பரில் திவ்யாவின் அட்ரஸ¥ம், டெலிபோன் நம்பரும் இருந்தது.

இன்ஸ்பெக்டர் ரங்கநாத் கேஸ் பிடிபடுவதை உணர்ந்தார்…

அன்று இரவு எட்டு மணிக்கு ஜெயநகரிலுள்ள திவ்யாவின் வீட்டிற்குச் சென்று, பஸ்ஸரை அழுத்தினார்.

கையில் கார்ட்லஸ் போனுடன் திவ்யாதான் கதவைத் திறந்தாள். உடுப்பில் இருந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து வியந்தாள்.

“நீங்கதானே திவ்யா?”

“எஸ் ப்ளீஸ்.”

“நான் க்ரைம் இன்ஸ்பெக்டர் ரங்கநாத், உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.”

“ப்ளீஸ் உள்ள வாங்க.”

உள்ளே சென்று வரவேற்பறையில் அமர்ந்தார்கள்.

“நேற்று மாலையிலிருந்து உங்க ஜெனரல் மானேஜர் பாஸ்கரின் மனைவியைக் காணவில்லை.”

“ஆமாம், இன்று முழுதும் ஆபீஸில் இதைத்தான் பேசிக் கொண்டார்கள்.”

“உங்களுக்கு பாஸ்கரை ‘ரொம்ப’ நன்றாகத் தெரியுமென்றும், அடிக்கடி அவருடன் நீங்கள் வெளியே போவதுண்டு என்றும் கேள்விப் பட்டேன்… அவர் மனைவி காணாமல் போனது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது தகவல் தெரியும் என்று நம்புகிறேன்.”

‘ரொம்ப’ வில் சற்று அழுத்தம் கொடுத்தார்.

“இன்ஸ்பெக்டர், அவர் கூப்பிட்டால் அவருடைய செகரட்டா¢ என்கிற முறையில் அவருடன் வெளியில் செல்வதில் என்ன தப்பு? அப்படியே எங்களுக்குள் ஏதாவது இருந்தாலும் அது எங்களுடைய பர்சனல் விஷயம். நீங்க அவரது மனைவியை ட்ரேஸ் பண்ணா முதல்ல சந்தோஷப் படறது நானாகத்தான் இருப்பேன்” என்றாள்.

மிரட்டினால் உண்மை வரும் என இன்ஸ்பெக்டர் நினைத்து, சற்று அதட்டலாக, “கார்ட்லஸை எங்கிட்ட குடுங்க, நான் பாஸ்கரிடம் பேசணும். அவருடைய பம்பாய் நம்பர் என்ன?” என்றார்.

“எனக்கு அவர் பாம்பே போனதே தெரியாது. அவர் எங்க தங்குவார்னும் தெரியாது” என்றாள்.

இன்ஸ்பெக்டர் வெறுப்புடன் திவ்யாவை முறைத்துவிட்டு வெளியேறினார்.

இன்ஸ்பெக்டர் அன்று இரவு தன் வீட்டில் மிகவும் யோசித்து, ஒரு வெள்ளைத் தாளில் இப்படி எழுதினார்:

1) 22ஆம் தேதி இரவு பாஸ்கர் எட்டு கிலோ மீட்டர் தூரம் கார் ஓட்டியதை மறைக்கிறான்;
2) சென்னைக்கு வித்யா போகவில்லை. போலீஸை திசை திருப்ப அவள் பெயா¢ல் வேறு யாராவது பயணித்திருக்கலாம்;
3) 22,23 தேதிகளில் திவ்யா சரியான நேரத்திற்கு அலுவலகம் சென்று வந்திருக்கிறாள்;
4) பாஸ்கரும், திவ்யாவும் சேர்ந்து வித்யாவைக் கொலை செய்திருக்கலாம். எனில், வித்யாவின் உடல் எங்கே?

மறு நாள் 24ஆம் தேதி காலை எட்டு மணிக்கு ஜீப்பை எடுத்துக்கொண்டு இந்திரா நகரிலுள்ள பாஸ்கரின் வீட்டையடைந்து, பூட்டியிருந்த வீட்டைச் சுற்றி வந்தார். தோட்டத்து மணற் பகுதிகள் புதிதாகத் தோண்டப் பட்டிருக்கிறதா என ஆராய்ந்தார்.

தடயம் ஒன்றும் கிடைக்கவில்லை.

வெளியே வந்து ஜீப்பினருகில் நின்று யோசித்தார். சட்டென்று ஓர் எண்ணம் பளிச்சிட, ஜீப்பை நேராக பெங்களூர் டெலிபோன்ஸ் அலுவலகத்துக்குச் செலுத்தினார். அங்கிருந்த கம்ப்யூட்டர் அறைக்குள் ஜில்லிட உள்ளே சென்று, டெலிபோன்ஸ் அதிகாரியிடம்
தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.

திவ்யாவின் வீட்டு டெலிபோன் நம்பரைச் சொல்லி, 22ஆம் தேதியிலிருந்து அந்த நிமிடம் வரை, திவ்யாவின் டெலிபோனிலிருந்து டயல் செய்யப்பட்ட நம்பர்களின் ப்ரிண்ட் அவுட் தரும்படி கேட்டார்.

பத்தே நிமிடங்களில் கிடைத்தது. கண்களை வேகமாக அதில் ஓட விட்டார்.

23 ஆம் தேதி இரவு பத்து மணிக்கு 022-4933101 நம்பருடன் பதினைந்து நிமிடங்கள் பேசப் பட்டிருந்ததை ப்ரிண்ட் அவுட் உறுதி செய்தது. 022 பாம்பே எஸ்.டி.டி. கோட் நம்பர்.

இன்ஸ்பெக்டர் உடனே டெலிபோன் அதிகாரி அனுமதியுடன், அங்கிருந்த தொலைபேசியில் 022-4933101 எண்ணுக்கு தொடர்பு கொண்டார்.

“தீனதயாளன் ஹியர்” என்றது குரல்.

“மே ஐ ஸ்பீக் டு காதம்பரி இண்டஸ்ட்¡ரீஸ் ஜி.எம். மிஸ்டர் பாஸ்கர் ப்ளீஸ்.”

“பாஸ்கர் ஹாஸ் கான் அவுட், எனி மெஸேஜ்?” என்றார் தீனதயாளன்.

இன்ஸ்பெக்டர் தொடர்பை உடனே துண்டித்தார்.

நேற்று தம்மிடம், பாஸ்கர் பாம்பே சென்றிருப்பதே தனக்குத் தெரியாது என்று சாதித்த திவ்யா, அவனுடன் பதினைந்து நிமிடங்கள் பேசியிருக்கிறாள் என்பதை இன்ஸ்பெக்டர் புரிந்து கொண்டார்.

டெலிபோன் அதிகாரிக்கு நன்றி சொல்லிவிட்டு, ப்ரிண்ட் அவுட்டுடன் ஜீப்பில் தாவியேறி நேராக போலீஸ் ஸ்டேஷன் வந்தார்.

டிரைவரைக் கூப்பிட்டு திவ்யாவை ஸ்டேஷனுக்கு அழைத்து வரச் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஒரு பெண் போலீசின் முன்னிலையில் திவ்யாவிடம் அதிரடித் தாக்குதலில் இறங்கத் தீர்மானித்துத் தயார் நிலையில் இருந்தார்.

உள்ளே நுழைந்த திவ்யாவிடம், இன்ஸ்பெக்டர் அதிகாரத் தோரணையுடன், “மிஸ் திவ்யா, நீங்களும் பாஸ்கரும் சேர்ந்து வித்யாவைக் கொலை செய்ததை பாஸ்கரே ஒப்புக் கொண்டுவிட்டார். பம்பாய் போலீஸ் இன்று காலைதான் பாஸ்கரை அரெஸ்ட் செய்தது. தவிர, நேற்று இரவு பத்து மணிக்கு நீங்க பாஸ்கருடன் பேசிய முழு விவரங்களும் எனக்குத் தெரியும். எதையும் மறைக்க முயற்சி பண்ணாதீங்க. இதோ நீங்க பேசியதற்கு அத்தாட்சியாக ப்ரிண்ட் அவுட்” என்று கையில் இருந்ததைக் காண்பித்தார்.

திவ்யா தொய்ந்து போய் அருகிலிருந்த பெண் போலீசின் மீது சரிந்தாள். முகத்தைப் பொத்திக்கொண்டு பெரிதாக அழுதாள். நாற்காலியில் அமர வைக்கப்பட்ட பின், “இன்ஸ்பெக்டர், பாஸ்கர் சொல்வது பொய். எனக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தமேயில்லை. என்னைத் திருமணம் செய்து கொள்வதாயும், அதற்கு இடைஞ்சலாக இருக்கும் வித்யாவை அவரே தீர்த்துக்கட்டி விடுவதாகவும் சொல்லி, போலீஸைத் திசை திருப்பி அலிபி உண்டாக்க, பாஸ்கர்தான் என்னை வித்யாவின் பெயா¢ல் 22 ஆம் தேதி இரவு எட்டு மணி ப்ளைட்டில் சென்னை சென்று, பின்பு அதே இரவு பத்து மணி பெங்களூர் மெயிலில் வேறு பெயரில் திரும்பி வருவதற்கு டிக்கெட் தந்தார்…அந்த வகையில் அவருக்கு நான் உடந்தையாக இருந்தது என் குற்றம்தான்.

வித்யா என்ன ஆனான்னு எனக்குச் சத்தியமாகத் தெரியாது.” என்று அழுகையினூடே புலம்பினாள்.

இன்ஸ்பெக்டருக்கு, திவ்யாவின் அழுகையில் உண்மை இருப்பது புலப்பட்டது.

இருபத்தியிரண்டாம் தேதி இரவில் வித்யா கண்டிப்பாகக் கொலை செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவளின் உடல் எங்கே? என்ற கேள்விக்கு அந்த எட்டு கிலோ மீட்டா¢ல் சூட்சுமம் இருப்பதாக நம்பினார்.

பெண் போலீஸிடம் திவ்யாவை கஸ்டடியில் வைத்திருக்கச் சொல்லிவிட்டு, ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்.

டிரைவரை அழைத்து ஜீப்பை எடுக்கச் சொல்லி நேராக பாஸ்கரின் வீட்டிற்கு மறுபடியும் வந்தார்.

யோசித்தார்.

பாஸ்கரின் வீட்டிலிருந்து மூன்று பாதைகள் செல்கின்றன. முதலாவது ஏர்போர்ட் ரோடு. இரண்டாவது நேர் எதிர் பாதை – தாஜ் ரெஸிடென்ஸி செல்வது. மூன்றாவது அல்சூருக்குப் போகும் ரோடு.

இருபத்தியிரண்டாம் தேதி இரவு இந்த மூன்று பாதைகளில் ஏதாவது ஒன்றில்தான் பாஸ்கர் நான்கு கிலோ மீட்டர் தூரம் பயணித்து, வீட்டிற்குத் திரும்பியிருக்க வேண்டும் என உறுதியாக நம்பினார்.

ஜீப்பைக் கிளப்பச் சொன்னார்.

பாஸ்கரின் வீட்டிலிருந்து சரியாக நான்கு கிலோ மீட்டர் தூரம் மூன்று பாதைகளிலும் அடுத்தடுத்து மெதுவாகச் செலுத்தி ஏரி, குளம், இடிந்த கட்டிடம் என்று ஏதாவது தட்டுப் படுகிறதா என உன்னிப்பாக கவனித்தார்.

புதிய கட்டிடங்கள் ஆங்காங்கே எழும்பிக் கொண்டிருந்தனவே தவிர, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் எதுவும் இல்லை. எனினும் இன்ஸ்பெக்டர் நம்பிக்கை இழக்கவில்லை.

திரும்பத் திரும்ப அதே மூன்று பாதைகளில் நான்கு கிலோ மீட்டர் போவதும், திரும்புவதுமாக இருந்தார்.

இன்ஸ்பெக்டருக்கு இன்று என்னவாயிற்று என டிரைவர் வியந்து கொண்டான்.

ஐந்தாவது முறையாக ஜீப் ஏர்போர்ட் ரோடில் வேகமாகச் சென்றபோது ‘தடக், தடக்’ என பெரிதாகச் சத்தம் எழுப்பிவிட்டுச் செல்ல, உடனே இன்ஸ்பெக்டர் வண்டியை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.

தடக், தடக் சத்தம் எதனால் வந்தது என ரோடில் பார்த்தபோது, வட்ட வடிவமான பாதாளச் சாக்கடை மூடியின் மீது ஜீப் ஏறியதால்தான் என்பதைப் புரிந்துகொண்டு ஜீப்பினருகில் சென்று கிலோ மீட்டர் ¡ரீடிங்கைப் பார்த்தார்.

பாஸ்கரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ மீட்டர் தூரம் காட்டியது.

உற்சாகத்துடன் திரும்பவும் சாக்கடையின் மூடிக்கு வந்தார். மூடியின் கொக்கியில் வலது கை விரல்களை விட்டு, பலம் கொண்ட மட்டும் மேலே தூக்கி இழுத்து அருகில் வைத்தார்.

உள்ளே ‘ஹோ’ வென்ற இரைச்சலுடன் சாக்கடை பாயும் சத்தம் கேட்டது. குனிந்து பார்த்தார். இருட்டாக இருந்தது. குப்பென்று நாற்றமடித்தது.

சாக்கடை மூடியை ஒரு பலசாலி எளிதாகத் தூக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்.

பாஸ்கரின் வீட்டிலிருந்து 3.5 கிலோ மீட்டர் தூரம் இந்த பாதாளச் சாக்கடை.

பாஸ்கரின் கார் உடனே வலது பக்கம் திரும்பிச் செல்லச் சாத்தியப் படாத வகையில் ஏர்போர்ட் ரோடில் டிவைடர் இருக்கிறது. நேராக அதே பாதையில் 0.5 கிலோ மீட்டர் தூரம் சென்று, டிவைடா¢ன் பிளவில் ‘யு’ டர்ன் அடித்துத் திரும்பிய பின், பாஸ்கர் வீட்டையடைந்தால் எட்டு கிலோ மீட்டர் தூரம் ஆகிறது என்பதைக் கணக்கிட்ட இன்ஸ்பெக்டருக்கு உற்சாகம் கரை புரண்டது.

சாக்கடையை மூடினார்.

ஜீப் டிரைவரை கார்ப்பரேஷனுக்கு அனுப்பி, ஆட்களைக் கூட்டி வரச் செய்தார்.

அரை மணியில் பாதாளச் சாக்கடையின் மூடி மறுபடியும் திறக்கப்பட்டு, இரண்டு ஆட்கள் உள்ளே லாகவமாகச் சென்றனர்.

இரண்டே நிமிடத்தில் பதறியடித்துக் கொண்டு மேலே வந்தார்கள்.

முகத்தில் கலவரம் படர, “சார், உள்ள ஒரு பொம்பளையோட பாடி இருக்கு சார்.” – பதற்றமானார்கள்.

இன்ஸ்பெக்டர் பிணத்தை வெளியே எடுக்க உத்தரவிட்டார்.

வெளியே எடுக்கப் பட்டதும், வித்யாதான் அது என்பதை வாடை தாங்காது மூக்கில் கர்சீப்பை பொத்திக்கொண்டு இன்ஸ்பெக்டர் உறுதி செய்து கொண்டார்.

பாடியை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பினார்.

உற்சாகத்துடன் ஸ்டேஷனையடைந்தார்.

022-4933101 எண்ணுடன் தொடர்பு கொண்டு திவ்யாவை காதல் தொனியில் பாஸ்க்ருடன் இயல்பாகப் பேசச் செய்தார்.

அன்று மாலை ப்ளைட்டில் பாஸ்கர் பெங்களூர் திரும்புவதாக திவ்யா சொன்னாள்.

மாலை ஏர்போர்ட் சென்று, பாம்பே ப்ளைட்டின் வரவுக்காகக் கையில் விலங்குடன் காத்திருந்தார் இன்ஸ்பெக்டர் ரங்கநாத்.

– கல்கி (30-9-1990)

Print Friendly, PDF & Email

15 thoughts on “புலன் விசாரணை

  1. நல்லா இருந்தது கதை இன்னும் சுவாரசியமாக கதை எமுத வாழ்த்துக்கள்

  2. Vidya.. Divyanu confuse panreenga bro…aduththa kadhaila plz confuze aahadha peyara veyyunga…but bro…you are super talentd…

    1. எதற்கு மகேந்திரன்? என்னை ஊடுகட்டி அடிப்பதற்கா? தாங்கள் சிறுகதைகள்.காம் முகப்பு பக்கத்திற்கு சென்று பொறுமையாகப் பாருங்கள். அதில் என்னை புகைப்படத்துடன் அறிமுகம் செய்துள்ளார்கள். அதில் என் கைப்பேசி எண்ணும் உள்ளது. எனினும் சொல்கிறேன், என் கைப்பேசி நம்பர் 9901 445599. நன்றி. வணக்கம். எஸ்.கண்ணன்

  3. ப்ரோ சம இண்டரஸ்டிங்\ மேலும் இது போன்ற கதை எழுத வாழ்த்துகள்

    1. மிக்க நன்றி திரு தணிகை அவர்களே. எழுத முயற்சிக்கிறேன்.

  4. மிக்க நன்றி திரு கனி அவர்களுக்கும் மேடம் கிருத்திகா அவர்களுக்கும். வணக்கங்கள் பல. எஸ்.கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *