படித்துக்கொண்டே வந்த தினேஷ் மோதிக்கொண்டான் அவன் மீது.
“டேய் என்னடா இது? என் மேல வந்து மோதற அதுக்கு…”
“ம்ம்ம் சொல்வ டா… என்னதிது? காலேஜ்க்கு வர லட்சணமா இது? ஒரு ஃபார்மல் போட்டுட்டு வரமாட்ட?”
“ஃபார்மலா? அப்படின்னா?”, தினேஷ் சூடானான்.
“ஓகே.. ஓகே கோவிச்சுக்காதடா… இன்னைக்கு Freshers Day function தானே? ப்ரபோஸர்ஸ் யாரும் நம்மல கண்டுக்கமாட்டாங்கடா… அதோட இல்லாம நிறைய கேர்ள்ஸ் வருவாங்க.. அவங்க முன்னாடி போய் டை எல்லாம் கட்டிக்கிட்டு சேல்ஸ்மேன் மாதிரி நிக்க சொல்றியா? இப்படி ரகளையா ட்ரெஸ் பண்ணாதான் பொண்ணுங்களுக்கும் பிடிக்கும்.. அதான் இப்படி…. எப்புடி?”
“எதாவது பண்ணித்தொலை”, இடத்தை விட்டகன்றான் தினேஷ். விசிலடித்தபடியே புது மாணவர்களை வரவேற்க வாசல் நோக்கிச்சென்றான் சத்யா.
-o0O0o-
“ஹாய்! அம் மிருதுளா. நீங்க?”
“ஹாய்! அம் சத்யா.”
“முழு பேரே சத்யா தானா?”
“ஏன்?”
“இல்ல. சாதாரணமா பசங்களுக்கு தான் சத்யான்னு வெப்பாங்க அதான் கேட்டேன்”.
“ம்ம்ம்… சத்ய நாராயணி.. தான் முழு பேர்…”
“அப்பா… ரொம்ப பெரிசா இருக்கு. நான் சத்யான்னே கூப்பிடுறேன்”.
-o0O0o-
“அந்த ‘U’ யாருங்கறது தான் அங்க பிரச்சனை”.
“என்ன சொல்ற?”
“நீ பாக்கவே இல்லயா??”
“எத?”
“அப்போ நீ காலைல இருந்து அந்த ஸ்டேஜ தவிர வேற எதையுமே பாக்கலையா?”
“நீ என்ன பேசறன்னே புரியல”.
“நம்ம சீனியர் ஒருத்தன் காலைல இருந்து இங்கயும், அங்கயும் அலைஞ்சிட்டு இருக்கான். அவன் T-shirt-ல “All girls are my sisters except ‘U’ “-ன்னு போட்டிருக்கு. அதுல தான் அந்த ‘U’ யாருங்கறது தான் பிரச்சனைன்னு சொன்னேன். ஏன்னா நான் படிச்சா என்னையும், நீ படிச்சா உன்னையுமில்ல பாயிண்ட் பண்ணும்?”
“ரொம்ப முக்கியமா இப்ப?”
“அப்போ நீ அவன கவனிக்கலன்னு கவலப்படற”
“ச்சே ச்சே இல்ல….”
“அப்போ நீ அவன் உன்ன கவனிக்கனும்ன்னு ஆசைப்படற”
“கொஞ்ச நேரம் பேசாம இருக்கியா?”
-o0O0o-
இதுவரை குடும்பம் பிரிந்து வந்திராத நிலையும், தனிமையும் முதல் முதலாக சத்யா உணர்ந்தாள். ஹாஸ்டலில் அவளை விட்டு கிளம்பும்போது, இவள் கையில் விழுந்த அம்மாவின் கண்ணீர்த்துளி இன்னும் பிசுபிசுத்தது.
“ஏய்! என்ன சோகமா உட்கார்ந்திருக்க? அங்க பாரு, எங்க வீட்டுல என்ன கொண்டுவந்து இங்க தள்ளினத ஒரு விழாவா கொண்டாடிட்டு போறாங்க… ம்ம்ம்”
-o0O0o-
“ஹேய் இன்னைக்கு சீனியர்ஸ் நம்ம கிளாஸ்க்கு வராங்க”, கிட்டத்தட்ட குதித்தபடி ஓடிவந்தாள் மிருதுளா. பொறியியல் படிப்பிற்கென்று இந்த பிரபலமான கல்லூரியில் சேர்ந்து அதற்குள் நான்கு வாரங்கள் ஓடியிருந்தன. விடுதியின் சமையலும் பழகி போயிருந்தது. சீனியர்கள் பற்றி மட்டும் புரியாத புதிராயிருந்தது. காரணம் அவர்கள் யாரும் இவர்களைத் தேடி இதுவரை வரவில்லை. முதல்நாள் விழாவின் போது பார்த்தது. இன்று எதற்கு இங்கு வரவேண்டுமென நினைத்தாள்.
“அவனும் வராண்டி…”
“எவன்?”
“சீனியர மரியாதை இல்லாம பேசாத”.
“யாரு?”
“ம்ம்ம் Except ‘U’ பார்ட்டி…”
நிஜமாகவே மறந்திருந்தாள். ஆனால் வாழ் நாள் முழுவதும் அவனை மறக்காதபடி செய்வானென அவள் எதிர்ப்பார்க்கவில்லை….