கனவான்களின் ஆட்டம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 13,265 
 

இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே காரணம், சச்சினோ, தோனியோ அல்ல, நிஷா!

’சேட்டுப் பொண்ணு’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற நிஷா, ஏதோ கல்லூரியில் என்னவோ படிக்கிறாள். மிஞ்சிய நேரத்தில் ஆர்வமாகக் கிரிக்கெட் வளர்க்கிறாள்.

நிஷா இங்கே வருவதற்கு முன்னால், எங்களுடைய ‘காந்தி பார்க்’கில் எந்த ஒரு விளையாட்டும் தனி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒரு மூலையில் சிலர் ஸ்டம்ப் நட்டுப் பந்தை விரட்டிக்கொண்டிருப்பார்கள், இன்னொரு மூலையில் கால் பந்துகள் நடமாடும், நடுவில் சிலர் கபடி ஆடுவார்கள், இன்னும் சிலர் வலை கட்டாமல் இறகுபந்தோ வாலிபாலோ தட்டுவார்கள். உடம்பைக் குறைப்பதற்காக நடப்பவர்கள், ஓடுகிறவர்களும் உண்டு.

முதன்முறையாக நிஷா இந்தப் பூங்காவில் கால் பதித்தபோது, அங்கே கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த எங்களுடைய அதிர்ஷ்டம், அவள் நேராக எங்களை நோக்கி வந்தாள். ‘ஹாய் எவ்ரிபடி, ஐ யாம் நிஷா’ என்றாள் பக்கா பிரிட்டிஷ் உச்சரிப்பில். நாங்கள் பதில் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றோம்.

காரணம், ‘காந்தி பார்க்’ முழுக்க முழுக்க சேவல் பண்ணைதான். இங்கே பெண்கள் நுழைகிற வழக்கமே கிடையாது. அதுவும் நிஷாபோல் ஒருத்தி நுனி நாக்கு ஆங்கிலமும் இறுகப் பிடித்த ஜீன்ஸ், டிஷர்ட்டுமாக வந்து நின்றால் என்னத்தைப் பேசுவது? பராக்குப் பார்க்கதான் முடியும்.

நிஷா அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. சட்டென்று தமிழுக்குத் தாவி ‘எனக்குக் கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும், நானும் உங்களோட சேர்ந்துக்கலாமா?’ என்றாள்.

’ஷ்யூர்’ என்றேன் நான். என்னுடன் இருந்த சிநேகிதர்களையெல்லாம் அவளுக்கு அறிமுகப்படுத்தினேன். எல்லாரும் ‘ஹலோ’ சொல்லி முடித்ததும், ‘புதுசா டீம் பிரிக்கலாமா?’ என்றேன்.

’அதெல்லாம் வேணாம், நீங்க எப்பவும்போல விளையாடுங்க’ என்றாள் நிஷா. ‘எனக்குக் கிரிக்கெட் வேடிக்கை பார்க்கதான் பிடிக்கும், விளையாடத் தெரியாது.’

அதன்பிறகு, ஒவ்வொரு நாளும் எங்களுக்கு முன்னால் நிஷா அங்கே ஆஜராகிவிடுவாள். கையில் எப்போதும் ஓர் ஆங்கில நாவல் இருக்கும். நாங்கள் வந்தவுடன் அதை மூடி வைத்துவிட்டு முழு நேரக் கிரிக்கெட் ரசிகையாகிவிடுவாள். டாஸ் போடுவதில் ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் கை தட்டுவாள், பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் எகிறிக் குதித்துப் பாராட்டுவாள், அதற்காகவே நாங்கள் அதிகத் தீவிரத்துடன் விளையாட ஆரம்பித்தோம்.

அதே நேரம் எங்களைச் சுற்றி ஃபுட்பாலும் பேட்மின்டனும் விளையாடிக்கொண்டிருந்த மற்றவர்களும் நிஷாவைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். ‘இந்தப் பெண்ணுக்குக் கிரிக்கெட்மீதுமட்டும் என்ன இத்தனை ஆர்வம்?’ என்று பொறாமையுடன் வெறித்தார்கள்.

அடுத்த சில நாள்களில், பலர் அங்கிருந்து இங்கே கட்சி மாறுவது வழக்கமாகிவிட்டது. மற்ற விளையாட்டுகள் காணாமல்போய் மொத்த மைதானத்தையும் கிரிக்கெட்டே ஆக்கிரமித்துக்கொண்டது. ஏழெட்டுப் பேரைமட்டும் வைத்துக்கொண்டு ஏதோ குத்துமதிப்பாக டீம் பிரித்து ஆடிக்கொண்டிருந்த நாங்கள் நிஜ கிரிக்கெட் போட்டிகளில் வருவதுபோல் இந்தப் பக்கம் பதினொன்று அந்தப் பக்கம் பதினொன்று என்று பக்காவாக விளையாட ஆரம்பித்தோம். சுமாராக விளையாடுகிறவர்கள் இரக்கமில்லாமல் வெளியேற்றப்பட்டார்கள். திறமைக்குமட்டுமே மரியாதை.

இத்தனை மாற்றத்துக்கும் ஒரே காரணம், நிஷாதான். அவளுடைய கைதட்டலுக்காகவும் பாராட்டுக்காகவுமே ஒவ்வொருவனும் குடம் குடமாக வியர்வை சிந்தினான்.

ஆச்சர்யமான விஷயம், நிஷா எங்களில் யார்மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தவில்லை. அவளுக்கு இரண்டு அணிகளுமே ஒன்றுதான், விக்கெட் விழுந்தாலும் குதிப்பாள், அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்தாலும் குதிப்பாள், அவளுக்கு எந்த டீம் எத்தனை ரன் எடுக்கிறது, யார் ஜெயிக்கிறார்கள் என்பனபோன்ற லௌகிக விஷயங்களில் அக்கறை இல்லை, விளையாட்டை ரசிப்பதுதான் முக்கியம் என்பாள்.

அப்புறம், இந்தியாவில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகிய இருவருக்குமட்டுமே தெரிந்த கவர் ட்ரைவ், புல் ஷாட், தூஸ்ரா, யார்க்கர் இன்னபிற கிரிக்கெட் கெட்ட வார்த்தைகளெல்லாம் எப்படியோ நிஷாவுக்கும் மனப்பாடமாகியிருந்தன. சரியான நேரத்தில் அவற்றை எடுத்துத் தூவி எங்களை உற்சாகப்படுத்துவாள். நாங்கள் ஒன்றும் புரியாமல் தலையாட்டுவோம்.

நிஷாவுடன் பழகியபிறகுதான், முறையாகக் கிரிக்கெட் கற்றுக்கொள்ளவில்லையே என்று நாங்கள் முதன்முறையாக வருத்தப்பட்டோம். யாராவது ஒரு நல்ல கோச்சாகப் பார்த்துத் தினமும் எட்டு மணி நேரம் தீவிர சாதகம் செய்து கிரிக்கெட் விற்பன்னராகிவிடமுடியாதா என்று ஏங்கினோம், அப்போதுதானே நிஷாவுடன் சரிக்குச் சரி உரையாடமுடியும்?

பயிற்சிமட்டுமில்லை, நாங்கள் விளையாடப் பயன்படுத்திய பேட், பந்து, ஸ்டம்ப் எல்லாமே அரைகுறைதான். விக்கெட் கீப்பருக்குக் கை உறைகூடக் கிடையாது. ரன்னர் பேட்டுக்குப் பதிலாக ஒரு ப்ளைவுட் கட்டையைதான் செதுக்கிவைத்திருந்தோம்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி, நிஷா எங்களுடைய விளையாட்டை ரசித்தாள். இந்தக் கத்துக்குட்டிகளிடம் அவள் எதைக் கண்டாளோ, தெரியவில்லை.

அதுவும், மேலோட்டமான ரசனை இல்லை, அநேகமாக இங்கே விளையாடிய எல்லாரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்குப் பழகியிருந்தாள் அவள். ‘இவன்கிட்ட ஸ்பீட் இருக்கு, ஆனா அக்யூரஸி போதாது’, ‘அவனோட டெக்னிக் சூப்பர், ஆனா ஃபீல்டர் இல்லாத இடமாப் பார்த்துப் பந்தை அடிக்கத் தெரியலை’, ‘உன்னோட ரன்னிங் பிட்வீன் தி விக்கெட்ஸ் ரொம்பப் புவர்’, ‘ஃபீல்டர்ன்னா ஓடணும், நீ ஏன் நடக்கறே?’ என்றெல்லாம் ஒவ்வொருவரையும் பக்காவாக எடைபோட்டு வைத்திருந்தாள். அவள் தவணை முறையில் வாரி வழங்கிய நிபுணத்துவம்தான் எங்களுடைய கிரிக்கெட் ஆர்வத்துக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்தது.

நல்லவேளையாக, எங்களில் யாரும் நிஷாவிடம் அத்துமீறிப் பழகவில்லை. கொஞ்சம் விஷயம் தெரிந்த சியர் லீடராக அவளை ஓரக்கண்ணால் ரசிப்பதுடன் நிறுத்திக்கொண்டோம். அதற்குமேல் முன்னேற ஆசை இருந்தாலும், தைரியம் இல்லை.

இத்தனையும் மாறியது, போன மாதத்தில், தர்மன் வந்தபிறகு.

இந்தத் தர்மன் எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் பூங்காவின் தெற்கு மூலையில் ஒரு கூடாரம் முளைத்தது. அதற்கு வெளியே அடுப்பு மூட்டியபடி ஒரு பெண்ணும் அவளுடைய காலைச் சுற்றியக்கொண்டு சில பொடியன்களும் தென்பட்டார்கள். சற்றுத் தொலைவில் பீடி புகைத்தபடி ஒரு கல்லின்மீது உட்கார்ந்திருந்தான் இவன். அழுக்கு உடம்பு, பரட்டைத் தலை, கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால் என்று அந்தக் காலச் சினிமாவிலிருந்து நேராக இறங்கிவந்த ஏழைபோல இருந்தான்.

மறுநாள் காலை நாங்கள் ஸ்டம்ப் நட்டுக் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது, இவனும் ஆர்வத்தோடு நெருங்கிவந்தான். ‘நானும் ஒங்களோட வெளையாட வரலாமா சார்?’

நாங்கள் அவனை எரிச்சலோடு பார்த்தோம். பதில் சொல்லாமல் திரும்பிக்கொண்டோம்.

ஆனால், நிஷா அவனைக் கவனித்துவிட்டாள். ‘ஏய், நம்ம க்ளப்புக்குப் புது மெம்பர்’ என்றாள், ‘சாரையும் ஆட்டத்துல சேர்த்துக்கலாம், என்ன சொல்றீங்க?’

எங்கள் எரிச்சல் இன்னும் அதிகரித்தது. எங்களையெல்லாம் ‘வாடா, போடா’ என்று விரட்டுகிற நிஷா இந்த அழுக்குப்பயலைப்போய் ‘சார்’ என்கிறாள். என்ன கொடுமை சரவணன் இது?

நிஷாவின் ஆதரவு கிடைத்ததும் தர்மன் பெரிதாகப் பல்லிளித்தான். மற்ற யாருடைய அனுமதியும் தனக்கு முக்கியமில்லை என்பதுபோல் குடுகுடுவென்று ஓடி வந்து ஸ்டம்புக்குப் பக்கத்தில் நின்றுகொண்டான்.

நாங்கள் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். எங்களில் யாருக்கும் தர்மனுடன் சரிசமமாகச் சேர்ந்து விளையாட மனம் இல்லை. ஆனால் அதற்காக நிஷாவை மறுத்துப் பேசவும் சங்கடமாக இருந்தது.

வேறு வழியில்லை. நிஷாவுக்காக இந்தப் பயலை உப்புக்குச் சப்பாணியாக ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியதுதான். எங்கேயாவது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் நிறுத்திவைத்துவிட்டால் ஆச்சு, அவன்பாட்டுக்குப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு கிடக்கட்டும்.

தர்மனின் அதிர்ஷ்டம், நான் அடித்த முதல் பந்தே அவன் நிற்கிற பக்கமாகதான் விரைந்தது. சரசரவென்று அதை நோக்கி ஓடியவன் குனிந்ததும் தெரியவில்லை, நிமிர்ந்ததும் தெரியவில்லை, வீசியதும் தெரியவில்லை, மறுவிநாடி எதிர்ப் பக்கத்திலிருந்த ஸ்டம்ப் எகிறியது. நான் ரன் அவுட்.

அவ்வளவுதான். அந்த மைதானமே ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது. எல்லாரும் கீழே சரிந்து கிடந்த ஸ்டம்பை நம்பமுடியாமல் பார்த்தார்கள். நிஷா என்றைக்கும் இல்லாத உற்சாகத்துடன் துள்ளினாள், தர்மனை அள்ளித் தூக்கிக் கொஞ்சாத குறைதான்.

அந்த விநாடியை என்னால் என்றைக்கும் மறக்கமுடியாது. நிச்சயமாக அந்தப் பந்து பவுண்டரிக்குச் சென்றுவிடும் என்கிற நம்பிக்கையில் அலட்சியமாக ஓடிக்கொண்டிருந்த என்னை ஒரே வீச்சில் கலங்கடித்துவிட்டான் தர்மன்.

நான்மட்டுமில்லை, எங்களுடைய கிரிக்கெட் கோஷ்டியில் இருந்த எல்லாருமே தர்மனைத் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இது நிஜமான திறமையா? அல்லது காக்காய் உட்காரப் பனம்பழம் விழுந்திருக்கிறதா? பரிசோதித்துவிடவேண்டியதுதான்!

அந்த ஓவர் முடிந்ததும், எங்கோ நின்றிருந்த தர்மனின் கைக்குச் சென்றது பந்து. சும்மா காட்டுத்தனமாக எறிகிறானா, அல்லது உருப்படியாகப் பந்து வீசுகிறானா என்று பார்த்துவிடலாம்.

வாசிம் அக்ரம் ரேஞ்சுக்கு ஸ்டம்பிலிருந்து நெடுந்தூரம் நடந்து சென்றான் தர்மன். பின்னர் சரேலென்று திரும்பி விடுவிடுவென்று யாரையோ வெட்டிச் சாய்க்கப்போகிறவன்போல் ஓடி வந்தான். எதிர்பாராத கணத்தில் அவன் கையிலிருந்து பந்து விடுபட்டுப் பாய்ந்தது.

அது நிச்சயம் ‘பவுலிங்’ இல்லை, ‘த்ரோயிங்’தான். ஆனால் அந்த வேகம், யாருமே எதிர்பார்க்காதது. பேட்ஸ்மேன் இலக்கு புரியாமல் எங்கோ மட்டையைச் சுழற்றிவிட்டுத் திணற, பந்து ஸ்டம்பைத் தாண்டி எகிறிப் பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் மணவாளன் கையைச் சுட்டுவிட்டுப் பறந்தது.

இரண்டாவது பந்தும் அதேமாதிரிதான். ஆனால் இந்தமுறை நேராக மிடில் ஸ்டம்புக்குக் குறிவைத்து வீசினான் தர்மன். பந்து மறுபடியும் பேட்டை ஏமாற்றிவிட்டு நைஸாக உள்ளே புகுந்து ஸ்டம்பைப் பெயர்த்தெடுத்தது. ‘வ்வ்வ்வ்வ்வாவ்’ என்று ஆனந்தக் கூச்சலிட்டாள் நிஷா.

அதோடு, அந்த மைதானத்தில் எங்களுடைய கிரிக்கெட் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. இரண்டே இரண்டு கச்சிதமான ‘த்ரோ’க்களில் நிஷாவின் உள்ளம் கவர்ந்துவிட்டான் இந்தத் தடியன்.

அடுத்த சில நாள்கள் நான் என்னுடைய விளையாட்டைக்கூட மறந்துவிட்டுத் தர்மனைதான் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தேன். பயலுக்கு பவுலிங் ஆக்‌ஷன் சுமார்தான், அக்யூரஸியும் போதாது, ஆனால் அந்த வேகம், அதுதான் அவனுடைய ஆயுதம், மட்டையைச் சரியானபடி ஜாக்கிரதையாக வைக்காவிட்டால், ஒன்று கேட்டில் ஸ்டம்ப் பிடுங்கிக்கொள்ளும், இல்லாவிட்டால், எக்குத்தப்பாக பேட்டை உரசிக்கொண்டு விக்கெட் கீப்பரிடமோ ஸ்லிப்பிலோ பிடிபட்டு அவுட் ஆவோம்.

போதாக்குறைக்கு, பேட்டிங்கிலும் அவன் பெரிய கில்லாடியாக இருந்தான். எது கவர் ட்ரைவ், எது பேடில் ஸ்வீப் என்றெல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லைதான், ஆனால் பந்து எங்கே வருகிறது என்பதை மிகச் சரியாகக் கணித்து, அதன்மேல் பூர்வ ஜென்ம விரோதம் கொண்டவனைப்போல் தாக்குவான், அவனுடைய கை வலிமைக்கு லேசாகத் தொட்ட பந்துகள்கூட சிக்ஸருக்குப் பறக்கும்.

இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ரன்களாகக் குவித்து, விக்கெட்களாகச் சரித்து, அதிவிரைவில் அவன் எங்களுடைய ஸ்டார் ப்ளேயராகிவிட்டான். தினமும் டீம் பிரிக்கும்போது அவனை எந்த அணியில் சேர்த்துக்கொள்வது என்று அடிதடியே நடக்குமளவு செம கிராக்கி!

இத்தனைக்குப்பிறகும், எங்களால் அவனைச் சரிசமமாக நினைக்கவோ நடத்தவோ முடியவில்லை. இவன் வெறும் ‘காட்டடி கோவிந்தன்’தானே?

ஏனோ, நிஷாவுக்கு இந்த வித்தியாசம் புரியவே இல்லை. அவனுடைய பரம ரசிகையாகிவிட்டாள். எங்களுக்கெல்லாம் எப்போதாவது போனால் போகிறது என்று கைதட்டல் பிச்சையிடுகிற அவள், தர்மனைமட்டும் ஒரு பக்தையைப்போன்ற பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததும் எப்பப்பார் அவனையே பாராட்டிக்கொண்டிருந்ததும் எங்களுக்கு எரிச்சலைத் தூண்டியது.

’நிஷா, எங்களையெல்லாம் ஆக்‌ஷன் சரியில்லை, டெக்னிக் சொதப்புதுன்னு போட்டுக் காய்ச்சுவியே, இப்ப இவன் விளையாடறதுமட்டும் ஒழுங்கா?’

’பசங்களா, சில நேச்சுரல் டேலன்ட்ஸுக்கு டெக்னிக்ல்லாம் முக்கியமில்லை’ என்றாள் நிஷா. ’கொஞ்சம் சரியா ப்ராக்டீஸ் கொடுத்தா, சார்தான் அடுத்த ஷேவாக், தெரியுமா?’

நிஷா பேசப்பேச, எங்களுடைய காது, மூக்கு, கண்களிலெல்லாம் புகை பறந்தது. எழுதப் படிக்கத் தெரியாத தற்குறி, நாலு வார்த்தை கௌரவமாகப் பேசவராது, அழுக்குப் பட்டறை, ஏற்கெனவே கல்யாணமாகி மூன்று பிள்ளை பெற்றவன்… இவனிடம் என்னத்தைக் கண்டாள் இவள்? ஏன் இந்தப் பொருந்தாத ஜொள்ளு?

அடுத்த வாரத்தில் ஒருநாள், தெருமுனையில் தர்மனைத் தனியாகப் பார்த்தேன். சிநேகமாகப் புன்னகைத்தான். நானும் சும்மா சிரித்துவைத்தேன்.

‘உங்க வூடு எங்கிருக்கு சார்?’ என்றான் தர்மன்.

‘இங்கதான், பக்கத்துல’ என்றேன். ‘அப்புறம், உன்கிட்ட ரொம்ப நாளாக் கேட்கணும்ன்னு நினைச்சேன், நீ எப்பப்பார் அந்தப் பார்க்லதானே சுத்திகிட்டுருக்கே? ஏதும் வேலை வெட்டிக்குப் போறதா உத்தேசம் இல்லையா?’

‘என்னங்க பெரிய வேலை?’ என்று சலித்துக்கொண்டான் அவன். ‘இந்தப் பார்க்குக்கு வாட்ச்மேன்னுதான் போட்டிருக்காங்க, வருமானமெல்லாம் ஒண்ணும் பெரிசா இல்லை, அங்கேயே கூடாரத்துக்குள்ள முடங்கிக் கிடக்கறதால ஏதோ கைக்கும் வாய்க்கும் சரியா இருக்கு.’

அன்று இரவு, அப்பாவிடம் தர்மனைப் பற்றிப் பேசினேன். அவனுக்கு எங்களுடைய ஃபேக்டரியில் ’செக்யூரிட்டி’யாக வேலை வாங்கிக் கொடுத்தேன். மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளம், அங்கேயே தங்குவதற்குக் குவார்ட்டர்ஸ்.

தர்மன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. ‘நிஜமாவா சார் சொல்றீங்க?’ என்று திகைத்து நின்றான். நீங்க தெய்வம் சார்’ என்று காலில் விழுந்தான்.

‘அட, இதெல்லாம் எதுக்குய்யா? மொதல்ல உன்னோட பொருளையெல்லாம் மூட்டை கட்டு, கம்பெனி வேனை வரச் சொல்லியிருக்கேன், இன்னிக்கே புது வீட்டுக்குப் போய்ப் பால் காய்ச்சிடு, சரியா?’

தர்மனால் தன்னுடைய அதிர்ஷ்டத்தை நம்பவேமுடியவில்லை. கண் கலங்கப் புறப்பட்டுப் போனான்.

அதன்பிறகு, தர்மன் அந்தப் பூங்காப் பக்கமே வரவில்லை. நாங்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கிரிக்கெட் விளையாடினோம்.

(ஆனந்த விகடன்’ வார இதழில் வெளியான என்னுடைய சிறுகதையின் எடிட் செய்யப்படாத வடிவம்.)

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *