கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: July 30, 2012
பார்வையிட்டோர்: 15,934 
 

பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து புறநகர் பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு தூக்கிவிட்ட பிறகும் அங்கே எதுவும் மாறவில்லை., எல்லா நாற்றங்களும் அப்படியே. உள்ளே வரும் பாதையை அடைத்தபடி பூதங்களாய் டவுன் பஸ்கள் வரும்போது தரை அதிர்கிறது. பாதசாரிகள் ஒதுங்க வழியில்லை. ஓரத்து அசிங்கங்கள் தெறித்து விழும் .ஓடவேண்டும். இரண்டு பக்கங்களிலும் மனிதக் கழிவுகள். அவை வெளியேற வழியில்லாமல் தேங்கி,சிதறி, பாதையில் புரள, அதைக் கடப்பதற்குள் மூக்கில் ரத்தம் சொட்டும். கொஞ்சம் சென்ஸிட்டிவ்வான ஆட்களானால் புரட்டிக் கொண்டு வாந்தியெடுப்பார்கள்.

இதைப் பற்றி எந்தவித சங்கடங்களுமில்லாமல், திட்டாய் காய்ந்திருக்கும் இடங்களில் உருளையையும், தக்காளியையும் கூறு கட்டி வைத்துக் கொண்டு கூவும் புகையிலையைக் குதப்பும் கருப்புக் கிழவிகள், ரோட்டோர சால்னா கடைகள்., அதில் மாறி மாறி தின்றுக் கொண்டிருக்கும் முரட்டு மனிதர்கள், முண்டாசு கட்டிய மூட்டைத் தூக்கிகள். நிர்வாணங்களாய் ஆடிக் கொண்டிருக்கும், அவர்கள் பெற்றுப் போட்ட வாரிசுகள், இதற்கிடையில் பஸ்களைப் பிடிக்க ஓடும் பயணிகள்.

“என்னது…தாம்பரம் பஸ்ஸு போயிட்ச்சா?.எப்படி? 4-10 தானே அவன் டைமு?..எப்பிடி போவலாம்?.”

“ அய்யே! தோ பார்றா ரூல்ஸு… டிக்கெடு ஃபுல்லாயிட்ச்சி பூட்டான் போயேன்.”

“சார்..சார்.!..புக்கு சார்….டைம் பாஸிங் புக்கு சார்!. ஒரு ஜூனியர் விகடன்,ஒரு சினிமா எக்ஸ்பிரஸ், ரெண்டும் சேர்த்து அஞ்சே ரூபாதான் சார்.ரஜினி ப்ளோஅப், அஞ்சி…அஞ்சி…அஞ்சே ரூபாதான் சார்.. டைம்பாஸிங்.புக் சார்!.”

பழைய பேப்பர் கடையில் எடை போட்டு வாங்கியதை தூசு தட்டி, அதையும் ஒருத்தனால் இப்படி காசாக்க முடிகிறது.. அட்டையில் அடர்த்தியான தலைமுடியுடன் ரஜினி, அளவான உடல் சரிதாவுடன் சரஸமாடும் காட்சியில் அதன் தொண்மை தெரிகிறது.. இந்தச் சிங்காரச் சென்னையில் எப்படியெல்லாம் பிழைக்க முடிகிறது?. வழக்கமாகவே இங்கே நெரிசல் அதிகம். நாளை முகூர்த்த நாள் வேறு, சனி,ஞாயிறு கிழமைகளின் உபரி நெருக்கடி வேறு.. பஸ் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இரண்டு டிரைவர்கள் ஆக்ரோஷமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். கெட்ட வார்த்தைகள் தாய்மொழி போல சரளமாக வந்து விழுந்துக் கொண்டிருந்தன..

“டிரைவர் சார்! கொட்டிவாக்கம் பஸ் எப்ப வரும் சார்.?.”—-சண்டையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு ஆத்திரமாய் திரும்பியவன்.

“இன்னிக்கு மழை பெய்யும்னு பேப்பர்ல போட்டிருக்கான்யா. அது மட்டுந்தான் எனுக்குத் தெரியும். படிச்சவன் தானே?.,அதோ கவுண்ட்டர்ல மூணு பேரு கீறான்ல?, போய் விசாரி. அத்த வுட்டுட்டு எந்தாலிய ஏண்டா அறக்கிற?..”—-கேட்டவன் பாதியிலேயே விட்டுவிட்டு அடுத்தவனைக் கேட்கலாம்னு ஓடினான்..

“டென்ஷன் ஆவாத மச்சான். வா ஒரு டீ குடிச்சி தம் அடிப்போம்.”—- இதுவரை அவனுடன் அசிங்கமாய் சண்டை போட்ட டிரைவரே இப்போது அவனை இழுத்துக் கொண்டு போனான்.

மீஞ்சூர் பஸ் கிளம்ப ஆயத்தப் பட்டுக் கொண்டிருந்தது. உள்ளே உட்கார்ந்திருந்த நான் அப்போதுதான் அந்தப் பெரியவரைக் கவனித்தேன். மூட்டை தூக்கி ஒருத்தனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்..

”ஏம்பா! இப்படி பேசற?. நானா உன்னை மூட்டைய தூக்கியாறச் சொல்லிக் கூப்பிட்டேன்?.. நீயேதான வந்து, குடுக்கிறதைக் குடுன்னு வலுக்கட்டாயமா தூக்கினே?. அப்பவே இருவது ரூபாதான் குடுப்பேன்னு தீர்த்து சொல்லிட்டேன்.ஆமா.”

“ஆங்! தோடா.! நீ சோல்லிட்டா?, நான் ஒத்துக்கினேனா?. சொல்லு கெயவா!.”

“ சொன்னப் பெறவு வந்து மூட்டையத் தூக்கினா என்ன அர்த்தமாம்?..”

“ தூத்தெறிக! இன்னா அர்த்தம்? கூலிய அங்கப் போயி பேசிக்கலாம்னு அர்த்தம். யோவ்! இன்னா தகராறு பண்றே?. அம்பது ரூவாய எடு.இல்ல நடக்கிறதே வேற. ஹக்காங்!.”

கிழவனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது போல. வாய் திறக்காமல் நின்றார். கையில் அவ்வளவு பணம் இல்லியோ என்னவோ?.

“மூணு மரக்கா வேர்க்கள்ள, அதுங் கிரயமே நூறைத் தாண்டாது. முடியாது. இருவதுக்கு மேல தரமுடியாதுய்யா.!, சுத்த கேப்மாறித்தனமாயில்ல இருக்கு.”

“ஆங்! நாங்க கேப்மாறிங்க, இவரு ஞாயஸ்தன்.. ஏய்! அடீங்! கெயவா இப்ப இன்னான்ற?.”—–இப்போது இரண்டு மூன்று பரட்டைகள் வந்து சேர்ந்துக் கொண்டன.

“கெயவன் இன்னான்றான் மாமூ?.”—வந்த ஒரு பரட்டை கிழவரை நெட்டித்தள்ளினான். கிழவருக்கு மூச்சு வாங்கியது.

“டேய் படுபாவி! என்னையா தள்ற?. நாசமா போயிடுவ. அல்பாயுசுல போயிடுவடா படுபாவி!.”

அங்கே பேச்சுகள் கொஞ்சங்கொஞ்சமாய் தடித்து ஒரு சூடான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாகப் பட்டது. கிழவரும் இப்போது ஆவேச கட்டத்திலிருந்தார்.

“இருவது ரூபாய்க்கு மேல ஒத்தை காசு தரமாட்டேன் .உங்களால ஆனதைப் பாருங்கடா. என்னடா இது அநியாயம்?. அண்ணாமலைமன்றம் திருப்பத்திலிருந்து இங்க வர்றதுக்கு அம்பதா?. நானே சுலுவா தூக்கியாந்திருப்பேன், அங்க வந்து கெஞ்சிட்டு, இங்க வந்தப்புறம் கும்பல் கூடிக்கிட்டு என்னையா தள்றே?. போலீஸுக்குப் போறேன் இரு.”

“டேய்! கெழ பாடூஸ்! துட்ட எட்றா. பெரிய போலீஸு.”

“டேய்! அடாவடி பண்றீங்களா?. குடுக்கிறதை வாங்கிம் போங்கப்பா. விட்டா முழுங்கிடுவீங்களே.. திருட்டுப் பசங்க..”——பஸ் உள்ளேயிருந்து அரூபமாய் ஒரு குரல் வர, அவ்வளவுதான் குப்பென்று பற்றிக் கொண்டது.

“டாய்….டாய்!…யாரறா அவன் டாய்! டேய் காசி! உள்ள எவனோ பேமானி நம்மள திட்றாண்டா.. கயித உள்ளதான் கீறான். டாய் …வுடாத அவனை தூக்கு…துக்கு .”—நான்கைந்து முண்டாசுகள் தபதபவென்று உள்ளே ஏறின.

“த்தா!…த்தா!….எவன்டா அவன்?. டாய்! அடீங்க!..த்தா ! எவன்டா/.”—-பஸ்ஸில் நாங்கள் யாரும் மூச்சு காட்ட வில்லை.கப்சிப். எனக்கு நாக்கு வறள, வாய் பிசறியது.நிறைய பேர் வேர்த்து விறுவிறுத்துப் போயிருந்தார்கள்.. முண்டாசுகள் இப்போது தடதட வென்று கீழே இறங்கினார்கள். இறங்கும் போது அவர்களை திரும்பிப் பார்த்த ஒரு இளைஞனை இன்னாடா கயித?, என்று இரண்டு அடி போட்டுவிட்டுப் போனார்கள்.

“டேய் கெயவா! இன்னா தமாஸு காட்டிங்கீற? ஒழுங்கா அம்பதை எடு..”—கிழவருக்கு இப்போது பயம் வந்துவிட தடதடவென்று ஆடினார்.. மூட்டைத்தூக்கியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச ஆரம்பித்தார்..

“தம்பீ! கையில அவ்வளவு இல்லப்பா. மீஞ்சூர் போவணும்.பேத்தி அங்கே மாசமா இருக்கா. வேர்க்கள்ளன்னா உசுர வுட்றுவாளேன்னு கொண்டு போறேன் தம்பீ. இந்தா இருவது ரூபா வெச்சிக்க. சோதிக்காதடா கண்ணு.வாங்கிக்கப்பா!..”

“டேய் காசி! கெயவனைப் பார்த்தியா.ப்ளேட்டை திருப்பிப் போட்டு பாட்றான்..’

“மச்சான்! கிராமத்தான் லேசுல ஜக்கமாட்டான்.. கோமணத்தில முடிஞ்சி வெச்சிருப்பான்.. டேய் ஜானு! மூட்டைய தூக்கு. வுடு ஜூட்.. துட்ட குடுத்துட்டு வாங்கிக்கிணு போ கெயவா.ஒயிஞ்சிப் போ நாப்பது ரூவா குடுத்துடு.”

ஒருத்தன் மூட்டையை தூக்கிக் கொண்டு நடந்தான். கிழவர் ஐயோ..ஐயோ என்று கத்த,எங்களுக்கு அவரைப் பார்க்க பாவமாயிருந்தது.. எதுவும் செய்ய திராணியில்லாத வெகுஜனங்கள் நாங்கள். கிழவர் ஆத்திரம் தாங்காமல் இப்போது கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார். என் பக்கத்திலிருந்த இளைஞன் ஆக்ரோஷமாக பொரிய ஆரம்பித்தான்.

“போலீஸ்லாம் என்னய்யா பண்ணுது?சேச்சே! லா அண்டு ஆர்டரே இப்ப சுத்தமா கெட்டுப் போச்சி சார். இவனுங்க ஒவ்வொருத்தனையும் முட்டிக்குமுட்டி தட்டணும் சார்.”

கடைசி வாக்கியத்தை தனக்குள்ளே முணுமுணுப்பாய் முனகிவிட்டு, அவர்களுக்குக் கேட்டுவிட்டதோ என்று அவசர அவசரமாய் எட்டிப் பார்த்தான்.கீழே அவர்கள் துட்டை எட்றா…எட்றா…என்று கிழவரை தள்ளிக் கொண்டிருந்தார்கள்.. கிழவருடைய பலவீனமான கூச்சல் இங்கே யாரையும் அசைக்கவில்லை. தாளமுடியாமல் எழுந்தேன். கிழவர் அழும் நிலைக்கு வந்துவிட்டிருந்தார். வேர்க்கடலை போன இடம் தெரிய வில்லை. ஓகே அவர்களைத் திட்டவோ, நியாயம் கேட்கவோ எனக்கு சக்தி இல்லை.அது முரட்டுப்படை. சமாதானம் பேசி, ஐம்பது ரூபாயை நானே கொடுத்து, அந்த கிழவரை மீட்க தீர்மானித்து விட்டேன்.ஒரு நிமிஷம் மனசுக்குள் கமலா வந்து கண்களை உருட்டி அலறவைத்தாள். ஐம்பது ரூபாய் தானம் கொடுத்தது தெரிந்தால் உங்களுக்கென்று அமையுது பார். என்று பொரிவாள்.கிழவரிடம் அவ்வளவு பணமில்லையென்று தெரிகிறது.

அப்போது திடீரென்று பஸ்ஸின் முன் பக்கமிருந்து ஒரு குரல் கர்ஜித்தது.

“யோவ் ஒன் நாட் எய்ட்!.”

“ஐயா!.”

“ராஸ்கல்ஸ்! அந்த பொறுக்கிங்கள ரெண்டு போட்டு இங்க இழுத்துக்கிட்டு வாய்யா!.”

எல்லோருடைய பார்வைகளும் அங்கே ஓட, டீஸண்ட்டாய் பேண்ட் ஷர்ட். தங்க நிற ஃப்ரேமில் ரேபான் கிளாஸ், ஒட்ட வெட்டிய தலைமுடி, கட்டுமஸ்தான,கரணை கரணையான உடல்வாகு, எடுத்தெரிந்த பார்வை,. இந்த கெட்டப்பில் ஒரு இளைஞர் உட்கார்ந்திருந்தார். பின் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒன் நாட் எய்ட், அவரும் மஃப்டியில் இருந்தார்.

“எஸ் சார்!.”—-என்று சொல்லிவிட்டு சுறுசுறுப்புடன் இரண்டு எட்டாய் பாய்ந்து, கிழவரிடம் தள்ளுமுள்ளு பண்ணிக்கிட்டிருந்த பரட்டை ஒருத்தனை பளாரென்று அறைந்தார். டாய்!.. என்று ஓடி வந்த இன்னொருத்தன் வயிற்றில் எட்டி ஒரு உதை. அவன் சுருண்டு விழுந்தான்.

“டேய்! எல்லாரும் முன் பக்கம் போங்கடா.ஐயா கூப்பிட்றார் பாரு.உம்…போடான்னா நிக்கிறியே என்னா?.”—முறைத்தவனை ஒரு அறை விட்டு நெட்டித் தள்ளினார்.

“பெரியவரே! நீங்களும் போங்க.”

அவர்கள் தயங்கித் தயங்கி முன் பக்கம் போய் நின்றார்கள்.

“ஏய்!என்னா ஒவ்வொருத்தனுக்கும் லாடங்கட்டணுமா?.ஆங்!. ஏமாந்தவனா ஒரு கிழவன் மாட்டினா, கும்பல் கூடிக்கிட்டு அடிக்கச் சொல்லுதா? த்தெறி! ஏய்! இந்த ஏரியா ரவுடியாடா நீ?,கூப்பிடாம பஞ்சாயத்து பண்ண வந்துட்ட?ராஸ்கல்!.”

பரட்டைத் தலையனை ஓங்கி ஒரு அறை விட்டார்.

“ நூறு ரூபா கூட தாளாத வேர்கடலையை தூக்கிட்டு வர ஐம்பது ரூபாய் கூலி வேணுமா உனக்கு?.டேய் பொறுக்கி! என்னா உதைச்சாலும் திருந்தவே மாட்டீங்களா?.. மூட்டையைத் தூக்கிவந்தவன் அதோ நிக்கிறான். நீங்கள்லாம் யாருடா?. சம்மன் இல்லாம ஆஜர். இந்த பிஸாத்துக்கு சப்போர்ட்டா?.”

“இல்ல சார் இந்த கெயவன்…”

“டேய்! என்னா?.”—அவர் விலுக்கென்று எழுந்துக் கொள்ள, எல்லாரும் அவசரமாக ஓரடி பின்னால் பம்மினார்கள்..

“பெரியவரே! என்னா கூலி பேசின?.”

“இருவது ரூபாய் சார்.”

“அவன்கிட்ட குடு.ஏய்! வாங்குடா.ஏமாத்தி பொழைக்காதீங்கடா.”

“ஹக்காங்! அதான் ஏமாத்தி அஞ்சி அடுக்கு கட்டி வெச்சிங்கீறமே பார்க்கல?.எனக்கு வாணாம் சார்.சும்மா செய்ததா இருக்கட்டும்..”

இன்ஸ்பெக்டர் வேகமாக கையை வீசவும், பரட்டை சட்டென்று குணிந்துக் கொண்டான்.. பின்னர் வேண்டா வெறுப்பாய் வந்து, இருபது ரூபாய் தாளை வாங்கிக் கொண்டு விலகினான்.. சற்று தூரத்தில் நின்றிருந்த 18-ஜி பஸ்ஸின் பின்புறமிருந்து ஒருத்தன் வேர்க்கடலை மூட்டையை தூக்கி வந்து கிழவர் காலடியில் போட்டுவிட்டு ஓடி மறைந்தான். கிழவர் ஒடுங்கி நின்று இன்ஸ்பெக்டரைப் பார்த்து கும்பிட்டார்.. பஸ்ஸில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். வண்டி கிளம்பியது.

மாதவரம் மில்க் காலனி கேட் நிறுத்தத்தில் இருவரும் இறங்கினார்கள்.. சே! நான் அவர்களைப் பாராட்டி ஒரு நாலு வார்த்தைகளாவது பேசியிருக்க வேண்டும். என்ன மனிதன் நான்.?.பயம். இது போன்று பயத்திலும், தயக்கத்திலும், எத்தனையோ விஷயங்களை செய்ய வேண்டிய தருணங்களில் செய்யாமல்,கோட்டை விட்டுவிட்டு பின்னால் வருந்தியிருக்கிறேன்.. நோ..நோ..விரைவாய் எழுந்து,கிளம்பிவிட்ட பஸ்ஸிலிருந்து கீழே குதித்து, டேய்! கயித, கஸ்மாலம், என்று ஆரம்பித்து, எல்லா கெட்ட வார்த்தைகளிலும் என்னைத் திட்ட ஆரம்பித்த, டிரைவரின் வசவுச் சொற்களை வாங்கிக் கொண்டு நடந்தேன். சற்றுத் தொலைவில் அவர்கள் நடந்துக் கொண்டிருந்தார்கள்..

“ஹலோ சார்! —–அவர்கள் திரும்பி என்னைப் பார்த்துவிட்டு நின்றார்கள்..

“நான் உங்களோடு பஸ்ஸில் வந்தவன் சார்..”

“தெரியுது, சொல்லு.”—-என்றது கான்ஸ்டபிள்.

“உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்காக பெருமைப் படுகிறேன் சார்.அந்தக் கிழவரை அந்த ஆட்கள் கிட்டேயிருந்து மீட்டீர்களே.கன்கிராஜுலேஷன்ஸ்.”—-கான்ஸ்டபிள் என்னை எரிச்சலுடன் முறைத்தார்.

“அட போடாங்! பாவம் வயசான பெரிய மனுசனை அப்பிடி இம்சை பண்றானுங்க. எப்படிய்யா என்ன நடந்தாலும் கம்னு பார்த்துக்கிட்டே இருக்க முடியுது உங்களால?…த்தூ! அவனுங்க வெறும் அஞ்சி பொறுக்கிப் பசங்கதான்… பஸ்ல நீங்க அம்பது பேருக்குமேல இல்லே?. கிழவனுக்காக சும்மா எழுந்து கூச்சல் போட்டிருந்தாலே போதும்., ஓடிட்டிருப்பானுங்க. அதுக்குக் கூட தைரியமில்ல. பொட்டப் பசங்க. சே!, என்னா ஜென்மங்களோ?யாருக்கோ நடக்குது, நமக்கு இல்ல அதான?.கம்மனாட்……”—. நான் சங்கடமாக நெளிந்தேன்.

“யோவ்! பாவம் இவரை ஒண்ணுஞ்சொல்லாதே. இந்த அளவுக்காவது மெனக்கெட்டு பின்னாலியே வந்து பாராட்டணும்னு தோணுச்சே.. தேங்ஸ் சார். ஆமா எதை வெச்சி நாங்க போலீஸ்தான்னு முடிவு பண்ணீங்க?.”

“ஏன் சார்! அப்ப நீங்க போலீஸு இல்லியா?..”

“நோ..நோ…போலீஸ் தான். மஃப்டியில இருக்கிறோம்.சும்மா சொல்லுங்களேன்.”

“ஈஸி சார். திடகாத்திரமான உங்க ரெண்டுபேருடைய உடம்பு.,ஒட்ட வெட்டிய கிராப்பு, அந்த அலட்சியமான பார்வை, அப்புறம் இவரை ஒன் நாட் எய்ட்னு இவர் நெம்பரைச் சொல்லி கூப்பிட்டது, இதெல்லாம்தான். ஆமாம் சார் எந்த ஸ்டேஷன்ல இருக்கீங்க?..”

அவர்கள் சிரித்தார்கள்.

“சார்! நீங்க சொன்ன அத்தனை அடையாளங்களும் போலீஸுக்கு மட்டுமில்லே, இன்னொருத்தருக்கும் சரியாகப் பொருந்தும்.யோசியுங்க. எந்த ஸ்டேஷன்னுதானே கேட்டீங்க?.”
அவர் என்னைப் பார்த்து கண் சிமிட்டிவிட்டுச் சொன்னார்.

“எல்லா ஸ்டேஷன்களிலும்தான் இருக்கிறோம். போய் பாருங்க மாட்டி வெச்சிருக்கும் எங்க போட்டோவ இன்னக்குத்தான் சார் புழல்லயிருந்து வெளியே வர்றோம்.. ஹ..ஹ..ஹா!…”.

நன்றி—கல்கி–2004

Print Friendly, PDF & Email

1 thought on “சுமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *