செம்பு மரங்களின் மர்மம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 30,010 
 

முன்னுரை

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் தனது கதைகளுக்காக உருவாக்கிய கற்பனைப் பாத்திரம். அவர் ஒரு தனியார் உளவாளியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர்.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் என்று சொன்னால் மிகையாகாது. 1892 ஆம் ஆண்டு “The Strand Magazine” என்னும் ஆங்கில இதழில் வெளியான ஒரு சிறுகதை இது.

செம்பு மரங்களின் மர்மம்

“கலையை நேசிக்கும் ஒருவனுக்காக” என்றபடியே ஹோல்ம்ஸ் அந்த தினத் தந்தியின் விளம்பரப் பக்கத்தை விட்டெறிந்தார். “கவனம் ஈர்க்காத அற்பமான சில இடங்களில்தான் பேரின்பங்கள் கிடைக்கின்றன பெரும்பாலும். இந்த உண்மையை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள் என்பதை இதுவரை நீங்கள் சேகரித்த வழக்குகளின் ஆவணங்களை ஆராய்ந்து பார்க்கும்போது கவனித்தேன். அது எனக்கொரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அழகுபடுத்தும் பொருட்டு நான் ஈடுபட்டிருந்த புகழ்வாய்ந்த வழக்குகளை விடுத்து அற்பமான வழக்குகளை மட்டுமே எடுத்துக் காட்டி இருக்கிறீர்கள் என்பதை நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆனால் அவைகள்தான் எனது பகுத்தறிந்து தர்க்க ரீதியில் தொகுத்து வழங்கும் அறிவிற்கு வேலை கொடுத்தன. அவைகள்தான் எனக்கு மிகவும் பிடித்தமான துறைகளும் கூட”

“இருந்தாலும்” என்று புன்முறுவல் பூத்தவாறே நான் சொன்னேன். “என்னுடைய ஆவணங்கள் வெளி வந்தாலே அதில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டு விடுகிறது மக்களின் மனங்களில். அந்தக் குற்றத்தில் இருந்து எப்படித்தான் நான் விடுவித்துக் கொள்ளப் போகிறேனோ தெரியவில்லை.”

“ஒருவகையில், நீங்கள் செய்தது தவறுதான்” என்று அனுமானித்தார். இடுக்கியை வைத்துக் கங்கு ஒன்றை எடுத்துச் செர்ரி மரத்தால் செய்த புகைக் குழாயில் இருக்கும் புகை இலையைப் பற்ற வைத்தார். அமைதியாய் தியானிக்கும் நேரத்தில் அவர் அப்படிச் செய்வதில்லை. வாதம் செய்யும் நேரத்தில் அப்படிச் செய்வதுதான் அவரது இயல்பு. ” என்னென்ன காரணங்களினால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டன என்று தீவிரமான ஆராய்ச்சிக்கு நேரத்தைச் செலவிடுவதை விடுத்து நீங்கள் உங்களது ஒவ்வொரு சொல் தொடருக்கும் வண்ணமிட அல்லது உயிர் கொடுக்க முயற்சி செய்வதில் ஒருவேளை தவறு செய்திருக்கலாம். சொல்லப் போனால் அது ஒன்றுதான் அந்த நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று.”

“என்னைப் பொறுத்தவரை நான் மிகவும் நியாயமாக இந்த விஷயத்தில் நடந்து கொண்டிருக்கிறேன்.” என்றேன் நான் கொஞ்சம் இறுக்கமாக. ஏனெனில் எனது நண்பனின் வித்தியாசமான செய்கையில் ஒருவித ஆணவம் தலைக்கு மேல் ஏறி இருப்பதை ஒரு முறைக்கு மேல் கவனித்து விட்டேன்.

“இல்லை. அது நிச்சயம் தற்புகழ்ச்சியோ சுயநலனோ இல்லை.” என்றார் அவர். எப்பொழுதும் என் சொற்களை விட எண்ணங்களுக்கே பதில் அளித்து விடுவது அவர் வழக்கம். “எனது படைப்பிற்கு ஏன் முழு நியாயம் கிடைக்க வேண்டும் என்கிறேன் என்றால், அது ஒரு உயிரற்ற பொருள் – என்னையும் மீறிய ஒன்று. குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் அவற்றைத் தீர்க்கும் அறிவு குறைவாகவே இருக்கிறது. அதனால் அந்த தர்க்க முறையில்தான் நீங்கள் கவனம் செலுத்தி இருக்க வேண்டும், குற்றங்களில் அல்ல. ஒரு பாடத் திட்டத்தின் போதனை போல் இருக்க வேண்டியதை தொடர் கதை போன்று சித்தரித்தது உங்கள் பிழைதான்”

அன்றைய தினம் ஓர் இளவேனிற் காலத்தின் குளிர்ந்த காலைப் பொழுது விடிந்திருந்தது. பேக்கர் தெருவில் இருந்த அந்தப் பழைய வீட்டின் கணப்படுப்பின் இருபுறமும் மகிழ்ச்சியாக அமர்ந்திருந்தோம் காலை உணவு உண்டபின். எதிரே தெரிந்த சிவப்பு நிற வீடுகளின் மீது மூடுபனி வழிந்தோடியது. அதன் சாளரங்கள் அனைத்தும் பெரிய கனமான மாலைகளுக்கு நடுவில் இருக்கும் தெளிவற்ற கருமையான உருவங்களாய்த் தோன்றின. எங்கள் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கின் வெள்ளைத் துணியால் ஆன திரி ஏற்றப்பட்டிருந்தது. அதன் ஒளி பீங்கான் மற்றும் உலோகத்தின் மீது பட்டு மிகவும் அருமையாக மின்னியது, மேசையில் இருக்கும் பொருட்கள் எல்லாம் அப்படியே இருந்ததால். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் காலையில் இருந்தே மிகவும் அமைதியாகவே இருந்தார். நிறைய பத்திரிக்கைகளின் விளம்பரப் பகுதிகளில் மூழ்கி இருந்தார். அதன் பிறகு ஒரு வழியாகத் தனது தேடுதலை நிறுத்தி விட்டு அவ்வளவாக இனிமை இல்லாத மன நிலையில் எழுந்து எனது இலக்கியப் பிழை பற்றி போதனை செய்ய ஆரம்பித்தார்.

“அதே வேளையில்” என்று இழுத்தார் சிறிது நேர இடைவேளைக்குப் பின். அந்த இடைப்பட்ட நேரத்தில் தனது நீண்ட புகை குழாயின் வழியே புகை விட்டபடி எரியும் நெருப்பினை உற்றுப் பார்த்தபடி இருந்தார். “பரபரப்பு உண்டாக்கி விட்டீர்கள் என்கிற குற்றச்சாட்டையும் உங்கள் மீது வைப்பது கொஞ்சம் சிக்கல்தான். நீங்கள் தேர்ந்தெடுத்த வழக்குகளில் பெரும்பாலானவை சட்டப்படி பார்த்தாலும் குற்ற வழக்குகளே அல்ல. பொஹீமியாவின் அரசருக்கு நான் செய்த சிறு உதவியும், செல்வி.மேரி சதர்லேண்ட் அவர்கள் சம்பந்தப்பட்ட தனித்துவமான அனுபவமும், கோணலான உதடுகள் கொண்ட மனிதனுடைய சிக்கலும், அரச வம்சத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் விவகாரமும் சட்டத்திற்கு உட்பட்ட விவகாரங்களாகவே இருந்தன. பரபரப்புக்களை விட்டு விட வேண்டும் என்பதற்காக நீங்கள் வெறுமனே ஒன்றுமில்லாத வழக்குகளைக் கையில் எடுத்து விட்டீர்கள்.”

“முடிவு அப்படி இருந்திருக்கலாம். ஆனால் நான் விவரித்த முறைகள் உன்னதமானது, ஈர்ப்பு ஏற்படுத்தக் கூடியது” என்று பதில் அளித்தேன்.

“ப்ஷா, எனதருமை நண்பா. மக்கள், மந்த நிலையோடு இருக்கின்ற நமது மேன்மை பொருந்திய மக்கள், பல்லைப் பார்த்து நெசவாளர் என்றும் இடது கைப் பெருவிரல் பார்த்து இசையமைப்பாளர் என்று கூட கண்டுபிடிக்கத் தெரியாத அவர்கள்தான் அதை விட நுணுக்கமான ஆய்வுகளையும் பகுத்தறிவையும் உணரப் போகிறார்களா என்ன? இருப்பினும், நீங்கள் அற்பமான வழக்குகளைக் கொடுப்பவராக இருந்தால், உங்கள் மேல் தவறில்லை. ஏனெனில் பெரிய வழக்குகளின் காலம் மலையேறி விட்டது. மனிதன், இல்லை, குற்றம் புரியும் மனிதன், தனது சாகச முயற்சிகளையும் சொந்த அறிவையும் இழந்து விட்டான். எனது இந்த நிறுவனமும் கூட காணாமல் போன பென்சில்களைக் கண்டுபிடிக்கவும் பள்ளியில் பயிலும் இளம்பெண்களுக்கு அறிவுரை வழங்குவதற்கும் மட்டுமே பயன்படக் கூடிய ஒரு நிறுவனமாக மாறி விட்டது. கிட்டத்தட்ட ஒரு அடி ஆழத்தைத் தொட்டு விட்டது போலவே நான் உணர்கிறேன். காலையில் எனக்கு வந்த இந்தச் செய்திதான் எனக்குக் கடுப்பைக் கிளப்பி விட்டது. படித்துப் பாருங்கள்.” என்று ஒரு சிறு காகிதத்தை என்னிடம் நீட்டினார்.

முதல் நாள் பொழுசாயம் தேதி இடப்பட்டு மாண்டேக் என்னும் இடத்தில் இருந்து வந்திருந்தது. பின்வருமாறு அதன் செய்தி இருந்தது.

“அன்பான திரு.ஹோல்ம்ஸ் அவர்களுக்கு – நான் உங்களது அறிவுரை கேட்க மிகவும் ஆவலாய் இருக்கிறேன், ஆசிரியப் பதவியை நான் ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்பது குறித்து. நாளைக் காலை பத்தரை மணிக்கு நான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன் உங்களுக்கு எதுவும் தொந்தரவு இல்லை என்றால்.

தங்கள் உண்மையுள்ள,

வயலட் ஹண்டர்”

“உங்களுக்கு இந்த இளம் பெண்ணைத் தெரியுமா?” என்று நான் கேட்டேன்.

“இல்லை”

“இப்பொழுது மணி பத்தரை ஆகி விட்டது”

“ஆம், இதோ வந்து விட்டது அவளது அழைப்பு”

“நீங்கள் நினைப்பதை விட வேறேதாவது முக்கியமானதாக இருக்கலாம். நீல நிற மாணிக்கம் பற்றிய வழக்கு ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு. வெறும் ஆசையாய் முதலில் இருந்தது. போகப்போகப் பார்த்தால் அது மிகப்பெரிய துப்பறியும் வேலையாகி விட்டது. இதுவும் அது போல இருக்கலாம்.”

“நன்று. அப்படியே இருக்கட்டும். ஆனால் நமது சந்தேகங்கள் எல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ந்து விடும். எனது அனுமானம் சரியாய் இருந்தால் வாசலில் அவளாகத்தான் இருக்க வேண்டும்”

அவர் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே வாசற்கதவு திறந்து ஒரு இளம்பெண் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறாள். அவளது உடை மிகவும் எளிமையாக ஆனால் அழகாக இருந்தது. முகம் பளிச்சென்று மலர்ச்சியாக இருந்தது. சின்னஞ்சிறு கருஞ்சிவப்பு நிற புள்ளிகள் அவள் முகமெங்கும் நிறைந்து இருந்தன. தனக்கே உரிய ஒரு தனித்துவமான ஒரு நடையில் இவ்வுலகத்தில் முன்னேறி வந்தது போல் வேகமாக நடந்து வந்தாள்.

“என்னால் ஏற்பட்ட இடைஞ்சலுக்கு நீங்கள் என்னை மன்னித்து விடுவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று அவள் சொன்னாள், எனது நண்பர் எழுந்து அவளை வரவேற்க எத்தனிக்கும் அந்த வேளை. “எனக்கு ஒரு வினோதமான அனுபவம் நிகழ்ந்தது. மேலும் எனக்கென்று பெற்றோர்களோ உற்றார்களோ இல்லாத நிலையில் நான் யாரிடம் சென்று உதவி கேட்க முடியும். அதனால் நீங்கள் தயவு செய்து உதவி செய்வீர்கள் என்று நம்பித்தான் நான் இங்கு வந்தேன்”

“தயவு செய்து ஆசனத்தில் அமருங்கள், செல்வி.ஹண்டர். என்னால் முடிந்தளவு நான் உதவி செய்கிறேன்”

அவரது இந்தப் புதிய வாடிக்கையாளரின் பேச்சு மற்றும் நடவடிக்கையில் ஹோல்ம்ஸ் மிகவும் கவரப்பட்டு விட்டார் என்பது நன்றாகவே தெரிந்து விட்டது. அவர் அவள் மீது தனது தேடும் பார்வை ஒன்றைப் பதித்தார். அதன் பின் தன்னைச் சரி செய்து கொண்டு அவளது கதையைக் கேட்க ஆர்வமாக நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“நான் ஒரு வீட்டில் தனிப்பட்ட ஆசிரியராகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். “படைத்தலைவர் ஸ்பென்ஸ் முன்றோ அவர்களது குடும்பத்தில். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருக்கு நோவா ஸ்கோட்டியாவில் உள்ள ஹாலிபாக்ஸ் என்னும் ஊருக்கு மாற்றலாகி இருந்தது. அதனால் தனது குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு அவர் அமெரிக்கா சென்று விட்டார். அதனால் எனக்கு வேலை போய் விட்டது. நான் விளம்பரங்கள் கொடுத்தேன், விளம்பரங்களுக்கு மறுமொழி கொடுத்தேன். ஆனாலும் ஒன்றும் நடக்கவில்லை. இறுதியில் என்னிடம் இருந்த கொஞ்ச நஞ்சப் பணமும் கரைந்து கொண்டிருந்தது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தேன்.”

“வெஸ்டவே என்று மேற்குப்புறம் ஒரு பிரபலமான ஆசிரிய நிறுவனம் ஒன்று உள்ளது. அதற்கு நான் வாரத்திற்கு ஒரு முறை பேசி விடுவேன் எதாவது வேலை எனக்குத் தகுந்தாற் போல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில். அந்த நிறுவனத்தின் முதலாளியின் பெயர்தான் வெஸ்டவே. ஆனால் அதை உண்மையில் நிர்வாகம் செய்வது செல்வி.ஸ்டோபர் என்பவர்தான். அவள் தனது சிறு அலுவலகத்தில் அமர்ந்திருப்பாள். வேலைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவரும் முன்புற அறையில் அமர்ந்திருப்பார்கள். ஒன்றன் பின் ஒன்றாக நாங்கள் அவளது அலுவலகத்திற்குள் செல்வோம். அவள் தனது பேரேட்டினைச் சரி பார்த்து எங்களுக்குப் பொருத்தமானது எதுவும் இருக்கிறதா என்று சொல்வாள்.”

“கடந்த வாரம் நான் சென்றிருக்கையில் எப்பொழுதும் போல அந்த அறையில் அமர்ந்திருந்தேன். அப்பொழுது செல்வி.ஸ்டோப்பருடன் யாரோ இருந்தார்கள். அளவுக்கதிகமான பருமனுடன் நல்ல சிரித்த முகம் கொண்ட ஒருவர் அங்கிருந்தார். அவரது தாடை மடிப்புகள் கழுத்து வரை நீண்டிருந்தன. அவளது இடது புறம் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தார். கண்ணாடி அணிந்து மிகவும் தீர்க்கமாக உள்ளே நுழைந்த பெண்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் துள்ளலோடு வேகமாக செல்வி.ஸ்டோப்பரை நோக்கினார்.

“‘அது போதும்’ என்று சொன்னார். ‘இதை விடச் சிறந்தது வேண்டும் என்று கேட்க மாட்டேன். அருமை, அருமை’. அவர் மிகவும் உற்சாமாகத் தென்பட்டார். தனது கைகளை மிகவும் அழகாகத் தேய்த்துக் கொண்டார். அவர் மிகவும் ஆறுதலான மனிதராகவே தென்பட்டார். அதனால் அவர் மீது எந்தவிதச் சந்தேகமும் எனக்குத் தோன்றவில்லை.”

“‘நீங்கள் வேலை தேடிக் கொண்டு இருக்கிறீர்களா?’ என்று என்னிடம் கேட்டார்.

‘ஆம்’

‘தனிப்பட்ட ஆசிரியராக’

‘ஆம்’

‘என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்’

‘நான் மாதம் நான்கு பவுண்டு வாங்கிக் கொண்டிருந்தேன் படைத்தலைவர் ஸ்பென்ஸ் முன்றோவிடம்’

‘அப்படியா, எல்லாம் அதிகாரத் திமிர்’ என்று கத்தினார். அவரது கனமான கையை காற்றில் மிகுந்த கோபத்தோடு வீசினார். ‘இவ்வளவு அருமையான தகுதிகள் உடைய ஒரு பெண்ணுக்கு இவ்வளவு குறைவான சம்பளம் கொடுக்க ஒருவவனுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?’

‘நீங்கள் எண்ணும் அளவுக்கு என் திறமைகள் அதிகமில்லை.’ என்றேன். ‘கொஞ்சம் பிரெஞ்சு, கொஞ்சம் ஜெர்மன், இசை, சித்திரம்-‘

‘போதும், போதும்’ என்று கதறினார். ‘இதெல்லாம் கேள்விக்கு அப்பாற்பட்டது. தேவை என்னவென்றால் உங்களுக்கு ஒரு பெண்ணுக்குத் தேவையான சாயல், நடவடிக்கைகள் இருக்கிறதா இல்லையா. அதுதான் குறைந்தபட்சத் தகுதி. அது இல்லை என்றால் பின்னாளில் இந்நாட்டின் சரித்திரம் பேசும் ஒரு குழந்தையை உன்னால் வளர்க்க இயலாது. ஆனால் அது இருக்கும் பட்சத்தில், எப்படி ஒரு மனிதன் மூன்று இலக்கங்களுக்குக் குறைவாய் உனக்குச் சம்பளம் என்று கட்டாயப்படுத்த முடியும். உங்களுடைய சம்பளம் என் நிறுவனத்தில் சேர்ந்தால் ஆண்டுக்கு நூறு பவுண்டுகளில் இருந்து ஆரம்பிக்கும்’

“நீங்களே சொல்லுங்கள், திரு.ஹோல்ம்ஸ், என்னுடைய ஏழ்மைக்கு அந்தப் பணம் பெரிது. மிகவும் நம்பவே முடியாத ஒரு வாய்ப்பு. அந்த மனிதர், என் முகத்தில் இருந்த சந்தேகக் கோடுகளைக் கண்ட பின் ஒரு கைப் புத்தகத்தைக் கையில் எடுத்தார். அதில் இருந்து ஒரு தாளை உருவினார்.”

“என்னுடைய பழக்கம் என்னெவென்றால்” என்று மிகவும் இனிமையாகச் சிரித்துக் கொண்டே இருந்தார் அவரது முகத்தின் வெள்ளை நிற மடிப்புகளுக்கு நடுவில் கண்கள் இரண்டு சிறிய மின்னும் கோடுகள் போல் ஆகும் வரை. “என் நிறுவனத்தில் சேரும் பெண்களுக்கு முன் தொகையாகப் பாதி வருமானத்தை இப்பொழுதே கொடுத்து விடுவேன். ஏனெனில் உங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு பயணத்திற்கு வேண்டிய செலவுகளைச் சமாளிக்க அது உதவியாக இருக்கும்.”

“எனக்கு இதுவரை இப்பேர்ப்பட்ட அதிசயமான மற்றும் அக்கறை கொண்ட மனிதனைச் சந்தித்ததே இல்லை என்று தோன்றியது. நானும் ஏற்கெனவே நிறைய கடன் வாங்கி இருந்ததால் அவர் கொடுத்த முன் பணம் மிகவும் வசதியாய் இருந்தது. இருந்தாலும் இந்த விவகாரம் முழுவதுமே இயற்கையானதாகத் தோன்றவில்லை. அதனால் அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன், அவரிடம் சரி என்று சொல்வதற்கு முன்.”

“நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்” என்று அவரிடம் கேட்டேன்.

“ஹாம்ப்ஷயர். அருமையான கிராமப்புறம். செம்பு நிறத்தில் புங்க மரங்கள் சூழ்ந்த இடம். விண்செஸ்டருக்கு மேற்கே ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. அது மிகவும் ரம்மியமான இடம். அங்கே எனக்கொரு வீடும் இருக்கிறது”

“பின், என்னுடைய வேலை என்ன? அதைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?”

“ஒரு குழந்தை-ஆறு வயதே ஆன ஒரு பையன். கரப்பான் பூச்சியை செருப்பை வைத்தே அடிக்கும் போது நீங்கள் அவனைப் பார்த்திருக்க வேண்டும். பட், பட், பட் என்று மூன்று செத்திருக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில். நாற்காலியில் சாய்ந்தவாறே கண்கள் தலைக்குள் அமிழச் சிரித்தார்.”

“அந்தச் சிறுவனின் பொழுது போக்கை நினைத்துக் கொஞ்சம் குழப்பமாய் இருந்தது. ஆனால் அவனது அப்பாவின் சிரிப்பைக் கேட்டபோது அவர் கேலி செய்வதாகவே பட்டது.”

“ஆக எனது ஒரே வேலை ஒரு சிறுவனைக் கவனித்துக் கொள்வது மட்டும்தானே?”

“இல்லை, அது மட்டுமல்ல. அது மட்டுமே உனது முழு நேர வேலை அல்ல.” என்று இரைந்தார். “அவ்வப்போது என் மனைவியின் சிறு கட்டளைகளில் உங்களது மனசாட்சிப்படி ஏற்றுக் கொள்ள முடிந்தவைகளைச் செய்ய வேண்டும். அதில் உங்களுக்கு ஒரு சிரமமும் இல்லையே?”

“உதவிகரமாக இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான்”

“அருமை. உடையைப் பொறுத்த வரையில், நாங்கள் கொஞ்சம் கண்டிப்பான ஆட்கள். கண்டிப்பு உள்ள அதே இடத்தில்தான் அன்பும் இருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது. நாங்கள் கொடுக்கும் உடைகளை அணிவதில் உனக்கு எந்தவித ஆட்சேபணையும் இருக்காது அல்லவா?”

“இல்லை” என்றேன் நான் அவர் சொல்வதை நினைத்து மிகுந்த ஆச்சர்யத்துடன்.

“இங்கே உட்கார், அங்கே உட்கார் என்று சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டாயே?”

“அப்படி எல்லாம் இல்லை”

“அங்கு வரும் முன் முடியைக் குறைத்து வெட்டிக் கொள் என்றால்?”

“என்னால் என் காதுகளை நம்பவே முடியவில்லை. நீங்களே பாருங்கள், திரு.ஹோல்ம்ஸ், என் முடி எவ்வளவு அழகாக இருக்கிறது. அரிய வகையான செந்தவிட்டு நிறத்தில் இருக்கிறது. இது கவித்துவமானது. இதை என்னால் எக்காரணம் கொண்டும் தியாகம் செய்ய முடியாது”

“‘அது என்னால் நிச்சயம் முடியவே முடியாது,’ என்றேன் நான். அவர் என்னை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே இருந்தார் அந்தச் சின்னஞ் சிறிய கண்களைக் கொண்டு. நான் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் அவரது முகத்தில் ஒரு நிழல் படர்ந்தது.

“‘அது நிச்சயம் என்னைப் பொறுத்தவரையில் அவசியமானது, என்றார் அவர். என் மனைவியின் சின்னச் சின்ன ஆசை அது. பெண்களின் ஆசைகள் பற்றித் தெரியுமல்லவா, பெண்களின் ஆசைகளைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். ஆக, நீங்கள் முடி வெட்டிக் கொள்ள மாட்டீர்கள்.’

“‘இல்லை, என்னால் முடியாது.’ என்று உறுதியாகக் கூறி விட்டேன்.

“‘நன்று. அப்படி என்றால் இந்த விவகாரம் இங்கேயே முடிந்து விட்டது. பரிதாபம்தான், ஏனெனில் மற்ற அனைத்து விவகாரங்களிலும் நீ நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறாய். அப்படி என்றால், ஸ்டோபர் உங்களுடைய வேறு சில பெண்களையும் நான் நேர்காணல் செய்ய வேண்டும்.’

“மேலாளர் அதுவரையிலும் மிகவும் மும்முரமாகக் காகிதங்களில் எதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தார் எங்கள் இருவரிடமும் ஒரு சொல் கூட பேசாமல். ஆனால் அவள் என்னை ஏறெடுத்துப் பார்த்த பார்வையில் அவ்வளவு வெறுப்பு, கோபம். அவளுக்கு வர வேண்டிய பெரிய தரகுப் பணத்தை நான் தடுத்து நிறுத்தி இருக்கிறேன் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

“’உன் பெயர் இங்கே பதிவேட்டில் இருக்க வேண்டும் என்று நீ நினைக்கிறாயா இல்லையா?’ என்று கேட்டாள்.”

“’ஆமாம். தயவு செய்து செல்வி ஸ்டோபர்”.

“’ஓ அப்படியா. இங்கிருப்பதால் ஒன்றும் பெரிய பலன் இல்லை. ஏனெனில் மிகவும் பிரமாதமான வாய்ப்புகள் எல்லாவற்றையும் உதறி விடுகிறாய். என்று அழுத்தமாய்க் கூறினாள். ‘இப்படியொரு வாய்ப்பை இனிமேல் ஏற்படுத்திக் கொடுக்க எங்களால் மெனக்கெட முடியாது. அதனால் நீங்கள் செல்லலாம்.’ மேசை மேலிருந்த மணி ஒன்றைத் தட்டி விட்டு வாசற்படி இருக்கும் திக்கைக் காட்டினாள்.

நான் எனது அறைக்குத் திரும்பியதும் அலமாரியில் இருந்த சில்லறைக் காசுகளும் மேசையில் இருந்த இரண்டு மூன்று தாள்களைத் தவிர எதுவும் இல்லாத இந்த நேரத்தில் நான் கொஞ்சம் தவறான முடிவு எடுத்து விட்டேனோ என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். இம்மாதிரியான ஆட்களுக்கு வினோதமான பற்றுதல் இருந்து வித்தியாசமான செய்கைகளில் எல்லாம் சொல்படி கேட்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களின் பைத்தியக்காரத்தனங்களிற்குத் தகுந்தாற் போல் அவர்கள் பணமும் கொடுக்கிறார்கள் அல்லவா. இங்கிலாந்திலேயே வெகு சில தனி ஆசிரியர்கள்தான் ஆண்டுக்கு நூறு பவுண்டு வாங்குகிறார்கள். இந்த முடியை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? பல பேர் முடியைக் குறைத்து வெட்டி இருக்கும்போதே அழகாகத்தான் இருக்கிறார்கள். சொல்லப் போனால் நானும் அது போல் செய்து கொண்டிருக்க வேண்டும். மறு நாள் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் தலை தூக்கியது. அதன் மறு நாள் நிச்சயமாக உறுதிப்படுத்திக் கொண்டேன். எனது பெருமையைக் கொஞ்சம் இறக்கி வைத்து விட்டு, அந்த நிறுவனத்திற்கே சென்று அந்த வேலை இன்னும் இருக்கிறதா என்று கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் எனக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது அந்தப் பெரியவரிடம் இருந்தே. இதோ என்னிடமே இருக்கிறது. நான் உங்களுக்கு அதை வாசித்துக் காட்டுகிறேன்.

“‘செம்பு மரங்கள், வின்செஸ்டர் அருகில்,

அன்பான செல்வி.ஹண்டர், செல்வி.ஸ்டோபர் அவர்கள் உங்களது விலாசத்தை எனக்கு மிகுந்த அன்போடு கொடுத்தார்கள். அதனால் நான் உங்களுக்கு இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன், நீங்கள் உங்களது முடிவை மறு பரிசீலனை செய்வீர்களா என்பதை அறிவதற்காக. எனது மனைவியிடம் உங்களைப் பற்றிச் சொன்ன பிறகு அவளும் நீங்கள் இங்கு வர வேண்டும் என்று மிகவும் விரும்புகிறாள். நாங்கள் ஒவ்வொரு காலாண்டுக்கும் 30 பவுண்டுகள், அதாவது ஆண்டுக்கு 120 வரை தருவதற்கும் தயாராய் இருக்கிறோம். எங்களது சிறிய ஆசைகளை நீங்கள் பூர்த்தி செய்யும் பொருட்டு உங்களுக்கு ஏற்படும் சங்கடங்களுக்கான நிவாரணமாக அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அவை ஒன்றும் அவ்வளவு சிரமமாக இருக்காது என்று எண்ணுகிறேன். என் மனைவிக்கு நீல நிறத்தின் குறிப்பிட்ட ஒரு வகையான சாயல் மிகவும் பிடிக்கும். அதை நீங்கள் வீட்டில் இருக்கும்போது அணிய வேண்டும் என்று ஆசைப்படுவாள். அதற்காக அதை நீங்கள் கடையில் போய் வாங்க வேண்டியதில்லை. ஏனெனில் எங்களது மகள் ஆலிஸ், தற்போது பிலடெல்ஃபியாவில் இருக்கிறாள், அவளது உடை ஒன்று எங்களிடம் இருக்கிறது. அது உங்களுக்குக் கச்சிதமாகச் சேரும் என்று நினைக்கிறேன். பின், இங்கு உட்கார் அங்கு உட்கார் என்று சொல்வதும், பொழுதுபோக்கிற்காக நீங்கள் செய்ய வேண்டியவைகள் பற்றிச் சொன்னதும் உங்களுக்கு எந்தவிதச் சிரமத்தையும் கொடுக்காது என்று நினைக்கிறேன். உங்களது முடியை நினைத்தால்தான் எனக்குக் கொஞ்சம் கவலையாய் இருக்கிறது. ஏனெனில் நான் உங்களை நேரில் பார்த்த அந்தக் கொஞ்ச நேரத்திலேயே அதன் அழகு என்னைக் கவர்ந்து விட்டது. இருந்தாலும் இந்த இடத்தில் நான் கொஞ்சம் உறுதியாய்க் கூற விரும்புகிறேன். நான் கொடுக்கும் கூடுதல் சம்பளம் உங்களது இழப்பைச் சரி செய்யும் என்று நான் நம்புகிறேன். எங்கள் குழந்தையைக் கவனிக்கும் பொறுப்புகள் கொஞ்சம் குறைவுதான். அதனால் முடிந்தவரை வேலையில் வந்து சேர முயற்சி செய்யுங்கள். விண்செஸ்டரில் நான் உங்களுக்காக வண்டியுடன் காத்திருப்பேன். புகை வண்டியின் எண்ணை மட்டும் எனக்குத் தெரிவியுங்கள். உங்கள் நம்பிக்கையுள்ள, ஜெஃப்ரோ ருகாஸ்டில்'”

“இதுதான் எனக்குச் சற்றுமுன் கிடைத்த கடிதம். அதனால் நான் இந்த வேலையை ஏற்றுக் கொள்ளத் தயாராகி விட்டேன். இருந்தாலும் போவதற்கு முன் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லலாம் என்றுதான் இங்கு வந்தேன்.”

“நீங்கள் தயாராகி விட்டால், இந்தச் சிக்கல் அதோடு முடிந்து விட்டதல்லவா?” என்று சிரித்தபடியே சொன்னார் ஹோல்ம்ஸ்.

“நீங்கள் வேண்டாமென்று எனக்கு அறிவுரை சொல்ல மாட்டீர்களா?”

“உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இது போன்ற வேலைக்கு எனது சகோதரிகள் யாரும் விண்ணப்பிக்கவில்லை”

“இதற்கு என்ன பொருள், திரு.ஹோல்ம்ஸ்?”

“ஆஹ், என்னிடம் தகவல்கள் எதுவும் இல்லை. அதனால் எதுவும் சொல்ல இயலாது. நீங்களே ஒரு முடிவுக்கும் வந்து விட்டீர்கள்”

“அப்படி என்றால் ஒரே ஒரு விதமான தீர்வுதான் இருக்கிறது. திரு. ருகாஸ்டில் அவர்களைப் பார்த்தால் மிகவும் அன்பான நல்ல மனிதராகத்தான் தெரிகிறார். ஆனால் அவரது மனைவி ஒரு பைத்தியக்காரியாக இருக்கலாம் அல்லவா. அவளைப் பைத்தியக்கார விடுதியில் விடுவதற்குப் பயந்து இந்தத் தகவலை அவர்கள் அமுக்கி விடப் பார்த்திருக்கலாம் அல்லவா? அதனால் அவளது ஒவ்வொரு பைத்தியக்காரத்தனத்திற்கும் அவர் தீனி போடுவது போல் நடந்து கொண்டிருக்கலாம் அவளது பைத்தியம் முற்றி விடாமல் இருப்பதற்காக.”

“ஆம், அதுவும் ஒரு வகையான தீர்வுதான் இந்தச் சூழலில். அதுதான் சாத்தியமான ஒன்றும் கூட. எப்படி இருந்தாலும், ஒரு இளம்பெண்ணிற்கு அந்த இடம் பணி செய்ய உகந்ததல்ல.”

“ஆனால், பணம் இருக்கிறதே, திரு.ஹோல்ம்ஸ், பணம்”

“நிச்சயமாக, சம்பளம் பெரிதுதான், மிகப்பெரிது. ஆனால் அதுதான் சங்கடத்தையும் தருகிறது. நாற்பதே பவுண்டுகளில் முடித்து விடக் கூடிய செயலுக்கு ஏன் 120 பவுண்டு கொடுக்கிறேன் என்று நிற்கிறார்கள். அதற்கு எதாவது வலிமையான காரணம் இருக்கும்”

“நான் இப்பொழுது எனது சூழ்நிலையை உங்களிடம் தெரிவித்து விட்டால் பின்னர் எனக்கு உதவி தேவைப்படும்போது நீங்கள் புரிந்து கொள்ள வசதியாய் இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் எனக்குப் பின்னால் இருக்கிறீர்கள் என்ற நினைப்பே எனக்கு பலம் கொடுக்கும்”

“ஓஹ், நீங்கள் நிச்சயம் அந்த நினைப்பை எடுத்துக் கொண்டு செல்லலாம். உங்களது சிக்கல் பல மாதங்களுக்குப் பின் மிகவும் சுவாரசியமானதொரு தருணத்தை எனக்கு அளித்திருக்கிறது. சில தகவல்கள் மிகவும் நூதனமாக இருக்கின்றன. உங்களுக்கு எதாவது ஒரு இடத்தில் சந்தேகமோ ஆபத்தோ வந்தது என்றால்-”

“ஆபத்தா, எந்தவிதமான ஆபத்து வரும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?”

ஹோல்ம்ஸ் மிகவும் தீவிரமாகத் தனது தலையை அசைத்தார். “ஆபத்து என்பதை வரையறுத்து விட்டால், பின் அதை ஆபத்து என்றே சொல்ல முடியாதே” என்றார் அவர். “ஆனால் எந்த நேரமும், இரவு பகல் எதுவானாலும், ஒரே ஒரு தந்தி உங்கள் உதவிக்கு என்னை அழைத்து வந்து விடும்”

“அது போதும்.” அவள் தனது இருக்கையில் இருந்து சட்டென்று எழுந்தாள். அவளது முகத்தில் இருந்த சந்தேகங்கள் அனைத்தும் இப்பொழுது விலகிப் பளிச்சென்று மின்னியது. “இப்பொழுது நான் எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் ஹாம்ப்ஷயர் செல்வேன். உடனே ருகாஸ்டில் அவர்களுக்கும் நான் கடிதம் எழுதி விடுவேன். எனது முடியை இன்றிரவே காணிக்கை செய்து விடுவேன். நாளையே விண்செஸ்டர் செல்ல ஆரம்பித்து விடுவேன்.” ஹோல்ம்ஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு எங்கள் இருவருக்கும் இரவு வணக்கம் சொல்லி விட்டு அவள் தன் வழியில் சென்று விட்டாள்.

“குறைந்தபட்சம் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் அவள் ஒரு இளம்பெண்.” என்றேன் நான் அவள் படிகளில் கீழிறங்கும் சத்தம் கேட்டுக் கொண்டே.

“ஆம், வேறு வழியில்லை.” என்று இறுக்கமாகக் கூறினார் ஹோல்ம்ஸ். “இன்னும் சில பல நாட்களில் அவளிடம் இருந்து தகவல் எதுவும் வரவில்லை என்றால் நிச்சயம் அது எனக்குத் தவறாகவே படும்.”

அவர் சொல்லி வெகு நாட்கள் ஆகிவிடவில்லை அவர் வாக்கு பலிக்க. இரண்டே வாரங்கள்தான் சென்றிருந்தன. அவள் இருந்த திக்கிலேயே எனது மனம் அடிக்கடி பயணித்துக் கொண்டிருந்தது. எந்தவொரு வினோதமான மனித அனுபவம் என்னும் பொந்தில் அவள் போய்ச் சிக்கிக் கொண்டாள் என்று என் மனம் தவித்தது. வழக்கத்துக்கு மாறான சம்பளம், வினோதமான கட்டுப்பாடுகள், பைத்தியக்காரத்தனங்களோ இல்லை தந்திரங்களோ, அந்த மனிதன் கொடையாளியோ இல்லை பாவியோ, அதை முடிவு செய்வது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஹோல்ம்ஸைப் பொறுத்தவரையில் அடிக்கடி ஒரு அரை மணி நேரம் தொடர்ச்சியாக இமைகளைக் குறுக்கிக் கொண்டு சிந்தனை வயப்பட்டிருப்பார். அதைக் குறிப்பிட்டுக் காட்டினால், கைகளை உதறிக் கொண்டு அந்தச் செய்தியை உதாசீனப்படுத்துவார். “தகவல், தகவல், தகவல்” என்றே கத்திக் கொண்டிருந்தார். “களிமண் இல்லாமல் செங்கல் செய்ய முடியாது.” அது போக எந்தவொரு பெண்ணும் இப்படி ஒரு வேலையை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்.

ஒரு வழியாக வந்து விட்ட அந்தத் தந்தி ஒரு நாள் இரவு மிகவும் தாமதமாகவே வந்தது. அப்பொழுதுதான் நான் தூங்கப் போகலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஹோல்ம்ஸ் தனக்கு மிகவும் பிடித்த இரவு முழுவதும் நடக்கும் வேதிப்பரிசோதனைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அதை அவர் அடிக்கடி நடத்துவதுண்டு. இரவு உறங்கச் செல்லுமுன் குடுவை மற்றும் சோதனைக் குழாயுடன் விட்டுச் செல்வேன். மறுநாள் காலை உணவு அருந்தச் செல்லும் நேரத்திலும் எப்படி விட்டுச் சென்றேனோ அதே நிலையில் இருப்பார். அவர் அந்த மஞ்சள் நிற உறையைப் பிரித்தார். படித்து விட்டு என்னிடம் எறிந்தார்.

“ப்ராட்ஷாவில் உள்ள வண்டிகளைப் பாருங்கள்” என்றார் அவர். அதன் பின் தனது பரிசோதனையைத் தொடர்ந்தார்.

தந்தி மிகவும் சுருக்கமாக அவசரமாக இருந்தது.

“விண்செஸ்டரில் உள்ள கருப்பு அன்னம் விடுதிக்கு நாளை மதியம் வாருங்கள். நிச்சயம் வரவும். நான் சோகத்தின் விளிம்பில் இருக்கிறேன் – ஹண்டர்.” என்றது அந்தச் செய்தி.

“என்னுடன் நீங்கள் வருவீர்களா?” என்று நிமிர்ந்தபடியே என்னிடம் கேட்டார்.

“ஆம், வருவதற்கு ஆசையாகத்தான் இருக்கிறது”

“அப்படி என்றால், உடனே பாருங்கள்”

“ஒரு வண்டி ஒன்பதரைக்கு இருக்கிறது.” என்றேன் நான் எனது பிராட்ஷாவைப் பார்த்து. “விண்செஸ்டருக்கு 11.30 மணிக்குச் சென்று விடும்.”

“அது அற்புதமாகப் பொருந்தும். அப்படி என்றால் எனது அசிட்டோன் பற்றிய சோதனையை நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன். அப்படி என்றால்தான் காலையில் நாம் சரியான சமயத்திற்குச் செல்ல முடியும்.”

மறு நாள் காலை பதினோரு மணிக்கெல்லாம் நாங்கள் பழைய தலைநகரத்திற்கு அருகில் வந்து விட்டோம். ஹோல்ம்ஸ் வரும் வழி முழுவதும் காலைச் செய்தித்தாளில் மூழ்கி விட்டார். ஹாம்ப்ஷயர் எல்லையைத் தொட்ட பின் அதைத் தூக்கி எறிந்து விட்டார். அதன் பின் இயற்கைக் காட்சிகளை ரசிக்க ஆரம்பித்து விட்டார். அது ஒரு அருமையான வசந்த காலம். வெளிர் நீல நிறத்தில் வானம், அதன் மீது புள்ளிகள் வைத்தாற் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேகங்கள் மேற்கில் இருந்து கிழக்குப்புறமாக நகர்ந்து கொண்டிருந்தன. கதிரவன் மிகுந்த வெளிச்சத்துடன் ஒளி வீசிக் கொண்டிருந்தான். அப்படி இருந்தும் காற்று எங்களைக் கிள்ளிக் கொண்டிருந்தது. அது ஒரு மனிதனின் ஆற்றலை உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. கிராமப்புறம் முடிவடைந்து, ஆல்டர்ஷாட் என்னும் மலைச் சிகரங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தோம். ஆங்காங்கே பண்ணை நிலங்களில் சிவப்பு மற்றும் பழுப்பு நிறங்களில் கூரைகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன புதிதாக வளர்ந்திருந்த பச்சைத் தாவரங்களுக்கு நடுவில்.

“அவைகள் மிகவும் அழகாகவும் புதிதாகவும் இருக்கின்றன அல்லவா?” என்று நான் கத்தினேன். பேக்கர் தெருவில் இருந்த பனி மூட்டத்தினுள் இருந்து வெளியே வந்த புதிய மனிதனின் உற்சாகத்துடன்.

ஆனால் ஹோல்ம்ஸ் மிகவும் இறுக்கமாக இருந்தார்.

“உங்களுக்குத் தெரியுமா, வாட்சன்.” என்று புதிர் போட ஆரம்பித்தார். “வளைந்து நிற்கும் என் போன்ற மனது கொண்ட மனிதர்களுக்கான சாபம் இது. எல்லாவற்றையும் எனது தனிவகையான கருத்துக்களுடன் பொருத்திப்பார்த்தே பழகி விட்டேன். அங்கே தெரியும் சிதறிக் கிடக்கும் வீடுகளைப் பார்த்து அதன் அழகில் மயங்கி விட்டீர்கள். நானும் அதைப் பார்த்தேன். எனக்குள் வந்த ஒரே எண்ணம் என்ன தெரியுமா? அவைகள் தனியே இருக்கின்றன. அதனால் அங்கே என்னவிதமான குற்றங்கள் நடந்திருக்கும் என்றுதான் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“கடவுளே!” என்று தலையில் அடித்துக் கொண்டேன் நான். “யாராவது இது போன்ற அருமையான பழைய வீடுகளைக் குற்றங்களோடு இணைத்துப் பார்ப்பார்களா?”

“அவை எப்பொழுதுமே என்னை ஒருவித திகிலால் குளிப்பாட்டி விடுகின்றன. இது எனது நம்பிக்கை, வாட்சன், எனது அனுபவங்களின் வெளிப்பாடு. லண்டன் மாநகரின் மிகவும் கீழ்த்தரமான பயங்கரமான சந்துகளில் நடக்கும் குற்றங்களை விட மலர்ந்து சிரிக்கும் அழகான அருமையான கிராமப்புற வீடுகளில் நடப்பது அதிகம்தான்.”

“நீங்கள் சொல்வது எனக்கு பயமாய் இருக்கிறது”

“அதற்கான காரணம் மிகவும் எளிமையானது. சட்டம் செய்ய முடியாத செயலை பொது மக்களின் கருத்துக்களால் ஏற்படும் அழுத்தம் செய்து முடித்து விடும். அங்கு மனசாட்சியே இல்லாத அவ்வளவு கொடூரமான வீதிகள் இருப்பதில்லை. எதாவது ஒரு தெருவில் கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தையின் அழுகுரல் கேட்டால், குடிகாரன் ஒருவன் கொடுத்த அடிச்சத்தம் கேட்டால் கோபமோ கருணையோ கொள்ளாத உள்ளம் கொண்ட அண்டை வீட்டார் இருப்பதில்லை. அதன் பின் அவர்கள் கொடுக்கும் ஒரே ஒரு புகார் ஒட்டுமொத்த சட்ட எந்திரங்களையும் அணிவகுத்து வரச் செய்து விடும். அதன் பின் குற்றத்திற்கும் சிறைக்கும் அதிக தூரம் இருக்கப்போவதில்லை. ஆனால் இங்கிருக்கும் தனித்தனியான வீடுகளைப் பாருங்கள். ஒவ்வொன்றும் அதனதன் வெளிகளில். அங்கே வேலை செய்யும் மனிதர்கள் வெள்ளந்தியான சட்டம் பற்றி எதுவும் அறியாதவர்களாகவே இருப்பார்கள். அங்கே கொடுமையாகத் துன்புறுத்துபவர்களும் தந்திரமாய் அசிங்கங்கள் செய்யும் ஆட்களும் இருந்தார்கள் என்றால், ஒவ்வொரு நாளும் அதை அனுபவிப்பவர்களுக்கு நரக வேதனைதானே. விண்செஸ்டரில் வேலைக்குச் சென்றிருக்கும் அந்தப் பெண்ணை நினைத்தால் எனக்கு எந்தவித பயமும் இல்லை. ஐந்து மைல் நீளம் கொண்ட இந்த கிராமப்புறம்தான் எனக்குள் பயத்தை விதைக்கிறது. இருந்தாலும், அவள் தனிப்பட்ட முறையில் இன்னும் மிரட்டப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது”

“இல்லை. அவள் நம்மை விண்செஸ்டரில் சந்திக்க வந்தால் அவள் நம்முடன் தப்பி விடலாம்.”

“நிச்சயமாக. அவளுக்கான விடுதலை கிடைத்து விடும்.”

“பின், என்னதான் விவரமாக இருக்கும். உங்களால் எதையும் யூகிக்க முடியவில்லையா?”

“எனக்கு ஏழுவிதமான விளக்கங்கள் இருக்கின்றன. இதுவரை நமக்குத் தெரிந்த உண்மைகளை எல்லாம் அவை ஒவ்வொன்றும் உள்ளடக்கி இருக்கின்றன. ஆனால் அதில் எது உண்மையானது என்று நமக்காகக் காத்திருக்கும் புதிதாக வரும் செய்திகளை வைத்துத்தான் தீர்மானிக்க முடியும். அதோ அங்கு தேவாலயத்தின் கோபுரம் தெரிகிறது பாருங்கள். சற்று நேரத்தில் செல்வி.ஹண்டர் சொல்லப் போகும் செய்திகள் எல்லாம் நமக்குத் தெரியப் போகிறது”

மேல் வீதியில் இருக்கும் கருப்பு அன்னம் என்ற விடுதி மிகவும் புகழ் வாய்ந்தது. நிலையத்திற்கு மிகவும் அருகிலேயே இருந்தது. அங்கே எங்களுக்காக அந்தப் பெண்ணும் காத்துக் கொண்டிருந்தாள். நாங்கள் அமர்வதற்காக ஒரு அறையும் ஏற்பாடு செய்திருந்தாள். உள்ளே சென்று பார்த்தால், அட, நமக்கான மதிய உணவும் தயாராய் இருந்தது.

“நீங்கள் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.” என்று அவள் மிகுந்த ஆர்வத்தோடு சொன்னாள். “என் மீது நீங்கள் காட்டும் பரிவுதான் என்று நன்றாகப் புரிகிறது. இருந்தாலும், நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குப் புரியவே இல்லை. உங்கள் அறிவுரை என்ன என்று கேட்கத்தான் மிகவும் ஆர்வமாய் இருக்கிறேன்”

“என்ன நடந்ததென்று தயவு செய்து கூற முடியுமா?”

“நிச்சயமாக. நான் வேகமாகக் கூறி விடுகிறேன். ஏனெனில், மூன்று மணிக்குள் திரும்பி விடுவதாக ருகாஸ்டில் அவர்களிடம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன். காலையில்தான் அவரிடம் இந்த இடத்திற்கு வருவதாகச் சொன்னேன். ஆனால் என்ன காரணம் என்று அவருக்குத் தெரிய நியாயம் இல்லை.”

“சரி. வரிசையாகச் சொல்லுங்கள்” என்று அந்த அறையில் இருந்த கணப்படுப்பின் முன் கால்களை நீட்டி வைத்துக் கொண்டு கேட்பவர் போல் அமர்ந்து கொண்டார்.

“திரு/திருமதி.ருகாஸ்டில் இருவரும் இதுவரை என்னை எந்தவிதத் தொந்தரவும் செய்யவில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதுதான் உண்மை. ஆனால் அவர்களை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஏதோ ஒன்று வித்தியாசமாகவே படுகிறது.”

“என்ன புரியவில்லை உங்களுக்கு?”

“அவர்களின் செயல்களுக்கான விளக்கங்கள். என்ன நடந்ததோ அதை அப்படியே உங்களிடம் சொல்லி விடுகிறேன். நான் இங்கு வந்தபோது, திரு.ருகாஸ்டில் வந்து என்னைச் சந்தித்தார். அவரது நாய் வண்டியில் இங்கிருந்து என்னைச் செம்பு மரங்களுக்கு அவரது வீடு வரை அழைத்துச் சென்றார். அவர் சொன்னது போலவே அது மிகவும் அழகாக இருந்தது. அது பெரிய சதுர வடிவத்தில் இருந்தது, வெள்ளை அடைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கறைகள், அழுக்குகள் படிந்திருந்தன மோசமான மற்றும் ஈரமான வானிலை காரணமாக. அதைச் சுற்றிலும் மண் தரை இருந்தது. மூன்று புறமும் மரங்கள் சூழ்ந்திருந்தன. தெற்கு ஆம்ப்டன் நெடுஞ்சாலையை ஒட்டி நான்காவது பக்கம் ஒரு புல்வெளி இறங்கு முகமாக இருந்தது. முன்பக்க வாசல் கதவுக்கு ஒரு நூறடி தூரத்தில் அது வளைந்து நெளிந்து செல்லும். முன்புறம் இருக்கும் இந்த நிலம் வீட்டுக்குச் சொந்தமானது. ஆனால் அதைச் சுற்றி இருக்கும் காடுகள் சதர்ட்டன் கோமான் அவர்களுக்குச் சொந்தமானது. கூடத்திற்கு நேர் முன் புறத்தில் இருக்கும் அடர்ந்த செம்பு நிற மரங்கள்தான் இந்த இடத்திற்குப் பெயராய் அமைந்து விட்டது.”

“எனது முதலாளி என்னை வண்டியில் அழைத்து வந்தார். எப்பொழுதும் போல் அவர் அன்பாகவே இருந்தார். அன்றைய மாலை வேளையில் அவரது மனைவி மற்றும் குழந்தையிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். நாம் பேக்கர் தெருவில் உங்கள் வீட்டில் பேசியது போல் அவர் மனைவி ஒன்றும் பைத்தியக்காரி இல்லை. அவர் அமைதியான ஆனால் வெளிறிய முகம் உடையவராய் இருந்தார். அவரது கணவரைக் காட்டிலும் மிகவும் இள வயதுடையவராய் இருந்தார். அவருக்கு முப்பதுக்கும் மேல் இருக்காது. அவரது கணவருக்கு குறைந்தபட்சம் 45 ஆவது இருக்கும். அவர்களின் உரையாடலைக் கவனித்தால் அவர்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள்தான் ஆகி இருக்கும் என்று தெரிந்தது. இது அவருக்கு இரண்டாவது திருமணம். முதல் தாரத்துப் பெண்தான் ஃபிலடெல்ஃபியாவில் படிக்கிறாள். திரு.ருகாஸ்டில் என்னிடம் தனியே சொன்னார், அவள் தனியே சென்றது அவளுக்குத் தனது மாற்றான் தாயிடம் ஏற்பட்ட தேவை இல்லாத, அளவு கடந்த வெறுப்புதான் காரணம் என்று. அந்தப் பெண்ணிற்கும் இருபது வயது கூட இருக்காது என்ற ஒரே காரணம்தான் தனது தந்தையின் புதிய மனைவியிடம் அவளுக்கு வெறுப்பு ஏற்படக் காரணம் என்று நானும் நினைக்கிறேன்.”

“திருமதி.ருகாஸ்டில் அவர்களது மனமும் குணமும் ஒரே போல் நிறமற்றதாய் இருந்தன. அவர்களை எனக்குப் பிடித்திருக்கிறது என்றோ பிடிக்கவில்லை என்றோ சொல்லி விட முடியாது. அவர்கள் ஒரு பொருளே இல்லை அங்கு. அவர்கள் தனது கணவன் மகன் இருவரிடமும் மிகுந்த அன்பு செலுத்துவதைக் காண முடிந்தது. அவளது சிறு சாம்பல் நிறக் கண்கள் இருவர் மீதும் மாறி மாறிப் பாய்வதைக் காண முடிந்தது. ஒவ்வொருவரின் தேவைகளையும் அறிந்து விடத் துடித்தன. முடிந்தால் யூகித்து விடவும் தீர்மானித்தன. அவளை ஏமாற்றினாலும் கிண்டல் செய்தாலும் அவள் மீது அவருக்கு இருக்கும் அன்பை நன்றாக உணர முடிந்தது. மொத்தத்தில் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதியராக இருந்தனர். இருந்தாலும் அந்தப் பெண்ணிற்கு மட்டும் ஏதோ ஒரு மறைமுகமான சோகம் இருந்தது. அவள் அடிக்கடி ஏதோ ஒரு நினைவில் தொலைந்தவண்ணம் இருந்தாள். அப்பொழுது அவள் முகம் அவ்வளவு சோகமாய் இருக்கும். ஒரு முறைக்கு மேல் திடீரென்று அவள் முன் போய் நின்றபோது அவள் கண்களில் கண்ணீரோடு பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் நான் நினைத்ததுண்டு, தனது மகனின் நிலையை எண்ணித்தான் அவள் அப்படிக் கலங்கிப் போயிருக்கிறாள் என்று. ஏனெனில் இவ்வளவு சிறிய வயதில் அவன் அவ்வளவு கெட்டுப் போயிருந்தான். அவனது வயதிற்கு அவனது உருவம் சிறியதாய் இருந்தது. ஆனால் அவன் தலையோ மிகவும் பெரிதாய் துருத்திக் கொண்டிருந்தது. பல நேரங்களில் மிகவும் கட்டுக்கடங்காமல் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வதும் இடைப்பட்ட நேரங்களில் மிகவும் அமைதியாக இருப்பதுமாக அவனது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. தன்னை விடச் சிறிய உயிர்களை வதைப்பதுதான் அவனது பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்தது. அவன் சுண்டெலிகள், பறவைகள் மற்றும் பூச்சிகளைப் பிடிக்கத் திட்டமிடுவதில் மிகவும் கில்லாடி. அவனைப் பற்றி நான் இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை. இந்த கதையில் அவனுக்கு அவ்வளவு ஒன்றும் பெரிய பங்கில்லை.”

“நீங்கள் சொன்ன எல்லாவிதத் தகவல்களுக்கும் நன்றி.” என்று ஹோல்ம்ஸ் சொன்னார். “அது உனக்கு முக்கியமானதாக இருக்கிறதோ இல்லையோ.”

“நான் முக்கியமான எதையும் விட்டு விட விரும்பவில்லை. ஒரே ஒரு விரும்பத்தகாத செயல் என்னவென்றால் அங்குப் பணியாளர்களை நடத்திய விதமும் அவர்களது தோற்றமும்தான் பார்த்தவுடன் விநோதமாகத் தெரிந்தது. அங்கிருந்ததே இரண்டே பேர்தான். கணவன் மனைவி. அவரது பெயர் டோலர். படிக்காத கிராமத்து மனிதர். அலங்கோலமான முடி பெரிய மீசை இருந்தது. எப்பொழுதும் தண்ணியிலேயே மிதப்பார் போலிருக்கிறது. கிட்டப் போனாலே நாற்றம்தான். இருமுறை அவர்களிடம் சென்றபோதும் அதே அனுபவம்தான். இருந்தும் திரு.ருகாஸ்டில் அதையெல்லாம் பொருட்படுத்துவது போல் தெரியவில்லை. அவரது மனைவி நல்ல உயரமான மெலிந்த பெண். வெடுவெடுப்பன முகம். திருமதி.ருகாஸ்டில் போல் எப்பொழுதும் அமைதியாகவே இருந்தாள். இருந்தாலும் அன்பு என்பது கொஞ்சம் கூடக் கிடையாது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியற்ற தம்பதியராகவே இருந்தனர். எனது நல்ல நேரம், நான் எப்பொழுதும் எனது சொந்த அறையிலும் சிறுவனின் அறையிலும் இருந்தேன். அவை இரண்டுமே அருகருகில் அந்த வீட்டின் ஒரு மூலையில் இருந்தன.”

“செம்பு மரங்களுக்கு வந்த முதல் இரண்டு நாட்கள் மிகவும் அமைதியாகவே கழிந்தன. மூன்றாவது நாள் திருமதி.ருகாஸ்டில் காலை உணவிற்குப் பின் வந்து தனது கணவரின் காதுகளில் கிசுகிசுத்தாள்.”

“‘ஆமாம்’ என்று சொன்னபடியே அவர் என்னை நோக்கித் திரும்பினார். நாங்கள் உனக்குக் கடன் பட்டிருக்கிறோம், செல்வி.ஹண்டர். எங்களது விருப்பங்களிற்கெல்லாம் இதுவரை செவி சாய்த்து முடி வெட்டியதற்கு. உனது தோற்றத்தில் இம்மி அளவு கூட அது மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இப்பொழுது அந்த நீல நிற உடை உனக்கு எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசையாய் இருக்கிறது. உனது அறையின் படுக்கையில் அது இருக்கிறது. அதை நீ போட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும்.”

“எனக்காகத் தயாராய் இருந்த அந்த உடை நீல நிறத்தின் ஒரு வித்தியாசமான பரிமாணத்தில் இருந்தது. துணியின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருந்தது. கொஞ்சம் பழுப்பேறி இருந்தது. ஏற்கெனவே உடுத்தியது தெளிவாகத் தெரிந்தது. நானே தைத்திருந்தாலும் இவ்வளவு கச்சிதமாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை. அதைப் பார்த்தவுடனே இருவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி. அளவு கடந்த மகிழ்ச்சி என்று சொன்னால் மிகையாகாது. வரவேற்பரையில் எனக்காகக் காத்திருந்தார்கள் இருவரும். அது ஒரு மிகவும் பெரிதாய் பரந்து இருந்தது கிட்டத்தட்ட முன்புறம் முழுவதும் விரிந்திருந்தது. அதில் மூன்று பெரிய சாளரங்கள் தரையைத் தொட்டவண்ணம் இருந்தன. நடுச் சாளரத்திற்கு அருகில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. அதன் பின்புறம் சாளரத்தை நோக்கி இருந்தது. அதில் என்னை உட்காரச் சொன்னார்கள். அந்த அறையின் மறு முனையில் இங்கும் அங்கும் உலாத்திக் கொண்டிருந்த திரு.ருகாஸ்டில் அவர்கள் நான் இதுவரை கேட்டிராத பல நகைச்சுவைக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அவ்வளவு நகைச்சுவையாளர் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். நான் சோர்வாகும் வரை சிரித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் திருமதி.ருகாஸ்டில் அவ்வளவு நகைச்சுவை உணர்வு கொண்டவர் இல்லை ஆதலால் முகத்தை உம்மென்று வைத்திருந்தார். தனது தொடைகளின் மேல் கைகளை வைத்து அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் ஏதோ ஒரு ஏக்கம் தெரிந்தது. ஒரு மணி நேரத்திற்குப் பின் சட்டென்று, திரு.ருகாஸ்டில் அன்றைக்கு வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைவூட்ட ஆரம்பித்தார். அதனால் உடை மாற்றி விட்டுச் சிறுவன் எட்வர்டைக் கவனிக்க அவனது அறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறினார்.

“இரண்டு நாட்களும் இதே சம்பவங்கள் அச்சுப் பிசகாமல் அரங்கேறின. மீண்டும் நான் உடை மாற்றினேன். மீண்டும் அதே சாளரத்தின் அருகில் அமர்ந்தேன். எனது முதலாளி சொன்ன நகைச்சுவைக் கதைகளைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். ரசித்தேன். அதன் பின் அவர் ஒரு மஞ்சள் நிறை அட்டை கொண்ட புதினம் ஒன்றைக் கொடுத்தார். எனது நாற்காலியைச் சிறிது தள்ளி வைத்தார் எனது நிழல் அந்த நூலில் படாதவாறு. அதைச் சத்தமிட்டுப் படிக்க வேண்டும் என்று கெஞ்சாத குறையாகக் கூறினார். நான் ஒரு பத்து மணித்துளிகள் வரை படித்திருப்பேன். அப்பொழுது திடீரென்று என்னை நிறுத்தத் சொல்லி விட்டு உடனே உடை மாற்றி விட்டு வரச் சொன்னார்.”

“உங்களுக்கு நிச்சயம் தெளிவாகத் தெரிந்திருக்கும் அவரின் இந்த வினோதமான செய்கைக்கு என்ன பொருள் என்று அறிய நான் எவ்வளவு ஆர்வமாய் இருந்திருப்பேன் என்று. அவர்கள் எப்பொழுதும் மிகவும் கவனமாகவே இருந்தனர் நான் என் முகத்தைத் திருப்பிச் சாளரத்தின் வழியே என்ன நடக்கிறது என்று பார்க்காத வண்ணம். முதலில் அது முடியாதது போலவே இருந்தது. இருந்தும் நான் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்து விட்டேன். எனது கைக்கண்ணாடி உடைந்து விட்டிருந்தது. அதனால் ஒரு மகிழ்ச்சியான எண்ணம் உதயமாயிற்று. அதை எனது கைக்குட்டையில் மறைத்து வைத்தேன். மறுமுறை அது நடக்கும்போது நான் சிரித்துக் கொண்டே எனது கைக்குட்டையை எடுத்துக் கண்களுக்கு அருகில் வைத்துக் கொன்டேன். அப்பொழுது என் பின்னால் என்ன நடக்கிறது என்று முழுவதும் பார்க்க முடிந்தது. ஆனாலும் ஏமாற்றமே மிஞ்சியது என்று ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும் நான். அங்கு எதுவுமே இல்லை. குறைந்தபட்சம் அதுதான் எனது முதல் அனுபவம். இரண்டாவது முறை கவனிக்கும்போது தெற்கு ஆம்ப்டன் சாலையில் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் குள்ளமாய் தாடி வைத்திருந்தான். சாம்பல் நிற மேலங்கி அணிந்திருந்தான். அவன் நான் இருந்த திசை நோக்கியே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சாலை ஒரு முக்கியமான நெடுஞ்சாலை. அதனால் அங்கு மக்கள் எந்நேரமும் இருப்பார்கள். ஆனால் இவன் அந்தச் சாலை ஓரம் போடப்பட்டிருந்த தடுப்புச் சுவரில் சாய்ந்து தீவிரமாக மேலே பார்த்துக் கொண்டிருந்தான். நான் எனது கைக்குட்டையைக் கீழிறக்கி திருமதி.ருகாஸ்டில் அவர்களைப் பார்த்தேன். அவள் என்னையே எதோ தேடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் என்னிடம் ஒரு கண்ணாடி இருப்பது அவளுக்குத் தெரிந்து விட்டது என்று உறுதியாகவே சொல்லி விட முடியும். அதனால் பின்னால் நடப்பது என்னவென்று தெரிந்து விட்டது என்று யூகித்திருப்பாள். சட்டென்று எழுந்தாள்.”

“‘ஜெஃப்ரோ’ என்று கத்தினாள். ‘சாலையில் சம்பந்தமில்லாத எதோ ஒரு ஆசாமி செல்வி.ஹண்டரை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான்’.”

“‘உங்களுக்குத் தெரிந்தவன் இல்லையே செல்வி.ஹண்டர்?’ என்று கேட்டான்.”

“‘இல்லை, எனக்கு யாரையும் இங்கு தெரியாது'”

“‘அப்படியா. அப்படி என்றால் அவனிடமே திரும்பி அவனை நீயே போகச் சொல்.'”

“‘இவனை மாதிரி ஆட்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதே நல்லது'”

“‘இல்லை, இல்லை. அவன் இங்கேயே சுற்றிக் கொண்டுதான் இருப்பான். தயவு செய்து அவனைப் போகச் சொல்லிக் கை காட்டு'”

“‘நான் அவர்கள் சொன்னபடியே செய்தேன். உடனே அவர்கள் சாளரத் திரையை மூடி விட்டார்கள். அது நடந்து ஒரு வாரம் ஆகி இருக்கும். அதன் பின் நான் அந்தச் சாளரத்தின் அருகில் அமரவே இல்லை. அதன் பின் நீல நிற உடையையும் அணியவில்லை. அந்த மனிதனையும் பார்க்கவில்லை'”

“மேலே சொல்லுங்கள்” என்றார் ஹோல்ம்ஸ். “உங்கள் கூற்று உண்மையிலேயே மிகவும் சுவாரசியமாக இருக்கிறது.”

“அந்தச் செய்திகள் எல்லாம் நான் சொல்லப் போகும் சம்பவங்களுக்குத் தொடர்பில்லாமல் துண்டு துண்டாய்த்தான் இருக்கப் போகிறது என்று கூடிய சீக்கிரம் நீங்களே உணர்வீர்கள். நான் செம்பு மரங்களுக்கு வந்த முதல் நாளில், திரு.ருகாஸ்டில் என்னைப் புற வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றார். அது சமையல் அறையை ஒட்டி இருக்கும். அதை நெருங்க நெருங்க உள்ளே இருந்து சங்கிலி உராயும் ஓசையும் ஒரு மிருகத்தின் ஓசையும் கேட்டது.”

“‘இங்கே பார்!’ என்று திரு.ருகாஸ்டில் கூறினார். இரண்டு கட்டைகளுக்கு நடுவில் உள்ள ஒட்டையைக் காண்பித்தார். ‘அது அழகாக இருக்கிறது அல்லவா?'”

“‘நானும் அது வழியாகப் பார்த்தேன். இருட்டில் எதோ ஒன்று இருப்பது போல் பட்டது. ஆனால் அதன் இரண்டு ஒளிரும் கண்களும் தெளிவாகத் தெரிந்தன.'”

“‘பயப்படாதே.’ என்று என் முதலாளி சிரித்துக் கொண்டே சொன்னார். ‘அதன் பெயர் கார்லோ. எனது மாஸ்டிஃப். அதை என்னுடையது என்று கூறினாலும், எனது பணியாள் டோலர்தான் அதை முழுவதும் கவனித்துக் கொள்கிறான். அதற்கு நாளுக்கு ஒரு முறைதான் சாப்பாடு கொடுப்போம். அதற்கு மேல் கிடையாது. அதனால் எப்பொழுதும் கடுகு போல் வெடித்துக் கொண்டே இருக்கும். டோலர் அதை இரவு வேளையில் அவிழ்த்து விட்டு விடுவான். அதனால் உள்ளே வரும் அழையா விருந்தாளிகளை அதன் கூரிய பற்கள் பதிவதில் இருந்து அந்தக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். அதனால் நீ எக்காரணம் கொண்டும் இரவு நேரத்தில் வெளியே வந்து விடாதே. இல்லை என்றால் உன் கதி அதோ கதிதான்'”

“‘அந்த எச்சரிக்கை ஒன்றும் சும்மா இல்லை. இரண்டு நாள் கிழித்து ஒரு இரவு எனது படுக்கை அறைச் சாளரத்தில் இருந்து இரண்டு மணி அளவில் எட்டிப் பார்த்தேன். அது ஒரு அருமையான நிலவு ஒளி விடும் இரவு நேரம். வீட்டின் முன் புறம் இருந்த புல்வெளி வெள்ளியைப் பரப்பி வைத்தது போல் இருந்தது. கிட்டத்தட்ட பகல் போல் காட்சி அளித்தது அந்நேரம். நான் அப்படியே மெய் மறந்து அந்தக் கட்சியை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது செம்பு மரங்களுக்கு நடுவில் நிழலில் எதோ அசைவது போல் தெரிந்தது. அது வெளியில் வந்தபோது நான் பார்த்தேன். அது கன்றுக்குட்டி அளவில் ஒரு பெரிய நாய். பழுப்பு நிறத்தில், தொங்கிக் கொண்டிருக்கும் தாடை, கருப்பான மூக்கு, பெரிய துருத்திக் கொண்டிருக்கும் எலும்போடு காட்சி அளித்தது. புல்வெளியில் மெதுவாகச் சென்று மீண்டும் அந்தப்புறம் இருந்த ஒரு நிழலில் மறைந்து விட்டது. அந்த பயங்கரமான அமைதியான காவல்காரன் இருக்கும்போது எந்தவிதத் திருடனும் உள்ளே நுழைய முடியாது.”

“இப்பொழுது இன்னொரு வித்தியாசமான அனுபவத்தைச் சொல்லப் போகிறேன். உங்களுக்கே தெரியும் நான் எனது முடியை வெட்டினேன் என்று, லண்டனில். அதை நான் எனது இரும்புப் பயணப்பெட்டியில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். ஒரு நாள் மாலை அந்தச் சிறுவன் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், எனது அறையில் இருந்த வேலைப்பாடு மிகுந்த சாமான்களை எல்லாம் ரசித்துக் கொண்டிருந்தேன். எனது சாமான்களையும் நான் கொஞ்சம் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அங்கே ஒரு பழைய இழுப்பறைகள் கொண்ட ஒரு அடுக்கு இருந்தது. அதன் மேல் பகுதியில் இருந்தவை திறந்திருந்தன. கீழிருந்த ஒன்று மூடி இருந்தது. மேலிருந்தவைகளில் நான் எனது துணிமணிகளை நிரப்பி வைத்திருந்தேன். கீழிருந்த ஒன்று மூடப்பட்டிருந்ததால் எனக்குச் சிறிது கோபம் ஏனெனில் எனக்கு இன்னும் நிறையப் பொருட்களை வைக்க இடமே இல்லை. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒருவேளை அது சும்மா சிக்கிக் கொண்டிருக்குமோ என்று நினைத்து எனது சாவிகளைப் பயன்படுத்தித் திறக்க முயற்சி செய்தேன். நான் எடுத்த முதல் சாவி சரியாகப் பொருந்தியது. திறந்தும் விட்டது. அதில் ஒரே ஒரு பொருள்தான் இருந்தது. நீங்கள் நம்பவே மாட்டீர்கள், அது என் முடியேதான்.”

“நான் அதை எடுத்து ஆராய்ந்து பார்த்தேன். அதே போன்ற வினோதமான நிறம், அடர்த்தி. இருந்தாலும் நிதர்சனம் என் கண் முன்னால் உறுத்தியது. அது எப்படி இதனுள் வந்து அடைபட்டது. யார் இதில் வந்து அடைத்து வைத்திருப்பார்கள்? நடுக்கத்துடன் நான் எனது பயணப்பெட்டியின் அடியில் பார்த்தேன். எனது முடியும் அங்கேயே இருந்தது. அதை இரண்டையும் கீழே வைத்தேன். இரண்டும் ஒன்று போலவே இருந்தன. எவ்வளவு அசாதாரணமானது அல்லவா. ஒரே குழப்பத்துடன், அதன் பொருள் என்னவென்று ஆராய்ந்து கொண்டிருந்தேன். இழுப்பறையில் எடுத்து முடியை அங்கேயே வைத்து விட்டேன். ருகாஸ்டில் குடும்பத்தினருக்கு அதைப் பற்றி எதுவும் நான் சொல்லவில்லை. ஏனெனில் அவர்கள் பூட்டி வைத்த ஒரு பொருளை நான் தெரியாமல் எடுத்து விட்டேன் என்ற பயத்தால்.”

“நான் இயற்கையாகவே உற்று நோக்கும் திறன் உடையவள் என்று நீங்களே யூகித்திருப்பீர்கள், ஹோல்ம்ஸ், அந்த வீட்டின் அமைப்பு பற்றி எனக்கு முழுமையாகத் தெரிந்து விட்டது. ஒரே ஒரு பகுதி மட்டும் அந்த வீட்டில் பயன்படுத்தப்படவே இல்லை. அதனை நோக்கிய ஒரு கதவு டோலர்கள் குடி இருக்கும் அறையின் வழியாக உள்ளே சென்று அந்தப் பகுதிக்குச் செல்லும். ஆனால் அது எப்பொழுதும் பூட்டியே கிடக்கும். இருப்பினும், ஒருநாள் நான் மாடிப்படி ஏறிக் கொண்டிருக்கும் போது நான் திரு.ருகாஸ்டில் அவர்கள் அந்தக் கதவு வழியே வந்ததை நான் பார்த்தேன். கைகளில் சாவிக் கொத்து வைத்துக் கொண்டிருந்த அவர் என்னைப் பார்த்த பார்வை இதுவரையில் நான் அவரிடம் கண்டதில்லை. எப்பொழுதும் சிரித்துச் சிரித்துப் பேசும் அவர் முகம் அதுவல்ல. அவரது கன்னங்கள் சிவப்பாகின. அவரது புருவங்கள் சுருங்கி அவரது ஆத்திரத்தை வெளிப்படுத்தின. நெற்றியில் நரம்புகள் புடைத்தன. அதை அப்படியே பூட்டி விட்டு என்னிடம் ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஏறெடுத்தும் பார்க்காமல் சென்று விட்டார்.”

“இது எனது ஆர்வத்தை மிகவும் தூண்டுவதாய் இருந்தது. அதனால் நான் நடைபயிற்சிக்காக அந்த வழியில் சென்றேன். அந்த அறை இருக்கும் இடத்தில் இருந்த சாளரங்களைக் கண்டேன். அதில் 4 இருந்தன ஒரே வரிசையில். மூன்று ஒரே அழுக்காக இருந்தன. நான்காவது திறந்திருந்தது. எதிர்பார்த்தது போல் அங்கு ஒன்றுமே இல்லை. அங்கு நான் அசைந்து கொண்டிருந்தபோது திரு.ருகாஸ்டில் வந்தார். எப்பொழுதும் போல் சிரித்தபடியே வந்தார்.”

“‘ஆஹ், நான் உன்னைக் கண்டும் காணாமல் போனதை வைத்து மரியாதைக் குறைவாய் நடத்தி விட்டேன் என்று நினைக்காதே, பெண்ணே. நான் எனது வேலை நிமித்தமாக இருந்தேன்.'”

“நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நான் அவரிடம் உறுதி அளித்தேன். ‘உங்கள் வீட்டில் காலியாகச் சில அறைகள் இருப்பது போல் தெரிகிறதே. சாளரம் ஒன்று அதில் திறந்திருந்தது.'”

“அவருக்கோ ஆச்சர்யம். குழப்பமான உணர்ச்சி போல் எனக்குத் தெரிந்தது.”

“‘புகைப்படம் எடுப்பது எனது பொழுதுபோக்கு.’ என்றார் அவர். ‘அங்கு அதற்குத் தேவையான இருட்டறை ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறேன். ஆனால், நீ எவ்வளவு கவனிக்கும் திறமை பெற்றிருக்கிறாய். யார் இதை நம்பி இருக்க முடியும்?. எக்காலத்திலும் யார் இதை நம்பி இருக்க முடியும்?’ என்று சிரிப்பு கலந்தவிதத்தில் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால் அவர் கண்களில் எந்தவிதச் சிரிப்பும் இல்லை. அதில் சந்தேகங்கள் இருந்தன, கோபம் இருந்தது, ஆனால் சிரிப்பு மட்டும் இல்லவே இல்லை.”

“அந்த அறைகள் பற்றி எனக்குத் தெரியக் கூடாது என்று அவர் தவிர்ப்பது தெரிந்த மறு நொடியே அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தலை தூக்கியது. வெறும் ஆர்வம் என்று மட்டுமே சொல்லி விட முடியாது. எனது பங்கும் அதில் இருப்பதை மறுக்க முடியாது. அது ஒரு கடமை போல் தெரிந்தது. அந்த இடத்தை ஊடுருவுவது மூலம் எதாவது நன்மை நடக்கும் என்று என் உள் மனம் சொல்லியது. பெண்களின் உள்ளுணர்வு என்று சொல்வார்களே. அதே உணர்ச்சிதான் எனக்கு ஒரு உந்துதலைக் கொடுத்தது. எது இருந்தாலும், நிதர்சனம் இதுதான். அதனால் தடை செய்யப்பட்ட அந்தக் கதவின் வழியே செல்லும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.”

“நேற்றுத்தான் அந்தச் சந்தர்ப்பமும் அமைந்தது. திரு.ருகாஸ்டில் தவிர்த்து டோலர் குடும்பமும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு நாள் அவர் அந்தக் கதவின் வழியே ஒரு பெரிய கருப்புத் துணியால் ஆன ஒரு பையை எடுத்துச் செல்வதை நான் கண்டேன். சமீப காலமாக அவர் அதிகமாகக் குடிக்க ஆரம்பித்திருந்தார். நேற்று இரவு மிகவும் அதிகமாகி விட்டது. நான் படியேறி வரும்போது அதில் சாவி இருந்தது. அவர் மறந்து விட்டிருப்பது நன்றாகத் தெரிந்து விட்டது. ருகாஸ்டில் தம்பதியினர் கீழே இருந்தனர். குழந்தையும் அவர்களுடனேதான் இருந்தது. எனக்கு அருமையான சந்தர்ப்பம் வாய்த்திருந்தது. நான் மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே சென்றேன்.”

“எனக்கு முன்னால் ஒரு சிறிய வழி தெரிந்தது. காகிதம் இடப்படவில்லை, கம்பளமும் போடப்படவில்லை. சிறிது தூரத்தில் செங்குத்தாகத் திரும்பியது அது. அந்தத் திருப்பத்தில் மூன்று கதவுகள் ஒரே வரிசையில் இருந்தன. முதல் மற்றும் மூன்றாம் கதவுகள் திறந்த நிலையில் இருந்தன. ஒவ்வொரு அறையும் காலியாகவே இருந்தன. தூசி படிந்து இருந்தன. ஒரு அறையில் இரண்டு சாளரங்களும் இன்னொரு அறையில் ஒன்றும் இருந்தன. அவைகளும் அவ்வளவு அழுக்குப் படிந்திருந்ததால் அறையில் இருந்த விளக்கு கூட மிகவும் மங்கலாக இருந்தது. நடுவில் இருந்த கதவு மூடப்பட்டிருந்தது. அந்த அறையின் மறுபுறத்தில் ஒரு இரும்புக் கட்டிலின் அகலமான பகுதி பொருத்தப்பட்டிருந்தது. சுவரில் பொருத்தப்பட்டிருந்த சங்கிலி ஒன்று கட்டிலில் பூட்டு வைத்து இணைக்கப்பட்டிருந்தது. அதன் மறு முனையில் ஒரு தடியான கயிறு கட்டப்பட்டிருந்தது. அதன் கதவு பூட்டப்பட்டிருந்தது. சாவியும் இல்லை. பூட்டப்பட்டிருந்த அந்தக் கதவு அப்படியே அதன் பூட்டப்பட்டிருந்த சாளரத்திற்கு நேரெதிர் இருந்தது. இருந்தாலும் மெல்லிய வெளிச்சத்திலேயே தெரிந்தது அது இருட்டாக இல்லை என்று. சொல்லப் போனால் வெளிச்சம் வெளியில் இருந்து அங்கே படிந்தது. அந்தச் சிறு வழியில் நின்று கொண்டு அந்தப் பயங்கரமான கதவை நான் உற்று நோக்கிக் கொண்டு அதன் உள்ளே என்னவிதமான மர்மம் இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, அதன் உள்ளிருந்து நிழல் இங்கும் அங்கும் அசைந்தது தெரிந்தது இடைப்பட்ட இடுக்கு வழியே. அதைப் பார்த்ததும் எனக்குள் பயங்கர அச்சம் ஏற்பட்டது, ஹோல்ம்ஸ். திடீரென்று எனது தைரியமான நரம்புகள் எல்லாம் செயல் இழந்து விட்டன. அதனால் ஒரே ஓட்டம் எடுத்தேன். என் உடையை எதோ ஒரு பயங்கரமான கை ஒன்று பற்றிக் கொண்டிருப்பதாக நினைத்து. அந்த வழியைக் கடந்து கதவைத் தாண்டி நேராக ருகாஸ்டில் அவர்களின் கைகளில் சென்று விழுந்தேன். அவர் வெளியில் எனக்காகவே காத்துக் கொண்டிருந்தார்.”

“‘ஆக.’ என்று சிரித்தபடியே ஆரம்பித்தார் அவர். ‘அது நீதானா? கதவு திறந்திருந்தபோதே அது நீயாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்'”

“‘ஓஹ்! எனக்கு மிகவும் பயமாய் இருக்கிறது.’ என்று மூச்சிரைத்தபடியே கூறினேன்”

“‘எனதருமை இளம்பெண்ணே! எனதருமை இளம்பெண்ணே!’ – அவர் எவ்வளவு தூரம் அமைதிப்படுத்துவார் பொறுப்புணர்வோடு நடந்து கொள்வார் என்று நான் நினைக்கவே இல்லை – ‘உன்னை எது பயமுறுத்தியது எனதருமை இளம்பெண்ணே?'”

“ஆனால் அவரது பேச்சு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அவசரப்பட்டு விட்டார். அதனால் அவரிடம் கொஞ்சம் கவனமாகவே இருந்தேன்.”

“‘நான் முட்டாள்தனமாக அந்தக் காலியான அறையினுள் சென்று விட்டேன்.’ என்று கூறினேன். ‘ஆனால் அது தனிமையாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்ததால் நான் பயந்து போய் ஓடி வந்து விட்டேன். அச்சமூட்டும் அமைதி இன்னும் அப்படியே இருக்கிறது அங்கு'”

“‘அவ்வளவுதானா?’ என்று கேட்டார் என்னையே உற்றுப் பார்த்தபடியே.”

“‘ஏன்? நீங்கள் என்ன நினைத்தீர்கள்.’ என்று கேட்டேன்.”

“‘இந்தக் கதவை நான் ஏன் பூட்டி வைக்கிறேன் என்று இப்பொழுதாவது புரிகிறதா?'”

“‘நிச்சயம் எனக்குத் தெரியாது'”

“‘அங்கு சம்பந்தமில்லாத யாரும் செல்லக் கூடாது என்பதற்காகத்தான். புரிகிறதா?’ அவர் இன்னும் இனிமையாகச் சிரித்துக் கொண்டே பேசினார்.”

“‘எனக்கு இது முன்பே தெரிந்திருந்தால்-‘”

“‘நன்று, இப்பொழுது தெரிந்தது விட்டதல்லவா. இனிமேல் இந்த எல்லையை நீ தாண்டினால்-‘ இங்கே மறு நொடி அவரது முகத்தில் இருந்த சிரிப்பு இறுகிக் கோபமாக மாறி விட்டது. ஒரு பூதத்தின் முகத்தை வைத்துக் கொண்டு என்னைப் பார்த்துச் சொன்னார்-‘உன்னை அந்த நாயிடம் ஒப்படைத்து விடுவேன்'”

“நான் அவ்வளவு பயந்து போயிருந்தேன். அதனால் நான் என்ன செய்தேன் என்றே எனக்கு நினைவில்லை. நான் அவரை விட்டு விட்டு என்னுடைய அறைக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எனது படுக்கைக்கு வந்து நடுங்கியபடியே இருந்ததுதான் எனக்குத் தெரியும். அதற்கு முன் என்ன நடந்தது என்றே எனக்கு நினைவில்லை. அதன் பிறகுதான் நான் உங்களைப் பற்றி நினைத்தேன் திரு.ஹோல்ம்ஸ். கொஞ்சம் அறிவுரை இல்லாமல் என்னால் அங்கு இனிமேல் செல்லவே முடியாது. அந்த வீடு, அந்த மனிதன், அந்தப் பணியாட்கள், சொல்லப் போனால் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கூட நான் மிகவும் பயந்து போயிருக்கிறேன். அவர்கள் அவ்வளவு மோசமாக இருக்கிறார்கள். நீங்கள் அங்கு வந்தால் எல்லாம் சரியாகி விடும். அங்கிருந்து தப்பி வந்திருக்க முடியும். ஆனால் எனது ஆர்வம் எனது பயத்தைப் போலவே மிகவும் வலிமையாக இருக்கிறது. அதனால் என் மனதை திடப்படுத்திக் கொண்டேன். உங்களுக்கு ஒரு தந்தி அனுப்பி விடத் தீர்மானித்தேன். எனது தொப்பி மற்றும் மேலங்கியை அணிந்து கொண்டு அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்றேன். அது ஒரு அரை மைல் தூரம் இருக்கும். அனுப்பிய பின்தான் நிம்மதியாக வீடு வந்தேன். கதவைத் திறக்கும்போதுதான் எனக்குள் ஒரு கொடூரமான சிந்தனை தோன்றியது, ஒருவேளை அந்த நாய் திறந்து விடப்பட்டிருக்குமோ என்று. ஆனால் டோலர் அன்றைய பொழுசாயம்தான் நன்றாகக் குடித்து விட்டிருந்தது ஞாபகம் வந்தது. இந்த வீட்டில் அவனுக்கு மட்டும்தான் அந்தக் கொடூரமான விலங்கைக் கட்டுப்படுத்தும் திறமை இருக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரியும். அவனால் மட்டுமே அதை அவிழ்த்து விடவும் முடியும். அதனால் பயமின்றி உள்ளே நுழைந்தேன். இரவு முழுவதும் உறக்கம் வரவே இல்லை உங்களைப் பார்க்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சியில். இன்று காலை விண்செஸ்டர் வருவதற்கு அனுமதி எளிதில் கிடைத்து விட்டது. ஆனால் மூன்று மணிக்குள் நான் திரும்பியாக வேண்டும். ஏனெனில் அவர்கள் இருவரும் வெளியே செல்கிறார்கள். மாலை முழுதும் வீட்டில் இருக்க மாட்டார்கள். அதனால் அந்தக் குழந்தையை நான்தான் கவனிக்க வேண்டும். இப்பொழுது எல்லாவற்றையும் நான் உங்களிடம் கூறி விட்டேன், திரு.ஹோல்ம்ஸ், இதற்கெல்லாம் என்ன பொருள் என்பதை நீங்கள்தான் கூற வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இனிமேல் நான் என்ன செய்ய வேண்டும் என்று.”

ஹோல்ம்ஸும் நானும் அவள் சொன்ன திகில் கதையை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தோம். என் நண்பர் இப்பொழுது எழுந்து அறையில் அங்கும் இங்கும் உலாத்தினார், கைகள் அவரது பைகளில் வைத்துக் கொண்டு முகத்தை மிகவும் தீவிரமாக வைத்துக் கொண்டு.

“டோலர் இன்னும் போதையில்தான் இருக்கிறானா?” என்று கேட்டார்.

“ஆம். அவரது மனைவி திருமதி.ருகாஸ்டில் அவர்களிடம் அவரை வைத்து இன்று எதுவும் செய்ய முடியாது என்று சொன்னதை நான் கேட்டேன்”

“நன்று. மேலும், ருகாஸ்டில் தம்பதிகள் இன்றிரவு வீட்டில் இருக்க மாட்டார்கள் அல்லவா!”

“ஆம்.”

“அங்கு வலிமையான பூட்டு உடைய நிலவறை எதுவும் இருக்கிறதா?”

“ஆம், மது குடிக்கும் அறை ஒன்று இருக்கிறது?”

“இந்தச் சூழலில் நீ மிகவும் தைரியமாகவும் பொறுப்போடும் நடந்து கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது, செல்வி.ஹண்டர். நீங்கள் இன்னும் ஒரே ஒரு செயல் செய்ய முடியுமா? நீ ஒரு தைரியமான பெண் என்பதால்தான் நான் உன்னிடம் கேட்கிறேன்.”

“முயற்சி செய்கிறேன். என்ன செயல் அது?”

“நாங்கள் செம்பு மரங்களுக்கு 7 மணி அளவில் வந்து விடுவோம். அப்பொழுது ருகாஸ்டில் தம்பதியினர் வீட்டில் இருந்து கிளம்பி இருப்பார்கள். டோலரால் எதுவும் செய்ய முடியாது. அதனால் திருமதி.டோலர் மட்டுமே மீதி. அவள் மட்டுமே சத்தமிட இயலும். அவளை நிலவறைக்கு எதாவது வேலை சொல்லி அனுப்பி விட்டுக் கதவைப் பூட்டி விட வேண்டும். பின் எல்லாம் எளிதாக முடிந்து விடும்”

“நான் செய்கிறேன்”

“பிரமாதம்! நாங்கள் இதை நன்றாக அலசி ஆராய்ந்து விடுவோம். இருப்பினும் ஒரே ஒரு தீர்வுதான் இருக்கிறது. வேறு யாரையோ உருவகப்படுத்தத்தான் அங்கே உன்னைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த உண்மையான பெண்தான் அங்கே அடைபட்டிருப்பது. அதுவும் யாரென்பது தெளிவு. அங்கு சிறையில் இருப்பது வேறு யாருமல்ல, அவரது பெண்ணான, செல்வி.ஆலிஸ் ருகாஸ்டில்தான். சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்கா சென்று படிக்க அனுப்பியதாகச் சொன்னார்களே அவளேதான். அவள் போலே உயரம், உருவம், முடியின் நிறம் எல்லாம் ஒத்துப் போயிருப்பதால் நிச்சயமாக அதற்காகத்தான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவளது முடி எதாவது நோயின் காரணமாக வெட்டப்பட்டிருக்கலாம். அதனால் உனது முடியும் காணிக்கையாக்கப்பட்டு விட்டது. உனது ஆர்வத்தின் பலனாக அது உன் கண்களிலேயே பட்டு விட்டது. சாலையில் பார்த்த அந்த மனிதன் சந்தேகமே இல்லாமல் அவளது நண்பன், சொல்லப் போனால் கணவனாகப் போகிறவன். நீயும் அவளது உடையையே அணிந்திருந்ததால் அவளை மாதிரியே இருந்ததால் உன் சிரிப்பைக் கேட்டு அவனும் நம்பி இருப்பான். உன்னைப் பார்க்கும் போதெல்லாம், உனது உடல் அசைவுகள் மூலமும் செல்வி.ருகாஸ்டில் மகிழ்ச்சியாக, நன்றாக இருப்பதாக அவன் நினைத்திருப்பான். அதனால் அவனது கவனம் அவள் மேல் இருக்க வேண்டியதில்லை என்று உணர்த்தி இருக்கிறாய். நாய் அவன் அங்கு வந்து அவளிடம் பேசி விடக் கூடாது என்பதற்காகக் கட்டவிழ்த்து விடப்படுகிறது தினமும். இது வரை எல்லாமே நன்றாகப் புரிகிறது. எல்லாவற்றிலும் முக்கியமானது அந்தச் சிறுவனின் குணாதிசயம்தான்”

“அதற்கும் இதற்கும் அப்படி என்னதான் சம்பந்தம் இருக்கிறது?” என்று கொஞ்சம் அதிகப்படியாகவே நான் கேட்டேன்.

“எனதருமை நண்பா, வாட்சன், மருத்துவத் துறையில் இருக்கும் நீங்கள் பெற்றோர்களின் குணங்களை ஆராய்ச்சி செய்தே அவர்களின் குழந்தைகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்னும் அறிவை பெற்றுக் கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் அப்படியே அதை மாற்றி யோசித்தாலும் பொருத்தமாய் இருக்கும் என்று நீங்கள் உணரவில்லையா? நான் குழந்தைகளின் குணாதிசயங்களை வைத்தே அவர்களின் பெற்றோர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை எத்தனையோ முறை கண்டு பிடித்திருக்கிறேன் ஆரம்பக்கட்டத்திலேயே. அந்தச் சிறுவனின் நடவடிக்கைகள் மிகவும் கொடூரமாக இருக்கின்றன. கொடுமைப்படுத்த வேண்டும் என்ற வெறும் காரணத்திற்காகவே அதை அவன் செய்கிறான். இது சிரித்தபடிப் பேசும் அவன் தந்தையிடம் இருந்து வந்திருக்கிறதா, நான் சந்தேகப்படுவது போல், இல்லை அவன் தாயிடம் இருந்தா? அவர்களிடம் அடைபட்டிருக்கும் அந்தப் பெண்ணை நினைத்தால் பாவமாய் இருக்கிறது.”

“நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான், திரு.ஹோல்ம்ஸ்.” என்று எங்களது கட்சிக்காரர் கத்தினார். “ஒரு ஆயிரம் தகவல்கள் என் எண்ணத்தில் தோன்றின நீங்கள் நெத்தி அடி அடித்து விட்டீர்கள் என்று சொல்ல. இனி ஒரு நொடியும் தாமதிக்காமல் அந்த பாவப்பட்ட பெண்ணை நாம் மீட்க வேண்டும்.”

“நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த ஆள் மிகவும் கபடம் மிகுந்தவன். ஏழு மணி வரை நாம் எதுவும் செய்ய முடியாது. சரியாக அந்த நேரத்தில் நாங்கள் அங்கு இருப்போம். அங்கு வந்ததும் புதிரை உடனடியாக விடுவித்து விடுவோம்.”

நாங்கள் சொன்னபடியே நாங்கள் செம்பு மரங்களுக்கு வந்தவுடன் சரியாக மணி ஏழடித்தது. எங்கள் வலையை நாங்கள் தெரு ஓரத்தில் இருந்த ஒரு பொதுவிடத்தில் பொருத்தி விட்டு வரவும் சரியாக இருந்தது. அடர்த்தியான மரங்கள், அதன் கருமையான இலைகள் மெருகேற்றிய உலோகங்கள் போல் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன மாலைக் கதிரவன் மறைந்து கொண்டிருக்கும் வேளையில். அந்த நேரத்தில் எங்களுக்காக வாசல் வரை வந்து செல்வி.ஹண்டர் புன்னகையோடு காத்திருக்கா விட்டாலும் நாங்கள் அதை எளிதில் அடையாளம் கண்டிருப்போம்.

“உங்களால் செய்ய முடிந்ததா?” என்று கேட்டார் ஹோல்ம்ஸ்.

ஒரு பெரிய டொம்மென்ற சத்தம் கேட்டது. “அதுதான் திருமதி.டோலர், மதுவறையில் இருந்து.” என்றாள் அவள். “அவள் கணவன் சமையல் அறையில் கீழே படுத்துக் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறான். இதுதான் அவனது சாவிக் கொத்து, ருகாஸ்டில் அவர்களின் நகல்.”

“அருமையான செயல் செய்திருக்கிறீர்கள்.” என்று கத்தினார் ஹோல்ம்ஸ். “இப்பொழுது அந்த அறைக்கு எங்களைக் கூட்டிச் செல். இந்தக் கொடுமையான குற்றத்தை இப்பொழுதே முடிவுக்குக் கொண்டு வருவோம்.”

படியேறி மேலே சென்று கதவைத் திறந்து அந்தக் குறுகிய சந்தில் நுழைந்து செல்வி.ஹண்டர் சொன்ன அந்தத் தடுப்பின் அருகில் வந்து நின்றோம். ஹோல்ம்ஸ் கயிறை அறுத்துத் தாழ்ப்பாளை நீக்கினார். அதன் பின் அவர் தன்னிடம் இருந்த ஒவ்வொரு சாவியையும் வைத்துத் திறக்க முயற்சி செய்தார். ஆனால் ஒன்றும் வேலை செய்யவில்லை. உள்ளே இருந்தும் ஒரு சத்தமும் கேட்கவில்லை. அந்த அமைதியின் கனத்தால் அவரது முகம் இறுகியது.

“நாம் தாமதப்படுத்தவில்லை என்றே நம்புகிறேன்.” என்றார் அவர். “செல்வி.ஹண்டர், நாங்கள் மட்டும் உள்ளே செல்வதுதான் சரி என்று நினைக்கிறேன். வாட்சன், உங்கள் தோளைக் கொடுங்கள். நாம் உள்ளே செல்ல முடிகிறதா என்று பார்ப்போம்.”

அது வந்து ஒரு பாழடைந்த உடைந்து கொண்டிருக்கும் கதவு. நாங்கள் இருவரும் மோதியவுடன் திறந்து கொண்டது. நாங்கள் இருவரும் உள்ளே சென்றோம். அது காலியாக இருந்தது. அங்கே சாமான்கள் அதிகம் இல்லை. சிறிய ஒரு படுக்கை, மேசை, கூடை நிறைய ஆடைகள். கூரை திறந்திருந்தது, உள்ளிருந்தவளைக் காணோம்.

“இங்கே எதோ திருட்டுத்தனம் நடந்திருக்கிறது.’ என்றார் ஹோல்ம்ஸ். அவர்களுக்கு செல்வி.ஹண்டரின் எண்ணம் புரிந்திருக்கிறது. அதனால் அவளை எங்கோ கடத்திச் சென்று விட்டார்கள்.”

“அனால் எப்படி?”

“மேற்கூரை வழியாக. இன்னும் சற்று நேரத்தில் அது எப்படி என்று தெரிந்து விடலாம்.” அவர் சட்டென்று தாவி ஏறினார். “ஆஹ், அருமை.” என்று கத்தினார். “மெல்லிய ஏணி ஒன்றின் மறுமுனை இதோ இங்கிருக்கிறது. அதை வைத்துத்தான் இது நடந்திருக்கிறது.”

“ஆனால் அது சாத்தியமே இல்லை. அந்த ஏணி ருகாஸ்டில் தம்பதியினர் கிளம்பும்போது இல்லவே இல்லை.”

“அவர் திரும்ப வந்து இதைச் செய்து விட்டுப் போயிருக்கிறார். அவர் ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது. மிகவும் புத்திசாலி. அதே நேரத்தில் மிகவும் அபாயகரமான ஆள். என் யூகம் சரி என்றால் இப்பொழுது படிச்சத்தம் கேட்கிறதே அது இவராகத்தான் இருக்கும். வாட்சன், உங்களது கைத்துப்பாக்கியை நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டிய நேரமும் வந்து விட்டது.”

அவர் சொல்லி முடிக்குமுன் கதவுக்குப் பக்கத்தில் ஒரு மனிதன் வந்து நின்றான். மிகவும் பருத்தவன். அவன் கைகளில் ஒரு கனத்த தடி இருந்தது. அவனைப் பார்த்ததும் செல்வி.ஹண்டர் கத்திக் கொண்டு அப்படியே சுவரில் ஒட்டிக் கொண்டாள். ஆனால் ஹோல்ம்ஸ் முன்னேறி அவனை எதிர் கொண்டார்.

“திருட்டுப் பயலே, எங்கடா உன் மகள்?” என்று கேட்டார்.

அந்தக் குண்டன் தன் விழிகளை உருட்டி மேலே காண்பித்தான்.

“நான்தான் உங்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.” என்று கிறீச்சிட்டான் அவன். “திருடர்கள் நீங்கள்தான். ஒற்றர்கள். நான் உங்களைப் பிடித்து விட்டேன். இல்லையா? எனது கட்டுப்பாட்டில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” அவன் திரும்பி எவ்வளவு வேகமாகச் செல்ல முடியுமோ அவ்வளவு வேகமாகச் சென்று படிகளில் இறங்கினான்.

“அவர் நாயை ஏவுவதற்குச் செல்கிறார்.” என்று இரைந்தாள் ஹண்டர்.

“என்னிடம் கைத்துப்பாக்கி இருக்கிறது” என்றேன் நான்.

“முன் கதவைச் சாத்தி விடுங்கள்” என்று கத்தினார் ஹோல்ம்ஸ். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து படிகளில் இறங்கினோம். கூடத்தை அப்பொழுதுதான் அடைந்தோம், அதற்குள் அந்த மிருகத்தின் ஓலம் கேட்டது. அதனுடன் கடுந்துயர் அடைந்த ஒருவனின் ஓலமும் சேர்ந்தே கேட்டது. மிகவும் கவலை தோய்ந்த அந்தக் குரலைக் கேட்கவே மிகவும் பயமாக இருந்தது. செக்கச் சிவந்த முகம் கொண்ட வயதான ஒரு மனிதன் நடுங்கும் கைகளுடன் பக்கவாட்டுக் கதவைத் திறந்தான்.

“கடவுளே!” என்று கத்தினான் அவன். “யாரோ நாயை அவிழ்த்து விட்டார்களே. இரண்டு நாட்களாய் அதற்குச் சாப்பாடும் போடவில்லை. சீக்கிரம், சீக்கிரம், இல்லை சோலி முடிஞ்சிரும்”

ஹோல்ம்ஸும் நானும் வேகமாக வீட்டின் வளைவுகளில் ஓடிச் சென்று கொண்டிருந்தோம். டோலர் எங்கள் பின்னாடியே வந்து கொண்டிருந்தார். களைத்துப் போயிருந்த அந்த முரட்டு மிருகம் அதோ இருந்தது, ருகாஸ்டில் அவர்களின் தொண்டையைத் தன் கருப்பான நீண்ட வாயினால் குதறியபடி. வேகமாக ஓடிச் சென்று அதன் மூளையை நான் சிதறடித்தேன். அது சட்டென்று கீழே விழுந்தது. அதன் பற்கள் எல்லாம் அதன் கழுத்துப் பகுதியில் உள்ள தசை மடிப்புகளில் இன்னும் சிதறிக் கொண்டிருந்தன. மிகவும் பிரயாசைப்பட்டு நாங்கள் அவரை அதன் பிடியில் இருந்து விடுவித்தோம். பின்னர் அவரை வீட்டினுள் கொண்டு சென்றோம். உயிர் இருந்தது, ஆனால் உடல் மட்டும் பயங்கரமான சேதாரம் ஆகி இருந்தது. வரவேற்பறையில் உள்ள மெத்தாசனத்தில் அவரைக் கிடத்தினோம். குடி போதையில் இருந்த திரு.டோலரிடம் அவரது மனைவியைக் கூட்டி வரச் சொல்லி விட்டு என்னால் முடிந்த அளவு அவரது வலியைக் குறைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். நாங்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தபோது கதவு திறந்து உயரமான மெலிந்த தேகமுடைய பெண் ஒருத்தி உள்ளே வந்தாள்.

“திருமதி.டோலர்.” என்று ஹண்டர் கத்தினாள்.

“ஆம், குழந்தை. திரு.ருகாஸ்டில் உன்னைத் தேடி மேலே செல்லுமுன் என்னை விடுவித்து விட்டார். ஆஹ், நீ என்னிடம் உன் எண்ணங்களை முன்பே சொல்லி இருந்தால் இவ்வளவு தூரம் மெனக்கெட்டிருக்கத் தேவை இருந்திருக்காது.”

“ஹா!” என்றார் ஹோல்ம்ஸ் அவளையே உற்றுப் பார்த்தபடி. “திருமதி.டோலருக்கு இந்த வழக்கு பற்றி நிறையத் தெரிந்திருக்கும் போல் தெரிகிறதே மற்றவர்கள் அனைவரையும் விட.”

“ஆம், எனக்குத் தெரியும். அதை நான் உங்களிடம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.”

“அப்படி என்றால், தயவு செய்து உட்கார்ந்து பேசலாமே. ஏனெனில் இன்னும் பல தகவல்களில் எனக்குத் தெளிவு ஏற்படவில்லை.”

“நிச்சயம் அதை எல்லாம் உடனே புரிய வைக்கிறேன்.” என்றால் அவள். “நிலவறையில் இருந்து முன்பே வெளியே வந்திருந்தால் நானே எல்லாவற்றையும் சரி செய்திருப்பேன். சட்டம், நீதி மன்றம் இதெல்லாம் போவதென்றால் கூட நான்தான் உங்களுக்கு உதவி செய்பவளாக இருப்பேன். ஆலிஸுக்கும் நான்தான் உதவியாய் இருந்தேன்.”

“அவள் இந்த வீட்டில் மகிழ்ச்சியாகவே இல்லை. அவளது தந்தை இன்னொரு திருமணம் செய்தது முதல். அவளை அவர் உதாசீனப்படுத்தி விட்டார். அவள் சொல்வதை யாரும் கேட்கவில்லை. ஆனாலும் திரு.ஃபவ்லர் அவர்களை ஒரு நண்பரின் வீட்டில் அவள் சந்தித்த பின்தான் நிலைமை இன்னும் மோசமானது. எனக்குத் தெரிந்தவரை செல்வி.ஆலிஸுக்கும் முடிவு எடுக்கும் உரிமை இருந்தது. ஆனால் அவள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தாள். அதைப் பற்றி என்றும் தன் தந்தையிடம் அவள் வாயைத் திறக்கவே இல்லை. அவராகவே முடிவு செய்யட்டும் என்று விட்டு விட்டாள். அவள் தன்னிடம் இருக்கும் வரை ஒன்றும் பிரச்சினை இல்லை என்றே அவர் நினைத்திருந்தார். ஆனால் அவளுக்கு வரும் கணவன் வந்து தன்னிடம் சட்டம் பேசினால் என்ன செய்வது என்று யோசித்த அவர் இதற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவளிடம் ஒரு காகிதத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று சொன்னார், அவள் திருமணம் செய்து கொண்டாலும் இல்லை என்றாலும் அவள் சொத்தை இவரே அனுபவிக்கலாம் என்ற ஒப்பந்தத்தில். அவள் மறுக்கவே அவருக்கு ஒரே கவலையாகிப் போய் விட்டது. இடைப்பட்ட நேரத்தில் அவளுக்கு மூளைக் காய்ச்சல் வந்து விட்டது. அதனால் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் அவள் சாவின் விளிம்பு வரை சென்று விட்டாள். ஒருவழியாக அவள் அதில் இருந்து தேறி வந்து விட்டாள். ஒரு நிழல் போல் தேய்ந்து விட்டிருந்தாள், அவளது முடியும் பறி போய் விட்டது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அந்தப் பையன் கவலைப்படவே இல்லை. அவளுக்காக உண்மையாக உருகிக் கொண்டிருந்தான்.”

“ஆஹ்!” என்று கணைத்தார் ஹோல்ம்ஸ். “நீங்கள் சொன்ன செய்திகளில் இருந்து இப்பொழுது எல்லாம் தெளிவாகப் புரிகிறது. மீதி இருப்பதை நானே இதில் இருந்து தெரிந்து கொள்வேன். ஆக, திரு.ருகாஸ்டில்தான் இந்தச் சிறை விவகாரத்தைக் கையில் எடுத்தவர் அல்லவா?”

“ஆமாம்!”

“செல்வி.ஹண்டரை அவர்தான் லண்டனில் இருந்து வரவழைத்தார் திரு.ஃபவ்லரை இங்கிருந்து விரட்டி விட.”

“ஆம், அதேதான்.”

“ஆனால் ஃபவ்லர் விடாப்பிடியானவர் எல்லாவித கடலோடிகள் போல. அவர் வீட்டிற்கு வந்து உங்களைச் சந்தித்து உங்களுடன் உரையாடிய பின் நீங்கள் நினைப்பதும் அவர் நினைப்பதும் ஒன்றுதான் என்று அவருக்குப் புரிந்திருக்கும்.”

“அவர் மிகவும் அன்பாகப் பேசிக் கூடியவர். மிகவும் நல்லவர்.” என்று அமைதியாகச் சொன்னார் திருமதி.டோலர்.

“அதனால் உங்கள் கணவரையும் குடிக்காமல் காத்திருக்க வைத்து விட்டுத் தேவையான நேரத்தில் ஒரு ஏணியையும் தயார் நிலையில் வைத்திருந்தீர்கள். உங்கள் முதலாளி வெளியில் சென்ற நேரத்தில் தேவைப்படும் என்றெண்ணி.”

“ஆம், இங்கு நடந்தது போலவே”

“நிச்சயம், உங்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும், திருமதி.டோலர்.!” என்றார் ஹோல்ம்ஸ். “நிச்சயம் நீங்கள் சொன்ன செய்திகள் எங்களுக்குப் புரியாத பல மர்மங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வர உதவி செய்தது. இதோ இங்கு வந்திருப்பது திருமதி.ருகாஸ்டில் என்று நினைக்கிறேன். வாட்சன், இப்பொழுது நாம் ஹண்டரை விண்செஸ்டர் கொண்டு போய் விட வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆக இப்படித்தான் செம்பு மரங்கள் கொண்ட இந்த மர்மமான வீட்டின் இந்தப் புதிரும் தீர்க்கப்பட்டது. திரு.ருகாஸ்டில் உயிர் பிழைத்துக் கொண்டார். ஆனாலும் அவர் உடல்நிலை தேறவில்லை. அவரது அர்ப்பணிப்பு மிகுந்த மனைவியின் உதவியால் வாழ்நாளைக் கடத்திக் கொண்டிருந்தார். அவர்களது பழைய பணியாட்களுடனே அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தங்களது வாழ்வில் நடந்த பல தகவல்கள் அவர்களுக்கும் தெரியும் என்பதால் அவர்களை விட்டு விடவும் அவர்களுக்கு மனமில்லை. திரு.ஃபவ்லரும் செல்வி.ருகாஸ்டிலும் திருமணம் செய்து கொண்டனர் தெற்கு ஆம்ப்டனில். மரீஷியஸ் தீவில் அரசுப் பணியில் அவன் சேர்ந்து கொண்டான். நான் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் என் நண்பர் ஹோல்ம்ஸ், செல்வி.வயலட் ஹண்டரைக் கண்டு கொள்ளவே இல்லை. அவரது வழக்கின் தீவிரத்தின் நடுவில் அவள் இல்லாததால் அப்படியே கைகழுவி விட்டார். ஆனால் அவள் தற்போது வாழ்சல் என்னும் தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறாள். அங்கு அவள் மிகவும் வெற்றிகரமாகப் பணியாற்றுகிறாள் என்று நம்புகிறேன்.

அருஞ்சொற்கள்

  • தினத் தந்தி – The daily Telegraph newspaper
  • கணப்படுப்பு – Fireplace
  • ப்ஷா – ஆற்றாமையை வெளிப்படுத்தும் ஒலி.
  • பொழுசாயம் – பொழுது சாயும் வேளை, மாலைப் பொழுது
  • பேரேடு – Ledger
  • புற வீடு – Out house
  • மாஸ்டிஃப் – அச்சுறுத்தும் வகையைச் சேர்ந்த நாய்
  • இழுப்பறை – Drawer
  • நிலவறை – Basement
  • கபடம் – cunning, தந்திரம்
  • மெத்தாசனம் – Sofa
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *