காதலுக்கு நிபந்தனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 11,521 
 

எங்கள் நண்பர் கூட்டத்தில் மிகவும் அப்பாவித்தனமானவன் என்று நாங்கள் கருதியது விசுவைத் தான் . ஆனால் அவன் இப்படி ஒரு காரியத்தை செய்திருப்பான் என்று நாங்கள் கனவிலும் கருதவில்லை . நாங்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பாடப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருந்தோம் . எங்கள் எல்லோர் மத்தியிலும் பல்கலைக்கழகம் சென்று ஒரு பட்டதாரியாக வந்துவிடவேண்டும் என்ற கனவு சிறு காலத்திலிருந்தே எங்கள் தாய் தந்தையரால் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டிருந்தது . நாங்கள் அவ்வப்போது அது தொடர்பில் பேசி எங்களது கற்பனையை மேலும் வளர்த்துக் கொண்டிருந்தோம்.

அப்போதுதான் அந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்தது . விசு குடியிருந்த அந்தத் தெருவில் நான்கு வீடுகள் தள்ளி இருந்த ” சாந்தி இல்லம் ” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்த வீட்டில் வசித்து வந்த சாந்தி என்ற பெண் பிள்ளைக்கு விசு எழுதிக்கொடுத்த காதல் கடிதம் அவளுடைய அண்ணாவிடம் சிக்கிக்கொண்டது . அவளுக்கு இரண்டு அண்ணன்மார்கள் இருந்தார்கள் . அதில் இளையவன் சண்முகன் ஊரிலேயே சண்டியன் என்று பெயர் பெற்றிருந்தான். அவன் விஷயத்தை அறிந்து விசுவை அழைத்துச் சென்று கன்னத்தில் நான்கு அறைகள் விட்டதுடன் இந்த வேலையையெல்லாம் தன் தங்கையிடம் வைத்துக் கொள்ளாதே என்றும்அப்படி ஏதும் நடந்தால் அவன் கை கால்களை எல்லாம் முறித்து சாக்கடையில் போட்டு விடுவதாக எச்சரித்திருந்தான்.

இந்த விஷயமெல்லாம் எங்களுக்குத் தெரியாமலேயே நடந்திருந்தது. இதெல்லாம் முடிந்த பின்னர் தான் என்ன செய்வது என்று ஆலோசனை கேட்க விசு எங்களைத் தேடி என் வீட்டுக்கு வந்திருந்தான். நாங்கள் எல்லோரும் எங்கள் வீட்டு முன்னறையில் குடியிருந்தோம் . அதுதான் எங்கள் வீட்டில் நான் படிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த அறை. சில போதுகளில் சில பாடங்களை ஒன்றாகச் சேர்ந்து நண்பர்கடன் படிப்பதற்கு வசதியாக அந்த அறையில் மேசை ஒன்றையும் சிலநாட்களிகளையும் நான் போட்டிந்தேன் . இப்போது படிப்பெல்லாம் முடிந்து போயிருந்ததால் அந்த மேசைக்கு மேல் ” கேரம் பலகை” ஒன்றை வைத்து எங்கள் பகல்பொழுது களை கேரம் ஆடுவதிலேயே அனேகமாகக் செலவழித்து வந்தோம் . அப்படி நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போதுதான் அரக்கப்பரக்க ஓடி வந்த விசு இந்த விஷயத்தைக் கூறி நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து இந்த விஷயத்தில் தனக்கு உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டான்.

ஆரம்பத்தில் நாங்களெல்லாம் இதைக்கேட்டு சிரித்த போதும் விசு எங்களையெல்லாம் பார்த்து முறைத்துவிட்டு “அவளை தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், அவள் கிடைக்காவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் ” மிரட்டியபோதுதான் எங்களுக்கெல்லாம் விஷயம் சீரியஸானது என்று தெரிந்து வெலவெலத்து போனோம்.

அங்கே நீண்ட நேரம் மௌனம் நிலவியது. எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பேசாமல் இருந்தோம். அப்போதுதான் எனக்கு அந்த யோசனை வந்தது . எனது தாயின் அண்ணனான ராஜசேகர் அவர்களிடம் விசுவை அழைத்துச்சென்று விஷயத்தைக் கூறி ஆலோசனை பெறுவது என்று தீர்மானித்தோம் . மாமா ராஜசேகர் எங்கள் சமூகத்தில் அந்தஸ்துள்ள பெரியவர். அந்த பிரதேசத்தில் அநேகம்பேரால் விரும்பி நேசிக்கப் படுபவர் . பல சமூகப் பிரச்சினைகளின் போது தலையிட்டு பேசி அவற்றை தீர்த்து வைத்திருக்கும் சமூக அக்கறை கொண்டவர். ஏனைய நண்பர்களும் இதற்கு சார்பாக கருத்துத் தெரிவித்ததால் விசுவும் இணங்கினான். நாங்கள் நண்பர்கள் எல்லாம் வழக்கமாக எங்கள் வீட்டு முன்னறையில் சந்தித்து கூடிக் குலாவி கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பது வழமை என்பதால் எங்கள் வீட்டார் இது தொடர்பில் எந்தவிதமான சந்தேகத்தையோ , கேள்விகளையோ எழுப்பவில்லை. வழக்கம்போல எங்கள் ஐந்து பேருக்கும் எனது அம்மா தேத்தண்ணி தயாரித்துக் கொடுத்தார் . அதனை வாங்கிக் குடித்துவிட்டு நாங்கள் அனைவரும் சேர்ந்து ராஜசேகர் மாமாவை சந்திக்கப் புறப்பட்டோம்.

நல்லவேளை, நாங்கள் எல்லாருமாக சேர்ந்து சென்றபோகுது ராஜசேகர் மாமா வீட்டில்தான் இருந்தார். அவர் சாவகாசமாக அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார் . அவர் தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணியாகவும் இருந்ததால் இந்த விஷயத்துக்கு அவர் பொருத்தமான ஒரு ஆலோசனையை தெரிவிப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவர் எங்களை எல்லாம் வரிசையாக நிற்க வைத்து எங்கள் முகங்களை ஏற இறங்க பார்த்தார். உடனேயே அவருக்கு நாங்கள் ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்துவிட்டது . அவர் என்னைப் பார்த்து ” என்னாங்கடா எல்லோரும் ஆடு திருடிய கள்ளன் போல திருதிருன்னு முழிக்கிறீங்க. ஏதாவது பிரச்சனையா ? கவலைய விடுங்க . சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கீங்க. விஷயத்தை சொல்லுங்க ” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் . நான் தட்டுத்தடுமாறி விசு எங்களிடம் கூறியது எல்லாவற்றையும் அந்தக் கருப்பு ஆட்டின் கதையைக் கூறுவது போல அவரிடம் ஒப்புவித்தேன். இந்த விஷயத்துக்கு அவர்தான் ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மிக வினயமாகக் கேட்டுக் கொண்டேன்.

அவர் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். பின்அவர் விசுவைப் பார்த்து அந்தப் பெண்ணுக்கு எத்தனை வயசு இருக்கும் என்று கேட்டார் . அவன் விரல்களை எண்ணி எதையோ கூட்டிக் கழித்துப் பார்த்து ” இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவள் தனது 17ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினாள்” என்று நடுங்கிக் கொண்டே கூறினான்.

அவர் எங்களைப் பார்த்து ” இன்னும் திருமண வயத வரவில்லை. அதற்கிடையில் காதல் வந்துவிட்டது ” என்று உரத்துக் கூறினார். நாங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டோம் . அவர் என்ன செய்யப் போகிறார் என்பது புதிராகவே இருந்தது . அவர் உடனேயே வீட்டின் உட்புறம் திரும்பி தனது இளைய மகளான வேணியை கூப்பிட்டார். அவரது இளைய மகளான கிருஷ்ணவேணியும , சாந்தி என விசு குறிப்பிட்ட அந்தப் பெண் பிள்ளையும் அந்த ஊரில் இருக்கும் மகளிர் பாடசாலையில் ஒன்றாக பத்தாம் வகுப்பு படிப்பவர்கள் என்பது அவர்களுக்கும் தெரிந்து தான் இருந்தது. அவர் வேணியைப் பார்த்து உடனே சாந்தி வீட்டுக்குப் போய் சாந்தியை ” கோவிலுக்கு போய்விட்டு வரலாம் ” என்று கூறி அழைத்து வருமாறு அனுப்பி வைத்தார் . வேணியும் அப்பா இட்ட கட்டளையை தலைமேற்கொண்டு உடனே புறப்பட்டுச் சென்றாள்.

சாந்தியும் வேணியும் பள்ளித் தோழிகள் என்ற படியினால் சாந்தி வீட்டில் வேணி அவளை வெளியே அழைத்து செல்வது தொடர்பில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை . எனினும் என்று மில்லாதவாறு எதற்கு தன்னை வந்து வேணி , கோயிலுக்குச் செல்லலாம் என்று அழைக்கிறாள் என்பது தொடர்பில் சாந்திக்கு சற்று அன்மிச்சம் ஏற்படத்தான் செய்தது . அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டதை புரிந்துகொண்ட வேணி தன் வீட்டில் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சாந்தியிடம் கூறினாள் . அதைக்கேட்டதும் சாந்திக்கு உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை வேர்த்து விட்டபோதும் விசுவை அவளது அண்ணன் அடித்து விரட்டிய விதம் அவளுக்குத் தெரிந்திருந்ததால் அவளுக்கும் இது தொடர்பில் ஒரு வைராக்கியம் பிறந்திருந்தது . எனவே அவளும் அதைப் பற்றியே யோசித்துக் கொண்டு மௌனமாக வேணியை பின்தொடர்ந்து வந்தாள்.

அவர்கள் ராஜசேகரின் வீட்டை அடைந்தபோது அங்கே ராஜசேகர் தனது அலுவலக அறையில் மேலும் சில கதிரைகளை போட்டு விசுவையும் அவனது நண்பர்களையும் வரிசையாக அமர வைத்திருந்தார் . அவர்களுக்கு எதிராகப் போடப்பட்டிருந்த ஒரு வாங்கில் சாந்தியையும் வேணியையும் அமரச் செய்தார் . பின் விசுவையும் சாந்தியையும் எழுந்திருக்கச் செய்து அவர்கள் இருவரிடமும் தனித்தனியாக ஒருவரை ஒருவர் காதலிக்கிறீர்களா ? என்று ஒரு கேள்வியை முன் வைத்தார் . அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, கையைப் பிசைந்து கொண்டு, நாணிக் கோணிக் கொண்டு , நெளிந்துகொண்டு இருந்தனர் . அவர்கள் வாயிலிருந்து எந்தவிதமான சொற்களும் வெளிவரவில்லை . ” தங்கள் காதலைக் கூட தைரியமாக வெளிப்படுத்த முடியாத நீங்கள் எதற்காக காதலிக்கிறீர்கள் ” என்று மிகக் கடுமையாகவே கேட்டார் ராஜசேகர்.

ராஜசேகர் மாமா காதலுக்கு எதிரானவர் அல்ல . அவர் கூட தனது பல்கலைக்கழக காலத்தில் அவரது மனைவியை காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர் தான் . அவர் , காதல் என்ற விஷயத்தை இந்த சமூகம் ஏன் கடுமையாக எதிர்க்கிறது என்பதற்கு ஒரு அழகான விளக்கத்தினை எடுத் துரைத்தார் . ” ஒரு குடும்பத்தில் தாய் , தந்தை , பிள்ளைகள், உற்றார், உறவினர் என்பவர்கள் எவ்வாறு தமக்குள் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டு “நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்ற உணர்வை பெறுகிறார்களோ அந்த பாதுகாப்பு உணர்வுக்கு தங்கள் குடும்பத்தில் ஒருவர் அச்சுறுத்தலை எதிர்கொள்வதை ஒருபோதும் அவர்கள் விரும்புவதில்லை.அதற்கு ஒரு சவாலாகவே காதல் என்ற போர்வையில் ஒரு அந்நியன் தங்கள் குடும்பத்துக்குள் ஊடுருவ பார்க்கிறான் என்ற விதத்தில் ஒரு எதிரியாகவே அந்தக் காதலனை அந்த குடும்பத்தினர் பார்க்கின்றனர். தாய் தந்தையர் குழந்தைப் பருவத்திலிருந்து தமது பெண் குழந்தையை பாதுகாப்பது தொடர்பில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். திடீரென அந்தப் பெண் குழந்தையை அந்நியன் ஒருவன் கையைப் பிடித்து இழுத்து காதல் என்ற போர்வையில் தன்னுடன் அணைத்துக் கொள்வதை எந்த விதத்திலும் பொறுத்துக்கொள்ள அவர்களது மனது இடமளிப்பதில்லை. அந்தப்பெண்ணின் சகோதரனோ இன்னும் ஒருபடி மேலே சென்று தன் சகோதரியின் காவலன் ஆகவே தன்னை வரித்துக் கொள்கிறான். இந்த உணர்வுகள் எல்லாமே இந்த சமுதாயத்துக்குள் காணப்படுகின்ற பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிரான பாதுகாப்பு அரண்கள் தான். இந்தப் பாதுகாப்பு அரண்களை உண்மையான அன்பாலன்றி வேறு எந்தவித அடாவடித்தனங்களாளும் உடைத்து உள்ளே நுழைந்து விட முடியாது. இத்தகைய தடைகளை இப்பொழுது விசுவும் சாந்தியும் எதிர் கொண்டிருக் கின்றனர் . இதனை காலகதியில் விசு , சாந்தியைப் பொருத்தவரையில் ஆபத்தானவன் அல்ல என்பதனை அவனது செயல்களால் அவன் நிரூபிக்க வேண்டும். அதற்கு சில நிபந்தனைகளை நான் இப்பொழுது விதிக்கப் போகிறேன். அந்த நிபந்தனைகளுக்கு நீங்கள் இருவரும் கட்டுப்பட்டால் எதிர்காலத்தில் உங்கள் இருவரையும் இணைத்து வைப்பதாக நான் உறுதியளிக்கிறேன். அதன் பிரகாரம் இன்று முதல் உங்கள் சிறுபிள்ளைத்தனமான காதல் நடவடிக்கைகளை, மன உந்துதல்களை அற்ப திருப்திகளை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் எதிர்கால நலன்கருதி நீங்கள் படிப்பில் ஆர்வம் காட்டி அதில் வெற்றி பெற வேண்டும். நீங்கள் இருவருமே பட்டதாரிகளாக உருவாகி விட வேண்டும். அதுவே உங்கள் குடும்பத்தினரின் , தாய் தந்தையரின் குறிக்கோளாகவும் இருக்கிறது . அது ஒருவேளை அவர்களின் பேராசையாக இருக்கக்கூடும். எனினும் அது உங்களுக்கு எதிரானது அல்ல . அதனால் உங்கள் காதலை நீங்கள் பட்டதாரியாக வரும் வரைக்கும் சற்றே தூரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் . நீங்கள் இருவரும் ஒரு பட்டதாரியாக வந்தபின்னர் இந்த சமூகத்தில் ஒரு பொறுப்பான மனிதர்கள் என்பதை நீங்கள் நிரூபித்தவர் களாகவும், சமூகத்தில் அங்கீகாரம் பெற்றவர்களாகவும் வந்துவிடுவீர்கள். அதன் பிறகு யாரும் உங்களது காதலுக்கு தடையாக இருக்கப்போவதில்லை. அதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்”. என்று கூறி அதனை அவர்கள் ‘ஏற்றுக் கொள்கிறார்களா’ என்று அவர் கேட்டார்.

அதன்பிறகும் அங்கே மௌனம்தான் பதிலாக நிலவியது . அதனை ஒரு பதிலாக ஏற்றுக்கொள்ளாத ராஜசேகர் மாமா, சில வெற்றிலைகளையும் ஒரு சூடத்தையும் எடுத்து வருமாறு தன் மகளைப் பணித்து எல்லோர் முன் னிலையிலும் அந்த சூடத்தை வெற்றிலையில் வைத்து ஏற்றி முதலில் விசுவையும் அடுத்ததாக சாந்தியையும் அந்த சூடத்தின் மீது பிரதிக்ஞைகையை ஏற்றுக்கொண்டு சத்தியம் செய்து தருமாறு கூறினார். அதன் பிறகு அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை . அவர்கள் இருவரும் அவ்வாறு சத்தியம் செய்து கொடுத்தார்கள் . ஏனைய வர்களுக்கும் அது ஒரு பாடமாக அமைந்தது. எதிர்காலம்தொடர்பில் ஒரு இலட்சிய வெறியையும் அது அவர்களிடம் ஏற்படுத்தியது.

அதன்பின் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து அவர்களைப் பிரிந்து செல்ல அவர் அனுமதித்தார் . அந்த சம்பவம் அவர்கள் அனைவர் வாழ்விலும் ஏற்றிவைத்த ஒரு இலட்சிய தீபமாகவே அமைந்துவிட்டது . விசுவும் சாந்தியும் மட்டுமல்லாது அவர்கள் எல்லாருமே தம் இலட்சியத்தில் இறுதிவரை பற்றுடைய வர்களாகவே இருந்தார்கள்.

இந்த சம்பவம் நிகழ்ந்து சில வருடங்களின் பின்னர் ஒரு நாள் ராஜசேகரின் வீட்டு வாசற் கதவின் அழைப்பு மணி கிணுகிணுத்தது. ராஜசேகர் தான் சென்று கதவைத் திறந்தார். அங்கே மங்களகரமாக உடுத்துக்கொண்டு வந்திருந்த சாந்தியின் பெற்றோரும் அவளின் தமையனும் நின்றிருந்தனர்.அவர்கள் கையில் திருமண அழைப்பு பத்திரம் வைத்திருந்த ஒரு தட்டு காணப்பட்டது. ராஜசேகரிடம் மிக்கபணிவுடன் அவர்கள் அந்த அழைப்புப் பத்திரத்தை கொடுத்தபோது அவர் உடனேயே அதனைத் திறந்து பார்த்தார் . அந்த அழைப்பிதழுடன் செல்வி சாந்தி எம் பி பி எஸ் அவர்களுக்கும் , செல்வன் விசுவநாதன் பொறியியலாளர் அவர்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் ராஜசேகர் அவர்களை குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு ஆசீர்வதிக்கு மாறும் குறிப்பொன்றும் எழுதி வைக்கப் பட்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *