கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 31,147 
 

பாஸ்கர் சொல்கிறான்:

அருகில் என் மனைவி திவ்யா அமர்ந்திருக்க என் சிவப்பு நிற மாருதி ஒகனேக்கல் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. இன்னும் சில மணி நேரங்கள்தான், பாவம் திவ்யாவின் வாழ்க்கை முடிந்துவிடும். எவரும் சந்தேகப் படாத வகையில் அவளை ஓகனேக்கல் அருவியின் உச்சிக்கு அழைத்துச் சென்று ‘ஹோ’ வென இரைந்து பொங்கிவிழும் அருவியினுள் தள்ளிவிடப் போகிறேன்.

உடனடியாக அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் சென்று, என் அன்பு மனைவி பாறையிலிருந்து தவறி அருவியினுள் விழுந்து விட்டாள் என இயற்கையாக அழுது நடிக்கப் போகிறேன்.

சண்டாளி, இன்றுடன் ஒழிந்தாள். மனம் ஒட்டாத வாழ்க்கைக்கு இன்றுடன் ஒரு முற்றுப் புள்ளி. பெண்ணா இவள், பேய். மதுப் பழக்கம், சிகரெட், பிற ஆடவர்களுடன் படுக்கையறை குலாவல்… தட்டிக் கேட்டால் ‘இதையெல்லாம் தெரிந்துதானே என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாய் பாஸ்கர்’ என்கிறாள்.

போகட்டும், சென்ற வாரம் என்னை கன்னத்தில் திருப்பியடித்தாளே கிராதகி, இனி இவளை விட்டு வைக்கலாமா? கல்லிடைக்குறிச்சியில் வைரத்தோட்டுடன் அழகான பெண் பார்த்திருப்பதாக என் அம்மா சொல்லியும் கேட்காமல், இவளுடைய வலைல விழுந்தேன் பாரு, என்னைச் செருப்பால அடிக்கணும். எனிவே, பெட்டர் லேட் தேன் நெவர்… என்னுடைய நிம்மதியான வாழ்க்கைக்காக ஒரு கொலை செய்தால் பாதகமில்லை. இவளுடன் காம்ப்ரமைஸ் செய்துகொண்டு வாழ்வதுதான் அசிங்கம். ஒரு வருடம் சோகமாக நடித்துவிட்டு பின்பு அழகான ஒரு நல்ல குணமுள்ள பெண்ணை மணந்துகொண்டு வாழ்க்கையை இனியாவது நல்ல முறையில் செப்பனிட்டுக்கொள்ள வேண்டும்.

இனி :

ஒகனேக்கல் அருவி.

மெதுவாகப் பேசிக்கொண்டே இருவரும் பாறையின் உச்சியை அடைந்தார்கள் கொலைக்கு ஆயத்தமான பாஸ்கர் பரபரப்பானான். மனசு படபடவென அடித்துக் கொண்டது. பாறை உச்சியின் விளிம்புக்குச் சென்ற பாஸ்கர். “திவ்யா, இங்க வந்து பாரேன், எப்படி பால் நுரை போல் அருவி கொப்பளித்து ஆரவாரம் செய்கிறது” என அவளை அருகில் அழைத்து, தான் ஆர்வத்துடன் எட்டிப் பார்ப்பதுபோல் நடித்தான்.

திவ்யா அருகில் வந்தாள்.

அடுத்த கணம், எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கரை தன் பலம் அனைத்தையும் திரட்டி, இரண்டு கைககளினாலும் கொட்டும் அருவியினுள் ஓங்கித் தள்ளினாள். நிதானமாக கீழே பார்த்தாள். பொங்கிய தண்ணீரினுள் பாஸ்கர் பட்டையாகத் தெரிந்து, புள்ளியாகி
பிறகு காணாமல் போனான்.

திவ்யா விறுவிறுவென மாருதி காரை அடைந்தாள். தன்னை எவரும் கவனிக்கிறார்களா என சற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது சென்னையிலிருந்து படப் பிடிப்பிற்காக அவுட்டோர் யூனிட் வேன் ஒன்று வந்து நிற்க, அதை நோக்கி பலர் ஆர்வத்துடன் ஓட, தன்னை எவரும் கவனிக்காத நிம்மதியில் பதட்டப் படாது மாற்றுச் சாவி போட்டு, காரின் கதவைத் திறந்து அமர்ந்து பெங்களூர் நோக்கிச் செலுத்தினாள்.

திவ்யா சொல்கிறாள்:

கல்யாணமே செய்து கொள்ளாமல் ஜாலியாக இருக்கத்தான் நினைத்திருந்தேன். ஆனால் பாஸ்கர் நாய் மாதிரி நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ரெண்டு வருஷம் என் பின்னாலேயே ஜொள்ளு விட்டான். இத்தனைக்கும் கல்யாணத்துக்கு முன்னாலயே பாஸ்கா¢டம், ‘நான் ரொம்ப மோசமான பெண்; தண்ணியடிப்பேன், சிகரெட் பிடிப்பேன், ரெண்டு மூணு ஆண்களுடன் படுக்கையில் புரண்டிருக்கேன்… சுபாவத்திலேயே நான் திமிர் பிடித்தவள், உனக்கு என்னைவிட நல்லவ அமைவான்னு’ ஓப்பனா சொன்னேன்.

‘எனக்கு எல்லாம் தெரியும் திவ்வு, நீ இல்லாம என் வாழ்க்கையே இல்லைன்னு’ கெஞ்சினான். என் கவர்ச்சியும் சிவப்புத் தோலும் அவனை அவ்வளவு தூரம் கிறங்க அடிச்சிருக்கு.

ஆனா சத்தியமா சொல்றேன், எங்க கல்யாணத்துக்கு அப்புறம் இன்னிக்கி வரையும், இன்னொரு ஆடவனோட நான் படுக்கல… அத பாஸ்கருக்கு புரிய வைக்க படாத பாடு பட்டேன். எப்பவும் அவனுக்கு என் மேல சந்தேகம்.அதனாலேயே நான் உண்டாகியிருந்தபோது, ‘யாருக்கு பொறக்கப் போற குழந்தையோ’ என்று என்னை கொச்சையாக அசிங்கப்படுத்தியதோடு, அபார்ஷன் பண்ணச் சொல்லி நிர்பந்தப் படுத்தி, என் தாய்மை ஏக்கங்களை த்விடு பொடியாக்கினான், ராஸ்கல்.

சா¢ போகட்டும்னு பார்த்தா, சென்ற வாரம் கோட்டயத்துல இருக்கும் என் தாயாருக்கு பத்தாயிரம் பணம் அனுப்பியதுக்கு, ‘அதெப்படி என்னைக் கேக்காம நீ அனுப்பலாம்னு’ ஒரே சண்டை. ‘என் தாயாருக்கு நான் ஒருத்திதான பாஸ்கர், என்னை விட்டா அவளுக்கு யார் இருக்கான்னு கேட்டதுக்கு, எதுத்தாடி பேசறேன்னு’ ஓங்கி என் கன்னத்துல அறைஞ்சான். கட்டுப்பாடில்லாத சுதந்திரத்துடன் வளர்ந்து ஒரு ஐ.டி கம்பெனியில் மாசம் ஐம்பதாயிரம் சம்பாதிக்கிற என்னை அவன் கை நீட்டி அடிச்சத என்னால தாங்கிக்க முடியல…புருஷனாவது புடலங்காயாவது, ஓங்கி திருப்பியடிச்சேன். அப்படியே அசந்து போயிட்டான். அன்னிலர்ந்து அவன் என் கிட்ட சா¢யா பேசல. ஏதோ ஒரு மாஸ்டர் ப்ளான் பண்ணி என்னை அவன் கொன்னுடுவானோன்னு எனக்கு ஒரே பயமா இருந்திச்சு.

இன்னைக்கு அவன் பாறை முன்னால நின்னு எட்டிப் பார்த்தப்பதான், நான் முந்திகிட்டா என்னங்கற எண்ணம் சட்டுன்னு எனக்கு தோணித்து.உண்மையிலேயே நான் முந்திகிட்டதாத்தான் நெனைக்கிறேன்… பாவம், நான் அவனை இப்படிச் சாகடிப்பேன்னு கொஞ்சமும் எதிர் பார்த்திருக்க மாட்டான்.நம்பிக்கைதான் வாழ்க்கையே. அடிப்படையான நம்பிக்கையே தகர்ந்தப்புறம், இவனோட என்ன வாழ்க்கை வேண்டியிருக்கு? ஷிட்.

இனி:

மாலை நான்கு மணிக்கு தன் பெங்களூர் வீட்டையடைந்த திவ்யா அடித்துப் போட்டாற்போல் தூங்கினாள். இரவு எட்டு மணிக்கு விழிப்பு வந்ததும், நிம்மதியாக ஷவா¢ல் குளிக்கும் எண்ணத்துடன், உடைகளைக் களைந்தாள். குளிக்கச் செல்ல எத்தனித்தவளை பெட்ரூம் தொலைபேசி சிணுங்கி அழைக்க, வீட்டில் எவரும் இல்லாத த்னிமை தந்த ¨தா¢யத்தில், பிறந்த மேனியுடன் பெட்ரூம் சென்று தொலைபேசியை எடுத்தாள்.

“ஹலோ இஸிட் மிஸ்டர் பாஸ்கர்ஸ் ஹவுஸ்?”

“எஸ் ப்ளீஸ்”

“நீங்க மிஸ்டர் பாஸ்கருக்கு என்ன வேணும்?”

“நான் அவருடைய மனைவி…நீங்க யாரு?”

“நான் தர்மபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர். உங்க கணவர் பாஸ்கர் ஒகனேக்கல் அருவியில விழுந்து ரொம்ப சீரியஸான நிலமைல ஆஸ்பத்திரில அட்மிட் ஆகியிருக்காரு… நீங்க உடனே கிளம்பி தர்மபுரி போலீஸ் ஸ்டேஷன் வாங்க.”

“என்னது ஒகனேக்கல்லா… என் ஹஸ்பெண்ட் அங்க போகலையே இன்ஸ்பெக்டர்.”

“மேடம், அவரு பான்ட் பாக்கெட்ல இருந்த விசிட்டிங்கார்டுல அவரோட பேரு, அட்ரஸ், வீட்டு டெலி•போன் நம்பர் இருக்கு…மத்தத நேர்ல பேசிக்கலாம், நீங்க உடனே வாங்க.”

தொலைபேசி துண்டிக்கப் பட்டது.

“ஓ காட்” பெங்களூர் இரவின் குளிரிலும் திவ்யா ஏராளமாக வியர்த்தாள். மனதில் பயம் தொற்றிக் கொண்டது. பாஸ்கர் இன்னும் சாகலையா? போலீஸ், டாக்டர் என யாரிடமாவது ஸ்டேட்மென்ட் ஏதாவது கொடுத்திருப்பானோ… போலீஸ் விசாரணை, தூக்குத் தண்டணை…பதட்டமானாள் திவ்யா.

விரைவாக புடவையணிந்து, டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டாள். இரண்டரை மணி நேர பயணத்தில் தர்மபுரி போலீஸ் ஸ்டேஷனை அடைந்தாள்.

இவளுக்காக காத்திருந்த கான்ஸ்டபிள் ஓடிவந்து, “நீஙகதான் திவ்யாவா?” என்றான்.

“ஆமா.”

“உடனே ஹாஸ்பிடல் போகலாம் வாங்க…” காரின் முன் சீட்டில் அமர்ந்தான்.

“என் கணவர் ஏதவது பேசினாரா?”

“எனக்குத் தெரியாதுங்க, நான் நைட் டூட்டி…இப்பதான் வந்தேன்.”

திவ்யா மேலும் பதட்டமாகி, ஹாஸ்பிடல் அடைந்தவுடன், பாஸ்கர் இருக்கும் அறையைத் தேடி ஓடினாள்.

பாஸ்கர் மூக்கினுள் ஆக்ஸிஜன் குழாய் பொருத்தப் பட்டு, கண்கள் மூடியபடி அசையாது படுத்திருந்தான்.

அங்கிருந்த டாக்டர், “வாங்கம்மா, உங்க கணவர் ரொம்ப சீரியஸா இருக்கார். எதுவுமே நாளைக்கு காலைலதன் சொல்ல முடியும். நிறைய தண்ணி குடிச்சதினால, இப்ப ஆக்ஸிஜன் தேவைப் படுது…நல்ல வேளை, சினிமா ஸ்டண்ட் யூனிட் காரங்க உங்க கணவரை
காப்பாற்றி உடனே போலீஸ¤க்குச் சொல்லி, அவங்க உதவியுடன் இங்க சேர்த்தாங்க.” என்றார்.

திவ்யா பொ¢தாக அழத் தொடங்கினாள். “டாக்டர், ஐ வாண்ட் மை ஹஸ்பண்ட்…ஏதாவது பேசினாரா?” குரல் உடையக் கேட்டாள்.

“அவர் இன்னமும் பேசல, ஏதாவது பேசினாத்தான் நமக்கு எல்லா விவரமும் தெரியும், கவலைப் படாதீங்க நிறைய ஆக்ஸிஜன் கொடுக்கறதுனால காலைல கண்டிப்பா பேசுவார்.”

“தேங்க்ஸ் டாக்டர்.”

“ஏதாவது தேவைன்னா என் ட்யூட்டி ரூமுக்கு வாங்க..” விலகிச் சென்று வராந்தாவில் நடந்து மறைந்தார்.

சிறிது நேரத்தில் தர்மபுரி இன்ஸ்பெக்டர் அங்கு வந்தார்.

“என்ன ஆச்சு மேடம், தற்கொலை முயற்ச்சியா?”

“எனக்கு எதுவுமே தெரியாது இன்ஸ்பெக்டர், எங்களுக்குள்ள சின்ன மனஸ்தாபம். இன்று காலை கோபத்துடன் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார்.”

“….”

“நாள் முழுவதும் நான் வீட்டிலேயே காத்துக் கிடந்தேன். அவருக்கு இப்படியாகும்னு நான் கொஞ்சம் கூட எதிபார்க்கல.” குரல் உடைய அழுதாள்.

காவல் துறை சம்பந்தப்பட்ட சில சம்பிராதயங்களை முடித்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் கிளம்பினார்.

திவ்யா சற்றும் முற்றும் பார்த்தாள். தன்னை எவரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின், ஆக்ஸிஜன் குழாயை அணுகி தன் புடவைத் தலைப்பினால் அழுந்தப் பிடித்து, ஆக்ஸிஜனை முற்றிலும் தடை செய்தாள். இந்த முறை வெற்றியடைந்தாள். உலகத்தின் கண்களுக்காக அழுவதற்கு தன்னை தயார் செய்து கொண்டாள்.

இரண்டு வாரங்கள் சென்றன.

அலுவலகத்தில் இருந்த திவ்யாவின் செல்•போன் சிணுங்கியது.

“திவ்யா ஹியர்.”

“திவ்யா, நான் தர்மபுரி இன்ஸ்பெக்டர்… அருகிலுள்ள கா•பி ஷாப்பில் வெயிட் பண்றேன், நீ உடனே வரணும்… நீ வரலைன்னா, நான் யூனி•பார்முடன் அங்கு வரேன்.”

இன்ஸ்பெக்டர் குரலில் இருந்த கண்டிப்பும் அதிகாரமும் திவ்யாவைப் பயமுறுத்தின.

“ப்ளீஸ் வெயிட் இன்ஸ்பெக்டர், நானே இப்ப வரேன்.” உடனே சென்றாள்.

இன்ஸ்பெக்டர் நேராக விஷயத்துக்கு வந்தார்.

“திவ்யா, நீதான் பாஸ்கரை கொலை செய்தாய் என்பது எனக்கு அடுத்த நாளே தெரியும்… ஆனால் பாஸ்கா¢ன் அந்திமச் சடங்குகள் முடியக் காத்திருந்தேன்.

“……”

“கொலை நடந்த அன்று உன் செல்•போன் ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி டவர் சிக்னலில் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் நீ தனியா காரை ஓட்டிக் கொண்டு திரும்பி வரும் போது, நீ கடந்து வந்த மூன்று டோல்கேட்டில் உன் காரின் நம்பர் உள்ளது… தவிர டோல்கேட்டின் சிசி காமிராவிலும் நீ துல்லியமாக படம் பிடிக்கப் பட்டிருக்கிறாய்…ரொம்ப முக்கியமாக, நீ ஆக்ஸிஜனை நிறுத்தியதற்கான தடயமும் என்னிடம் உள்ளது.”

“நீ உண்மையை சொல்ல வேண்டும் என்பதற்காக அரெஸ்ட் வாரண்டுடன் வந்திருக்கிறேன்… வெளியே காத்திருக்கும் ஜீப்பில் இரண்டு பெண் போலீஸ் உனக்காக காத்திருக்கிறார்கள், வா போகலாம்.”

திவ்யா பதில் ஏதும் பேசாமல், போலீஸ் ஜீப்பில் ஏறி அமர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

6 thoughts on “ஒகனேக்கல்

  1. அருமையான எதிர்பார்க்காத முடிவு. கண்ணன் அவர்களின் கதை நுணுக்கம் பாராட்ட தக்கது

  2. ஸ்டோரி மிகவும் நன்றாக கற்பனைதிரனுடன் எழுதப்பட்டுள்ளது. திரு. Kannan அவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

  3. திரு ஏப்ரஹாமுக்கும் திரு கலுசுலிங்கம் அவர்களுக்கும் மிக்க நன்றி. தாங்கள் அளிக்கும் உற்சாகம்தான் என்னை எழுதத் தூண்டுகிறது. அன்புடன், எஸ்.கண்ணன்

  4. அன்புடையீர்,
    கதை நன்றாக இருந்தது.
    அருமையான முடிவு!
    நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *