இறந்து கொண்டிருக்கும் துப்பறிவாளன்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 30,301 
 

முன்னுரை

ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். அவர் ஒரு தனியார் உளவாளி. அவரது உடன் வேலை செய்பவர் வாட்சன். அவர் ஒரு மருத்துவர். இவர்கள் இருவரும் உண்மையான மனிதர்கள் என்று எண்ணுபவர்கள் கூட இருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோல்ம்ஸ் தன் கூர்மையான ஆராய்ச்சி அறிவால் ஒரு விஷயத்தை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடுவார். சின்னச் சின்ன விஷயங்களையும் உற்று நோக்கும் பண்பு கொண்டவர்.

பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற ஆங்கில எழுத்தாளர் சர் ஆர்தர் கானன் டாயில் என்று சொன்னால் மிகையாகாது. 1913 ஆம் ஆண்டு வெளியான ஒரு சிறுகதை இது.

இறந்து கொண்டிருக்கும் துப்பறிவாளன்

ஷெர்லாக் ஹோல்ம்ஸின் வீட்டு உரிமையாளர் திருமதி.ஹட்ஸன் வெகு காலமாக நோய்வாய்ப்பட்ட பெண். அவளது முதல் தளத்தில் உள்ள வீடு எப்போதும் விசித்திரமான மனிதர்களால் படையெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அங்கு குடி இருப்பவரின் பைத்தியக்காரத்தனமான நடவடிக்கைகளும் அவளது பொறுமையை மிகவும் மோசமாக சோதித்துப் பார்த்திருக்கும். நம்பவே முடியாத அளவு வீட்டைக் குப்பையாக்குவதும் வினோதமான நேரங்களில் அவரது இசை வெறியும் எப்போதாவது கைத்துப்பாக்கியை வீட்டுக்குள்ளே அவர் பரிசோதித்துப் பார்ப்பதும் விசித்திரமான பெரும்பாலும் துர்நாற்றம் எடுக்கக்கூடிய அறிவியல் ஆய்வுகளும் அவரைச் சுற்றித் தொங்கவிடப்பட்டுள்ள பொருட்களில் படிந்துள்ள வன்முறையான ஆபத்துக்கள் சூழ்ந்த சம்பவங்களும் அவரை இந்த லண்டன் மாநகரிலேயே ஒரு மிக மோசமான குத்தகைதாரராக ஆக்கி இருந்தது. ஆனால் அதற்கு நேர் மாறாக வாடகை செலுத்தும் முறையில் அரச பரம்பரை போல் நடந்து கொண்டார். நான் அவருடன் இருந்த காலத்தில் அவர் கொடுத்த பணத்தில் அந்த வீட்டையே விலை கொடுத்து வாங்கி இருக்கலாம்.

வீட்டு உரிமையாளர் மிகுந்த ஆச்சர்யத்தில் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவரைத் தொந்திரவு செய்ய எப்பொழுதும் அவளுக்குத் துணிவு இருந்ததில்லை அவரது நடவடிக்கை எவ்வளவு மோசமாக இருந்த போதிலும். அவர் மேல் ஒருவித பாசமும் அவளுக்கு இருந்தது. ஏனெனில் பெண்களை அவர் நடத்தும் விதம் அளவில்லாத கண்ணியம் மற்றும் மரியாதை கொண்டது. அவர் பெண்களை வெறுப்பவர். அவர்களைச் சிறிதும் நம்புவதில்லை. இருந்தாலும் அவர்களை எதிர்ப்பதிலும் ஒரு நேர்மையைக் கடைபிடித்தார். அவர் மேல் அவளுக்கு இருக்கும் மதிப்பு எவ்வளவு அழுத்தமானது என்று தெரிந்ததால் எனக்குத் திருமணம் முடிந்த இரண்டாவது ஆண்டு தொடக்கத்தில் அவள் என் வீட்டுக்கு வந்து கூறியதை நான் மிகுந்த கவனத்துடன் கேட்டேன். எனது நண்பனின் நிலை எவ்வளவு பரிதாபகரமாக ஆகி விட்டது என்பதை அவள் விளக்கிச் சொன்னாள்.

“அவர் இறந்து கொண்டிருக்கிறார், வாட்சன்” என்றாள் அவள். “கடந்த மூன்று நாட்களாக அவர் உடல் நிலை தொடர்ந்து மோசமாகிக் கொண்டே இருக்கிறது. மருத்துவரை அழைத்து வர வேண்டாம் என்கிறார். இன்று காலை அவரது முகத்தில் இருந்த எலும்பு துருத்திக் கொண்டு வெளியில் எட்டிப் பார்த்தது. அவரது ஒளி பொருந்திய கண்கள் என்மேல் பிரகாசித்தது. இதற்கு மேலும் என்னால் பொறுமை காக்க முடியவில்லை. ‘நீங்கள் அனுமதி கொடுத்தாலும் இல்லை என்றாலும் இப்பொழுதே நான் ஒரு மருத்துவரை அழைத்து வரத்தான் போகிறேன், ஹோல்ம்ஸ்’ என்றேன் நான். ‘அப்படி என்றால் வாட்சனை அழைத்து வாருங்கள்’ என்றார் அவர். இன்னும் ஒரு மணி நேரம் தாமதித்தாலும் அவரை உயிருடன் பார்ப்பதே அரிதாகி விடும்”

எனக்குப் பேரிடியாக இருந்தது. ஏனெனில் அவரது உடல் நலம் பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை. நான் எனது கோட்டையும் தொப்பியையும் அவசரமாக எடுக்கக் கைகளை நீட்டினேன் என்று சொல்லவே தேவை இல்லை. வண்டியில் ஏறி அமர்ந்து ஓட்டிக் கொண்டே அவளிடம் பிற விவரங்கள் கேட்டு அறிந்து கொண்டேன்.

“எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவே. ஆற்றுக்கு அருகில் இருக்கும் தெருவில் ராத்தர்ஹீத் என்னும் இடத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக வேலை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்து இந்த நோயைக் கொண்டு வந்திருக்கிறார். புதன் கிழமை மத்தியானம் அவர் தன் படுக்கைக்குப் போனார். அதன் பின் எழுந்திருக்கவே இல்லை. மூன்று நாட்களாக அவர் தொண்டையில் அன்னம் தண்ணி எதுவும் இறங்கவில்லை.”

“அடக் கடவுளே! நீங்கள் ஏன் மருத்துவரை உடனே அழைக்கவில்லை?”

“அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். அவர் எவ்வளவு அறிவாளி என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். அவரை மறுதலிக்க என்னால் முடியவில்லை. ஆனால் அவருக்கு ரொம்ப நேரம் இல்லை. நீங்கள் நேரில் பார்த்தால் உங்களுக்கே நன்றாகப் புரியும்.”

அவரைப் பார்த்ததும் துக்கம் தொண்டையை அடைத்தது. அறையின் மெல்லிய வெளிச்சத்தில் பனி மூட்டமான நவம்பர் மாதத்தில் பிணி கொண்ட அந்த அறை மேலும் மிரட்சி அளித்தது. ஆனால் படுக்கையில் இருந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த எலும்பும் தோலுமான உருவம்தான் என் எலும்புகளின் ஊடே ஒரு நடுக்கத்தைச் செலுத்தியது. அவரது கண்களில் காய்ச்சலின் வெளிச்சம் தெரிந்தது. இரண்டு கன்னங்களும் வற்றிப் போய் இருந்தன. அவரது உதடுகளில் தடித்த கருப்பான படிமம் படிந்திருந்தது. படுக்கை விரிப்பில் அவரது மெல்லிய கைகள் இடைவிடாமல் துடித்துக் கொண்டே இருந்தன. அவரது பேச்சு கரகரப்பாய் நடுக்கமாய் இருந்தது. நான் உள்ளே நுழையும்போது அலட்சியமாய் படுத்துக் கிடந்தார். என்னைப் பார்த்ததும் அவரது கண்களில் என்னை அடையாளம் கண்டு விட்ட ஒரு ஒளி தெரிந்தது.

“வாட்சன், தீய நாட்களின் பிடியில் நாம் வீழ்ந்து விட்டது போல் தெரிகிறது.” என்று மெல்லிய குரலில் பேசினார். இருந்தாலும் அவரது பழைய அலட்சியமான போக்கு பேச்சில் இருந்தது.

“என் அருமை நண்பா!” என்று அழுது கொண்டே அவரருகில் சென்றேன்.

“தள்ளி நில். இருக்கும் இடத்தில் அப்படியே நில்” என்று அவரது அதிகாரத் தோரணையில் சொன்னார். இது போல் அவர் இதற்கு முன் சொல்லியது மிகவும் ஆபத்தான கால கட்டத்தில்தான். “நீங்கள் முன்னே அடி எடுத்து வைத்தால், உங்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்ல வேண்டி இருக்கும் வாட்சன்”

“ஆனால், ஏன்?”

“ஏனெனில் அது எனது விருப்பம். அது போதாதா?”

ஆம். திருமதி.ஹட்ஸன் சொன்னது மிகவும் சரி. அவர் எப்பொழுதும் இல்லாத படி இன்று மிகவும் அதிகாரத் தோரணையோடு பேசுகிறார். ஆனால் அவரது சோர்வைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருந்தது.

“நான் உங்களுக்கு உதவி செய்யவே வந்திருக்கிறேன்” என்று விளக்கினேன்.

“அதே தான். உங்களுக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதை அப்படியே செய்வதன் மூலமாகத்தான் எனக்குச் சிறந்த முறையில் உதவ முடியும்”

“நிச்சயமாக, ஹோல்ம்ஸ்”

அவர் கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

“உங்களுக்கு ஆத்திரம் ஏற்படவில்லையா?” என்று மூச்சுத் திணறிக் கொண்டே கேட்டார்.

பாவம், இப்படி ஒரு பரிதாபகரமான நிலையில் இருப்பவர் மேல் எப்படி ஒரு மனிதன் கோபப்பட முடியும்.

“இது உங்கள் நன்மைக்காகத்தான், வாட்சன்” என்று கரகரத்தார்.

“எனது நன்மைக்கா?”

“எனக்கு என்னாச்சு என்று எனக்குத் தெரியும். சுமத்திராவில் இருந்து வந்த கூலி நோய். இதைப் பற்றி டச்சுக்காரர்களுக்கு நம்மை விட அதிகமாகத் தெரியும். இருந்தாலும் இன்றுவரை அவர்களாலும் பெரிதாக எதுவும் செய்துவிட முடியவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுதி. சந்தேகமே இல்லாமல் இது சாவைத் தரக் கூடியது. மேலும் வெகு எளிதாக மோசமாக அடுத்தவருக்குப் பரவக் கூடியது.”

இப்பொழுது அவர் ஒரு நடுக்கத்துடன் பேசினார். அவரது நீண்ட மெலிந்த கைகள் துடித்துக் கொண்டே இருந்தன என்னை அவர் தள்ளி நிற்கச் சொல்லிக் கைகளை அசைத்த போது.

“தொட்டால் பரவக் கூடியது வாட்சன். தொட்டால் மட்டும் பரவக் கூடியது. தள்ளி இருந்தால் போதும். எந்தவிதச் சிக்கலும் இல்லை”

“நல்ல வேளை ஹோல்ம்ஸ். இது ஒரு துளியேனும் எனக்கும் பொருந்துமா. இதெல்லாம் என்னைப் பாதித்து விடாது. இவ்வளவு நெருக்கமான நண்பனுக்கு என் கடமையைச் செய்து விடாமல் இதெல்லாம் என்னைத் தடுத்து விடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

திரும்பவும் நான் அவரை நெருங்கினேன். ஆனால் அவர் என்னை எரித்து விடுவது போல் பார்த்தார்.

“நீங்கள் அங்கேயே இருந்தால் என்னிடம் பேசலாம். இல்லையேல் இந்த இடத்தை விட்டுக் கிளம்புங்கள்”

அவரது மிகப் பெரும் திறமைகளில் எனக்கு எப்பொழுதும் ஒரு மரியாதை இருப்பதால் அவர் சொல்வதைக் கேட்கும் வழக்கம் என்னிடம் எப்பொழுதும் உண்டு அவர் சொல்வது எனக்குக் கொஞ்சமும் புரியாமல் போனாலும் கூட. ஆனால் இப்பொழுது எனது தொழில் சார்ந்த உணர்வுகள் பீறிட்டுக் கிளம்பின. அவர் என் தலைவராக வேறெங்கோ இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் இந்த நோய் கொண்ட அறையில் அவர் எனக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.

“இங்கே பாருங்கள் ஹோல்ம்ஸ். நீங்கள் நீங்களாக இல்லை. ஒரு நோயாளி குழந்தை மாதிரி. அது போலத்தான் நான் நடத்துவேன். உங்களுக்குத் பிடிக்கிறதோ இல்லையோ நான் உங்களைச் சோதனை செய்து அதற்குத் தகுந்தாற் போல் சிகிச்சை அளிப்பேன்”

நஞ்சு கலந்த கண்களால் அவர் என்னை நோக்கினார்.

“எனது விருப்பத்திற்கெதிராக நான் ஒரு மருத்துவரைப் பார்த்தே ஆக வேண்டுமானால் பரவாயில்லை. ஆனால் எனது நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும்” என்றார் அவர்.

“அப்படி என்றால் எனக்குள் அது கொஞ்சமும் இல்லை”

“உனது நட்பில் என்றால், நிச்சயமாகச் சரி என்று சொல்லலாம். ஆனால் உண்மைகள் எப்பொழுதும் மாறப் போவதில்லை வாட்சன். எப்படி இருந்தாலும் நீங்கள் ஒரு பொது மருத்துவர் மட்டுமே. அவ்வளவாக அனுபவமும் கிடையாது. ஒரு சராசரியான படிப்பு படித்தவர். இதை எல்லாம் சொல்வதற்குத் துன்பமாய் இருக்கிறது. ஆனால் வேறு வழி இல்லை.”

நான் மிக மோசமாக அடிபட்டவனைப் போல் உணர்ந்தேன்.

“இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான கருத்து உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை ஹோல்ம்ஸ். இதுவே உங்கள் நிலையைத் தெளிவாகச் சொல்கிறது. உங்களுக்கு என் மேல் நம்பிக்கை இல்லை என்றால் நான் நிச்சயம் உங்களுக்கு சிகிச்சை அளிக்கப் போவதில்லை. ஆனால் நான் சர் ஜாஸ்பெர் மீக் பென்ரோஸ் பிஷர் போன்று லண்டனின் மிகச் சிறந்த மருத்துவர்களில் ஒருவரை அழைத்து வருகிறேன். ஆனால் யாராவது ஒருவரை நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதுதான் இறுதியானது. நானும் உங்களுக்கு உதவி செய்யாமலும் வேறு யாரையும் அழைத்து வராமலும் நீங்கள் சாவதை நாங்கள் இங்கே நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம் என்று நீங்கள் நினைத்தால் எங்களை நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான்”

“நீங்கள் நல்லதே நினைக்கிறீர்கள் வாட்சன்.” என்று அந்த நோயுற்ற மனிதன் ஒரு விசும்பலுக்கும் முனகலுக்கும் நடுவில் சொன்னார். “நான் உங்கள் அறியாமையை நிரூபித்துக் காட்டட்டுமா? டப்பாநூலி காய்ச்சல் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? கருப்பு பார்மோசா சீர்கேடு பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?”

“அந்த இரண்டையும் பற்றியும் நான் கேள்விப் பட்டதே இல்லை.”

“கீழை நாடுகளில் பல்வேறு வகையான நோய்கள் இருக்கின்றன. பல்வேறு வகையான நோய்க் காரணிகள் இருக்கின்றன, வாட்சன்.” ஒவ்வொரு வாக்கியத்துக்கும் போதிய இடைவெளி விட்டுத் தன் ஆற்றலைப் புதுப்பித்துக் கொண்டே பேசினார். மருத்துவம் மற்றும் குற்றவியல் சம்பந்தமான எனது சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் நான் நிறையக் கற்றுக் கொண்டுள்ளேன். உன்னால் எதுவும் செய்ய முடியாது.”

“இருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு மருத்துவர் ஐன்ஸ்ட்ரீ என்பவரைத் தெரியும். அவர் வெப்ப மண்டல நோய்களில் மிகுந்த ஆளுமை உடையவர். அவர் தற்சமயம் லண்டனில்தான் இருக்கிறார். எந்தவிதமான எதிர்ப்புக்கும் பலனில்லை ஹோல்ம்ஸ். நான் இப்பொழுதே அவரை அழைத்து வரப் போகிறேன்.” என்று சொல்லிவிட்டு உறுதியுடன் வாயிலை நோக்கிப் போனேன்.

என் வாழ்வில் எப்பொழுதும் இதைப் போன்றதொரு அதிர்ச்சியை நான் சந்தித்ததில்லை. ஒரு நொடியில், புலிப் பாய்ச்சலில் என்னை இறந்து கொண்டிருக்கும் அந்த மனிதர் இடை மறித்தார். நான் திருகப்படும் சாவியின் சத்தத்தைக் கேட்டேன். அடுத்த கணம் அவர் மீண்டும் தன் படுக்கையில் படுத்திருந்தார். மிகவும் தளர்ந்து மூச்சிரைத்துக் கொண்டே இருந்தார் தனது ஆற்றல் முழுவதும் செலவழித்ததால்.

“என்னிடம் இருந்து வலுக்கட்டாயமாகச் சாவியை எடுத்துக் கொள்ள மாட்டீர்கள், வாட்சன். நான் உங்களைச் சிக்க வைத்து விட்டேன் நண்பா. நீங்கள் இங்கேயேதான் இருக்க வேண்டும், நான் சொல்லும் வரை. இருந்தாலும் நான் உங்களைச் சிரிக்க வைப்பேன்.”(இதெல்லாம் பெருமூச்சுகளுக்கு நடுவில் மிகவும் சிரமப்பட்டு மூச்சு விட்டுக் கொண்டே செய்தார்.) “உங்கள் இதயத்தில் எனக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது மட்டுமே நிரம்பி இருக்கிறது. நிச்சயம் அது எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு என் ஆற்றல் திரும்ப வரும் வரை சற்றுப் பொறுமையாக இருங்கள். அதன் பின் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இப்பொழுது அல்ல வாட்சன், இப்பொழுது அல்ல. இப்பொழுது மணி நான்கு. ஆறு மணிக்கு நீங்கள் செல்லலாம்.”

“இது பைத்தியக்காரத்தனம், ஹோல்ம்ஸ்.”

“இரண்டு மணி நேரங்கள் மட்டும்தான், வாட்சன். சத்தியமாக நீங்கள் ஆறு மணிக்குச் செல்லலாம். அதுவரை பொறுங்கள்”

“எனக்கு வேறு வழி தெரியவில்லை”

“ஆம், இவ்வுலகிலேயே வேறெதுவும் இல்லை. நன்றி. எனது ஆடைகளைச் சரி செய்து கொள்ள எனக்கு உதவி தேவை இல்லை. நீங்கள் தள்ளி இருப்பதே நல்லது. வாட்சன், நான் இன்னொரு நிபந்தனை செய்ய வேண்டி இருக்கிறது. நீங்கள் உதவி கோர வேண்டும். ஆனால் நீங்கள் சொன்ன மனிதர் அல்லர். நான் தெரிவு செய்பவரிடம் இருந்து.”

“நிச்சயமாக”

“இந்த வீட்டில் நுழைந்ததில் இருந்தே இப்பொழுதுதான் நீங்கள் அறிவார்த்தமாகப் பேசி இருக்கிறீர்கள், வாட்சன். அங்கே சில நூல்கள் இருக்கின்றன. நான் சிறிது தளர்ந்து இருக்கிறேன். ஒரு மின்கலம் மின்சாரம் கடத்தாத ஒரு பொருளின் மேல் மின்சாரத்தைக் கொட்டினால் அது எப்படி உணரும் என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஆறு மணிக்கு நாம் நமது உரையாடலைத் தொடர்வோம்.”

ஆனால் அதற்கு வெகு சீக்கிரமாகவே அது நடத்தப்பட வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறது. சட்டென்று அவர் படுக்கையில் இருந்து பாய்ந்து சென்று வீட்டுக்கதவைப் பூட்டிய அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. அமைதியாக படுக்கையில் இருந்த அந்த உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன் சில நேரம். அவரது முகம் போர்வையால் கிட்டத்தட்ட மூடப்பட்டிருந்தது. அவர் உறங்குவது போல் தெரிந்தது. எதையும் எடுத்துப் படிக்க விருப்பம் இல்லாமல் நான் அந்த அறையில் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு சுவரிலும் தொங்கிக் கொண்டிருந்த பிரபலமான குற்றவாளிகளின் சித்திரங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். நோக்கமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த என் பார்வை இறுதியில் அடுப்படியில் இருந்த ஒரு மாடத்தின் மேல் பதிந்தது. அங்கே புகைக்கும் குழாய்கள் புகையிலை பைகள் ஊசிகள் பேனா கத்திகள் துப்பாக்கி ரவைகள் மற்றும் சில குப்பைகள் சிதறிக் கிடந்தன. அந்தக் குவியலுக்கு நடுவில் கருமையும் வெண்மையும் கலந்த ஒரு பெட்டி இழுவை மூடியுடன் இருந்தது. அது மிகவும் சிறிதாக நேர்த்தியாக இருந்தது. எனது கையை நீட்டி அதை எடுக்க எத்தனிக்கும் நேரம்–”

அப்பொழுது அவர் இட்ட அலறல் தெருவுக்கே கேட்டிருக்கும். கேட்கும் போதே மிகவும் நடுக்கமாய் இருந்தது. எனது தோல் சில்லென்றாகி விட்டது. எனது மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன அந்தக் கொடூரமான சத்தத்தைக் கேட்டு. நான் திரும்பிப் பார்க்கும் பொழுது ஒரு கோணலான முகத்தையும் பைத்தியக்காரத்தனமான கண்களையும் பார்த்தேன். நான் சற்றும் அசையாமல் நின்று கொண்டிருந்தேன் என் கைகளில் அந்தச் சிறு பெட்டியுடன்.

“கீழே வையுங்கள். உடனே வையுங்கள், வாட்சன்.” நான் அதை எடுத்த இடத்தில் திரும்ப வைத்தவுடன்தான் அவர் தன் தலையைத் திரும்பத் தலையணைக்குள் புதைத்துத் தூங்க ஆரம்பித்தார் பெருமூச்சு விட்டுக் கொண்டு. “என் பொருட்களை யாரும் தொடுவது எனக்குப் பிடிக்காது, வாட்சன். வாட்சன், உங்களுக்கு நன்றாகத் தெரியும் அது எனக்குப் பிடிக்காதென்று. என் பொறுமையை நீங்கள் அதிகமாகச் சோதிக்கிறீர்கள். ஒரு மருத்துவராக இருந்து கொண்டு ஒரு நோயாளியை மன நோய் விடுதிக்கு எளிதாகத் தள்ளி விடுவீர்கள் போல் தெரிகிறது. உட்காருங்கள். நான் இளைப்பாற வேண்டும்.”

அந்த நிகழ்ச்சி என் மனதில் ஒரு ஆழமான துன்பத்தை விளைவித்தது. மோசமான அவரது பேச்சைத் தொடர்ந்து வந்த அந்த உக்கிரமான காரணமே இல்லாமல் வெடிக்கக் கூடிய உணர்ச்சியானது அவரது இயல்பான மரியாதையான பேச்சில் இருந்து எவ்வளவு விலகி இருக்கிறது. இதில் இருந்தே அவர் மனம் எவ்வளவு சீர் குலைந்து போய் இருக்கிறது என்று நன்றாகத் தெரிகிறது. மனம் வெறுத்துப் போய் நான் அப்படியே அமர்ந்து விட்டேன் அமைதியாக நேரம் வரும் வரை. அவரும் என்னைப் போலவே கடிகாரத்தைக் கவனித்துக் கொண்டே இருந்தார். ஆறு மணி அடிக்கும் முன்பே அதே போன்ற காய்ச்சல் கொதிப்புடன் பேச ஆரம்பித்தார்.

“வாட்சன்” என்று ஆரம்பித்தார். “உங்கள் சட்டைப் பையில் எதாவது சில்லறை இருக்கிறதா”

“ஆம்”

“வெள்ளி எதாவது”

“நிறைய”

“அரை கிரீடம் எத்தணை?”

“ஐந்து இருக்கிறது”

“ஆஹ். மிகவும் கம்மி. மிகவும் கம்மி. எத்துணை துரதிர்ஷ்டமானது வாட்சன். பரவாயில்லை. எவ்வளவு இருந்தாலும் அவைகளை அப்படியே கடிகாரப் பையில் போட்டு விடுங்கள். மீதி இருக்கும் சில்லறைகளை வலது பையில் போடுங்கள். நன்றி. அது உங்களைச் சமமான நிலையில் வைத்திருக்க உதவும்.”

இது முற்றிலும் பைத்தியக்காரத்தனமாக இருந்தது. அவர் நடுங்கினார். விசும்பலுக்கும் இருமலுக்கும் நடுவில் ஒரு ஒலி எழுப்பினர்.

“இப்பொழுது நீங்கள் அடுப்பைப் பற்ற வையுங்கள். மிகவும் கவனம். பாதிக்கு மேல் அது எரியக் கூடாது. கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் வாட்சன். மிகவும் கவனமாய் இருங்கள். நன்றி. அபாரம் வாட்சன். வேண்டாம். சாளரத்திரையை விரிக்க வேண்டாம். தயவு செய்து சில கடிதங்கள் மற்றும் காகிதங்களை இந்த மேசையில் என் கைக்கு எட்டும்படி வையுங்கள். நன்றி. அடுப்படியில் இருக்கும் அந்தக் குப்பையில் இருந்து சில பொருட்களைக் கொண்டு வாருங்கள். அபாரம், வாட்சன். அங்கே சர்க்கரை இடுக்கி ஒன்று இருக்கும். அதை வைத்து அந்தத் தந்தப் பெட்டியை எடுத்து வாருங்கள். இந்தக் காகிதங்களுக்கு நடுவில் அதனை வையுங்கள். நல்லது. இப்பொழுது நீங்கள் சென்று 13 கீழ் புர்கி தெருவில் இருக்கும் திரு.கல்வெர்ட்டன் ஸ்மித் என்பவரை அழைத்து வாருங்கள்.”

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு ஒரு மருத்துவரை அழைத்து வர வேண்டும் என்ற எண்ணமே சற்றுக் குறைந்து விட்டது. அவரை விட்டுச் செல்வது அபாயகரமானது என்று அவருக்கே தெரிந்து விட்டது. எவ்வளவு உறுதியுடன் வேண்டாம் என்று சொன்னாரோ அதே நபரை இப்பொழுது சந்தித்தே ஆக வேண்டும் என்று மிகவும் விருப்பப்படுகிறார்.

“நான் அந்தப் பெயரைக் கேள்விப் பட்டதே இல்லை” என்றேன் நான்.

“நிச்சயம் இருக்க முடியாது, எனதருமை வாட்சன். உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். இந்த உலகத்தில் இந்த நோய் பற்றி மிகவும் தெரிந்து வைத்திருக்கும் ஒரு நபர் மருத்துவர் அல்லர் ஒரு மரம் நடுபவர் என்று. திரு.கல்வெர்ட்டன் ஸ்மித் சுமத்திராவில் அனைவரும் அறிந்தவர். இப்பொழுது லண்டன் வந்திருக்கிறார். மருத்துவ உதவிகள் கிடைக்காத அவரது வயல்களில் பரவிய அந்த நோயைப் பற்றி அவரே இறங்கி ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டு பிடித்திருக்கிறார். அவர் மிகவும் செயல் முறை சார்ந்த மனிதர். ஆறு மணிக்கு முன் நீங்கள் செல்வதை நான் விரும்பவில்லை, ஏனெனில் அவரை அவரது இடத்தில் நீங்கள் கண்டு பிடிக்கவே முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவரை எப்படியாவது இங்கு வரவழைத்து இந்த நோயில் அவரது அனுபவங்களின் பலனை நமக்குக் கொடுக்க வைத்தால், அது தான் அவரது முழு நேரத் தொழிலாகவும் இருக்கிறது, அவர் நமக்கு உதவி செய்ய முடியும் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை.

நான் ஹோல்ம்ஸ் சொன்னதை முழுமையாகச் சொல்லி இருக்கிறேன். அவர் பேசும்போது மூச்சு விட சிரமப்பட்டதையும் அவரது கைகள் வலியால் துடிப்பதையும் சொல்ல நான் இனிமேல் முயற்சி செய்ய மாட்டேன். நான் அங்கிருந்த சில மணி நேரங்களிலேயே அவரது தோற்றம் மோசமான முறையில் மாற்றமடைந்திருந்தது. அந்த அழுத்தமான புள்ளிகள் மேலும் கூடி இருந்தன. கருமையான குழிக்குள் இருந்து பிரகாசிப்பது போல் இருந்த அவரது கண்கள் மேலும் பொலிவடைந்திருந்தன. அவரது இமைகளில் குளிர்ந்த வியர்வை அரும்பி நின்றது. ஆனாலும் அவர் தனது பேச்சில் அதிகாரத் தோரணையை மட்டும் விடவேயில்லை. அவரது கடைசி மூச்சு வரைக்கும் அவர்தான் தலைவராக இருக்கப் போகிறார்.

“இப்பொழுது நான் எப்படி இருக்கிறேன் என்பதை அப்படியே அவருக்குச் சொல்லுங்கள்.” என்றார் அவர். “உங்கள் மனதில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே அவரிடம் சொல்லுங்கள். இறந்து கொண்டிருக்கும் மனிதன், இறந்து கொண்டிருக்கும் பைத்தியம் பிடித்த மனிதன் என்று. ஏன் பெருங்கடல் மடி முழுவதும் சிப்பிகள் நிறைந்து இருக்கவில்லை. அவைகள் மிகவும் விருத்தியுள்ள உயிர்கள் ஆயிற்றே. ஆஹ், நான் வேறேதோ பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த மூளை தன்னை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றது என்பது விநோதமாய் இருக்கிறது. நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?”

“கல்வெர்ட்டனிடம் நான் என்ன சொல்ல வேண்டும்.”

“ஆம், எனக்கு நினைவு வந்து விட்டது. என்னுடைய வாழ்வே அதில்தான் இருக்கிறது. அவரிடம் கெஞ்சுங்கள் வாட்சன். எங்களுக்கு நடுவில் நல்ல உணர்ச்சிகளே இல்லை. அவரது அண்ணன் மகன் எதோ தவறு செய்து விட்டான். அதை அவரிடம் காண்பித்தேன். அந்தப் பையன் மோசமான முறையில் இறந்து விட்டான். அதனால் அவருக்கு என்னைப் பிடிக்காது. அதனால் அவரை நீங்கள் எப்படியாவது தேற்ற வேண்டும். கெஞ்ச வேண்டும், கும்பிட வேண்டும், எப்படியாவது அவரை இங்கு கூட்டி வந்து விட வேண்டும். அவர் என்னைக் காப்பாற்ற முடியும். அவரால் மட்டுமே முடியும்!”

“அவரைக் கட்டி எடுத்து வர வேண்டும் என்றால் கூட ஒரு வாடகைக் காரில் கூப்பிட்டு வந்து விடுகிறேன்.”

“அப்படி எதுவும் செய்ய வேண்டாம். அவரை நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வையுங்கள். அதன் பின் அவருக்கு முன்பே இங்கு வந்து விடுங்கள். அவருடன் வராமல் இருக்க எதாவது சொல்லி சமாளியுங்கள். மறந்து விடாதீர்கள், வாட்சன். நீங்கள் என்னை ஏமாற்றி விடாதீர்கள். இதுவரை நீங்கள் என்னை வஞ்சித்ததேயில்லை. அந்த உயிரினங்களைக் கட்டுப்படுத்த இயற்கையாகவே பகையாளிகள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. நீங்களும் நானும் நமது கடமையைச் செய்து விட்டோம். அதனால் இந்த உலகம் சிப்பிகளால் சூழ அனுமதித்து விடுவோமா. வேண்டாம் வேண்டாம். அது மிகவும் கொடூரம். உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லுங்கள்.”

ஒரு பெரிய அறிவாளி இப்படி ஒரு முட்டாள் குழந்தை போல் பினாத்திக் கொண்டிருந்த நேரத்தில் நான் கிளம்பி விட்டேன். அவர் எனக்கு அறைக் கதவின் சாவியைக் கொடுத்தார். அதனை மிகவும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டேன். இல்லை என்றால் திரும்பவும் பூட்டி விடுவார். திருமதி.ஹட்ஸன் வெளியே நின்று கொண்டிருந்தார் நடுக்கத்துடன் அழுது கொண்டு. வெளியே சென்ற பின் எனக்குப் பின்னால் ஹோல்ம்ஸின் மெலிதான பெரிய குரல் பைத்தியக்காரத்தனமாக எதோ உச்சாடனம் செய்வது போல் கேட்டது. கீழே நான் வாடகைக் காருக்காக சீட்டி அடித்தபோது பனி மூட்டத்தில் இருந்து ஒருவன் வந்தான்.

“ஹோல்ம்ஸ் எவ்வாறு இருக்கிறார், சார்?” என்று கேட்டான்.

அவன் ஒரு பழைய சக பணியாளன். ஸ்காட்லாந்து யார்டில் பணி புரியும் காவல் துறை மேலாளர் திரு.மார்ட்டன்.

“அவர் உடல் நிலை மிகவும் மோசமாய் இருக்கிறது” என்று பதில் அளித்தேன்.

அவர் என்னை மிகவும் விநோதமாகப் பார்த்தார். அது ஒரு குரூரமான பார்வையாக இல்லாமல் இருந்திருந்தால் அவர் கண்களில் ஏற்பட்ட ஒளியில் இருந்து அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று தோன்றியது.

“அதைப் பற்றி எனக்கும் சில புரளிகள் கிடைத்தன.” என்றார் அவர்.

இதற்கிடையில் வாடகைக் கார் வந்து விட்டது. அதனால் நான் கிளம்பி விட்டேன்.

கீழ் புர்கி தெரு மிகவும் அழகான வீடுகளின் வரிசையாக இருந்தது. நாட்டிங் மலை மற்றும் கென்சிங்டன் ஊர்களின் எல்லையில் இருந்தது. எனது வாடகைக்கார் இறக்கி விட்ட அந்த ஒரு வீடு மிகவும் அடக்கமாய் இருந்தது. அதன் பழங்கால இரும்புச் சட்டங்கள் மிக பிரமாண்டமான மடங்கு கதவுகள் பித்தளையினால் செய்யப்பட்ட பெயர்ப்பலகை எல்லாம் அதன் மேல் ஒரு மதிப்பு ஏற்படுத்தி இருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் ஒரே ஒரு சமையல்காரர் மட்டுமே இருந்தார். நிறமேற்றப்பட்ட மின் விளக்கின் வெளிர் சிவப்பு நிறத்தின் ஒளியில் அவர் மாட்டிக் கொண்டது போல் இருந்தது.

“ஆம். திரு.கல்வெர்ட்டன் ஸ்மித் இருக்கிறார். திரு.வாட்சன். மிக்க நன்று. நான் உங்கள் அட்டையை எடுத்து அவரிடம் காண்பிக்கிறேன்.”

எனது பணிவான பெரும் பதவியும் திரு.கல்வெர்ட்டன் ஸ்மித் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். பாதி திறந்திருந்த கதவின் வழியாகக் கடுகடுப்பான குத்துகின்ற அவரது பேச்சுக் குரல் கேட்டது.

“யார் இந்த ஆள்? இவருக்கு என்ன வேண்டும்? நான் படிக்கும் நேரத்தில் தொந்தரவு செய்யக் கூடாது என்று எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் ஸ்டேபிள்ஸ்?”

அந்தச் சமையல்காரரிடம் இருந்து இனிமையான விளக்கம் வழிந்து கொண்டு இருந்தது. இருக்கட்டும் நான் அவரைப் பார்க்கப் போவது இல்லை. என்னுடைய வேலை இப்படித் தடைபடுவது எனக்குப் பிடிக்காது. நான் வீட்டில் இல்லை அப்படியே சொல்லி விடு. அவர் என்னைப் பார்த்தே ஆக வேண்டும் என்றால் நாளை காலையில் வரச் சொல்லுங்கள். திரும்பவும் மென்மையான முணுமுணுப்பு.

“இரு இரு அதையே சொல்லி விடு. அவர் நாளை காலையில் வரட்டும் இல்லையேல் வரவே வேண்டாம். என்னுடைய வேலை பாதிக்கப் படக் கூடாது”

நான் அவருக்கு உதவி செய்யும் வரை ஹோல்ம்ஸ் மரணப் படுக்கையில் நிமிடங்களை எண்ணிக் கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தேன். இது கடவுள் தரிசனத்திற்காக நின்று கொண்டு இருக்கும் நேரம் அல்ல. நான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவரது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மன்னிப்பு கேட்டுக் கொண்டு இருக்கும் சமையல் காரர் தனது செய்தியைத் தெரிவிக்கும் முன்பாக நான் அவரைத் தள்ளிக் கொண்டு அந்த அறையில் நுழைந்தேன். கணப்படுப்பின் முன் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் மிகுந்த கோபத்தோடு எழுந்தார். நான் ஒரு பெரிய மஞ்சள் நிறமான முகத்தைப் பார்த்தேன். கரடு முரடாக எண்ணெய் படிந்த முகம். அதில் தடித்த இரட்டை நாடி மேலும் மணல் மேடுகள் போல் முடிச்சிட்ட புருவங்களுக்குக் கீழிருந்து சாம்பல் நிறத்தில் மிகுந்த கோபம் கொண்ட இரண்டு கண்கள் என்னை விழுங்கி விடுவது போல் பார்த்தன. உயரமான வழுக்கைத் தலையில் சல்லாபிக்க அழைப்பது போல் வெல்வெட்டினால் செய்யப்பட்ட தொப்பி பிங்க் நிற வளைவில் இருந்து தொங்கியது. அவரது மூளை மிகவும் பெரிதானது போல் தோற்றம் அளித்தது. இருந்தாலும் அவரை ஏற இறங்கப் பார்த்த பொழுது வியக்கத் தக்க வகையில் அவர் ஒரு சிறிய மெலிந்த உருவம் படைத்தவராய் இருந்தார். முதுகும் தோள்களும் வளைந்து குழந்தைப் பருவத்தில் இருந்து ரிக்கெட்ஸ் நோய் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார்

“என்ன இது?” என்று அந்த அறையே அதிரும்படி பெரிதாக அலறினார். “இதற்கு என்ன அர்த்தம். நாளை தான் பார்ப்பேன் என்று சொல்லி அனுப்பவில்லையா.”

“என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றேன் நான். ஆனால் இதைத் தள்ளிப் போட முடியாது. திரு. ஷெர்லாக் ஹோல்ம்ஸ்…”

எனது நண்பனின் பெயரைக் கேட்டதும் அந்த மனிதரிடம் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. சட்டென்று அவர் முகத்தில் இருந்த கோபம் மறைந்து விட்டது. அவரது முகத்தில் பதற்றமும் எச்சரிக்கையும் ஒருசேர தோன்றியது.

“நீங்கள் ஹோல்ம்ஸ் சொல்லியா இங்கு வந்து இருக்கிறீர்கள்.” என்று அவர் கேட்டார்.

“அவரை விட்டு இப்பொழுது தான் வந்தேன்”

“அவருக்கு என்ன ஆயிற்று. அவர் எப்படி இருக்கிறார்”.

“அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. அதனால் தான் நான் இங்கு வந்திருக்கிறேன்”.

அவர் என்னை ஒரு ஆசனத்தில் அமர சைகை செய்தார். பின்னர் தனது ஆசனத்தில் அமர்ந்தார். அப்படி அவர் அமரும் போது அவரது முகத்தைக் கணப்படுப்பின் மேல் இருந்த கண்ணாடியில் பார்த்தேன். குரூரமான மிகவும் வெறுக்கத் தக்க புன்னகை தான் என்று என்னால் சத்தியம் செய்திருக்க முடியும். இருந்தாலும் என்னையே சமாதானம் செய்து கொண்டேன் ஏதோ ஒரு நரம்பியல் கோளாறினால்தான் அப்படி நேர்ந்திருக்கும் என்று. அதை நான் தவறாக எடுத்துக் கொண்டிருந்து இருக்கலாம். ஏனெனில் அதன் பின் ஒரு உண்மையான அக்கறையோடு என்னை நோக்கினார்.

“இதைக் கேட்க எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார் அவர். எனக்கு ஒரு வியாபார நிமித்தமாக மட்டுமே அவரைத் தெரியும். இருந்தாலும் அவரது திறமைகளை குணத்தை நான் முழுவதும் மதிக்கிறேன். அவருக்குக் குற்றவியலில் எவ்வளவு அனுபவம் இல்லையோ அதே போல் தான் எனக்கும் நோய்களில் அனுபவம் உள்ளது. அவரைப் பொறுத்த அளவில் வில்லன் ஆனால் எனக்கு அது ஒரு கிருமி. அங்கே எனது சிறைச் சாலைகள் இருக்கின்றன” என்று அங்கே ஒரு மேஜையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடுவைகளைப் பார்த்து அவர் தொடர்ந்தார். “அதில் சில குடுவைகளில் உள்ள கிருமிகள் உலகிலேயே மிகக் கொடூரமான குற்றங்களுக்கான தண்டனையை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றன”

“உங்களுக்கு இருக்கும் ஒரு சிறப்பான திறமையினால் தான் அவர் உங்களைப் பார்க்க விரும்பினார். உங்கள் மீது அவர் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இந்த இலண்டன் மாநகரில் இருக்கும் மனிதர்களிலேயே நீங்கள் ஒருவர் மட்டும் தான் அவருக்கு உதவ முடியும் என்று நினைத்தார்”

அந்தச் சிறிய மனிதர் பேச ஆரம்பித்த பொழுது அவரது தலையில் இருந்த தொப்பி நழுவிக் கீழே விழுந்தது.

“ஏன்?” என்று அவர் கேட்டார். “அவரது பிரச்சனைக்கு நான் உதவ முடியும் என்று அவர் ஏன் எண்ணுகிறார்.”

“உங்களுக்குக் கீழை நாடுகளின் நோய்கள் பற்றிய அறிவு இருப்பதால்”

“அவருக்கு வந்த இந்த நோய் கீழை நாட்டில் இருந்துதான் வந்தது என்று அவர் ஏன் நினைக்க வேண்டும்”

“ஒரு வழக்கு சம்பந்தமான விசாரணையில் துறைமுகத்தில் உள்ள சீன மாலுமிகளிடம் அவர் பழகினார்”

திரு.கல்வெர்ட்டன் ஸ்மித் இனிமையாகப் புன்னகைத்தபடியே தனது தொப்பியை எடுத்து அணிந்தார்.

“ஓ, அவ்வளவுதான் இல்லையா?” என்றார் அவர். “நீங்கள் நினைப்பது போல் விஷயம் அவ்வளவு மோசமாக இல்லை என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு நாட்களாக அவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்”

“கிட்டதட்ட மூன்று நாட்கள்”

“அவருக்கு பித்துப் பிடித்திருக்கிறதா”

“சில சமயங்களில்”

“டுட் டுட். அது தீவிரமானதாகத்தான் தெரிகிறது. இப்பொழுது நான் அவரைப் பார்க்க வரவில்லை என்றால் அது மிகவும் மனிதத் தன்மையற்ற செயல். எனது வேலை பாதிக்கப்படுவதையும் நான் மிகவும் வெறுக்கிறேன் திரு.வாட்சன் அவர்களே. ஆனால் இந்த வழக்கு விதிவிலக்கானது. நான் உடனே உங்களுடன் வருகிறேன்”

எனக்கு உடனே ஹோல்ம்ஸ் சொன்னது ஞாபகம் வந்தது.

“எனக்கு ஒருவரைச் சந்திக்க வேண்டியதாக இருக்கிறது.” என்றேன் நான்.

மிக்க நன்று. நான் தனியாகச் செல்கிறேன். என்னிடம் அவரது விலாசம் இருக்கிறது. ஒரு அரை மணி நேரத்தில் நான் நிச்சயம் அங்கு இருப்பேன் என்று நீங்கள் நம்பலாம்.”

கனத்த இதயத்தோடு நான் மீண்டும் ஹோல்ம்ஸின் அறைக்குள் நுழைந்தேன். எனக்குத் தெரிந்த வரையில் நான் இல்லாத பொழுது அவருக்கு மிக மோசமாக ஏதாவது நடந்திருக்கலாம். ஆனால் அதற்கு நேர்மாறாக எனக்குப் பெரும் மனநிம்மதி கொடுக்கும்படி அவரது உடல்நிலை மிகுந்த முன்னேற்றம் அடைந்திருந்தது. அவரது முகம் எப்பொழுதும் போல் பேய் அறைந்தது மாதிரியே இருந்தது. ஆனால் அவரது பைத்தியம் முற்றிலும் குணமாகி இருந்தது. அவர் மிகவும் மெல்லிய குரலில் பேசினார். வழக்கம் போல மிருதுவான தெளிவான குரலில் பேசியது உண்மைதான்.

“நீங்கள் அவரைப் பார்த்தீர்களா, வாட்சன்?”

“ஆம். அவர் வந்துகொண்டிருக்கிறார்.”

“பாராட்டுக்கள், வாட்சன், பாராட்டுக்கள். நீங்கள்தான் தான் மிகச் சிறந்த தூதர்”

“அவர் என்னுடன் வர நினைத்தார்”

“அதெல்லாம் நடந்திருக்கக் கூடாது வாட்சன். அதற்கு வாய்ப்பே இல்லை. எனக்கு என்ன ஆயிற்று என்று அவர் கேட்டாரா?”

“கிழக்கு எல்லையில் இருக்கும் சீனர்களைப் பற்றி நான் அவரிடம் சொன்னேன்”

“அபாரம் வாட்சன். ஒரு நல்ல நண்பன் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டீர்கள். நீங்கள் உடனே இங்கிருந்து சென்றுவிடுங்கள்”

“நான் இங்கிருந்து அவர் சொல்வதைக் கேட்க வேண்டும், ஹோல்ம்ஸ்”

“ஆம் நிச்சயம் நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் சில காரணங்களால், நாங்கள் தனியாக இருப்பதாக அவர் நினைத்தால்தான், அவரது உதவி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். என் தலை மாட்டுக்குப் பின்னால் ஒரு சிறிய அறை இருக்கிறது, வாட்சன்.”

“ஹோல்ம்ஸ், நண்பா”

“வேறு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, வாட்சன். அது ஒளிந்து கொள்ள வசதியாக இருக்காது. இருந்தாலும் அங்கு இருந்தால்தான் சந்தேகம் ஏற்படாது. அங்கேயே இருங்கள் வாட்சன், சரியாக வரும் என்று தோன்றுகிறது.”

“அங்கே சக்கரங்கள் இருக்கின்றன வாட்சன். எனது நண்பனாய் இருந்தால் சீக்கிரம் செய்யுங்கள். என்ன நடந்தாலும் அங்கிருந்து சிறிதும் நகர வேண்டாம். என்ன நடந்தாலும் — நான் சொல்வது புரிகிறது அல்லவா. பேச வேண்டாம் அசைய வேண்டாம் காதுகொடுத்து மட்டும் கேளுங்கள்”

மறு நொடியே அவரது ஆற்றல் முழுவதும் வற்றி விட்டது. அவரது அதிகாரத் தோரணையும் நோக்கத்துடன் கூடிய பேச்சும் அரைப் பைத்திய மனிதன் போல் மெல்லிய தெளிவற்ற முணுமுணுப்பாக மாறி விட்டது. நான் வேகமாகச் சென்று ஒளிந்து கொண்ட அதே நேரத்தில் மாடிப்படியில் ஒருவர் ஏறி வந்து அறைக் கதவைத் திறந்து மூடும் சத்தம் கேட்டது. அதன் பின் வியக்கத் தகுந்த வகையில் ஒரு நீண்ட மௌனம் நிலவியது. ஒரு நோயாளியின் மூச்சுத் திணறலும் மூச்சின் பேரிரைச்சலும் தான் இடை இடையேகேட்டுக்கொண்டிருந்தன. வந்திருப்பவர் படுக்கைக்கு அருகில் இருந்து நோயாளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டேன். ஒருவழியாக அந்த அமைதி இறுதியில் விலகியது.

தூக்கத்தில் இருக்கும் ஒருவரை எழுப்பும் நோக்கத்துடன் “ஹோல்ம்ஸ், ஹோல்ம்ஸ்” என்று இரைந்து கூப்பிட்டார். “நான் பேசுவது கேட்க வில்லையா, ஹோல்ம்ஸ்” அவர் அந்த நோயாளியின் தோளை உலுக்கியது போல ஒரு சலசலப்பு கேட்டது.

“திரு. ஸ்மித், இது நீங்கள் தானா?” ஹோல்ம்ஸ் மெலிதாக முனகினார். “நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை”

அவர் சிரித்தார்.

“நானும் அப்படித்தான் நினைத்தேன்.” என்றார் அவர். இருந்தாலும் பாருங்கள் வந்துவிட்டேன். கனன்று எரியும் நெருப்புத் துண்டு, ஹோல்ம்ஸ், நெருப்புத் துண்டு”

“நீங்கள் வந்தது நல்லது, உங்களது உயர்ந்த எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது. உங்களது தனிச் சிறப்பான அறிவை நான் பாராட்டுகிறேன்”

நமது விருந்தினர் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.

“நிச்சயம். நல்ல வேளையாக இந்த இலண்டன் மாநகரிலேயே உன் ஒருவனுக்கு மட்டும்தான் தெரியும். உனக்கு என்ன ஆச்சு என்று தெரியுமா?”

“அதேதான்” என்றார் ஹோல்ம்ஸ்.

“ஆஹ், உங்களுக்கு நோய்க்குறிகள் புரிகிறதா?”

“மிகத் தெளிவாக”

“எனக்கு அதில் வியப்பேதும் இல்லை, ஹோல்ம்ஸ், அதேதான் என்றால் வியப்பேதும் இல்லை. அதுவாக இருக்குமானால் உன்னைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. விக்டர் நான்காவது நாளிலேயே இறந்து விட்டான். ஆரோக்கியமான இளம் வயது உடையவன். நிச்சயம், நீ சொன்னது போல் வியக்கத்தக்கதுதான். லண்டன் மாநகரின் நட்ட நடுவில் எங்கோ இருக்கும் ஆசிய நோய் இருப்பது, அதுவும் நான் ஆராய்ச்சி செய்த ஒரு நோய். தற்செயலான நிகழ்ச்சி, ஹோல்ம்ஸ். நீங்கள் கண்டுபிடித்தது உங்கள் அறிவுக் கூர்மையைக் காட்டுகிறது. ஆனால் இரண்டையும் தொடர்பு படுத்திக் கூறியது இரக்கமற்றது ஹோல்ம்ஸ்.”

“நீங்கள்தான் செய்தீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்”

“ஓஹோ, உங்களுக்குத் தெரியும், இல்லையா. எப்படி இருந்தும் உங்களால் நிரூபிக்க முடியவில்லையே. ஆனால் என்னைப் பற்றி அப்படி நீங்கள் சொல்ல உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்திருக்க வேண்டும். அதன் பின் பிரச்சினை என்று வந்ததும் என்னிடமே வந்து உதவி கேட்டு மண்டியிட நேர்ந்து விட்டதே. இது என்ன கணக்கு, ஹாங்”

நான் ஒரு நோயாளியின் இரைச்சலுடன் கூடிய பெருமூச்சைக் கேட்டேன். “கொஞ்சம் அந்தத் தண்ணீரை எடுத்துக் கொடுங்கள்” என்று மூச்சிரைத்தார்.

“மரணத்தின் விளிம்பில் நீங்கள் மிகுந்த விலை மதிக்க முடியாதவராகி விட்டீர்கள், ஹோல்ம்ஸ். ஆனால் நமக்குள் ஒரு சிறு உரையாடல் நடத்தாமல் உங்களை நான் செல்ல அனுமதிக்க மாட்டேன். அதனால்தான் தண்ணீர் தருகிறேன். பார்த்து, கொட்டி விடாதீர்கள். அப்படித்தான். நான் சொல்வது புரிகிறதா?”

ஹோல்ம்ஸ் முனகினார்.

“உங்களால் என்ன முடியுமோ அதைச் செய்யுங்கள். நடந்தது நடந்தாகவே இருக்கட்டும்.” என்று கிசுகிசுத்தார். “நான் என் மனதில் இருப்பதை எல்லாம் அழித்து விடுகிறேன். சத்தியமாய். என்னை குணப்படுத்துங்கள். பின் நான் அனைத்தையும் மறந்து விடுகிறேன்.”

“எதை மறப்பீர்கள்”

“விக்டர் சாவேஜ் எப்படி இறந்தான் என்ற மர்மத்தை. நீங்கள்தான் செய்தீர்கள் என்று கிட்டத்தட்ட ஒத்துக் கொண்டு விட்டீர்களே. அதை மறந்து விடுகிறேன்”

“நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இல்லை மறந்து விடுங்கள். அது உங்கள் விருப்பம். நீங்கள் சாட்சிக் கூண்டில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வேறு ஒரு பெட்டியில் இருப்பதாய்த்தான் நினைக்கிறேன் ஹோல்ம்ஸ். அதை உறுதிப்படுத்த என்னால் முடியும். எனது அண்ணன் மகன் எப்படி இறந்தான் என்று உங்களுக்குத் தெரிந்ததைப் பற்றி எனக்கு எந்தவித அக்கறையும் இல்லை. நாம் அவனைப் பற்றியே பேசவில்லை. நாம் பேசுவதெல்லாம் உங்களைப் பற்றி மட்டுமே.”

“ஆமாம், ஆமாம்.”

“நீங்கள் அனுப்பி வைத்த ஆள் – அவன் பெயர் மறந்து விட்டது – சொன்னான், உங்களுக்கு இந்த நோய் கிழக்கு எல்லையில் இருக்கும் மாலுமிகளிடம் இருந்து பரவியது என்று”

“ஆம். நான் அப்படித்தான் நினைக்கிறேன்”

“உங்களது அறிவில் உங்களுக்குப் பெருமையாய் இருக்கும்தானே, ஹோல்ம்ஸ், இல்லையா? ஆனால் இப்பொழுது உங்களை விட அறிவாளியை சந்தித்திருக்கிறீர்கள். கொஞ்சம் அப்படியே பின்னோக்கிப் பாருங்கள், ஹோல்ம்ஸ். வேறெந்த வகையிலும் இந்த நோய் வந்திருக்கும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?”

“என்னால் சிந்திக்க முடியவில்லை. எனக்கு மனமே சரி இல்லை. எப்படியாவது எனக்கு உதவி செய்யுங்கள்.”

“ஆம், நான் உதவி செய்கிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் எப்படி இங்கு வந்து சேர்ந்தீர்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைக்கிறேன். நீங்கள் இறக்கும் முன் அதனை நான் தெளிவு படுத்தி விடுகிறேன்”

“என் வலியைப் போக்க எதாவது செய்யுங்கள்.”

“வலிக்கிறதா? ஆம் அந்தக் கூலிக்காரர்களும் அப்படித்தான் இறுதியில் கூச்சலிட்டார்கள். தசைப் பிடிப்பினால் இருக்கும் என்று நினைக்கிறேன்.”

“ஆமாம், ஆமாம், தசைப் பிடிப்புதான்”

“இருக்கட்டும், நான் பேசுவது உங்களுக்குக் கேட்கிறது அல்லவா. உங்கள் வாழ்க்கையில் இந்த நோய் பீடிக்கும் நேரத்தில் எதாவது வினோதமான சம்பவம் நடந்ததா?”

“இல்லை, அப்படி எதுவும் இல்லை”

“நன்றாக யோசியுங்கள்”

“சிந்தித்துப் பேசும் அளவு என்னிடம் ஆற்றலே இல்லை”

“அப்ப, நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். உங்களுக்கு எதாவது தபாலில் வந்ததா?

“தபாலிலா?”

“எதாவது ஒரு சிறிய பெட்டி”

“எனக்கு மயக்கம் வருகிறது. நான் செத்தேன்”

“ஹோல்ம்ஸ், நான் பேசுவது கேட்கிறதா?” இறந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனை உலுக்குவது போன்ற ஒலி கேட்டது. நான் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் வேறெதுவும் செய்ய முடியாத நிலையில் நான் இருந்தேன். “நான் சொல்வதை நீங்கள் காது கொடுத்துக் கேட்டுத்தான் ஆக வேண்டும். உங்களுக்கு ஒரு பெட்டி ஞாபகம் இருக்கிறதா. ஒரு தந்தக்தால் ஆன பெட்டி. அது புதன் கிழமை வந்திருக்கும். நீங்கள் அதைக் திறந்து பார்த்திருப்பீர்கள். ஞாபகம் இருக்கிறதா?”

“ஆமாம், ஆமாம். நான் அதைத் திறந்தேன். அதில் ஒரு கூர்மையான சுருள் வில் இருந்தது. வேடிக்கையாக —”

“அது வேடிக்கை இல்லை என்பது உங்களைப் பார்த்தால் தெரியவில்லையா? முட்டாளே, உனக்கு வர வேண்டியது சரியாக வந்திருக்கிறது. யார் எனது வாழ்க்கையில் உன்னைக் குறுக்கிடச் சொன்னது? என்னை நீ சும்மா விட்டிருந்தால் நான் உன்னை நோகடித்திருக்க மாட்டேன்.”

“ஆம், எனக்கு ஞாபகம் இருக்கிறது.” என்று ஹோல்ம்ஸ் மூச்சு வாங்கியபடி பேசினார். “அந்தச் சுருள் வில் எனது கையில் குத்தி ரத்தம் வந்தது. மேஜையில் இருக்கும் இந்தப் பெட்டி –”

“ஆம், அதேதான். இப்பொழுது அது எனது பைக்குள் செல்லப் போகிறது. உனது இறுதி ஆதாரமும் என்னுடன் அமுங்கப் போகிறது. ஆனால் உனக்கு உண்மை தெரிந்து விட்டது, ஹோல்ம்ஸ், நான்தான் உன்னைக் கொன்றேன் என்ற உண்மையுடன் நீ இனி இறந்து போகலாம். உனக்கு விக்டர் சாவேஜ் பற்றித் தேவைக்கு அதிகமாகவே தெரிந்து விட்டது. அதனால்தான் உனக்கு அதைப் பகிர்ந்தளிக்க அனுப்பினேன். நீ உனது மரணத் தருவாயில் இருக்கிறாய், ஹோல்ம்ஸ். நீ இறக்கும் வரை நான் இங்கேயே உட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறேன்.”

ஹோல்ம்ஸின் குரல் ஒரு மெல்லிய முனகலாய்க் கேட்டது.

“என்ன அது?” என்றார் ஸ்மித். “அடுப்பைப் பற்ற வைக்கவா? ஓ, உங்களுக்கு எல்லாம் நிழலாய்த் தெரிகிறதா? நிச்சயம், அதை நான் பற்ற வைக்கிறேன். அப்பொழுதுதான் உங்களை நான் நன்றாகப் பார்க்க முடியும்.” அவர் எழுந்து அறையின் மறு முனை சென்றார். உடன் அறை பிரகாசமானது. “உங்களுக்கு வேறு எதாவது சிறு சிறு உதவிகள் தேவைப்படுகிறதா, எனது நண்பனே?”

“ஒரு சிகரெட்டும், தீக்குச்சியும் வேண்டும்”

ஆனந்தத்தில் ஆச்சரியத்திலும் அப்படியே நான் கத்தி இருப்பேன். அவர் தனது சாதாரணக் குரலில் பேசினார். கொஞ்சம் பலவீனமாய் இருந்தது. ஆனால் அது எனக்குத் தெரிந்த பழக்கப்பட்ட குரல். அதன் பின் ஒரு நீண்ட மவுனம் நிலவியது. கல்வெர்ட்டன் ஸ்மித் அமைதியாக நின்று ரசித்துக் கொண்டிருப்பார் என்று நினைத்தேன்.

“இதற்கு என்ன அர்த்தம்?” என்று ஒரு வழியாக அவர் உலர்ந்த கரகரக் குரலில் பேசுவது கேட்டது.

“ஒரு சம்பவத்தை வெற்றிகரமாக நடித்துக் காட்டுவதற்கு அதில் ஒரு பகுதியாக நாம் மாறி விட வேண்டும்.” என்றார் ஹோல்ம்ஸ்.

“மூன்று நாட்களாக நான் அன்னம் தண்ணீர் எதுவும் சாப்பிடவில்லை என்று நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன் நீங்கள் எனக்கு நீர் எடுத்துக் கொடுக்கும் வரை. ஆனால் இந்தப் புகையிலைதான் என்னால் சகிக்க முடியவில்லை. ஆஹ், இங்கு கொஞ்சம் சிகரெட்டுகள் இருக்கின்றன.” தீக்குச்சி பற்ற வைக்கும் சத்தம் கேட்டது. “இப்பொழுது மிக நன்றாக இருக்கிறது. ஹலோ, ஹலோ, நான் எனது நண்பனின் காலடிச் சத்தம் கேட்கிறேனோ?”

வெளியில் காலடிச் சத்தம் கேட்டது. கதவு திறக்கப்பட்டது. அங்கே காவல்துறை மேலாளர் மார்ட்டன் நுழைந்தார்.

“எல்லாம் சரியாக இருக்கிறது, இதோ உங்களது மனிதர்” என்றார் ஹோல்ம்ஸ்.

அந்த அதிகாரி எப்பொழுதும் போல் கொடுக்க வேண்டிய எச்சரிக்கைகளைக் கொடுத்தபடி இருந்தார்.

“விக்டர் சாவேஜைக் கொன்ற குற்றத்திற்காக நான் உங்களைக் கைது செய்கிறேன்.” என்று முடித்தார்.

“ஷெர்லாக் ஹோல்ம்ஸைக் கொலை செய்ய முயற்சி செய்ததையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.” என்று எனது நண்பர் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“தேவை இல்லாத தொல்லைகள் எதுவும் கொடுக்காமல் அவரே அடுப்பைப் பற்ற வைத்துச் சைகை கொடுத்து விட்டார், மேலாளர் அவர்களே. கைதியின் வலது கைப் பையினுள் ஒரு சிறிய பெட்டி இருக்கிறது. அதையும் தயவு செய்து எடுத்து விடுங்கள். நன்றி. நானாய் இருந்தால் அதை மிகவும் கவனமாய்க் கையாள்வேன். அதை இங்கே வையுங்கள். வழக்கில் இது மிகவும் உபயோகமாய் இருக்கும்”

அதன் பின் வேகமாக சிறு கைகலப்பு கேட்டது. அதன் பின் இரும்புகள் உராயும் ஓசையும் வலியினால் ஏற்பட்ட முனகலும் கேட்டது.

“நீங்களே உங்களைப் புண் படுத்திக் கொள்ளாதீர்கள்.” என்றார் மேலாளர். “அசையாமல் நில்லுங்கள்” என்றார். அதன் பின் கைவிலங்கு சரியாகப் பூட்டப்படும் ஓசை கேட்டது.

“இது ஒரு பெரிய சூழ்ச்சி” என்று ஒரு கோபமான கூச்சல் கேட்டது. “நீதான் இதனால் பாதிக்கப்படுவாய், ஹோல்ம்ஸ். எனக்கு ஒன்றும் இல்லை. இவர்தான் நோய்வாய்ப் பட்டார். என்னை அழைத்து வரச் சொன்னார். அவரை நினைத்துப் பரிதாபப்பட்டதால்தான் நான் இங்கு வந்தேன். ஆனால் இப்பொழுது அவர் நடிக்கலாம். அதில் சந்தேகம் இல்லை. நான் சொன்னதாகப் பல கட்டுக்கதைகள் புனையலாம் அவர் தன் மனதில் தோன்றியதை எல்லாம் வைத்து. நீங்கள் உங்கள் விருப்பப்படி பொய் பேசலாம், ஹோல்ம்ஸ். எனது பேச்சும் உங்கள் பேச்சு போலவேதான் இருக்கப் போகிறது.”

“கடவுளே!” என்று கத்தினார் ஹோல்ம்ஸ். “நான் அவர் இருப்பதையே மறந்து விட்டேன். நண்பா, வாட்சன். உன்னிடம் ஆயிரம் முறை நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீ இருப்பதையே நான் மறந்து விட்டேன் என்பதற்காக. உன்னை திரு.கல்வெர்ட்டனுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் இன்று சாயந்திரம்தான் அவரை நீங்கள் சந்தித்தீர்கள். வாடகைக்கார் கீழே இன்னும் இருக்கிறதா? நான் ஆடை உடுத்தித் தயார் ஆனவுடன் வருகிறேன். காவல் நிலையத்தில் எனது உதவி தேவைப்படலாம்.

“தேவாமிர்தமாக இருக்கிறது.” என்று சொல்லிக் கொண்டே இடைவெளி கிடைத்த நேரங்களில் சிவப்பு மதுவும் சில பிஸ்கட்டுக்களும் சாப்பிட்டார். “இருந்தாலும், எனது பழக்கவழக்கங்களும் ஒழுங்கற்றது என்று உங்களுக்கே தெரியும். இப்படி ஒரு சாதனை செய்வது எனக்கு ஒன்றும் பெரிதல்ல. மற்ற ஆண்களுக்கு வேண்டுமானால் பெரிய விஷயமாக இருக்கலாம். திருமதி.ஹட்சனுக்கு என் நிலை பற்றிய சந்தேகம் சிறிதும் ஏற்படக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாய் இருந்தேன். ஏனெனில் அவர்கள்தான் அதை உங்களிடம் தெரிவிக்க வேண்டும். நீங்கள் பின் அவருக்குத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் அதை அவமானமாய்க் கருத மாட்டீர்கள், வாட்சன். உங்களுக்குப் பல திறமைகள் இருந்தாலும் நடித்து ஏமாற்றுவதென்பது உங்களுக்கு சுத்தமாக வராது. ஒருவேளை நீங்கள் எனது மர்மத்தை அவரிடம் உடைத்திருந்தால் அவர் இங்கு உடனே வர வேண்டியதன் அவசியத்தை நீங்கள் அவருக்கு உணர்த்தி இருக்கவே முடியாது. அதுதான் இந்த நாடகத்திலேயே முக்கியமான கட்டம். அவருக்குள் இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியால் அவர் நிச்சயம் தனது கைங்கர்யத்தைக் காண இங்கு வருவார் என்று நான் உறுதியாய் நம்பினேன்.”

“ஆனால் உங்களது அந்த பேயறைந்தது போல் இருந்த முகம், எப்படி–”

“மூன்று நாட்கள் பட்டினி இருந்தால் ஒரு மனிதனின் முக அழகு கூடி விடாது, திரு.வாட்ஸன். அதன் பின், ஒரு பஞ்சு இருந்தால் போதும் அதையும் குணப்படுத்தி விடலாம். வாசலின் களிம்பை நெற்றியில் தடவி, பெல்லடோன்னாவைக் கண்களில் விட்டுச் சிறிது சிவப்பு வர்ணத்தைக் கன்ன எலும்புகளில் தடவித் தேன் மெழுகை உதடுகளில் அப்பிப் பிறர் நம்பும்படியாக ஒரு தோற்றத்தை உண்டு பண்ண முடியும். ஒரு நோயாளி போல் எப்படி நடிப்பதென்பது ஒரு கலை. அந்தப் பொருளில் ஒரு பெரிய கட்டுரை எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. எப்பொழுதாவது அரை கிரீட நாணயங்கள், சிப்பிகள் அல்லது எதாவது ஒரு சம்பந்தமில்லாத பொருள் பற்றிய ஒரு சிறு பேச்சுப் பேசினால் பைத்தியக்காரன் போல் நிச்சயம் தோன்றி விடும்”

“ஆனால் என்னை நீங்கள் ஏன் அருகிலேயே வரவிடவில்லை. உண்மையில் நோய்த் தொற்று எதுவுமே இல்லையே”

“நன்றாகக் கேளுங்கள், வாட்சன்? உங்களது மருத்துவத் திறமையில் எனக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை என்று நீங்கள் நினைத்து விட்டீர்களா? இறந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன் எவ்வளவு நோஞ்சானாக இருந்தாலும் அவனது நாடியும் உடல் வெப்பமும் ஏற்ற இறக்கமாக இல்லை என்றால் ஒரு மருத்துவராக உங்கள் பார்வையில் இருந்து தப்ப முடியும் என்று நான் எப்படித்தான் நினைக்க முடியும். நான்கு அடி தூரத்தில் இருந்து உங்களை நான் ஏமாற்றி விட முடியும். அதில் நான் தோற்று விட்டால், திரு. ஸ்மித்தை எப்படி நான் இங்கு என் கைக்கெட்டும் தூரத்திற்குள் அழைத்து வந்திருக்க முடியும். இல்லை, வாட்சன், நானாய் இருந்தால் நிச்சயம் அந்த பெட்டியைத் தொட்டிருக்கவே மாட்டேன். நீங்களே பாருங்கள். அந்தப் பெட்டியின் இரு புறமும் கூர்மையான ஊசிகள் ஒரு பாம்பின் பற்கள் போன்று நீண்டு கொண்டு வருகின்றன அதன் மூடியைத் திறக்கும் போது. விக்டர் சாவேஜூம் இதே போன்ற ஒரு தந்திரத்தால்தான் இந்த அரக்கன் கையால் இறந்தான் என்று என்னால் உறுதி படக் கூற முடியும். ஆனால் எனக்கு வந்த பொருள் சிறிது வித்தியாசமானது. பொதுவாகவே எனக்கு வரும் தபால்களை நான் எப்பொழுதும் எச்சரிக்கையாகவே கையாள்வேன். எனக்கு ஒன்று தெளிவாகப் புரிந்து விட்டது. அவரது நோக்கத்தில் வெற்றி அடைந்து விட்டார் என்று எடுத்துக் கொண்டோமானால் அதை அவர் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டும். ஒரு தேர்ந்த நடிகனின் பரிபூரண திறமைகளை வைத்து இந்த நாடகத்தை நான் நடித்து முடித்தேன். மிக்க நன்றி, வாட்சன். இந்த மேலங்கியை அணிய கொஞ்சம் உதவி செய்யுங்களேன். நாம் காவல் நிலையத்தில் வேலையை முடித்த பின் சிம்ப்ஸனில் கொஞ்சம் அருமையான சாப்பாடு சாப்பிட்டால் ஒன்றும் குறைந்து விடாது அல்லவா!”

அருஞ்சொற்கள்

  • கீழ்க்கழுத்துத் தமனி – Subclavian artery
  • மின்கலம் – battery
  • கணப்படுப்பு – fireplace
  • சுருள் வில் – spring
  • பெல்லடோன்னா – medicine to dilate eyes
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *