ஆறாத சினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: September 10, 2019
பார்வையிட்டோர்: 41,307 
 

என்ன கேசு ஏட்டையா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் ஆய்வாளர் ஆறுமுகம்.

ஐயா, ஒரு வயதான பொம்பளைகிட்ட பணம் திருட முயல, அவங்க கீழே விழுந்து மக்கள் எல்லாம் சேர்ந்து அட்மிட் செய்துட்டாங்க.

இவனை அள்ளிகிட்டு வந்து விசாரிச்சா 2000 ரூபா நோட்டா நிறைய இருக்கு.

பாவம் அந்தம்மா! பேச்சு மூச்சு இல்லாத கிடக்க, மக்கள் 108 கூப்பிட்டு மருத்துவமனைல சேர்த்திருக்காங்க! பாவமா இருந்துச்சு, பரிதாபம் காட்டினார் ஏட்டு.

நிறைய 2000 ரூபாய் நோட்டை பார்த்ததும் ஆய்வாளர் நமட்டு சிரிப்பு சிரிக்க, ஏட்டு கண கச்சிதமாக புரிந்து கொண்டார்.

ஏண்டா இந்த பொழப்பு, கிழவியை தள்ளி, பணம் பறிச்சு, ஏட்டயா, அவனை இரண்டு அறை விட்டு அனுப்பி வைங்க, இவனுக்கெல்லாம் தெண்டமா நாம செலவு பண்ணக்கூடாது.

போடா! அந்த கிழவிக்கு ஏதாவது ஆச்சி மவனே அவ்ளவுதான் உள்ளே போய் களிதான்! உனக்கு, எனக்கூறி, பணம் தந்த போதையில் அட்ரஸ் கூட வாங்காமல் அனுப்பி வைத்தார் ஏட்டு!

மனசு கேட்கல, ஓர் எட்டு அந்த அம்மாவ பார்க்கனும் போல இருக்குது, என நினைச்சி மருத்துவமனை தேடிப் போனான் சின்னய்யா.
மருத்துவமனை முழுவதும் தேடி கட்டிலில், அந்த அம்மாவைப் பார்த்தான், கண்மூடி படுத்திருந்தாள். நர்ஸிடம் விசாரித்தான், ரொம்ப வீக்கா இருக்காங்க, சரியாக இரண்டு நாள் ஆகும் என்றார்.

இவனுக்கோ முதல் முறையாக காவல் நிலையம், சென்றது பயமும், பதட்டமும் பற்றிக்கொண்டது. ஊருக்கு போய்விட்டு வந்து பார்ப்போம் என நினைத்தான்.

பேரூந்து நிலையம் விரைந்தான்.

ஏறினான் இருக்கை தேடி அமர்ந்தான். நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.

கோமல் கிராமம்.

பெயர்க்கேற்ற அழகு குடி கொண்ட நீரோடு குளம், நீர் ஓடும் ஆறு, நேர்த்தியான சாலைகள் வசதி, ஆங்காங்கே பம்ப் செட்டுகள், பச்சைப் போர்வை போர்த்திய பூமி போல் வயல்கள் இயற்கை போற்றும் உண்ணத கிராமம், அழகான உயர்நிலைப்பள்ளி, அக்ரஹாரம் தெருவில் இருக்கும் இரண்டு கட்டு ஓட்டு வீடு, விஸ்வநாத அய்யர் வீடு. ஏக்கர் கணக்கில் நிலமும், மாடுகளும், டிராக்டர் மற்றும் காரும் உண்டு. வீட்டில் விஸ்வநாதரின் அம்மா 70 வயது பாட்டியும், மகன் வயத்து பெயர்த்தியும், விஸ்வநாதரின் மகள் மட்டுமே ஜீவனம்.

அந்த அம்மாவின் மகனும் மருமகளும் ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி, ஓட்டுனரோடு அகால மரணமடைந்துவிட்டனர். அது முதல் பாட்டி, மற்றும் தற்பொழுது கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் பெயர்த்தி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல்.

சின்னய்யா! இங்க வா வந்து சாப்பிடு! அப்புறமா காயத்ரியை கொண்டுபோய் காலேஜ்ல விடு. என பாட்டிக்குரல் அதட்டியது.

சின்னய்யா, கட்டிளங்காளை. தாயில்லா பிள்ளை, 30 வயதாகியும் திருமண எண்ணமே இல்லாமல், இவர்கள் வீட்டு பிள்ளை மாதிரி கல்லூரி முடித்து, விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

இவனின் அப்பா இந்த வீட்டு கார் ஓட்டுனராக பணிபுரிந்து விபத்தில் மரணமடைந்த பின் யாருமில்லை இவனுக்கு, ஆகையால் வீட்டிலேயே தங்கி வேலைக்கொடுத்து பிள்ளை போல் பார்த்துக்கொண்டனர்.

வடக்குத் தெருவில் வீடு இருக்கிறது. ஆனால், இவர்களுக்கு துணையாக இங்கேயே திண்ணையிலேயே படுத்துக்கொள்வான்.

வயல் வேலை, டிராக்டர், கார் ஓட்டுவது, கல்லூரி கொண்டு விட்டு அழைத்து வருவது, மாடுகளை பராமரிப்பது இப்படி எல்லா வேலையும் அவனே பார்ப்பதால் கிராமமே அவனை அந்த வீட்டின் பிள்ளையாக பார்த்து போற்றியது.

காயத்ரி.. வயது 20 க்கே உரித்தான துரு துரு, கடவுள் பக்தி, அமைதியான பேச்சு படிப்பில் படு சுட்டி, நீளமான கூந்தல் இருந்தாலே முகம் அழகாகதானே இருக்கும், அதற்கு சற்றும் குறைவில்லாத முகம். மொத்தத்தில் தாவணி அணிந்த தங்கப்பதுமை. அழகின் உச்சம்.
அனாதியான இவளுக்கு ஆதரவாய் இருவர் மட்டுமே. தான் இறக்கும் முன்னே இவளுக்கு திருமணம் செய்து முடிக்கவேண்டும் என்ற ஒரே கவலைதான் பாட்டிக்கு.

இப்படி அன்பாகவும், அழகாகவும், ஆதரவாகவும் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, ஊரில் திருவிழா காலம் வந்தது. இவர்களுக்கோ போராத காலம்.

ஒரு நாள்…

அம்மா! நான் கார் எடுத்துக்கிட்டு பாப்பாவை காலேஜ்ல இறக்கிவிட்டு விட்டு தஞ்சாவூர் வரை போய் காரை சர்வீஸ் பண்ணி எடுத்து வருகிறேன் என்றான் சின்னய்யா! சரிப்பா! பார்த்து ஜாக்கிரதையா போய் வி;ட்டு வா என்றாள் பாட்டி.

சரிம்மா என்றான். பணம் வாங்கி பத்திரப்படுத்தினான், காயத்ரியை அழைத்துக்கொண்டு சென்றான் இதுவே கடைசி கல்லூரி பயணம் என அறியாமல்.

மாலை 5.30 மணி

காயத்ரி கல்லூரி விட்டு திரும்ப வீடு வந்தாள். பஸ்ஸில் வந்து இறங்கி நடந்தே வீடு வருவதால் சோம்பலாக இருந்தாள், கதவை தாழிட்டுக்கொண்டாள், பாட்டி அடுப்படியில் இருந்தாள்.

30 நிமிடங்கள் ஓடியது, வெளியே வரலையே? தூங்கிட்டாளா? என்னன்னு தெரியாம பாட்டி கதவை தட்டினாள்.. சப்தம் இல்லை. விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது.

காயத்ரி! காயத்ரி எழுந்திரு! தூங்கிட்டியா? சாப்பிட வாம்மா! கதவை திறம்மா! நிசப்தம்!?

முதல் முறையாக பயத்தை கொடுத்தது, பாட்டிக்கு. வாசலிலே கார் சத்தம் கேட்டு ஓடி சின்னய்யா வா வா! இங்க வா, கதவு சாத்திருக்கு பேசவே மாட்டேங்கறா! நீ தட்டுடா!

காயத்ரி.. காயத்ரி.. கதவை திற!

பயம் அடி வயிறை பிசைந்தது! இருவருக்கும்!! வெளியே வானவேடிக்கை சப்தம் கோயில் திருவிழா கோலாகலம், பாட்டு சப்தம், பக்கத்து வீட்டில் நிறைய விருந்தாளிகள் வரவு என அமர்களப் பட்டது ஊர்.

இவர்கள் வீடோ நிசப்தம். சின்னய்யா கதவை உடைச்சுடு, பாரு என்றாள். எட்டி உதைத்து திறக்க முயன்றான். அந்த காலத்து கதவு இவனோடு மல்லுகட்டியது. கடப்பாறை கொண்டு வந்து நெம்பினான் கொஞ்சம் விலகியது திறந்தான் கதவை, அதிர்ந்தான்..

அந்தரத்தில் துப்பட்டாவில் மூச்சு அற்று தொங்கிகொண்டிருந்தாள் காயத்ரி.

அம்மா! அம்மா!..
என்னாச்சு உனக்கு! பைத்தியமே..

இதெல்லாம் உனக்கு யார் சொல்லிக்கொடுத்தா? ஐயோ ஐயோ என ஓலமிட்டான், பாட்டி பதறியடித்து வந்து கதறினாள், என்னடா இது? ஐயோ என அழுதாள்.

அக்கம் பக்கம் வீட்டில் யாரும் வீட்டில் இல்லாதலால் யாரும் வரவில்லை, கிராமமே திருவிழாவால் ஐக்கியமானது பதினைந்து நிமிடம் கரைந்து.
சின்னய்யா மெதுவாக தேறி அம்மா! தூக்கிட்டு இறந்ததால நமக்கும் அசிங்கம்மா! போலிஸ் வரும் தேவையில்லாததெல்லாம் கேட்பாங்க. அதனால் கீழே இறக்கிடலாம். என்ன சொல்றீங்க? அப்டின்னு தெளிவாக யோசித்தவனாய் கேட்டான்.

ஐயோ! என்ன பன்னுவேன்? என் வாழ்க்கையே இவளுக்காகத்தானே! இப்படி ஒன்றும் சொல்லாம போய்ட்டாளே! இறக்கி வைத்திட சம்மதித்தாள்.

இறக்கி வைத்து சம்பிரதாயப்படி சடங்குகள் நடந்தது.

மறுநாள் காலை..

கல்லூரி மாணவிகள் கூட்டமாய் வந்தனர். என்ன சேதி என அறியாமல் அழுது கலைந்தனர், உறவினர்.

கூட்டம் இல்லை, சொற்பானவர்கள் வந்து போயின, கிராமத்து மக்கள் திருவிழாவினால் வந்து போய்க்கொண்டு இருந்தனர். கோயில் விசேஷமானதால் சீக்கிரம் எடுக்கவேண்டி வலியறுத்தினர்.

அக்ரஹாரத்து பெரிசுகள் இரண்டே பேர் அமர்ந்து சந்தேகமாய் இருக்கேன்னு தனக்கே உரிய சந்தேகத்தை விதைத்துவிட்டுச் சென்றனர்.
சின்னய்யாவை கொள்ளி போடச் சொன்னாள் பாட்டி. அப்பா, அம்மாவிற்கு நான்தான் போட்டேன், இப்பொழுது மகளுக்குமா? என்று வருந்தி கொள்ளி இட்டான்! கண்களில் தீவட்டி போல காட்சியளித்தது ஆனால் உள்ளுக்குள்ளே வெந்து போயிருந்தான்.

காரியங்களை 9ம் நாள் பன்னலாம் என சொல்லிவிட்டாள் பாட்டி, ஆகையால் வீடே சுடுகாடு போல் காட்சியளித்தது. மூன்றாம் நாள், திண்ணையில் அமர்ந்திருந்தான்.

இடது பக்கத்து வீட்டில் உள்ள 12 வயது சிறுவன் ஒரு அலைபேசி எடுத்துக்கொண்டு வந்தான்.

அண்ணே! இதப் பாருங்க! இதிலே கேமரா வேலை செய்யல, என்னன்னு பாருங்கன்னா! என்றான்.

அப்புறமா பார்க்கிறேன். இப்போ வேலை இருக்குடான்னு சொல்லி அனுப்பினான். காரணம் என்னவாயிருக்கும்? காயத்ரியின் செல்லை தேடினான், நிறைய கால்கள் இருந்ததைப் பார்த்தான், புதிய நம்பர் இருந்தது, பின்னர் விசாரிப்போம் என நினைத்தான்.

அதற்குள் பேட்டரி வீக்காக இருக்க சார்ஜ் போட்டுவிட்டு, வேறு கடிதம் ஏதாவது இருக்கா என்று பார்த்தான், இல்லை.

எவ்வளவு விளையாட்டான பிள்ளை இவ்வளவு பெரிய சங்கதி செஞ்சிருக்குன்னா அது ஏதோ பெரிய விஷயமாகத்தான் இருக்கனும்னு தீர்மானித்தான். பாட்டியும் இதனையே நினைப்பதாக கூறினாள்.

நாளை கல்லூரி சென்று விசாரிப்போம் என நினைத்தான்.

மறுநாள்,

அம்மா, நான் காலேஜ் வரை போயிட்டு, என்ன ஏதுனு விசாரிச்சிட்டு வரேன்மா என்று கூறி புறப்பட்டான். கல்லூரி சென்றான், விசாரித்தான் யாரோ ஒருவரோடு காலை பேசிக்கொண்டு இருந்ததாக சொன்னார்கள், ஆனால் அவர் யார் என்று யாருக்கம் தெரியவில்லை எனக் கூறினர். ஒன்றும் உருப்படியாக விளங்கவில்லை. வீடு வந்தான் சோர்வாக.

அண்ணே! இந்த செல்லிலே கேமரா வேல செய்யல பாரண்ணே! என்று திரும்ப வந்தான் பக்கத்து வீட்டுப் பையன்.

வேண்டா வெறுப்பாக வாங்கினான், பார்த்தான். சரிசெய்து கொடுத்தான், அவனை ஒரு போட்டா எடுத்தான், அவனிடம் காண்பித்தான், சிறுவனுக்கோ சந்தோஷம். அப்படியே கேலரி போனான், அதில் சில போட்டோக்கள், பார்த்தான் ஒன்று வித்தியாசமாக இருந்தது. அதையே உற்று பார்த்தான் அது ஏதோ கீழிருந்து மேல் நோக்கி எடுக்கப்பட்டிருந்தது.

இது என்னடா? யார்டா எடுத்தா?னு கேட்டான். இதுவா நான்தான் எடுத்தேன் எங்க வூட்டிலிருந்து அந்த வீட்டு மாடிலே ஒரு அங்கிள் நின்னுகிட்டு இருந்தாங்க, அவங்களை எடுத்தேன். அவங்க குச்சி மாதிரி வச்சு போட்டோ எடுத்துகிட்டு இருந்தாங்க! அப்படினு சொல்லி விட்டு ஓடிப்போனான்.

இவனுக்கு ஏதோ பொறி தட்டியது, இவன் யோசனை பலமானது, குழப்பமானான்;. ஏதோதோ எண்ணங்கள் வந்தது.

சட்டென ஏதோ தோன உள்ளே சென்றான், காயத்ரி செல்லை எடுத்தான், பார்த்தான், புது நம்பர் இருந்தது. அப்படியே வீடியோ ஆல்பம் சென்றான் இயக்கினான்.

ஐயோ! சின்னம்மா! என்று பதறி கை கால் நடுங்க, அவனே பூமிக்குள்ளே போவதாய் உணர்ந்தான்.

அதில் அரை நிர்வாணமாய் காயத்ரி குளிக்கின்ற காட்சி இவனை நிர்மூலமாக்கியது. இந்த வீட்டு முற்றம் கிணற்றை ஒட்டி குளியல் அறை நான்கு பக்கம் சுவர் மட்டும், மேலே இருந்தது எடுக்கப் பட்டதை தெரிந்துகொண்டான். ஏதோ விபரீதமாக நடந்துள்ளது என யூகித்தான்.
செல்லை ஆப் செய்தான். பக்கத்து வீட்டு பையனிடம் செல்லை வாங்கி அவன் முகத்தை தேடினான், முகமே தெரியவில்லை, Selfi stick பயன்படுத்திருக்கான் என்று புரிந்து கொண்டான். அவனைப்பற்றி விசாரிக்கலானான். இறுதியில் அவன் திருவிழாவிற்கு வந்த பக்கத்து வீட்டு மாப்பிள்ளை முறை, சென்னையில் இருந்து வந்தருக்கும் எக்ஸ் MLA வின் மகன் டாக்டருக்கு படித்து முடித்துள்ளான் எனத் தெரிந்துக்கொண்டான்.

அவன் பெயர் மற்றும் செல் நம்பர் நிறைய வற்புறுத்தலுக்கு பிறகு கிடைத்தது. அந்த நம்பரை காயத்ரி செல்லில் தேடினான், அன்று காலை முதல் மதியம் வரை நிறைய தடைவ பேசியதை கண்டான். வீடியோ ஆல்பம் அவன் அனுப்பியது தெரிய வந்தது.

இருவருக்கும் சாப்பாடு தூரமாகிப்போனது. காயத்ரி நினைப்பே பாட்டியை வாட்டியது. இவனுக்கோ அவளுக்கு நேர்ந்ததை நினைத்துப் புழுங்கினான், ஆற்ற முடியாத கோபமாய், அவனின் முகம் அறிய வேண்டும், அவனை முடிக்க வேண்டும் என எண்ணம் மேலோங்க அம்மாவிடமும் ஏதும் கூறாமல் மனதுக்குள் புழுங்கினான்.

அம்மா! நாம சென்னைக்கு போகலாம்மா? அங்க யாருடா இருக்கா? உனக்கும் இல்ல, எனக்கும் இல்ல, அதோட இங்க காரியம் எல்லாம் இருக்குடா!

இதெல்லாம் குறையில்லாம பண்ணனும்! அப்புறமா போய் நம்ம சொந்தாகார வக்கீல் சென்னைல இருக்கார், அவர் கிட்ட போய் இந்த சொத்தையெல்லாம் உனக்கும், பாதியை இந்த பெருமாள் கோயிலுக்கும் உயில் எழுதிடலாம்னு இருக்கேன், நீ தான்டா எனக்கும் கொள்ளி போடனும்! உனக்கு வாய்த்த வரம் அப்படி!

நீயாவது காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கோ! இந்த வீட்ல ஜாகை இருந்துக்கோ, என் காலம் முடியற வரை என்னைப் பார்த்துப்பியானு கேட்டார். அவன் காதில் ஏதும் விழவில்லை, அவன் மனம் முழுவதும் சென்னை செல்வதிலேயே இருந்தது.

டேய்! உன்கிட்டத்தான் பேசறேன், என்ன சொல்ற என அதட்டினாள்.

அம்மா சொத்தெல்லாம் வேண்டாம், நீங்க எல்லாத்தையுமே கோயிலுக்கு எழுதிடுங்கம்மா!

எல்லாத்துக்கும் நான் கொள்ளி போட்டுத்தான் இந்த சொத்தை அடையனும்னா அந்த சொத்தக்கு மரியாதையே இல்லம்மா, நான் உழைச்சேன், நீங்க என்னை பார்த்துக்கிட்டிங்க! அது போதும்மா, நான் உங்க கூடவே இருப்பதே பெரிய சந்தோஷம், என கண்ணீர் விட்டான்.

போடா! எனக்கு அப்புறம் உனக்காக யாரு இருக்கா? அதனால் சொல்றதை கேட்டுக்கோ, நிஜமா வேண்டாம்மா? இந்த சொத்து சுகம்லாம்.
பாப்பாவை என்னால காப்பாற்ற முடியலையேனு நினைக்கும் போதே எனக்கு பதட்டமா இருக்கும்மா! என்று விசுவாசம் காட்டினான்.
மளமளவென நாட்கள் ஓடியது.

பத்தாம் நாள், காரியங்கள் முடிந்தன.

அம்மா நாளை டிக்கெட் போடறேன்மா! சென்னைக்கு என்றான் சின்னய்யா.

சரி, என்றாள், பாட்டி.

சென்னை. வக்கீல் பாட்டியின் மாப்பிள்ளை முறை வேண்டும், ரொம்ப மரியாதையானவர். நடந்ததையெல்லாம் கேட்டறிந்து வருந்தப்பட்டார். உயில் எழுத அசல் வீட்டுப்பத்திரம் எல்லாம் எங்கே என்றார். அதை வீட்டிலேயே வைத்து விட்டு வந்தது தெரியவந்தது, சரி விடுங்க கொஞ்ச நாள் தங்கிவிட்டு பிறகு போய் வந்து உயில் எழுதலாம் என்றார், அது வரை இங்கே தங்கிச்செல்லும் படி வற்புறுத்தினார்.

நீ கூட அந்த ரூம்ல தங்கிக்க என்றார், சின்னய்யாவைப் பார்த்து. சரி ஐயா, என்றான்.

ஐயா, எனக்கு ஒரு ஒத்தாசை செய்யனும் என்றான்.

என்னப்பா! என்றார் வக்கீல். இந்த போன் நம்பர் யாருதுனு கொஞ்சம்.. அட்ரஸ் வேணும்…

நீங்க முயன்றா கிடைக்கும். ஐயா தயவு பன்னனும் என்றான். ஏன் இதை யாரு குடுத்தா?

ஐயா, கிராமத்துக்கு வந்தாரு..

பேரு தெரியல… அதான் அட்ரஸ் கிடைச்சா போய் பார்க்கலாம்னு.. சரி, டிரை பன்றேன், சொல்லி விட்டு கிளம்பினார்.

அன்று மாலையே, வக்கீல் கூப்பிட்டுக்கொண்டே வந்தார். சின்னய்யா! இங்க வாங்க! இந்த நம்பர் யாருன்னு சொன்னிங்க! இவர் பழைய MLA பையன் நம்பர். பக்கத்து தெருவிலதான் வீடு.. ஏதும் பிரச்சனையில்லையே! என்று கூறி அட்ரஸ் எழுதிய காகிதத்தை அவனிடம் கொடுத்தார்.
நிம்மதியான சுவாசம் எடுத்தான். மறு நாளில் இருந்து காலை வெளியே போவான் வக்கீல் கோர்ட் போனதும் திரும்ப வருவான் இப்படியாக நாட்கள் நகர்ந்தன.

என்னப்பா! அந்த ஆளைப் பார்த்தியா? பேசினியா? என்று கேட்டார்.

பார்த்து விட்டேன், பேச முடியல என்றான். ஐயா நாளை காலை நாங்கள் கிளம்பி போய் வருகிறோம், என்றான். சரி போய்ட்டு அடுத்த வாரம் வந்துவிடுங்கள். நானும் டில்லி வரை செல்லவேண்டியுள்ளது. நாளை மறுநாள் வருவேன் என்றார்.

மறுநாள் காலை 5 மணி.

தயாரானார்கள், கிளம்பி சென்றார்கள், சின்னய்யா அடுத்த தெருவுக்கு அழைத்துச் சென்றான். யாருக்காகவோ காத்து இருந்தான், அம்மா! வாங்க போகலாம்! என்று யாரையோ பின் தொடர்ந்து நடந்தான். அவனைப் பார்த்து பின் தொடர்ந்து சென்றான், நிறுத்தினான், நீங்க இன்னார்தானே என்றான்?

ஆமாம் என்றான், கையிலிருந்த சிறு கத்தியை வைத்து கழுத்தில் கோடு போல் இழுத்தான், பாவத்திற்கு சம்பளம் மரணம், அது தானா நடக்கட்டும்னு காத்திட்டு இருக்க, நான் அந்த வீட்டு அடிமை இல்லடா! அவங்க வீட்டு பிள்ளைடா! என்று ஆக்ரோஷமாக சொல்லிவிட்டு, பக்கத்தில் ஏற்கனவே திறந்து வைத்த ஆழ் பாதாள சாக்கடையில் தள்ளி விட்டு சட்டென மூடினான்.

சுற்றும் யாரும் இல்லை, பாட்டி என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்தது.

வாங்கம்மா! வாங்க என இழுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக சென்றான், அங்கே கூட்டம் உள்ள பகுதியில் செல்லும்போது பாட்டி மயங்கி விழ இவன் முன்னே சென்று கொண்டிருந்தான்.

இதைப் பார்த்;த அங்கு நடைபயிற்சி செய்த நபர்கள் இவனிடம் இருந்த பாட்டியின் கை பையை பார்த்ததும் இவனை திருடன் என பிடித்து போலிஸிடம் ஒப்படைத்தனர். பேரூந்தில் தூக்கம் கலைந்தவனாய் முழித்துப்பார்த்தான், மயிலாடுதுறை வந்திருந்தது..

அவனை பயம் கல்வி இருந்தது. கோமலுக்கு பஸ் பிடித்து சென்றான். யாரைப் பாhத்தாலும் அவனையே பார்ப்பதாக தோன்றியது. வீட்டிற்க்கு சென்றான். மாடுகளை பார்த்தான், தீவனங்கள் தீர்ந்து போயிருந்தன. தீவனமிட்டான், தொட்டியில் தண்ணீர் ஏற்றினான். கதவை திறந்து உள்ளே சென்று அம்மா சொல்லிருந்தபடி பத்திரங்களை எடுத்துக்கொண்டான், கிளம்பினான் மறுபடியும் சென்னைக்கு.

மருத்துவமனை சென்றான். அம்மாவை தேடிப் பார்த்தான். நினைவு வந்தவளாய் அமர்ந்து இருந்தார்.

இவனைக் கண்டதும் கதறி அழுதாள். என்ன காரியம் செஞ்சிருக்க? ஏன் இப்படி பண்ண? என்று கேட்டாள்.

பாட்டி காரணமாகத்தான. செஞ்சேன். வாங்க போகலாம், வக்கீல் வீட்டுக்கு போய்ட்டு, பேப்பர் எல்லாம் கொடுத்து விட்டு ஊருக்கு போகலாம் என்றான். இருவரும் வக்கீல் விட்டிற்கு சென்று சொத்துக்களை கோவிலுக்கும் மீதியை சின்னய்யாவிற்குமாய் பிரித்து எழுதி முடித்து அனைத்தையும் பாட்டியிடம் கூறினான்.

உன் வாழ்க்கையை கெடுத்துக்கிட்டேயே! என்னையும் தனியாளா கஷ்டப்படற மாதிரி செஞ்சுட்டியேடா? என்கிட்ட சொல்லிருக்கலாமே என புலம்பினாள்.

அம்மா! எனக்கு உங்க இரண்டு பேரை விட பெரியது ஒன்றுமில்லம்மா! அதுவும் நம்ம சின்னம்மா காயத்ரி, ஒன்றும் தெரியாத அப்பாவி! புள்ளைக்கு இந்த மாதிரி ஒருத்தன் செஞ்சது என்னால் சகிச்சிக்க முடியலம்மா!

நீங்க வருத்தப்படாதீங்க! அவ்வளவு சீக்கிரம் என்னை நெருங்க முடியாது என பயத்துடன் அம்மாவை தேற்றினான்.
சென்னையில், காவல் நிலையம்.

என்ன ஏட்டையா? ஒரே கூட்டமா இருக்கு? என்ன கேசு? ன்னு கேட்டுக்கிட்டே வந்தார். நிலைய ஆய்வாளர் ஆறுமுகம்.

அய்யா!

Ex.MLA வின் பையனை இரண்டு நாளாக காணலையாம்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *