தி.ஜ.ர

 

தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.

இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி பெற்று சிலகாலம் கர்ணமாக வேலை பார்த்தார். திண்ணைப் பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா, மளிகைக்கடைச் சிற்றாள் என பல வேலைகள் பார்த்தார். அவருக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுந்தரவல்லி. 1916 இல் அவர் படித்த ’ஐரோப்பிய சரித்திரம்’ என்ற தமிழ் நூலின் ஐந்து பாகங்களும் தான் தனக்குத் தலைமை ஆசான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் எழுதிய முதல் கட்டுரை ஆனந்தபோதினி இதழிலும் கவிதை ஸ்வராஜ்யா இதழிலும் 1916 ஆம் ஆண்டில் வெளிவந்தன. ’சமரபோதினி’ இதழில் துணையாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, ஊழியன், சுதந்திரச் சங்கு, ஜயபாரதி, ஹனுமான், சக்தி, மஞ்சரி, பாப்பா ஆகிய இதழ்களில் பணியாற்றினார். ‘மஞ்சரி’ இதழ் ஆரம்பித்ததிலிருந்து அதன் ஆசிரியராக இருந்தவர். அது ஆரம்பிக்கும்போது பிறந்த தன் மகளுக்கு ‘மஞ்சரி’ என்றே பெயர் வைத்தார். ‘பாப்பா’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சிறுகதைத் தொகுப்புகள்

சந்தனக்காவடி (1938)
நொண்டிக்கிளி (1949)
காளிதரிசனம் (1951)
மஞ்சள் துணி (1944)
விசைவாத்து(1960)

கட்டுரைத்தொகுதி

பொழுதுபோக்கு (1937)
எப்படி எழுதினேன் (1943)
ஆஹா ஊஹூ (1946)
வளர்ச்சியும் வாழ்வும் (1956)
மொழி வளர்ச்சி (1957)
வீடும் வண்டியும் (1958)
தீனபந்து ஆன்ட்ரூஸ் (1940) (வாழ்க்கை வரலாறு)
புதுமைக்கவி பாரதியார் (1940) (வாழ்க்கை வரலாறு)
புகழ்ச்செல்வர் (1947) (வாழ்க்கை வரலாறு)
கோயரிங் (1942) (வாழ்க்கை வரலாறு)
இது என்ன உலகம் (1950)
யோசிக்கும் வேளையில்

மொழிபெயர்ப்புகள்

கூண்டுக்கிளி (ஹரீந்திரநாத் சட்டோபாத்யாய – நாடகம்) (1941)
அபேதவாதம் (பொதுவுடைமைச் சித்தாந்தம் குறித்த ராஜாஜியின் ஆங்கில உரை)
அட்லாண்டிக் சாசனம் (கட்டுரை) (1944)
ஒரே உலகம் (வெண்டல் வில்கீ – கட்டுரை நூல்) (1945)
லெனின் சரித்திரக் கதைகள் (1946)
புது நாள் (மிகைல் ஜோஷென்கோ- புதினம்) (1955)
அரசியல் நிர்ணய சபை (நேரு – உரை) (1947)* காந்தி வாழ்க்கை (லூயிஸ் பிஷர் – வாழ்க்கை வரலாறு) (1962)

குழந்தை இலக்கியப் படைப்புகள்

ரோஜா பெண் (தழுவல் கதைகள்) (1955)
காந்தி வாழ்க்கை (லூயிஸ் பிஷர் – வாழ்க்கை வரலாறு) (1962)
பாப்பாவுக்குப் பாரதி (கட்டுரை) (1962)
பாப்பாவுக்குக் காந்தி (கட்டுரை) (1964)
பாப்பாவுக்குக் காந்தி கதைகள் (1969)
குமாவுன் புலிகள் (1958)
அலமுவின் அதிசய உலகம் (லூயி கரோல் – புதினம்)
வண்ணாத்திப்பூச்சி
சமர்த்து மைனா

தி.ஜ.ர.வின் படைப்புகளை தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 2006 – 7 ஆம் நிதியாண்டில் 600 ஆயிரம் ரூபாயை அவர்தம் கால்வழியினருக்குப் பரிவுத்தொகையாக வழங்கி நாட்டுடைமை ஆக்கியது.

தி.ஜ.ர – சாரு நிவேதிதா – 2015-04-05

ஒரு கர்ம யோகி தன்னை எப்போதும் முன்னிறுத்திக் கொள்வதில்லை. அதனாலேயே ஒரு சமூகம் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்றால் அந்தச் சமூகம் பற்றி என்ன சொல்வது? இங்கே நாம் பார்க்கப்போகும் அத்தகைய ஒரு கர்ம யோகி, தி.ஜ.ர. (திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன்).

1901-ல், திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறப்பு. பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்பு வரைதான். ஆனாலும், தன் சுய முயற்சியினால் உலக சரித்திரம், விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார். ஒரு சமயம், ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் தலையங்கம்கூட எழுதினார். 1974-ல், காலமாகும் வரை சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் என்று பல்வேறு துறைகளில் சுமார் 50 புத்தகங்கள் எழுதினார்.

1938-ல் சந்தனக் காவடி என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. 1947-க்குள் நான்கு பதிப்புகள் வெளிவந்தது அத்தொகுப்பு. பிறகு விசை வாத்து, மஞ்சள் துணி, காளி தரிசனம், நொண்டிக் கிளி என்று பல சிறுகதைத் தொகுப்புகள் வந்தன. சுமார் நூறு சிறுகதைகள் எழுதியிருப்பார். மொழிபெயர்ப்பில் முக்கியமானவை – லூயி பிஷர் எழுதிய மகாத்மா காந்தி (600 பக்கங்களுக்கு மேற்பட்டது), ஆலிஸின் அற்புத உலகம், Wendell Willkie எழுதிய புகழ் பெற்ற பயண நூலான One World (இதை ஒரே உலகம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்), ராஜாஜி சிறையில் இருக்கும்போது எழுதிய அபேதவாதம் என்ற ஆங்கில நூல், ஜிம் கார்பெட் எழுதிய குமாயுன் புலிகள்.தமிழில் கட்டுரை என்ற வடிவத்தின் பிதாமகர்களாக இருந்தவர்கள், இரட்டையர் என்று அழைக்கப்பட்ட வ.ரா.வும் தி.ஜ.ர.வும்தான். அந்த இருவரிலும் தி.ஜ.ர.வின் பங்களிப்பு அதிகம் என்றே சொல்லலாம். காரணம், கண்ணதாசன் தன்னுடைய உரைநடைக்கு முன்னோடி என்று வனவாசத்தில் தி.ஜ.ர.வின் ஆஹா, ஊஹூ என்ற கட்டுரைத் தொகுப்பைக் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தன் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு வாங்கிய முன்னுரை தி.ஜ.ர.விடம் இருந்துதான்.

இவை தவிர, தமிழ்ப் பத்திரிகைத் துறையின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கத்தின் ஊழியனில் வ.ரா.வுடன் பணியாற்றினார். Time பத்திரிகையை மாதிரியாகக் கொண்டு, 1939-ல் வைகோ என்று அப்போது அழைக்கப்பட்ட வை.கோவிந்தன் துவக்கிய ‘சக்தி’ இதழின் ஆசிரியராக இருந்தார். திரு.வி.க.வின் நவசக்தி, ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, ஹனுமான், தமிழ்நாடு, சமரச போதினி, பாப்பா போன்ற பல இதழ்களில் பணியாற்றினார். அவர் ஆசிரியராக இருந்தபோது எழுதிய தலையங்கங்கள், புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டிய அளவுக்கு முக்கியமானவை. பின்னர் கடைசியாக, தமிழின் ரீடர்ஸ் டைஜெஸ்ட் என்று கருதப்பட்ட மஞ்சரி பத்திரிகையில், 22 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அந்த 22 ஆண்டுகளிலும், மஞ்சரியின் ஒவ்வொரு இதழிலும் முக்கியமான புத்தகங்களின் சுருக்கத்தை “புத்தகச் சுருக்கம்” என்ற பகுதியாகக் கொண்டு வந்தார். (அதில் ஒன்று, நீட்ஷேவின் Thus Spake Zarathustra!).

இது தவிர, பாப்பாவுக்கு காந்தி, பாப்பாவுக்கு பாரதி என்று பல நூல்களை எழுதி, குழந்தை இலக்கியத்தின் முன்னோடியாகவும் விளங்கினார். இதற்கிடையில், மகாத்மாவின் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கும் சென்று வந்தார். இப்படி 74 ஆண்டுகள் தன் வாழ்வை தமிழுக்காக அர்ப்பணித்துக்கொண்ட கர்மயோகியான தி.ஜ.ர. என்ற பெயர்கூட இன்று நம்மில் பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. தி.ஜ.ர. என்றால் தி.ஜானகிராமனா என்று கேட்கிறார்கள் பலர். இதுபற்றி மிக வருந்தி எழுதியிருக்கிறார், தி.ஜ.ர.வின் நீண்ட நாள் நண்பரான மலர் மன்னன்.

சுதந்தரப் போராட்ட தியாகிகளுக்குக் கொடுத்த நிலத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்ட தி.ஜ.ர.வின் கடைசிக் காலம், மிகவும் வறுமையில் கழிந்தது. நம்முடைய வரலாற்று உணர்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், தனது 74 வயது வரை இந்த தேசத்துக்காகவும் மொழிக்காகவும் உழைத்த அந்தச் சாதனையாளரின் புகைப்படம் நம்மிடம் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. இன்னொரு புகைப்படம் 1973-ல் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

ஃப்ரான்ஸில் ஒவ்வொரு வீதியிலும் ‘எழுத்தாளர்களை வணங்குகிறோம்’ என்ற வாக்கியத்தை எழுதி வைத்திருப்பார்கள். அதுபோல், தி.ஜ.ர.வின் இலக்கிய சாதனையைக் கருதி அரசு எடுத்த புகைப்படமா அது? அல்ல. ஹிட்லரின் வதைமுகாம்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையோ அல்லது கைகளில் கைதி எண்ணை தெரிவிக்கும் சிலேட்டை பிடித்தபடி நிற்கும் கைதிகளின் புகைப்படங்களையோ பார்த்திருப்பீர்கள். அதே போன்றதொரு புகைப்படம் அது. வறுமையின் கோரம் தாங்கிய 73 வயது முதியவர் ஒருவர். அவரைச் சுற்றி அதே கோலத்துடன் அவரது உறவினர்கள். முதியவர் ஒரு சிலேட்டை இரண்டு கைகளாலும் உயர்த்திப் பிடித்திருக்கிறார். அதில் ஆண்டிமான்ய தோட்டம் 98 என்றும், அடுத்த வரியில் 156698 என்றும் சாக்பீஸால் எழுதியிருக்கிறது. அரசின் அலுவலகக் கோப்புக்காக எடுத்த படம். அந்தப் புகைப்படத்தில் உள்ள முதியவர்தான் தி.ஜ.ர. அந்தப் புகைப்படம் பற்றி தி.ஜ.ர.வின் பேத்தி கூறுகிறார் – ‘அவரோட கடைசிக் காலத்துல மந்தவெளி குடிசை மாற்று வாரியத்துல அவருக்கு வீடு ஒதுக்கினாங்க. அங்க நாங்க போறப்ப, எங்க எல்லாரையும் நிக்கவெச்சி படம் எடுத்தாங்க. தாத்தா கைல ஒரு சிலேட்டை கொடுத்து, அதைத் தூக்கிப் பிடிக்கச் சொன்னாங்க. அதுல, அவருக்குன்னு ஒதுக்கப்பட்டிருந்த வீட்டோட விலாசம் சாக்பீஸ்ல எழுதியிருந்தது. எப்ப அந்த ஃபோட்டோவை பார்த்தாலும் கண்ணுலேருந்து ரத்தமா வரும். எப்பேர்ப்பட்ட மனுஷன்… கைல சிலேட்டை தூக்கிப் பிடிச்சுகிட்டு…’பல்வேறு துறைகளில் சுமார் 60 ஆண்டுகள் எழுதிய (தி.ஜ.ர.வின் முதல் படைப்பு, அவரது 15-வது வயதிலேயே வந்துவிட்டது) ஒரு ஆளுமை பற்றி ஒரு சிறிய அறிமுகக் கட்டுரையில் எவ்வளவு எழுதிவிட முடியும் என்பதால், தி.ஜ.ர.வின் சிறுகதைகளில் மட்டும் ஒன்றிரண்டைப் பார்ப்போம்.தமிழ்ச் சிறுகதை என்றால் அதன் பட்டியல் மௌனி, புதுமைப்பித்தன், கு.ப.ரா. என்றுதான் போகுமே தவிர, ஒருபோதும் அதில் நான் தி.ஜ.ர.வின் பெயரைக் கண்டதில்லை. ஒரு சாதனையாளர், தன்னடக்கத்தின் காரணமாகத் தன்னை ஒரு சாதாரணன் என்று சொல்லிக்கொண்டால், நாமும் அவரை அப்படியே கருதி அவர் பெயரை அழித்துவிடல் தகுமா? அவர் கதைகளைப் படித்தபோது, அவை நம் சிறுகதைச் சிற்பிகளின் கதைகளுக்குக் கிஞ்சித்தும் குறைவானதாக இல்லை என்பதோடு, மரத்தடிக் கடவுள், பெட்டி வண்டி, பொம்மை யானை போன்ற கதைகள், உலகின் மிகச் சிறந்த கதைகளுக்கு நிகரானவையாகத் தெரிந்தன. மரத்தடிக் கடவுளின் கதாநாயகன் கடவுள். கடவுள், வழிப்போக்கன் ஒருவனிடம் ஒரு உதவி கேட்கிறார்.‘’வா மகனே, இப்படி வா! அடடா! இந்த மழையிலே இப்படித் தவிக்கிறாயே! பாவம்! ஆமாம், இதுதான் என்ன உக்கிரமான மழை! நகரத்தை நரகமாக்கும் மழை அல்லவா இது? மதுவுண்டு வெறிகொண்டு அடியற்று விழப்போகும் வீரர்கள், ரணகளத்திலே ஆடுவதுபோல ஆடுகின்றன இந்த மரங்களெல்லாம். வானும் மண்ணும் பொரும் போரோ இது? அல்லது பிரளயம்தானா? – இப்படியெல்லாம் நீ அஞ்சுகிறாய் அல்லவா? அல்ல மகனே, அல்ல; இதுதான் தேவர்கள் உலா வரும் நேரம்; விளையாடும் நேரம்; பேசும் நேரம். அதனால்தான், நான் உன்னோடு பேசுகிறேன். ஆம், நான் ஒரு தெய்வம்தான். தெய்வம்தான் உன்னோடு பேசுகிறேன். ஆனால் உலா வந்த தெய்வம் அல்ல; சிறைப்பட்ட தெய்வம்”.இப்படியாகத் தன் கதையைச் சொல்லத் துவங்குகிறது தெய்வம். இரண்டு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்த வேளையில், பக்கத்தில் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்து அதற்கு வண்ணம் பூசி கடவுளாக்கிவிடுகின்றன. விளையாடி முடித்ததும், அந்தக் ‘கடவுளைத்’ தங்களோடு எடுத்துச் செல்ல பெற்றோர் அனுமதிக்கவில்லை. சாலையோரத்தில் கிடந்த ‘செங்கல் கடவுளை’ நட்டுவைத்து உண்டியல் குலுக்குகிறான் பூசாரி. நல்ல கூட்டம். திருப்தியான வசூல். அப்போது கதையில் ஒரு திருப்பம். தடிகளுடன் சில போலீஸ் ஜவான்கள் வருகிறார்கள். ரஸ்தாவில் போக்குவரத்துக்குக் கேடாக இருப்பதாகச் சொல்லி, கூட்டம் கலைய வேண்டும் என்று கட்டளை போடுகிறார்கள். அந்தக் காலம் கொஞ்சம் பரபரப்பான காலம். அரசியல் பரபரப்பு. போலீஸ்காரர்கள் என்ன செய்தாலும் கேட்பாரில்லை. அவர்கள் அப்போது சர்வாதிகாரிகள். ஜனங்கள் ஓட்டம் எடுத்தார்கள். ஜவான்கள் என்னைத் தூக்கி எறிந்தார்கள். அடப்பாவிகளா! அவர்களுக்குத்தான் என்ன துணிச்சல்! ஆனால், அவர்களை நான் என்ன செய்ய முடியும்? ஜில்லா கலெக்டர் துரை கண்ணைத் திறந்து பார்த்து, அவர்களைத் தண்டிக்கமாட்டாரா என்று பிரார்த்தித்துக்கொண்டே ஆகாயத்தில் பறந்தேன். என் சொந்த பலத்தால் பறக்கவில்லை. ஜவான்களின் புஜபலம் எனக்குள் பொழிந்த சக்தியாலே பறந்தேன். மரத்தடியிலே ஒரு குப்பை முட்டு இருந்தது. கணக்காய் அதைக் குறி பார்த்து வந்து விழுந்தேன். இல்லாவிட்டால், உடைந்து சுக்குநூறாய்ப் போயிருப்பேன். அப்படித்தான் தொலைந்தேனா! பின்னால் இப்படி என் நிம்மதி குலையாமல் தப்பியிருப்பேனே!”“நான் பிறந்து ஐந்தாறு மாதகாலம் ஆகிவிட்டது. நான் எப்படிப் பிறந்தேன்? குழந்தைகளின் நிஷ்களங்கத்திலே பிறந்தேன். படைப்பின் ரகசியமே இதுதான். அறிவாராய்ச்சியிலே படைப்பு எதுவும் நிகழ்வதில்லை. அணுவைப் பிளக்கும் ஆயுதம், விஞ்ஞானியின் கற்பனையிலே பிறக்கிறது. கவிஞனின் கனவிலே பிறக்கிறது கவிதை. பிரம்மத்தின் மாயையிலே பிறக்கிறது பிரபஞ்சம். பக்தன் குழந்தையாகும்போது பிறக்கிறது தெய்வம். குழந்தையின் விளையாட்டே உன்னதமான பக்தி”.மரத்தடிக் கடவுளுக்குப் பூஜை நடக்கிறது. பூசாரியின் உண்டியலும் நிறைகிறது. சில மாதங்கள் கழித்து ஒருநாள், அந்தக் குழந்தைகள் தன் தகப்பனாரோடு அங்கே வரும்போது குழந்தை என் கல்லு, என் சாமி என்று ஓடி வருகிறது. ‘‘பூசாரி முரட்டுத்தனமாகக் குழந்தையைத் தள்ளிவிட்டான். குழந்தை மூர்ச்சித்துவிட்டாள். அந்த அதிர்ச்சியை அவளால் தாங்க முடியவில்லை.அன்றொரு நாள் எனக்கு உயிர் கொடுத்து என்னை விளையாடிக் கொஞ்சிய என் தாய் அவள். அவளுக்கு இப்போது காலை மாலை இருவேளையும் உடுக்கடித்துத் ‘துண்ணூறு’ போட ஆரம்பித்துவிட்டான் பூசாரி. அவனிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற ஒரே ஒரு வழிதான் உண்டு. பூசாரியை நான் ஒன்றும் செய்ய முடியாது. என் அருளையே விலைக்கு விற்கும் தரகனை நான் என்ன செய்ய முடியும்? நீ எனக்கு ஒரு காரியம் செய்ய வேண்டும். உனக்குக் கோடி புண்ணியம் உண்டு. இப்படியே என்னைப் பெயர்த்தெடு. நேரே கிழக்கே போ. அதோ பார், அங்கே ஆரவாரமாக ஆர்ப்பரித்துப் பொங்கியெழுந்து அலைவீசிக் கொண்டிருக்கிறதே ஆழங்காணாத கருங்கடல். அதன் நடுவே என்னை வீசியெறிந்து விடு. இதுதான் மகனே, நான் உன்னைக் கேட்கும் வரம்”.அடுத்து, பெட்டி வண்டி என்ற சிறுகதை. இதை முப்பதுகளில் எழுதியிருக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. தஞ்சாவூர் ஜில்லாவில் ஒரு கிராமம். ஒரு மிராசுதார். படித்தவர். வேதாந்தி. அவருக்கு ரத்தினம் என்று ஒரு நண்பன். வாலிபன். டில்பஹார் தைலம் பூசி வருவான். முடி அதிகம் இல்லாவிட்டாலும், தளுக்காக முடிந்து கொண்டை ஊசி செருகிக்கொள்வான். சில சமயம், பெண்களைப்போல் செருகு கொண்டையும் போட்டுக்கொள்வான். மயிர் பறக்காது. ஆனாலும் அதைப் படியவைக்கும் ‘கமான் வளைவுச் சீப்பு’ அவன் தலையிலே எப்போதும் அலங்காரப் பொருளாய் அமர்ந்திருக்கும்.ஒருநாள், தான் செய்த புதிய பெட்டி வண்டியில் தன் மனைவியோடு ஒரு கல்யாணத்துக்குச் செல்கிறார் மிராசுதார். அவருக்கு ஒரே ஒரு குழந்தைதான். ஒரு குழந்தை என்றால் அந்தக் காலத்தில் மலடி என்றே சொல்வார்கள். மிராசுதாரின் மனைவி அழகி. பெண்களைப் பெட்டி வண்டியில் அனுப்பிவிட்டு தான் மட்டும் பின்னால் ஒரு வண்டியில் செல்கிறார் மிராசுதார். பெட்டி வண்டியை ஓட்டுவது ரத்தினம். திடீரென்று அவன் மீது ஒரு பெண்ணின் புஜம் இடிக்கிறது. வண்டி ஓட்டத்தில் தொடர்ந்து இடிக்கிறது.அடுத்து, தி.ஜ.ர. எழுதியதைப்போல் உலக இலக்கியத்திலேயே யாரும் எழுதியதில்லை என்று எனக்குத் தோன்றியது. நான்கே வார்த்தைகள். “கல்யாணச் சந்தடியிலே அது நடந்துவிட்டது”.கதையில் அடுத்து வருவது, கிரேக்கத் துன்பியல் நாடகங்களிலே நடப்பது. படித்துப் பாருங்கள். இப்பேர்ப்பட்ட எழுத்தை படைத்தவரின் பெயர்கூடத் தெரியாமல் இருப்பது நியாயமா? இதை வாசிக்கும் அன்பர்கள், தி.ஜ.ர.வின் நூல்களை வாங்கிப் படியுங்கள்; அன்பளிப்பாகக் கொடுங்கள்; கதை தவிர, நம் அறிவை வளர்த்துக்கொள்ளவும் எத்தனையோ எழுதியிருக்கிறார். குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுங்கள். முக்கியமாக பதிப்பாளர்கள், தி.ஜ.ர.வின் அத்தனை எழுத்தையும் ஒன்று திரட்டிப் பிரசுரியுங்கள். நம் சமூகம் மேன்மையுறும்!

தி.ஜ.ர.வின் புகைப்படம் பற்றிய கட்டுரை: http://www.kalachuvadu.com/issue-88/katturai01.asp

நன்றி: காலச்சுவடு, ‘ஞானாலயா’ கிருஷ்ணமூர்த்தி, திலகவதி.

நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்து எழுத்தில் சாதித்த தி.ஜ.ரங்கநாதன்! கதை சொல்லிகளின் கதை-14 – ச.தமிழ்ச்செல்வன் – 04 Mar 2018

`மூவி மார்ட் சொந்தக்காரர் காக்கய்யா செட்டியார் என் நண்பர். என்னுடைய நண்பர் என்றவுடனே ஏதோ பொரி, கடலை விற்கும் வியாபாரியாகத்தான் இருக்க வேண்டும் என யாரும் நினைக்கவேண்டியதில்லை. காக்கய்யா லட்சாதிபதி. மூவி மார்ட் பிரமாண்டமான கடை’ என்று ஆரம்பிக்கிறது தி.ஜ.ர-வின் `கன்னிகையின் பிரார்த்தனை’ கதை.

ஒரு பத்திரிகையாளரும் (அவர்தான் கதை சொல்பவர்) காக்கய்யாவும் நெருங்கிய நண்பர்கள். அந்த ஊரில் மனப்பூர்வமாக நாகரிக வாழ்க்கை நடத்த முயலக்கூடிய எந்த மனிதனும் காக்கையா செட்டியாரின் கடைக்கு வந்துதான் தீர வேண்டும்.

`காருக்கு நல்ல டயர், நவீன பாதரட்சைகள் முதல் மனிதனுடைய நாகரிகத்தை எந்தவிதத்திலும் மலிவமடையாமல் காக்கக்கூடிய ரெஃப்ரிஜிரேட்டர் முதல் சேஃப்டி பின், சில்க் ரிப்பன்கள் வரை சகல சாமான்களும் காக்கையா கடையில் எந்நேரத்திலும் விற்பனைக்குத் தயார்.

தவிர, காக்கையாவும் ஒரு வியாபார நிபுணர். அமெரிக்காவிலிருந்து வந்துவிட்டுப் போன ஒரு துரை, அவருக்குச் சொல்லிக்கொடுத்த ரகசியம், ஒரு பிச்சைக்காரனிடம் நாற்பது ரூபாய்க்கு சாமான் விற்கும் சாமர்த்தியம். (அது ஒரு ஆர்மோனியப்பெட்டி என்றும் அதை வாங்கியதன் மூலம் அந்தப் பிச்சைக்காரனின் வருமானம் பெருகியது என்றும் சொல்கிறார்.)

ஒருநாள் `கேமரா’ எனச் சொல்லப்படும் `ஒற்றைக்கண்’ சாமான்கள் கண்சிமிட்டிக்கொண்டு இருந்தன. “பம்பாயிலிருந்து பிளேனில் வந்தது. இந்தப் படம், இந்த கேமராவால் என் எட்டு வயது பையன் எடுத்தது” என்றெல்லாம் கூறுகிறார் காக்கையா. `வியாபாரம் என்றாலே புளுகுதான்’ என்று அவரே கூறுவாராம்.

`மிகவும் உபயோகமாக இருக்கும் வெள்ளைக்காரன் தேசத்திலெல்லாம் போட்டோ எடுக்கத் தெரியாதவன் பத்திரிகைத் தொழிலுக்கே லாயக்கில்லாதவன்’ என்றெல்லாம் சொல்லி, தன் பத்திரிகைக்கார நண்பரிடமே ஒரு கேமராவை விற்றுவிடுகிறார். `கேமராவின் விலை இருபத்து நாலே மூணுவீச அரை வீசமாய் திகைந்தது. அதோடு போயிற்றா பிளேட், தட்டு, தங்க மருந்து, பிம்பம் திரட்டும் திரவகம் என்று, வேறு என்ன என்னவோ சாமான்களையும் சுமத்திவிட்டார்’. குழந்தை கோகிலத்துக்கு, காப்பு வாங்க வைத்திருந்த பணம் அம்பேல்.

தொடர்ச்சியாகப் பத்திரிகைகளில் வெளியாகும் புகைப்படப் போட்டிகளில் கலந்துகொண்டு, போட்ட பணத்தை எடுத்துவிட முடிவுசெய்துகொள்கிறார்.

இவரது போட்டோ பிடிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள, இவரின் குடும்பத்தினரைப் படம்பிடிக்கிறார். இருட்டு அறை ஒன்றைத் தயார்செய்துகொள்கிறார். கேமராப் புத்தகத்தின் படம் அலம்பும் அத்தியாயத்தை பல முறை படித்து செல்லுலாயிடு மருந்துத் தண்ணீரில் பிளேட்டை வைத்து, ஊஞ்சலாட்டுவதுபோல் அசைத்து… கடைசியில் படம் இரண்டும் ஒரே சூன்யம்.

தவறு இவருடையதல்ல. அந்தப் புத்தகத்தில் வீட்டுக்குள் எடுக்கலாகாது என்று எங்கும் காணோம். `வெளியில் வைத்து எடுக்க வேண்டும் என்ற வாக்கியம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகிடந்தது. காக்கையாவின் அறிவுரையின் பேரில் ஒரு நல்ல போட்டோக்காரனை வைத்து பிளேட்டுகளை அலம்பித் தரவைக்கிறார்.

மல்லிகைப் புதர் அருகே வைத்து எடுத்த குழந்தை கோகிலத்தின் படத்தைக் கழுவிக் கொடுக்க போட்டோக்காரரிடம் கொடுக்கிறார்.

“குழந்தையை நீங்கள் கரையான் புற்றருகில் நிறுத்தியிருக்கலாகாது சார். குழந்தை பயந்துகொண்டு ஒரே ஆட்டமாய் ஆடியிருக்கிறது” என்றார் அந்தக் கைதேர்ந்த போட்டோக்காரர்.

அது தூர நிர்ணயத்தின் விஷயம் என்று புரிகிறது இவருக்கு. தீபாவளி வந்துவிடுகிறது. குழந்தைக்கு வாங்கவேண்டிய காப்புக்கான பணம்தான் கேமரா ஆகிவிட்டதே. வருவது வரட்டும் என்று இரண்டு ரூபாய்க்கு அருமையான கில்ட் காப்பு வாங்கி வைத்துவிடுகிறார். அந்தத் தீபாவளிக்குக் காரியங்கள் செய்வதற்கு, மனைவியின் பிடிவாதத்தின்பேரில் உதவிக்கு ஒரு பாட்டியை ஏற்பாடு செய்துகொள்கிறார்கள்.

“அந்தப் பாட்டியை ஒரு படம் எடுக்கலாமே!” என்கிறாள் மனைவி.

இந்தக் குறும்புவார்த்தையைக் கேட்டு வருத்தப்படவேண்டியவன் நானா, அந்தப் பாட்டியா? நான்தானே! ஆனால், இதற்கு நேர்மாறாக பாட்டிக்குக் கோபமுண்டாகி, அவளைc சமாதானப்படுத்துவது பிரம்மப்பிரயத்தனமாகிவிட்டது. படமெடுத்தால் ஆயுசு குறைந்துபோகுமாம். நிச்சயமாகப் படமெடுக்கப்போவதில்லை என்ற உறுதியின் பிறகுதான், பாட்டி வேலைசெய்யச் சம்மதிக்கிறாள்.

களேபரத்தில், கேமராவை மூடிவைக்க மறந்துபோகிறது. `இரவு இருட்டுதானே அறையில்’ என்று சும்மா இருந்துவிடுகிறார். காலையில் பாட்டியைக் காணவில்லை. கேமர வெறும் பிளேட்டில், பாட்டி அந்தக் காப்பை கையில் மறைத்துக் கிளப்பிக்கொண்டுபோவது அவளது கை மத்தாப்பு வெளிச்சத்தில் படமாகியிருந்தது. பேசிய சம்பளமும் இரண்டு ரூபாய்… காப்பும் இரண்டு ரூபாய். அதனால் நஷ்டமொன்றும் இல்லை.

ஒரு தமாஷுக்காக அந்தப் படத்தைப் போட்டிக்கு அனுப்பிவைக்க, அது முதல் பரிசாக நூறு ரூபாய் பெறுகிறது. மேலும் அந்தப் படத்தைக் குறித்து அந்த போட்டோ நிபுணர் எழுதியிருந்த மதிப்புரையின் சுருக்கமாவது… `இதற்கு முதல் பரிசு ரூபாய் நூறையும் அப்படியே கொடுத்துவிடுவது எனத் தீர்மானித்திருக்கிறோம். இந்த விஷயம் ஏழு ஜட்ஜுகளால் ஏகமனதாய் முடிவுசெய்யப்பட்டது. படத்தில் ஒளியும் நிழலும் அற்புதமானதோர் இசைவுடன் விழுந்திருக்கின்றன. ஒரு வாலிபப் பெண்ணின் எந்த நிலை மிக நேர்த்தியாக இருக்குமோ, அந்த நிலையில் எடுக்கப்பட்டிருக்கிறது. கன்னியின் ஹஸ்த மறைவு, அவள் காதலின் எல்லையில்லாத் தன்மை வாய்ந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மொத்தத்தில் இது நமக்கு சில முதல் தர வங்காள ஓவியங்களை ஞாபகமூட்டுகிறது. இதற்கு ஏற்ற தலைப்பு `கன்னியின் பிரார்த்தனை’ என்பதேயாகும்.’

அந்தப் பரிசுத்தொகை இவருடையதா… பாட்டியுடையதா? சர்ச்சைக்குப் பிறகு மனைவி சொல்லியபடி, அது கோகிலத்தின் காப்புப்பணம் என்று முடிவாகிறது.

(தி.ஜ.ர-வின் `கன்னியின் பிரார்த்தனை’ கதைச் சுருக்கம்)

கதையின் போக்கில் தன் கேமரா வியாபாரத்தை அறிவித்ததும் அவருடைய மனைவி வீணா, தன்னையும் மகள்களையும் படமெடுக்கச் சொல்கிறாள். வீணா கேமரா முன் நிற்க, சிங்காரிப்புக்கும் மாற்றுப்புடவைக்கும் தயாராகையில் அந்த நிலையிலேயே வேகமாக ஒரு படம் எடுத்துவிடுகிறார் காக்கையா.

`நானா ஏமாறுகிறவன்? அவள் திரும்புவதற்குள் ஒரு `ஸ்நாப்’ (சரேல் படம்) எடுத்துவிட்டேன்’ என்று தி.ஜ.ர எழுதுகிறார். `ஸ்நாப்’ என்ற ஆங்கிலச் சொல்லை `சரேல் படம்’ என, என்ன ஒரு கச்சிதமாகக் காட்சிரூபமாக மொழிபெயர்த்திருக்கிறார்! ஆம். அவர் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. லூயி ஃபிஷரின் `காந்தியின் வாழ்க்கை’ என்ற நூலை இவர்தான் மொழிபெயர்த்தார். டால்ஸ்டாயின் `குழந்தைகள் அறிவு’, ஜிம் கார்பெட்டின் `குமாவும் புலிகளும்’ ராஜாஜியின் `அபேதவாதம்’, லூயி காரல்லின் `அலமுவின் அற்புத உலகம்’, லெனின் கதைகள் போன்றவை அவருடைய மொழிபெயர்ப்பில் சில.

சிறந்த சிறுகதைகள் பல எழுதியிருந்தாலும், இவரது `பொழுதுபோக்கு’, `ஆசிய ஜோதி ஜவஹர்’, `இது என்ன உலகம்’, `புதுமைக்கவி பாரதியார்’ போன்ற கட்டுரைத் தொகுதிகள் மிகப் பிரபலம். பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவுக்கு `ஆசிய ஜோதி ஜவஹர்’ கட்டுரைத் தொகுப்பை, தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (பிரசுரத்துக்காக அல்ல. தமிழ் தெரியாத நேரு படிப்பதற்காக) அனுப்பியிருக்கிறார் என்பது வியப்பூட்டும் செய்தி!

“தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன், 1901-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்து, 1974-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 74 ஆண்டுகள் வாழ்ந்தவர். நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் மூத்தவர். சிறுகதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் எனப் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச்சென்றுள்ளவர். தான் செயலாற்றியது எந்தத் துறையானாலும் அந்தத் துறைக்கு வளம் ஊட்டிச் சிறப்பித்தவர். தேசியப் போராட்டத்திலும் பங்குகொண்டு சிறைக்குச் சென்றவர். எவ்வளவு சிறப்பான ஆளுமையானபோதிலும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர்; அடக்கம் மிகுந்தவர்” என்று குறிப்பிடுகிறார் இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர். பட்டங்களோ, விருதுகளோ பணமுடிப்புகளோ அவரை வந்தடைந்ததில்லை; அதை அவர் எதிர்பார்த்ததுமில்லை. அந்தக் காலத்தில் அவரைச் சூழ்ந்த பலரையும்போல தம் இயல்பில் வாழ்ந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் மாதாந்திர ஊதியம் என்றெல்லாம் தரப்பட்டபோதிலும், காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள் எல்லோரையும் நன்கு தெரிந்தபோதிலும் தம் இயல்பில் வாழ்ந்த வாழ்வுக்கு `தியாகம்’ என்று பெயர் சூட்டி அங்கீகாரமும் பிரதிபலனும் கோரவில்லை.

அவர் 1974-ம் ஆண்டில் இறந்தபோது அவர் சொத்து எதுவும் விட்டுச்செல்லவில்லை. குடும்பம் வறிய நிலையில்தான் இருந்தது. அவரின் குமாரர்கள் தம் வழி சென்றுவிட்டனர். இது எங்கும் அநேகமாக நேர்வதுதான். அவரது இரண்டாவது மகள் பாப்பாதான் வீடுகளில் சமையல் வேலைசெய்து தன் தந்தையையும் தாயையும் காப்பாற்றி வந்திருக்கிறார். தி.ஜ.ர-வின் மறைவுக்குப் பிறகும் இதே நிலை. 2008-ம் ஆண்டில் தமிழக அரசு தி.ஜ.ர-வின் எழுத்துகளை நாட்டுடமையாக்கி, ஆறு லட்சம் ரூபாய் வழங்கியது. அதை பங்குபோட்டுக்கொண்டனர், திடீரெனத் தோன்றிய தி.ஜ.ர-வின் சட்டபூர்வமான வாரிசுகள். இதுவும் அநேகமாக எங்கும் நடப்பதுதான். அதில் தி.ஜ.ர-வையும் தாயையும் காப்பாற்றிவந்த பாப்பாவின் பங்கு மிகச் சிறியது. அதுவும் தான் இருந்த வறிய நிலையில் கடன் கொடுத்தவர்களுக்குப் போயிற்று. அந்தக் குடும்பத்துக்காக இலக்கிய நண்பர்கள் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபடும் நிலை இருந்தது.

தஞ்சை மாவட்டம் திங்களூரைச் சேர்ந்த ரங்கநாதன் படித்தது, நான்காவது வரைதான் என்பது குறிப்பிடத்தக்கது. கணிதத்திலும் அறிவியலிலும் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆங்கிலம் பயின்றவர். திண்ணைப்பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா எனப் பல பணிகள் செய்தவர்.

ஒரு கட்டுரையாளராகத் தொடங்கிய தி.ஜ.ர., கவிதைகள் கதைகளும் எழுத ஆரம்பித்தார். தன்னுடைய 23-வது வயதில் தஞ்சையிலிருந்து வெளிவந்த `சமரபோதினி’-யில் உதவி ஆசிரியராக அமர்ந்தார். பிறகு, `ஊழியன்’ என்ற பத்திரிகையில் அமரர் வ.ரா-வுடன் இணைந்து பணியாற்றினார். திரு.வி.க. `நவசக்தி’ ஆரம்பித்தபோது அதில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். “உன் வேலைக்கான கடிதத்தில் `க்’ `த்’ பிழைகள் இல்லை என்பதால்தான், உன்னை வேலைக்கு அழைத்தேன்” என்றாராம் திரு.வி.க.

அடுத்து வந்த இருபது ஆண்டுகாலம் இடைவெளியின்றி சுதந்திரச்சங்கு, ஜயபாரதி, தமிழ்நாடு, ஹனுமான், சக்தி, பாப்பா இந்துஸ்தான் ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். பிறகு `நவமணி’ இதழ் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் ஆசிரியராகவே சேர்ந்தார். சக்தி கோவிந்தன் அவர்கள் `சக்தி’ இதழை ஆரம்பித்தபோது அதிலும் பங்காற்றியுள்ளார். 1940 முதல் 1946 வரை சக்தியின் ஆசிரியராக தி.ஜ.ர பணியாற்றினார்.

உலகப் புகழ்பெற்ற `ரீடர்ஸ் டைஜஸ்ட்’ பாணியில் தமிழில் வந்த ஒரே இதழ் `மஞ்சரி’தான். இந்த இதழ் ஆரம்பித்ததிலிருந்து சுமார் 40 ஆண்டுகள் அதன் ஆசிரியராக தி.ஜ.ர இருந்தார். மஞ்சரி இதழின் பெருமைகளில் ஒன்று, அதில் வெளியான புத்தகச் சுருக்கங்கள். அவற்றைச் செய்தது தி.ஜ.ர. மூலநூலைப் படிக்கவில்லையே என்ற குறையே ஏற்படாத அளவுக்கு மூலநூலின் சுருக்கத்தை அதன் அழகியல் அம்சங்களும் மிளிரும்வண்ணம் மொழிபெயர்ப்பார்.

`கார்ல் மார்க்ஸின் `தாஸ் கேப்பிடல்’ படித்து கிரகித்துக்கொண்டு சுருக்குவது என்பது பகவான் வாமன அவதாரமாகத் தோன்றுவதுபோல, `மூலதனம்’ புத்தகச் சுருக்கம் தி.ஜ.ர-வின் பெருமைக்கு உதாரணம்’ என்று குறிப்பிடுகிறார் விட்டல்ராவ். (`தி.ஜ.ரா-வின் எழுத்தும் தேசிய உணர்வும்’ என்னும் நூலில்) சந்தனக்காவடி, காளி தரிசனம், நொண்டிக்கிளி, விசை வாத்து, மஞ்சள் துணி, சமத்து மைனா ஆகிய சிறுகதைத் தொகுதிகளில் அவரது கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் எவையும் இப்போது கிடைக்கவில்லை.

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சேகரத்திலிருந்த `சந்தனக்காவடி’ தொகுப்பும் அல்லையன்ஸ் வெளியிட்டுள்ள `பொழுதுபோக்கு’ என்னும் கட்டுரைத் தொகுப்பு மட்டுமே எனக்கு வாசிக்கக் கிடைத்தன. அல்லயன்ஸ் மீண்டும் அவருடைய கதைத் தொகுதிகளைக் கொண்டுவரப்போவதாக ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொன்னார். `பொழுதுபோக்கு’ கட்டுரைத் தொகுதி குறித்து க.நா.சு. தன்னுடைய `படித்திருக்கிறீர்களா?’ என்கிற கட்டுரைத் தொகுப்பில் பாராட்டிக் கட்டுரை எழுதியுள்ளார்.

“மூன்று நாள்களாக ஏன் வரவில்லை?” என்று என்னை வினவினார் வைத்தியநாதய்யர்.

`அதற்கு ஏதோ சமாதானம் சொன்னேன். சொன்ன பதில் இப்போது ஞாபகம் இல்லை. ஆனால், பின்வரும் விஷயங்கள் மட்டிலும் என்னவோ மிக நன்றாக ஞாபகத்தில் இருக்கின்றன’ என்று தொடங்கும் `சந்தனக்காவடி’ என்ற கதை, கடவுள், கடவுள் நம்பிக்கை, கடவுள் நிகழ்த்தும் அதிசயம் இவை பற்றிய விவாதத்தை முன்வைக்கும். அந்த ஊரில், ஆண்டுதோறும் சாமுண்டித்தேவன் காவடி எடுப்பது ரொம்பவே பிரசித்தம். அவன் கூழாங்கற்களைக் கட்டிக்கொண்டு காவடி எடுத்தால், அது கோயில் வாசலுக்குப் போகும்போது கற்கண்டாக மாறி இருக்கும். இதைக் கண்ணாரக் கண்டவர் வைத்தியநாதய்யர். ஆனால், அதை நம்ப மறுப்பவர் கதை சொல்லி. தவிர, உடலை வருத்திக் கடவுளை வணங்குபவர் தாமச குணம்கொண்டோர் என்பது அவரது வாதம். உடன் நிற்கும் கிட்டா அய்யருக்கோ சாமுண்டித்தேவன் மீது சந்தேகம். ஆனால், `இம்மாதிரி அதிசயங்கள் எல்லாம் தூரத்து ஊர்களில் உள்ள கோயில்களில்தான் நடக்க முடியும். உள்ளூரில் நடக்காது. ஆகவே, வைத்தியநாதய்யர் சொல்வதை நம்ப முடியாது’ என்கிற கட்சி.

இந்த வருடம் சாமுண்டித்தேவன் `சந்தனக்காவடி’ எடுக்கிறான். கவடியில் ஒரு செம்பு நிறைய சேறு அள்ளிக்கொண்டு போனால் கோயில் வாசலில் அது சந்தனமாகிவிடும் என்பது நம்பிக்கை. ஆகவே, விவாதித்த மூன்று பேரும் அதைக் கண்ணாரக் கண்டுவிடுவது என்று தீர்மானிக்கிறார்கள். சாமுண்டித்தேவன் கொண்டுபோகும் சேறு உண்மையிலேயே சந்தனமாகிவிடுகிறது. இவர் தோல்வியை ஒப்புக்கொள்கிறார். ஆனால், மறுநாள் குளத்தில் குளிக்கும்போது இவர் காலில் ஒரு செம்பு தட்டுப்படுகிறது. எடுத்தால் அது சேறு நிறைந்த செம்பு. சாமுண்டி எல்லோர் முன்னிலையில் கட்டிய சேற்றுச் செம்பு அது. ஸ்நானம் செய்ய குளத்தில் மூழ்கும்போது அதைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே ஏற்கெனவே வைத்திருந்த சந்தனச் செம்பைக் கட்டிக்கொண்டுவிட்டான் என்ற குட்டு வெளிப்படுகிறது. இது நாத்திகம் பேசும் கதை அல்ல.

“கடவுளுக்குக் கூறப்படும் இலக்கணத்தின்படி, அவர் என் உள்ளத்தையும் இயற்கையையும் அறியாதவராக இருக்க முடியுமா? உள்ளத்தை, தன் சொந்த உள்ளத்தைக்கூட அளந்தறிய முடியாத மனிதனுக்குத்தான் அன்பைக்காட்டும் அறிகுறிகள் வேண்டும். எல்லாம் வல்லவரென்று கருதப்படும் இறைவனுக்கும் அப்படியா? எல்லாம்வல்ல கடவுளுக்கு நம்மாலாக வேண்டியது ஒன்றுமில்லை. கடவுளிடம் பக்தி எனக்கு உண்டா இல்லையா என்பதை வெளி உலகுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. வெளி உலகம் அதை என்னிடம் தெரிந்துகொள்ள உரிமைகொண்டதும் இல்லை. கடவுளிடம் பக்தியற்ற நாஸ்திகனாகவும் பொய்யனாகவும் நான் இருப்பேனானால், அதை வெளி உலகம் அறிந்துகொள்ளத்தான் முடியுமா?”

இந்தக் கடவுள் கொள்கையைச் சொல்லவருவதுதான் இந்தக் கதை. இதேபோன்ற கருத்தை `பைத்தியக்காரி’ கதையில் வரும் பசுபதி கதாபாத்திரம் வழியாகவும் தி.ஜ.ர சொல்கிறார்.

“ `நட்ட கல்லை தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்துறீர்’ என்ற பாட்டைப் பாடி இதனாலெல்லாம் ஒன்றுமில்லை. மனத்தில் சுத்தம் வேண்டும். வாக்கில் சத்தியம் வேண்டும். தேகம் செய்யும் காரியங்களுக்கு ஆத்மா ஜவாப்தாரியல்ல. நாம் தாமரை இலை நீர்த்துளிபோல் இருக்க வேண்டும்.” பொதுவாக அன்றைக்கு நடுத்தரவர்க்கத்தின் மீது அழுத்தமான தாக்கம் செலுத்திய காந்தியத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்தத் தேகம்-ஆத்மாவைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சந்தனக்காவடி கதையின் போக்கில் சரஸா ஒரு பாடலைப் பாடுகிறாள். அது `லாலா கொலைச்சிந்து’. அந்த இடத்தில் இந்தச் சிந்துகள்குறித்த சரித்திரத் தகவலை கதையின் ஓட்டத்தோடு தி.ஜ.ர சொல்லிவிடுகிறார்…

“அது சிந்துகள் காலம். எதற்கெடுத்தாலும் சிந்துகள் கட்டி தெருவில் காலணா, அரையணா புத்தகங்களாக விற்க ஆரம்பித்துவிடுவார்கள். சந்தனத்தான் சிந்து’, `வீராணம் ஏரி உடைப்பு சிந்து’ `பாப்பாத்தியம்மாள் பூனைக்குட்டி பெற்ற சிந்து’ `திருப்பதி வெங்கடாசலப் பெருமாள் சாட்சி சொன்ன சிந்து’ இப்படிப் பல சிந்துகள் தாண்டவமாடிய காலம். இப்போதல்லவா மூலை முடுக்கிலெல்லாம் தமிழ்ப் பத்திரிகைகள் இறைகின்றன. அந்தக் காலத்தில் இந்தச் சிந்து புத்தகங்கள்தாம் சமாசாரப் பத்திரிகைகளின் வேலையைச் செய்தன.” (மதுரை மீனாட்சியம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தைக் கண்டித்து அக்கிரஹாரத்துப் பெண்மணி ஒருவர் எழுதி அன்று விற்பனைக்கு வந்த `சிந்து’ புத்தகம் இவ்விடம் நினைவுக்குவருகிறது.)

இப்படி, கதைக்குள் சமகாலத்தைச் சொல்வது தி.ஜ.ர-வின் பாணி. அது பற்றி `சந்தனக்காவடி’ தொகுப்பின் முன்னுரையில் அவரே குறிப்பிடுகிறார். “நமது கதைகளில் நமது பழக்கவழக்கங்கள் நிறைந்திருக்க வேண்டும். நமது நடை உடை பாவனைகள் நிரவியிருக்க வேண்டும். தேசிய மணம் கமழ வேண்டும். இதைவிட்டு அந்நிய நாட்டுப் பழக்கவழக்கங்களைப் புகுத்தி எழுதுவது அசம்பாவிதமாகும். அதனால் பயனுமில்லை. இப்படிச் செய்வதைவிட அயல்நாட்டுச் சிறந்த கதைகளை மொழிபெயர்ப்பதே மேலாயிருக்கும்.”

சிறுகதையின் லட்சணம் குறித்த அவரது கருத்துகள் மனம்கொள்ளத்தக்கவை. பிரசாரம் என்ற வாதம் பற்றிய நிதானமான பார்வை அவருக்கு இருந்ததைக் காண முடிகிறது.

“கதை என்னடா கதை? ஒருமுறை திறந்த கண்களோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கறுப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்திசார்ஜ், துப்பாக்கிச் சூடு இவையெல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமின்றி வேறென்ன?

கதைகளையெல்லாம் பொதுப்படையாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரம்; மற்றது அமானுஷ்ய கற்பனை. மேதைகள்தாம் சுவை குறைவு இல்லாத அமானுஷ்ய கற்பனைகளைப் படைக்க முடியும். என்னைப் போன்றோருக்கு பத்திரமான வழி, பிரத்தியட்ச வாழ்க்கைச் சித்திரங்களே. எங்களைச் சூழ்ந்த உலக அரங்கத்தை நாங்கள் போட்டோ எடுப்போம். எங்களுடைய வாழ்க்கை ஆதர்சங்களும் லட்சியங்களும் அந்த போட்டோவுக்கு மெருகு கொடுத்திருக்கும். எங்களுக்கும் பல கனவுகள் உண்டு. ஆனால், அவற்றில் ‘மண்’ வாசனை வீசும்; சுகந்தமான வாசனைதான். அஜந்தா ஓவியங்களையே நினைத்துக்கொண்டிருப்பவர்கள், போட்டோக்களில் கலைச் சுவையைக் காண முடியாது என்று நினைப்பது சகஜம். மீனுக்கு ஒரே சொர்க்கம்தான் உண்டு – தண்ணீர். அதில் வியப்பென்ன? போட்டோக்களிலும் ஒருவித கலைச் சுவையை அனுபவிக்க முடியும் என்று நம்பும் கோஷ்டியைச் சேர்ந்தவன் நான். எனவே, என் கதைகள் அத்தனையும் பெரும்பாலும் முழுவதுமோ அல்லது பெரும்பகுதியோ பிரத்தியட்ச நிகழ்ச்சிகள்.

கலைஞன் நமக்கு அழகைக் காட்டுவது மாத்திரம் அல்ல, அநேக சமயங்களில் அதைக் காண நம்மைச் சித்தப்படுத்தியும்விடுகிறான். குதிரையின் கண்களில் ஒரு மறைப்பைப் போட்டு ஓட்டுகிறார்கள் பாருங்கள். அதே மாதிரி கலைஞனும் நம் கண்களை நேர்வழியில் திருப்புகிறான். மறைக்க வேண்டியதை மறைத்து, விளக்க வேண்டியதை விளக்கி, திருத்த வேண்டியதைத் திருத்தி, மெருகு கொடுப்பது கலைஞனின் நுட்பம்.

கலையிலே பிரசாரம் இருக்கலாமா… கூடாதா? இதைப் பற்றி ஒரு பெரிய விவகாரம் இருந்தாலும் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம்.; இருந்தாலும் இல்லாவிட்டாலும், கலை கலையாகவே இருப்பது அவசியம். நாம் எழுதும் கதை, கதையாயிருக்க வேண்டும். அதாவது சுவாரஸ்யம் நிறைந்திருக்க வேண்டும். இப்படி எழுதப்படாததால்தான் அநேகக் கதைகளை ஜனங்கள் ரசிக்காமல் தள்ளுகிறார்கள். கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க ரசமாக இருந்ததா என்ற ஒரே பரீட்சைதான், நல்ல கதைக்கு முக்கியம். மற்ற லட்சணங்கள் எல்லாம் அதற்கு உதவுபவையே.

கதையின் ஒவ்வோர் அம்சமும், ஆரம்பம் நடு முடிவு. ஒவ்வொர் அமைப்பும், ஒவ்வொரு சொல்லும் கதையின் சுவாரஸ்யத்துக்கு, திட்டத்துக்கு உதவ வேண்டும். கதை முழுவதையும் படித்த பிறகு, `ப்பூ! இவ்வளவுதானா… இதை ஏன் படித்தோம்?’ என்ற உணர்ச்சி, படிப்பவருக்கு ஏற்படக் கூடாது. கதையின் முடிவு ஏமாற்றமாக இருந்தால், அந்த ஏமாற்றமும் ஓர் இன்பமாக இருக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

பிரத்தியட்சம் என அவர் குறிப்பிடும் யதார்த்தம்தான் அவர் கதைகளின் பலம். அவர் சென்னை வாழ்க்கையில் அன்றாடம் காணும் கைரிக்‌ஷா இழுக்கும் அவலம் அவரை மிகவும் பாதித்து, அது பற்றிக் கதைகளும் கட்டுரையும் எழுதியிருக்கிறார்.

அவரது `பொழுதுபோக்கு’ கட்டுரைத் தொகுப்பில் `ரிக்‌ஷா வாகனம்’ என்கிற கட்டுரையில்…

`வண்டியை, மாடு இழுத்துப் பார்த்திருக்கிறேன்; குதிரை இழுத்தும் பார்த்திருக்கிறேன். மாடு, குதிரைக்குக்கூடக் கஷ்டமில்லாமல் இன்ஜின் இழுத்தும் பார்த்திருக்கிறேன். மனுஷனை உட்காரவைத்து மனுஷன் இழுக்கும் ஒரு வண்டியும் உண்டா? அப்படியும் ஒன்று உண்டு. `ரிக்‌ஷா’ என்று அதன் பெயர் என்பதை ஒரு பத்திரிகையில் படம் வர்ணனைகளின் மூலம் முதல் தடவையாக அறிந்தபோது, என்னை அறியாமலே திடுக்கிட்டேன். அதன் தர்மத்தைப் பற்றியோ, வேறு அம்சங்களைப் பற்றியோ யோசித்து அப்படி நான் திடுக்கிடவில்லை. தன்னிச்சையாய், என்னை அறியாமல், அதிலே ஒரு வெறுப்பு ஏற்பட்டது. `ஒரு மனிதனுக்கு நடக்க முடியாத… மற்றொரு மனிதன் அவனை வைத்து இழுக்கிறானாம் – அந்த எண்ணமே என் மனத்தை வாட்டியது. இது ஏதோ ஓர் அநாகரிகக் குரூரம்போல் தோன்றியது’ என்று குறிப்பிடும் தி.ஜ.ர., கட்டுரை எழுதியும் மனம் ஆற்றாமல் `ரிக்‌ஷாக்கார வேலன்’ என்ற கதையையும் எழுதுகிறார்.

`கல்யாணப் பெண்’ என்ற கதையில் பால்யவிவாகம் குறித்துத் தீவிரமாகப் பேசுகிறார்.

செல்லம் கூறுகிறாள்…

`பவானிக்கு பன்னிரண்டு வயசு நிறைந்துவிட்டது. இன்னும் கல்யாணம் செய்யாமல் வைத்திருக்கலாமா? பெரியவளாகிவிட்டால் என்ன செய்கிறது? ஊர் சிரிக்குமே… அப்புறம் சாதிக் கட்டுப்பாடு வந்துவிடாதா?”

நடேசய்யருக்கு ஆத்திரம் பொங்கியது. “என்னடி சாதி? என்னை சாதியைவிட்டுத் தள்ளட்டும். இந்தச் சாதிக்கட்டு இல்லாவிட்டால், நான் கொத்தனார் வேலை, தச்சு வேலை செய்தாவது மானமாய் வாழ்வேனே!”

பேனா பிடிக்கலாம், கரண்டி பிடிக்கலாம். மற்ற எந்த உடல் உழைப்பிலும் பிராமணர்கள் ஈடுபடக் கூடாது என்பது இன்றுவரை நடப்பில் உள்ள யதார்த்தமாக இருக்கையில், 40-களில் இப்படியான பாத்திரங்களை அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காந்தியம் முன்வைத்த சமூக சீர்திருத்தம், உயர் சாதிகளுக்கிடையில் நடக்க வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிப் பேசியது. அதுவே தப்பெனப் பேசியவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த காலத்தில் தி.ஜ.ர போன்ற காந்தியவாதிகளின் குரல் மதிக்கத்தக்கது.

நான்காம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப் படிப்புப் பெற்ற ஒரு மனிதர், தன் சொந்த உழைப்பாலும் ஆர்வத்தாலும் விடாமுயற்சியாலும் தமிழின் தரமான பத்திரிகையாக விளங்கிய `மஞ்சரி’யின் ஆசிரியர் என்கிற நிலை வரை அடைந்தது, அன்றைய நாள்களில் அபூர்வமாக நிகழக்கூடிய ஒன்று. மனிதாபிமானமும் தேசாபிமானமும் அடிச்சரடாக அவருடைய கதைகளில் ஓடுவதைக் காண முடிகிறது. அமானுஷ்யமான கற்பனைகளை நிராகரித்து, சக மனிதர்களின் துயரங்களையும் மேன்மைகளையும் கீழ்மைகளையும் விமர்சனப் பார்வையோடு (அதில் நமக்குக் கருத்து மாறுபட்டாலும்) பேச முற்படும் அவருடைய சிறுகதைகள் வாசிக்கப்பட வேண்டியவை. குழந்தைகளுக்காகவும் தொடர்ந்து கதை எழுதிய முன்னோடி என்கிற பெருமையும் அவருக்கு உண்டு.

படிக்காத மேதை – ‘மஞ்சரி’ தி.ஜ.ர – வளவ.துரையன் – 14th Oct 2012

தமிழில் “ரீடர்ஸ் டைஜஸ்ட்’ போன்று ஓர் இதழை வெற்றிகரமாக சுமார் 25 ஆண்டுகாலம் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தியவர் “தி.ஜ.ர.’ என்றழைக்கப்படும் திங்களூர் ஜகத்ரட்சகன் ரங்கநாதன். அவர் நடத்திய “மஞ்சரி’ எனும் இதழின் பெயராலேயே “மஞ்சரி தி.ஜ.ர.’ என்றழைப்பதும் சாலப்பொருத்தம். 1901-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறந்தவர். ஒரத்தநாடு சத்திரத்தில் இருந்த பள்ளியில் நான்காம் வகுப்பு வரையே படித்தார். படிப்பில் முதன்மையாகத் திகழ்ந்தாலும் தந்தை அவரைப் படிக்க வைக்கவில்லை. தி.ஜ.ர.வின் தந்தை “கர்ணம்’ வேலை பார்த்து வந்ததால், தந்தையாருடன் ஊர் ஊராய்ச் சுற்றினார். இதனால் தமது படிப்பைத் தொடர முடியாத தி.ஜ.ர., தனக்குத் தானே ஆசிரியராக இருந்து படிக்கத் தொடங்கினார். அவருக்குக் கிடைத்த அனைத்து நூல்களையும் படித்தார். விஞ்ஞானத்தில் குறிப்பாக, கணிதத்தில் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்து கொள்வதற்காகவே ஆங்கிலம் படித்துப் பின்னாளில் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். தொடக்கத்தில் சில காலம் நில அளவைக்கான பயிற்சி பெற்று கர்ணம் வேலை பார்த்தார். பின் தன் 14-ஆவது வயதில் சுந்தரவல்லி என்பவரைத் திருமணம் புரிந்தார். பிறகு மாமனார் ஊரில் சில மாதங்கள் திண்ணைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். மேலும், தஞ்சாவூரில் வக்கீல் குமாஸ்தாவாக, கும்பகோணத்தில் ஒரு மளிகைக் கடையில் சிற்றாளாக – இப்படிப் பல பணிகள் செய்துள்ளார். 1916-ஆம் ஆண்டு தம் 15-ஆவது வயதில் திருவாரூர் அருகில் இருக்கும் “திருக்காராயல்’ எனும் சிற்றூரில் இருந்த தம் சின்னம்மா இல்லத்தில் தங்கியிருந்தார். அப்போது ஐந்து பாகங்கள் கொண்ட “ஐரோப்பிய யுத்த சரித்திரம்’ என்னும் தமிழ் நூலைப் படித்தார். “”அந்த நூல்தான் எனக்குத் தலைமை ஆசான்” என்று தி.ஜ.ர. குறிப்பிட்டுள்ளார். அதைப் படித்ததைத் தொடர்ந்து அவர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். தி.ஜ.ர., எழுதிய முதல் கட்டுரை 1916-இல் “ஆனந்தபோதினி’ என்னும் இதழில் வெளிவந்தது. அப்போது “ஸ்வராஜ்யா’ இதழில் அவர் எழுதிய கவிதையும் வெளிவந்தது. தஞ்சாவூரிலிருந்து வெளிவந்த “சமரசபோதினி’ என்னும் இதழில் தி.ஜ.ர., துணை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து ஊழியன், சுதந்திரச்சங்கு ஜயபாரதி, ஹனுமான், சக்தி, மஞ்சரி, பாப்பா போன்ற பல இதழ்களில் பணிபுரிந்துள்ளார். அவரது முதல் சிறுகதைத் தொகுதி “சந்தனக் காவடி’ என்னும் பெயரில் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து நொண்டிக்கிளி, காளி தரிசனம் போன்றவை வெளிவந்தன. தமிழில் கட்டுரை இலக்கியத்தை வளர்த்தெடுத்த முன்னோடிகளில் தி.ஜ.ர., முக்கியமானவர். அவருடைய கட்டுரைகளை பொழுதுபோக்கு, சமகாலச் சிந்தனை, வாழ்க்கை வரலாறு என்று மூன்று வகைகளில் உள்ளடக்கலாம். தி.ஜ.ர., தமது கட்டுரைகளைப் பேச்சு வழக்கில் கதை சொல்லும் விதத்தில் அமைத்தார். சொல் அலங்கார நடையை அவர் வலிந்து மேற்கொள்ளாதவர். 1923-இல் சமரசபோதினியில் தொடங்கிய அவரின் இதழ்ப்பணி 1972-இல் மஞ்சரியிலிருந்து விலகும்வரை நீடித்தது. ஆசிரியர், துணை ஆசிரியர், நிர்வாக ஆசிரியர், உதவி ஆசிரியர், கூட்டாசிரியர் எனப் பல பொறுப்புகளையும் ஏற்றுப் பணிபுரிந்துள்ளார். தி.ஜ.ர., சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். வங்க எழுத்தாளர் ஹரீந்திரபாத் சட்டோபாத்யாயாவின் நாடகங்கள், இராஜாஜியின் ஆங்கிலச் சொற்பொழிவுகள், வெண்டல் வில்கி என்ற அமெரிக்க எழுத்தாளரின் “ஒரே உலகம்’ என்னும் நூல், லெனின் சரித்திரக் கதைகள், ருஷ்ய எழுத்தாளர் ஷென்கோவின் நாவல், நேருவின் உரைகள், லூயி ஃபிஷர் எழுதிய காந்தி வாழ்க்கை, போன்ற பல மொழிபெயர்ப்புகளைத் தந்துள்ளார். 1940 முதல் 1946 வரை “சக்தி’ இதழில் பணிசெய்தபோது தி.ஜ.ர., பாலன், நீலா எனும் புனைபெயர்களில் குழந்தைகளுக்கான கதைப்பாடல்கள் எழுதினார். சிறுவர்களுக்காக அவர் எழுதிய சித்திர ராமாயணம் குறிப்பிடத்தக்கது. சிறுவர்களுக்காக அறிவியல் நூல்கள், கட்டுரைகள், வாழ்க்கை வரலாற்றுக் கதைகள், பாடல்கள் போன்று பல படைத்து தி.ஜ.ர., குழந்தை இலக்கியத்துக்கும் அணி சேர்த்துள்ளார். தி.ஜ.ர.வின் சிறுகதைத் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு பெற்றது. தமிழக அரசு குழந்தை இலக்கியம் வளர்த்தமைக்காக அவருக்குப் பரிசளித்தது. தி.ஜ.ர., இறுதி நாள்களில் பேசமுடியாத அளவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மறதி நோய்க்கும் ஆளானார். பின்னர், 1974-ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி காலமானார். இவர் படைத்தளித்த ராஜேந்திரன், ராஜாம்பாள், ஜெயரங்கன் போன்ற படைப்புகள் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளன. “தி.ஜ.ர.வின் வாழ்க்கை, பலவிதமான குறைகள், அவதிகள், கஷ்டங்கள் நடுவில் சுறுசுறுப்பு, உற்சாகம், நம்பிக்கை, அறிவுத்தேடல் ஆகியவற்றைக் கொண்டது’ என்று தன் இரங்கல் குறிப்பில் “கணையாழி’ (நவம்பர் 1974) குறிப்பிட்டுள்ளது மிகவும் பொருத்தமான ஒன்றாகும். “படிக்காத மேதை’யான தி.ஜ.ர., நம்மைப் படிக்கவைத்த படைப்புகள் ஏராளம்… ஏராளம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *