பறிகொடுத்த பணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 19,875 
 

கோயமுத்தூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள அந்த தேசியமாக்கப்பட்ட வங்கியில் காலை நேர பரபரப்பு தொற்றிக்கொண்டது, வாடிக்கையாளர்கள் உள்ளே வரத்தொடங்கிவிட்டனர். பத்துமணிக்கு வங்கி சேவைகள் ஆரம்பிக்க வேண்டும்.மணி 9.45, தன்னுடைய நாற்காலியில் உட்காரப்போன காசாளர் கணேசன் மனதுக்குள் “அப்பனே கணேசா” இன்னைக்காவது கணக்கு வழக்குல எந்த பிரச்னையில்லாம, கள்ள நோட்டு எதுவும் வராம என் வேலய ஐஞ்சு மணிக்குள்ள முடிச்சுக்கொடுப்பா!வேண்டிக்கொண்டு தன் நாற்காலியில் உட்கார்ந்தான்.அவன் அங்கிருந்தவாறே வங்கியின் வாசலை பார்க்க முடியும், அவினாசி சாலையையும் ஓரளவு பார்க்கமுடியும்.

கணேசன் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு முன் கணக்கு வழக்குகள் சரி பார்த்து ஒப்படைத்த பின் தான் செல்ல வேண்டும், ஆனால் இந்த ஒரு மாதமாய் தினமும் கணக்கு வழக்குகள் சீக்கிரமாய் முடியாமல் இழுபறியாகவே உள்ளன. எப்படியும் வீடு போய் சேர இரவு ஏழு மணிக்கு மேல் ஆகிவிடுகிறது, வீட்டில் அவன் மனைவி குழந்தைகள் அவனை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. மனைவி அருகில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் உத்தியோகம், அதனால் அவளால் மாலை நேரத்துக்குள் வீடு போய் சேர முடிகிறது, ஆனால் நம்முடைய வேலை அப்படிப்பட்டதல்லவே, மனதுக்குள் இன்று நேரத்துக்குள் வீடு போய் சேர வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.

அதே நேரத்தில் அவினாசியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் அக்கவுண்ட்ஸ் மேலாளர் தன் நம்பிக்கைக்குரியவர்களான மணி, ராமன் இருவரையும் அழைத்தார்.அவர்களிடம் ரூபாய் ஐந்து லட்சத்துக்கான செக் ஒன்றை கொடுத்து கம்பெனி கார்லயே போங்க!, பன்னிரண்டு மணிக்குள்ள வந்திடுங்க, வந்த பின்னால ஸ்டாப்புங்களுக்கு சம்பளம் போட ஏற்பாடு பண்ண ஆரம்பியுங்க, நாளைக்கு வேற லீவு! சரி கிளம்புங்க, காரில் சென்று கொண்டிருக்கும்போது மணி டிரைவரிடம் அண்ணே வண்டியை எங்காவது ஒரு பேக்கரி பக்கம் நிறுத்துங்கண்ணே, ஒரு டீ போட்டுட்டு போகலாம் என்று சொன்னான். வண்டி கருமத்தம்பட்டி தாண்டி ஒரு பேக்கரி அருகில் நின்றது,வண்டியை விட்டு இறங்கியவர்கள் நீங்களும் வாங்கண்ணே, என்று டிரைவரையும் அழைத்தார்கள், முதலில் மறுத்த டிரைவர் பின் மனம் மாறி அவர்களுடன் பேக்கரிக்குள் நுழைந்தார்.

பேக்கரிக்குள் கூட்டம் இருந்த்து, அவர்கள் காலியாக இருந்த ஒரு டேபிளில் அமர்ந்தனர். என்ன வேண்டும் என்று கேட்ட சர்வரிடம் மூன்று டீ க்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, மணி நாளைக்கு என்ன புரோகிராம் போட்டிருக்க ராமா என்று கேட்க, முதல்ல இன்னைக்கு சம்பளம் கைக்கு வரட்டும் அதுக்கு பின்னால நாளைக்கு புரோகிராம போடலாம், என்னப்பா நாம பேங்குக்கு போய்ட்டு பன்னிரண்டுக்குள்ள வந்துருவம்ல, எப்படியும் சாயங்காலத்துக்குள்ள சம்பளம் போட்டுடலாம், என்றான்.பாக்கலாம் என்று சொல்ல அதற்குள் டீ வர மூவரும் டீ குடிப்பதில் மும்முரமாகினர்.குடித்து முடித்து மணி எழுந்து டீ க்கான பணத்தை கொடுத்துவிட்டு வந்து வண்டியை கிளப்பினர்.அந்த வண்டி கிளம்பியபின் ஒரு பைக்கும் அடுத்ததாக ஒரு வேனும் அவர்களுக்கு தெரியாமலே அந்த வண்டியை தொடர ஆரம்பித்தது.

வங்கி பரபரப்பானது, கணேசன், டோக்கன் நம்பர் வரிசைப்படி, வர வர பணம் பட்டுவாடா செய்து கொண்டே இருந்தான், அவனிடம் ஒரு நல்ல பழக்கம்,எதிரில் நிற்பவரிடம் சில்லறையா வேண்டுமா? நோட்டா? என்று கேட்பான், அவர்கள் எப்படி கேட்கிறார்களோ, அப்படி கொடுப்பதால் வாடிக்கையாளர்கள் அவனிடம் நல்ல முறையில் பழகுவர். ஒவ்வொருமுறையும் வாடிக்கையாளர்களை நன்கு பார்த்தே கொடுப்பான்.மணிக்கு டோக்கன் எண் பத்து என்றிருந்தது. டோக்கன் எண் பத்து என்று அறிவித்தவுடன் மணி எழுந்து போய் கணேசன் இருந்த “கவுன்டர்” எதிரில் நின்று டோக்கனை கொடுத்தான்,’செக்” தொகையை பார்த்தவன் சார் சில்லறையா? நோட்டா? என்று கேட்க இவன் சில்லறயாகவே கொடுங்கள் என்று சொன்னான், அதைக்கேட்டுக்கொண்டிருந்த கணேசனின் கண்கள் யதேச்சையாக வெளியே பார்த்து ஐந்து நிமிடங்கள் நிலைகுத்தி நின்றது, அதன்பின் சுய நினைவு வந்தவன் போல் சில்லறையின்னா ஒரு பத்து நிமிசம் ஆகும், நீங்க மானேஜர் ரூம் பக்கத்து ரூம்ல உக்காருங்க, என்று அவர்களை உள்ளே அழைத்து உட்காரவைத்துவிட்டு அவர்களிடமிருந்து பணம் எடுத்துசெல்ல கொண்டு வந்திருந்த சூட்கேசை வாங்கிக்கொண்டு மானேஜர் அறைக்குள் நுழைந்தான்.

கணேசன் வெளியே வர பதினைந்து நிமிடங்கள் ஆனது, சூட்கேசை கொண்டு வந்து கொடுத்தவன், பத்திரம் சார், என்று கொடுத்தான். அவர்களும் அவசர அவசரமாக அதை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.சே! இந்த கேசியர்னால லேட்டாயிடுச்சு என்று புலம்பிக்கொண்டே அண்ணே சீக்கிரம் வண்டியை எடுங்க, என்று அவசரப்படுத்தினார்கள்.

வண்டி தெக்கலூர் தாண்டி செல்லும்போது குறுக்காக திடீரென்று ஒரு பைக் வர அதில் மோதாமல் இருக்க டிரைவர் சடன் பிரேக் அடிக்க, குறுக்கே வந்த பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்தவன் சடாரென் இறங்கி ஓடி வந்து டிரைவரின் தொண்டைக்கு நேரே அருவாளை வைத்தான். வண்டியை எடுத்த! அப்படியே ஒரு வெட்டு வெட்டிடுவேன் என மிரட்டினான், அதற்குள் பின்னால் வந்த கார் ஒன்று க்ரீச்சிட்டு நிற்க அதிலிருந்து இருவர் ஒடி வந்து இவர்கள் இருவரையும் வெளியே இழுத்து கையில் இருந்த சூட்கேசை பறித்தனர், கொடுக்கமறுத்த மணியை மற்றொருவன் அருவாளை சீவுவது போல அவன் அருகில் வர மணி பயந்து பின் வாங்கினான். அதற்குள் அவர்கள் சூட்கேசை பறித்துக்கொண்டு பறந்து விட்டனர்.இத்தனையும் கண்மூடி கண் திறப்பதற்குள் நடந்தது போல் தெரிந்தது.

ஐந்து லட்சம் ரூபாய், கண் முன்னால் பறி போய்விட்டது, சொன்னால் கம்பெனி நம்புமா! அழ ஆரம்பித்துவிட்டான் மணி, எப்படி! எப்படி நடந்தது, நம்பவே முடியவில்லை ராமன் செல் போனை எடுத்து அக்கவுண்டன்ஸ் மேலாளிடம் நடந்ததை சொன்னான்.

அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவர், முட்டாளுங்களா வந்து தொலயுங்க! என்றார்.

பணத்தை பறி கொடுத்த மூவரும் கண்ணீரும் கம்பலையுமாக கம்பெனி எம்.டி முன்னால் நின்று கொண்டிருந்தனர், அக்கவுண்ட்ஸ் மேலாளர்,இவர்களை போலீசில் ஒப்படைத்துவிடலாம் என்று சொல்ல கம்பெனி எம்.டி, அங்க அனுப்பிச்சுட்டா பணத்தை யாரு கொடுப்பா? என்றவர், இவனுங்க இந்த பணத்தை கட்டி முடிக்கறவரைக்கும் இங்கேயே வேலை செய்யட்டும் என கூறினார்.

அன்று மாலை வழக்கம்போல் தொழிலாளிகளுக்கு சம்பளப்பட்டுவாடா நடந்தது, ஆச்சர்யம் அதுவல்லஇவர்களுக்கும் சம்பளம் கிடைத்தது, ஆனால் ஏகப்பட்ட அர்ச்சனைகளுடனே!.

ஒரு மாதம் ஓடி விட்டது, இவர்களை கம்பெனி அதற்கு மேல் கேள்வியும் கேட்கவில்லை, போலீசுக்கும் போகவில்லை, என்ன ஆயிற்று என்று மண்டையை உடைத்துக்கொண்டனர். ஒருவாரு விசயம் அவர்களுக்கு கிடைத்தது, இவர்கள் பேக்கரியில் பேசிக்கொண்டிருந்ததை எப்படியோ கேட்டுக்கொண்டிருந்த ஒரு கூட்டம் இவர்களை தொடர நல்ல வேலையாக காசாளர் கணேசன் மணியிடம் சில்லரையா? நோட்டா? என கேட்டுக்கொண்டிருந்தபோது யதேச்சையாக வெளியே பார்க்க இவர்கள் பணம் பெறப்போவதை ஒருவன் வெளியில் காரில் உள்ளவனுக்கு சிக்னல் செய்வதையும், அவன் வண்டியை ஸ்டார்ட் செய்வதையும் பார்த்துள்ளான்,மனதில் ஒரு “பொரி” தட்ட இவர்களை மானேஜர் அறைக்கு பக்கத்து அறையில் உட்காரவைத்துவிட்டு மானேஜரிடம் விசயத்தை சொல்லி, கம்பெனிக்கு போன் செய்து சொல்ல அவர்கள் சூட்கேசில் வெறும் பேப்பரை வைத்து விடுமாறும், அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் எனவும், பணத்தை மேலாளரே வந்து பெற்றுக்கொள்வதாக கூறிவிட்டாதகவும் தெரிந்துகொண்டனர்.

அந்த திருடர்கள் இவர்களிடம் பறித்துச்சென்றது வெறும் பேப்பர் கட்டுக்கள்தான், அப்பாடி! நிம்மதி பெருமூச்சு விட்டனர் மூவரும்.

மூவரும் திருப்பதிக்கு நன்றிக்கடன் செலுத்த சென்று கொண்டிருக்கிறார்கள்,இது நியாயமே இல்லை! அவர்களை காப்பாற்றியது “கணேசன்” என்ற “பிள்ளையார்தானே”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *