கரிசல் காட்டு காதல் கதைகள்! – 18

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 15,119 
 

சோலையனுக்கு முப்பத்தி மூணு வயசுக்கு மேல ஆகிடுச்சு. தன்னோட இளமையை தாங்கிக் கிட்டுத்தான் கல்யாணத்துக்கு காத்திருக்கான். ஆனா, அவனுக்கு பொண்ணு கொடுக்க நெனக்கற வங்க எல்லாருமே, அவன் ஆத்தா சங்கம்மாளை நெனச்சு பயந்துபோயி பதினாறு அடிக்கு அந்தப் பக்கம் ஓடோ ஓடுனு ஓடுறாங்க.

‘அய்யய்யோ சங்கம்மா மவனுக்கு பொண்ணு குடுக்கறத விட, அந்தப் பொண்ண கொண்டி இடி கிணத்துக்குள்ள தள்ளிட்டு விசாரமத்து இருக்கலாமே.. அவ பொம்பளயா? உசுரோட கறியப் புடுங்கி திங்கிற, வலுசாரு சாதிய சேந்த வள்ல’னு அரண்டு போயி கிடக்கறதுனாலயே சோலையனுக்கு பொண்ணே கனியல.

நாலு வயசுலயே அப்பன் ஆத்தாளை இழந்துட்டு, அனாதையா ஒண்ணுவிட்ட பாட்டி வீட்டுல வளர்ந்துக்கிட்டிருந்த மல்லிகாகிட்ட அவ பாட்டி கரிச்சா சொன்னா.. ‘‘எங்கண்ணுக்குப் பெறவு, உன்ன ஏங் கொரங்கேன்னு பெரட்டிப் பாக்க ஆளு இல்ல.. சோலயனுக்கு பொண்ணு கெடையாம பரிதவிச்சிக் கெடக்காக. சரி.. அவனுக்கு உன்ன குடுத்துருவோமின்னா, அவன் ஆத்தா உன்ன பாடா படுத்தி, கொன்னு, குழியத் தோண்டி பொதச்சிருவாளேன்னு பயமா கெடக்கு’’னு பெருமூச்சோட சொன்னப்ப மல்லிகா குறுக்கால புகுந்தா..

‘‘பாட்டி.. சும்மா என்ன சோலயனுக்கு கொடுத்துரு. அவரு ஆத்தாளும் மனுசிதான’’ங்க வும், கரிச்சா பேயறைஞ்ச மாதிரி ஆனா. ‘‘என்ன தாயீ.. நீ கூறோடதேன் பேசிதியா! கூறுகெட்டுப் போயி பேசுதியா? சோலயன் ஆத்தாளப் பத்தி, ஊரு பேசுத பேச்ச நீ கேட்டயா, இல் லயா?’’னா.

‘‘எல்லாம் கேட்டேன். யாருதேன் அந்தமான ஊருக்குள்ள பசுவதியா மருமவள பொன்னும், கண்ணுமா வச்சிக்கிட்டு இருக்காக? எல்லாம் அம்புட்டு, அம்புட்டுக்குள்ளதேன் இருக்கு. சும்மா என்ன சங்கம்மா மவனுக்கே கொடுங்க’’னு சொல்லிட்டா.

மல்லிகா தனக்கு வாக்கப்பட சம்மதிச்சது, சோலையனுக்கு வானம் நூறு நெலாவோட வந்து அவனைத் தாங்கிக்கிட்ட மாதிரி இருந்துச்சு.

கல்யாண கோலத்தோட வலது காலை எடுத்து வச்சு, மல்லிகா புருசன் வீட்டுக்குள்ள நுழைஞ்சபோதே, சங்கம்மா ஆரம்பிச்சுட்டா. நெதமும் மருமககிட்ட குத்தம் கண்டுபிடிச்சி, வையுறதுதேன் அவளுக்கு வேலையே. ஆனா, மல்லிகா அதையெல்லாம் மனசுல வெச்சிக்காம, ஒண்டியா வேலை செஞ்சு, சிறுகச் சிறுக சேர்த்து வச்ச பணத்துல, கழுத்துக்கு ஒரு காசு மாலையும், காதுக்கு தண்டட்டியும் வாங்கி புத்தம் புதுசா வச்சிருந்தா.

அன்னிக்கு தைப் பொங்கல். ஊரே புது தானியத்துலயும், சந்தோசத்துலயும் பூத்துக் கெடந்துச்சு. வெள்ளனத்துலயே எந்திரிச்சுட்ட மல்லிகா வீட்டை சுத்தப்படுத்தி, கலப்பைக்கும், காளைமாடுகளுக்கும் பூஜை செஞ்சு, சர்க்கரைப் பொங்கல் வச்சு புதுச்சோறு ஆக்கினா.

பெறகு, குளிச்சு முடிச்சு இன்னைக்கு எந்தக் குத்தத்தை கண்டுபிடிப்போம்னு உக்காந்திருந்த மாமியாக்காரிகிட்ட, கை நெறைய நகைகளை அள்ளிக்கிட்டுப் போயி குடுத்து, ‘‘இந்தாங்க அயித்த. அப்புராணி.. பெறந்த நாளயிலிருந்து என்ன சொவத்தக் கண்டீக! புருசனுக்கும் புள்ளைக்கும் பாடுபட்டு போட்டே தல நரச்சிப் போனீக! வெறும் காதும், வெத்துக் கழுத்துமா நீங்க இருக்கதப் பாத்தா பாவமா இருக்கு. உங்களுக்காவத்தேன் இந்த நகய செஞ்சி, காவந்தா பத்திரப்படுத்தி வச்சிருந்தேன். காது நெறைய, கழுத்து நெறைய போட்டுக்கோங்க’’னு கொடுத்தப்ப, சங்கம்மா மருமக கையில இருந்த நகையை ஆசையோட பார்த்தா. விடிகாலை பொன் வெயிலுக்கு தங்கம் பளபளப்பு காட்டிச்சு.

ஆனாக்க, சிரிச்ச முகத்தோட, நல்ல நாளும், பொழுதுமா நகையோட வந்து நின்ன மருமகளைப் பார்க்கையில சங்கம்மாளுக்கு சந்தோசம் வரல. ஆத்திரந்தான் வந்தது.

‘சிறுக்கி.. வந்ததே சரினு புருசன கைக்குள்ள போட்டுக் கிட்டு, அம்புட்டு துட்டயும் சிறுவாடு வச்சி நக வாங்குனதுமில்லாம, அவ சம்பாரிச்சதாவில்ல சொல்லுதா. இவகிட்ட இருக்க நகய வாங்கிக்கிட்டு இவள வச்சிக்கிடுதேன்’னு நெனச்சு, நகையை வாங்க கையை நீட்டுனப்ப, சோலையன் குறுக்கே வந்து நகையை வெடுக்குனு புடுங்கிக்கிட்டான்.

புருசனோட செய்கையைப் பார்த்து மல்லிகா அரண்டு போனா. அவளுக்குப் பேசத் தெம்பில்லை. சங்கம்மாதேன் வழக்கம் போல ஆரம்பிச்சுட்டா. ‘‘ஏலே எடுவட்ட பயலே.. எம்மருமவ எனக்கு ஆசயா நக வாங்கிக் குடுத்தா.. அத எதுக்குடா நீ புடுங்குதே?’’ன்னா.

‘‘ஆமா.. இந்த நகய குடுத்தா மட்டும் உன் வாய மூடிக்கிட்டு இருப்பயா? அதுக்கும் ‘எத களாண்டு வாங்குனாளோ’னு திறந்த வாய் மூடாம வைவ. இனிமே நவ, நட்டுனு மாமியாளும் மருமவளும் பேசுனீகளோ.. பெறவு என்ன குத்தம் சொல்லாதீக’னு பெரிய மரிசலுக்குள்ள (வீட்டுக் குள்ளேயே, தானியம் போட்டு வைப்பதற்காக கட்டப்பட்டிருக்கும் பாதாள அறை) நகையை எறிஞ்சவன், விருட்டுனு வெளியேறிப் போயிட்டான்.

‘கைக்கு எட்டினது வாய்க்கு எட்ட விடாம பெத்த மகனே கொடும செஞ்சிட்டானே..’ங்கிற விசாரத்துல சங்கம்மா குன்னிப்போய் நிக்க, மல்லிகா மாமியாளை அணைச்சுக் கிட்டா.

‘‘அயித்தே.. நீங்க ஒண்ணும் விசனப்படாதீக. நானு ஊருக்குப் புதுசு. யாருக்கும் என்ன தெரியாது. அதனால, நீங்க யாரு வீட்டுலயாச்சிலும் பெரிய ஏணியா கேட்டு வைங்க. நானு போயி ஏணிய தூக்கிட்டு வாரேன். ஏணிய மரிசலுக்குள்ள எறக்கி, நகய எடுத்து உங்களுக்கு நானே போட்டு விடுதேன். பெறவு உங்க மவனால என்ன செய்ய முடியும்?’’னு சொல்ல, சங்கம்மாவுக்கு சந்தோசம் பொறுக்க முடியல.

அப்பிடியே கனிஞ்ச பலாப் பழமா மவுந்து போனவ மருமகளோட கன்னத்தை வழிச்சு நெட்டி முறிச்சா.

‘‘என் ராசாத்தி.. என் தங்கம்! இப்பிடி மாமியாளுக்கு நக போட்டு அழகு பாக்குறவனு தெரிஞ்சா, உன்ன பல்லத்தன வார்த்த சொல்லியிருப்பனா? நீ பொன்னம் போல வீட்டுக்குள்ள உக்காந்திரு.. நானு போயி ஊருக் குள்ள ஏணி கேட்டுட்டு வாரேன்’’னு போனவ ரெண்டு நாழிகை கழிச்சு, முகத்தைத் தொங்கப் போட்டுக்கிட்டு வந்தா.

மாமியாளை சந்தோசமா வரவேத்த மல்லிகா, ‘‘என்னய்த்த, ஏணி கெடச்சிச்சா?’’னு கேக்க சங்கம்மாளுக்கு வயிறு எரிஞ்சுச்சு.

‘‘எந்த சிறுக்கி தாரேங்கா.. எல்லாவளுக்கும் வாக்கிலியங் கெட்டுப் போச்சாம். ஒருத்திகிட்டகூட ஏணி இல்லையாம்’’னா கோவத்தோட.

‘‘நீங்க ஒண்ணும் விசாரப்படாதீக அய்த்த.. ஒரு ஆறு மாசம்.. ரெண்டு பேரும் காட்டு வேல செஞ்சமின்னா ஒரு ஏணிய வாங்கிருவோம்ல’’ன்னா மல்லிகா.

இப்பல்லாம் சங்கம்மாளுக்கு மருமகளை வய்யவே நேரமில்ல. ஏணி வாங்குறதுக்காக மாமியாக்காரி ஓடி ஓடி வேலை செஞ்சுக்கிட்டிருக்க, மாமியாளை மாத்துனதுக் காக தனக்குள்ளயே சிரிச்சுக்கிட்டா மல்லிகா.

மரிசலுக்குள்ள தங்க நகை பத்திரமா இருந்துச்சு.

– செப்டம்பர் 2006 (நிறைவு பெறுகிறது)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *