காகிதக் கால்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 9,606 
 

அபாண்டமாய் சுரேஷ் மேல் அந்த பழி வந்த போது என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக் கழுதையா அப்படிச் செய்தது. முணுக்முணுக்கென்றிருந்து விட்டு இந்த வேலை செய்திருக்கிறானே? ஸ்கூல் விட்டு வீட்டுக்குப் போனதும் படுவாவை உண்டு இல்லை என்று பண்ணிவிட வேண்டியதுதான்.

ஒழுங்கான படிப்பு கிடையாது. வாத்தியார் பிள்ளை மக்கு என்பது சரியாய்தான் ஆகிவிட்டது. சுரேஷ் என் மகன் என்பதற்காக என்ன செய்ய முடியும் படிடா என்று கண்டிக்கலாம். படிக்கிற மாதிரி பாவ்லா பண்ணுவதற்கு என்ன செய்ய முடியும்? அவன் அதிர்ஷ்டமோ என் நேரமோ பிளஸ்டூவைத் தாண்ட வைத்தாயிற்று.

வேலை வெட்டியில்லாத தண்டபசங்களோடு சுற்றி கெட்டுப்போய் விடக்கூடாது என்று கவலைப்பட்டு சுப்பையா ஸ்டோரில் சேர்த்து விட்டேன்.

சுப்பையாவும் பரவாயில்லை. “சார் பையன் சுறுசுறுப்பா வேலை செய்யறான். வர்ற கஷ்டமர் கூட ரொமப அப்ரிசேட் பண்றாங்க சார்.”என்று சர்டிபிகேட் கொடுத்த போது ஏதோ இல்லாத குறை எப்படி எல்லாமோ வரக் கனவு கண்டு இப்போதைக்கு இதுவே இருக்கட்டும் என்ற நினைத்த மறுநாளே குண்டைத் தூக்கிப் போட்டாற்போல இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு நிக்கறானே…

காலையில் ஸ்கூலுக்கு லேட்டாய் போயிடுச்சேன்னு அவசரஅவசரமா சைக்கிள் மிதிக்கிறேன். சுப்பையா பரபரப்பாய் ஓடி வந்து, ”வாத்தியார் சார் இப்படி கொஞசம் வந்துட்டுப் போங்களேன்” -கூப்பிட்டார் இதென்ன தொந்தரவு வயசான காலத்திலே அனாவசியமாய் ஒரு பேச்சு வாங்கக்கூடாது என்று நினைத்து நேரத்தோடு புறப்பட்டவனுக்கு இப்படி ஒரு சோதனை.

கடையை நெருங்கிய போது சுரேஷைக் குற்றவாளி போல நிற்க வைத்து நாலைந்து பேர் விசாரித்துக் கொணடிருந்தனர்.

”வாங்க வாத்தியார் சார் உங்க பையன் பண்ணியிருக்கிற வேலையைப் பாத்திங்களா? மீசை கூட சரியா முளைக்கலே இப்பவே இவனுக்குப் பொண்டாடடி வேணுமாமாம். ஏம் பொண்ணுக்கு காதல் கடிதாசி கொடுக்கறான்யா அதுவும் எப்ப? எங்க வீட்டுக்கு நாலு பேர் பொண்ணு பாக்க வந்திருக்காங்க கொஞசங்கூட பயமில்லாம லவ் லெட்டர் கொடுத்தனுப்பறான் சார் நியாயமான்னு நீங்களே விசாரிங்க” எதிர் வீட்டு குப்புசாமி குதித்தார்.

மனசுக்குள் பதட்டமாயிருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், “உங்களப் பாதிக்கிற அளவு நிச்சயம் விடமாட்டேன். டேய் சுரேஷ் நீ வீட்டுக்குப் போடா” என்றேன்.

”அப்பா எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா நா எந்த லெட்டரும் எழுதலப்பா.” சுரேஷ் கண் கலங்கியபடி சொன்னான் அதில் சற்று சலனம் கொள்ளச் செய்தது.

என்னய்யா பெரிய மனுசன்னு விசாரிக்கச் சொன்னா நீ என்னவோ தப்பிக்கப் பாக்கறீயே” குப்புசாமியின் வார்த்தைகள் தடிக்கவும் சுப்பையா குறுக்கிட்டு மரியாதையா பேசு… கையை ஆட்டினார் அவரை அமைதிப்படுத்த.

”ஆத்திரப்படாதிங்க. இப்ப என்ன நடந்தது எம் பையன் லெட்டர் எழுதி உங்க பொண்ணுகிட்ட கொடுத்தானா?”

”ஆமாய்யா அதனால பொண்ணு பார்க்க வந்தவங்க எந்திரிச்சு போயிட்டாங்க.இதுக்கு ஒரு பதில் சொல்லியே ஆகணும்.”

“எங்க அந்த லெட்டரக் கொடுங்க”

லெட்டரை கையில் கொடுத்தார்.

”லெட்டரைத் தவிர வேறு ஒண்ணும் தப்பு தண்டா நடக்கலையே?”

”இல்லை”

”இவன்தான் எழுதினான்னு எப்படி உறுதியாச் சொல்றீங்க?”

இதென்ன இந்த குழந்தையைக் கேளுங்க”

ஏம்மா யார் கொடுத்தாங்க இந்த லெட்டரை… இவனா?” சுரேஷைக் காட்டிக் கேட்டேன்.

”இல்லை”

”ஏய் பொய் சொல்றயா. நீதான எதிரு கடைல நிக்கற மாமா தான் கொடுத்தார்னே இப்ப இல்லேங்கறே.”

குழந்தை மலங்க மலங்க விழித்துவிட்டு, ”ஆமா இந்த மாமாதான் கொடுத்தார்.”

”போதுமா”

”சரி நா விசாரிக்கறேன்.பையன் இனிமே உங்க வீட்டு விசயத்தில தலையிட மாட்டான். நா கியாரண்டி.” என்றேன்.

”சார் நீங்க புறப்படுங்க” என்றார் சுப்பையா.

நானும் புறப்பட்டு வந்து விட்டேன். முதல் பீரியட் லிஸர்தான் இரண்டாவது பீரியட் அக்கௌண்டன்ஸி நோட்ஸ் கொடுக்கணும். பீரோவிலிருந்த பழைய நோட்சை எடுத்துக் கொண்டு டேபிள் முன் அமர்ந்து ஒரு பார்வை விட்டேன். சட்டென அதிர்ந்து போனேன். அந்தக் கடிதத்தையும் எடுத்துப் பார்த்தேன் சந்தேகமே இல்லை. இந்த நோட்டு யாருடையது என்று பார்த்தேன். சுப்பையாவுடையது. பத்து வருசத்துக்கு முந்தியது. சுப்பையா என்னுடைய மாணவன்தான். எழுத்து முத்து முத்தாயிருக்கும். அவனை மாதிரி எழுதணும் என்று கண்டித்து கண்டித்து சுரேஷின் எழுத்தும் கிட்டத் தட்ட இது போலவே இருக்கும். ஆனால், ஓரு வித்தியாசம் சுப்பையாவுக்கு’கே’ வுக்கும் ‘கோ’வுக்கும் வித்தியாசம் தெரியாது எங்கே கால் போடவேண்டும் என்பது சந்தேகம். சந்தேகமே இல்லை சுப்பையாவுடையதுதான்.’அனபே’என்று துவங்கிய கடிதத்தில் “அன்போ” எனத் துவங்கியிருப்பதே சாட்சி.”

மத்தியானம் சாப்பாட்டைக் கூட கவனிக்காமல் சுப்பையாவின் கடைக்குப் போனேன்.

”என்ன சுப்பையா கடிதாசி நீதானே எழுதினே?” என நேரடியாகவே கேட்டேன்.

”சார் என்னை மன்னிச்சுடுங்க. குப்புசாமி எனக்கு முறைமாமன் அநதப் பொண்ணும் நானும் மனப்பூர்வமா விரும்பறோம். மாமா உத்யோகத்திற்கு போகிற மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்” என்றார். அதனாலதான் இப்படி செஞ்சேன். ஆனா தெரியாத்தனமா பழி சுரேஷ் மேல விழுந்துடுச்சு.அந்த நேரத்தில தைரியமா நான்தான் எழுதினேன் சொல்ல மனசு வர்லே.”

நான் வந்ததைப் பார்த்ததும் வந்த குப்புசாமி எல்லாமே கேட்டிருக்க வேண்டும். வாத்தியார் சார் என்னையும் மன்னிச்சுடுங்க மாப்பிள்ளைய பத்தி முன்னாடியே விஷயம் கேள்விப்பட்டேன் ஆனா முறைப்படி கேட்காம எப்படி பொண்ணக் கொடுக்க முடியும். அதுக்காக எத்தனை நாளைக்கு பொண்ணை வச்சிட்டிருக்க முடியும்.” என்று குப்புசாமி சமாதானமானார்.

எனக்குள் சிரிப்பு எழுந்தது சுப்பையாவைப் பார்த்து, “என்னப்பா காதலுக்கு கண் இருக்குதோ இல்லையோ உன்னோட இந்தக் காதலுக்கு ஒருகால் அதிகமா இருக்குப்பா.” என்றதும் சிரிப்பலைகள் கடையைக் கடந்தது. சுப்பையாவுக்கு வெட்கம் அதிகமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *