கிழக்கு கோபுரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 11,319 
 

தெற்கு இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற வைணவத் தலம் ஸ்ரீரங்கம். திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.

எப்போதும் ஜே ஜே என மக்கள் கூட்டம் அலைமோதும். ஆறுகால பூஜைகள் சிறப்பாக நேரம் தவறாமல் நடக்கும். பிரம்மாண்டமான கோயில்.

புகழ் வாய்ந்த இந்தக்கோயில் விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களால் (1336 – 1569) அதிலும் குறிப்பாக அச்சுத தேவராயா என்கிற மன்னரால் ஆர்வத்துடன் கட்டப் பட்டது. இதன் கம்பீரமான ராஜகோபுரம் ஏஷியாவிலேயே உயரமானது.

இக்கோயிலில் மொத்தம் இருபத்தியோரு அழகிய கோபுரங்கள் உள்ளன. அவ்வளவு கோபுரங்களும் கலர் கலராக நல்லமுறையில் பெயின்ட் அடிக்கப்பட்டு பல விக்கிரகங்களுடன் கம்பீரமாகக் காட்சியளித்தாலும், ஒரேயொரு கோபுரம் மட்டும் முற்றிலுமாக வெள்ளைக் கலரில் எப்போதும் காட்சியளிக்கும்.

அந்தக் கோபுரம் கிழக்கு கோபுரம். அதைப் பார்க்கவே சோகமாக காட்சியளிக்கும். இருக்காதா பின்னே? அந்தக் கோபுரத்தின் பின்னால் ஒரு பெரிய சோகச் சரித்திரமே பொதிந்து கிடக்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

அது 1323 ம் வருடம்…

ஸ்ரீரங்கம் முழுவதும் சோகம் சூழ்ந்து கிடந்தது. இப்படி ஒரு நிலைமை வரும் என்று யாருமே நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. ஆம், அரங்கன் குடியிருக்கும் கோயிலுக்குள் அத்து மீறிப் புகுந்துவிட்ட முகமதியப் படைகள் பொன், வைர ஆபரணங்களைக் கொள்ளையடித்து விட்டனர். இன்னும் மதிப்பு மிக்க பொக்கிஷங்களைத் தேடி கோயிலுக்குள்ளேயே டேரா போட்டுவிட்டனர். நடந்துவிட்ட திடீர் விபரீதங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் ஸ்ரீரங்கத்து மக்கள். முகமதியப் படைகளை எதிர்த்து சண்டையிட்டு ஏறக்குறைய 12,000 பேர் மாண்டனர். எதிர்த்த யாரும் உயிருடன் திரும்பவில்லை.

இந்த நிலையில் அரங்கனுக்காக கண்ணீர் வடித்த மக்களுக்கு அதைவிட அதிர்ச்சியாக இருந்தது, அரங்கன் கோயில் தேவதாசியான வெள்ளையம்மாள் எடுத்த முடிவு. கோயில் கொள்ளைக்குத் தலைமை தாங்கி வந்த முகமதியப் படை அரசனுக்கு ஆசை நாயகியாக இருக்கச் சம்மதித்து விட்டாள் வெள்ளையம்மாள் என்பதுதான் அது.

இப்படியொரு முடிவெடுக்க இவளுக்கு எப்படி மனசு வந்தது? அரங்கன் புகழ் பாடியவள் எப்படி மனித அரக்கனிடம் மயங்கிப் போனாள் என்று மக்கள் பயங்கரக் கோபமடைந்தனர். அவளை மயக்கியது பொன்னா? புகழா? வீரமா? என்று புரியாமல் சஞ்சலப் பட்டனர். அவளது சுயரூபத்தை மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அரங்கன் நடத்திய விளையாட்டுதான் இந்தக் கொள்ளை நாடகம் என்று மக்கள் தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டனர்.

அன்று இரவு நடு நிசியைத் தாண்டிய நேரம். வெள்ளையம்மாள் அரசனைச் சந்திக்க ஆசைப்பட்டாள்.

வழக்கத்தைவிட தன்னைக் கூடுதலாக அலங்கரித்துக் கொண்டாள். உடன் கிளம்பிய தோழியை தவிர்த்துவிட்டு, இருட்டில் தனியாகச் சென்றாள். எப்போதும் அவளது வருகையை முன்னறிவிப்பு செய்யும் கொலுசு அன்று மெளன கீதம் இசைத்தது. ஆம்… இரவு நேரத்தில் படைத் தளபதியை சந்திக்கப் போவது யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்து கொலுசுகளைக் கழற்றிவிட்டாள்.

ஸ்ரீரங்கம் முழுவதும் முகமதியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால் வீதிகளில் உள்ளூர் மக்களின் நடமாட்டம் சுத்தமாக இல்லை. முகமதிய வீரர்கள் மட்டும் ஆங்காங்கே காவல் பணியில் இருந்தனர். எதிர்ப்பு இல்லாமல் கோயிலைப் பிடித்துவிட்ட சந்தோஷத்தில் அதிகமாக மது அருந்தி மயங்கிக் கிடந்தனர். அதனால் பலரையும் எளிதில் தாண்டிப் போனாள் வெள்ளையம்மாள்.

கோயிலின் மண்டபப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தூங்கிக் கொண்டிருந்த அரசனின் குடிலுக்குள் மெதுவாக நுழைந்தாள். அந்த நேரத்திலும் சுதாரித்துக்கொண்டு விசுக்கென எழுந்து நின்றான் அரசன்..

“யாரது?” என்று அதட்டியபடி தீப்பந்தத்தை உயர்த்தினான்.

“வணக்கம் அரசரே…” உதட்டைச் சுழித்து எழிலாகக் கும்பிட்டாள் வெள்ளையம்மாள்.

“ஓ நீயா? இந்த நேரத்தில் இங்கே ஏன் வந்தாய்? தகவல் அனுப்பியிருந்தால் நானே உன் இல்லம் வந்திருப்பேனே…” என்று ஆசையுடன் அவளை அணைக்க வந்தான்.

அவனை சாமர்த்தியமாகத் தவிர்த்தாள். “உன்னை முயங்க இதுவரை நீ என்னை அனுமதித்ததே இல்லை வெள்ளை…ஆனால் ஊரெல்லாம் நீ என் ஆசைநாயகி என்றுதான் பேச்சு…”

“அரசே இது அரங்கனின் வீடு. இங்கே என்னை நீங்கள் தொடக்கூடாது. என் இல்லம் வந்தால் வேண்டிய இன்பம் பெறலாம். ஆனால், அதைவிட ஒரு முக்கியமான செய்தி கேள்விப்பட்டேன். அதைச் சொல்லத்தான் இப்போது தங்களைப் பார்க்க ஓடோடி வந்தேன்.”

“அப்படி என்ன செய்தி?”

“இங்கே தாங்கள் எதற்காகப் படையெடுத்து வந்தீர்கள்?”

“எதிரிகளை வெற்றிகொண்டு செல்வங்களையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் படையெடுப்பின் ஒரே நோக்கம்…”

“போரில் வென்று விட்டீர்கள். தேவையான செல்வங்களையும் எடுத்துக் கொண்டீர்கள். ஆனாலும் ஏன் இன்னமும் இங்கு டேரா போட்டுள்ளீர்கள்?”

“மேலும் விலை மதிக்க முடியாத வைரங்களும், வைடூரியங்களும் இங்கே புதையலாக ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகக் கேள்விப் பட்டோம். அதை எடுக்கத்தான் காத்திருக்கிறோம்.”

“நானும் அதற்காகவே வந்தேன் அரசே…”

“என்ன… உனக்கு அந்த ரகசியம் தெரியுமா?”

“மெள்ளப் பேசுங்கள். ஐம்பொன் சிலைகளும், வைர வைடூரிய மாலைகளும், முத்து மணிகளும் பாதுகாப்பாக எங்கே இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்…”

“எங்கே என்று சொல். உன்னை என் நாட்டுக்கு அழைத்துச்சென்று பொன்னாலேயே அலங்கரிக்கிறேன்.” முகத்தில் ஆர்வம் மின்னியது.

“அதைச் சொல்லத்தானே வந்திருக்கிறேன்… ஆனால் ஒரு நிபந்தனை… அதை நிறைவேற்றுவதாக தாங்கள் சத்தியம் செய்து கொடுத்தால் அந்த இடத்தைக் காட்டுவேன்“ என்று செல்லம் கொஞ்சினாள்.

“சொல் வெள்ளை… புதையலுக்காக உனக்கு என்ன வேண்டும்?”

“எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் அந்தப் புதையலை நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அதனால் தாங்களும் நானும் மட்டும் முதலில் சென்று ரகசியமாக அதைப் பார்ப்போம். அதன் பிறகுதான், தாங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்.”

‘ச்சே இவ்வளவுதானா? பெண் புத்தி என்பது சரியாகத்தான் இருக்கிறது. புதையலைப் பார்த்ததும் முதலில் இவளைப் போட்டுத்தள்ள வேண்டும்…’

“சரி வா, நாம் மட்டும் இப்போது போய்ப் பார்ப்போம். ஆசைப்பட்ட அத்தனை நகைகளையும் நீ எடுத்துக் கொள். மீதி இருப்பதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்.”

“வாருங்கள். உங்கள் ஆட்கள யாருக்கும் தெரியாதபடி மறைந்து வாருங்கள்…” என்று அழைத்துச் சென்றாள். ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்குக் கோபுரம் அருகே வந்து நின்றாள்.

“இந்தக் கோபுரத்தின் மேலேதான் இருக்கிறது. ஆனால் கோபுரத்தின் உச்சிக்குப் போக வேண்டுமே” என்று அண்ணாந்து பார்த்தாள்.

“கண்டிப்பாக போகலாம்.”

“ஆனால், நிறைய வெளவால்கள், புறாக்கள் இருக்குமே…”

“ப்பூ, இதற்கா பயப்படுகிறாய்? பயம் வந்தால் என்னைக் கட்டிக்கொள். வா சீக்கிரம். நாம் உடனே புதையலைப் பார்க்க வேண்டும்…” அவசரப்பட்டான்.

சில நிமிடங்களில் இருவரும் கோபுரத்தின் உச்சியை அடைந்தார்கள். இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு ஆர்ப்பரித்தபடி சலசலப்புடன் தூரத்தில் ஓடிய காவிரி ஆற்றின் இரைச்சல் கேட்டது.

ஊதக் காற்று சற்று நடுக்கம் கொள்ளச் செய்தது. கோபுரத்தின் உச்சியிலிருந்து ஸ்ரீரங்கத்து அழகை சற்று நேரம் ரசித்துப் பார்த்த அரசன் வெள்ளையம்மாளிடம் உல்லாசமாகப் பேசினான்.

“ஆஹா அற்புத தரிசனம் வெள்ளையம்மா…. இப்போதுதான் கோபுரத்தின் உச்சிக்கு முதன் முறையாக ஏறி இருக்கிறேன். இந்த இடத்தில் இருந்து உங்கள் ஊரை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது… அத்தனை அழகாக மின்னுகிறது. ஆமாம், எங்கே இருக்கிறது பொக்கிஷங்கள்?”

“அதோ அங்கே பாருங்கள்…” என்று கை நீட்டினாள்.

ஸ்ரீரங்கநாதர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தைத்தான் காட்டினாள். அவனும் ஆர்வமாய்ப் பார்த்தான்.

“கீழேதான் பொக்கிஷம் இருக்கிறதா, பிறகு ஏன் மேலே அழைத்து வந்தாய்?” சொல்லி வாய் மூடுவதற்குள் அந்த சம்பவம் நடந்தே விட்டது.

சிணுங்கலும் சிங்காரமுமாக பேசிக்கொண்டிருந்த வெள்ளையம்மாள் திடீரென்று புயலாய் மாறினாள். தன் பலத்தைத் திரட்டி இரண்டு கைகளாலும் கோபுரத்தின் உச்சியிலிருந்து அரசனைக் கீழே தள்ளிவிட்டாள். விழுமபோது. அரசன் எழுப்பிய அபயக் குரல் கேட்டு முகமதியப் படையினர் கிழக்குக் கோபுரம் பகுதிக்கு ஓடி வந்தனர். அங்கே, தங்களது அரசன் தலை சிதறி இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கோபுரத்தின் உச்சியை அண்ணாந்து பார்த்தனர். அங்கே வெள்ளையம்மாள் ஒரு வெற்றி தேவதையைப் போன்ற பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க வீரர்கள் சிலர் கோபுரத்தின் மீது..வேகமாக ஏறினர். அதைக் கண்டு கொஞ்சமும் அவள் பதட்டப் படவில்லை.

ஸ்ரீரங்கநாதர் புகழை வாய்விட்டுப் பாடியபடி திருப்தியுடன் கோபுரத்தின் உச்சியிலிருந்து கீழே குதித்தாள். அவளுடைய உயிர் பிரிந்தது. ….

தகவல் கேள்விப்பட்ட ஸ்ரீரங்கத்து மக்கள் ஓடோடி வந்தனர். வெள்ளையம்மாளின் பக்தியைக் குறைவாக மதிப்பிட்டதை எண்ணி தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தங்களுக்கு இல்லாமல் போனதே என்று ஆண்கள் வீரம் வரப் பெற்றனர். அரசன் இல்லாத படையை சிதறடித்தனர். கொள்ளையடித்து வைத்திருந்த நகைகள், பொன், பொருட்களை அப்படியே விட்டுவிட்டு உயிர் பிழைத்த வீரர்கள் தப்பி ஓடினர்.

ஸ்ரீரங்கநாதரின் செல்வத்தைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக்கொடுத்த வெள்ளையம்மாளின் நினைவாகத்தான் அந்தக் கோபுரம் இன்னமும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. வெள்ளையம்மாளின் தியாக வரலாறு செவிவழிக் கதையாகவே பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அவள் குதித்து உயிரைவிட்ட கிழக்குக் கோபுரம்தான் இப்போது ‘வெள்ளைக் கோபுரம்’ என்று அழைக்கப் படுகிறது.

இறுதியாக விஜயநகரப் பேரரசர் கெம்ப்பண்னா மிச்சமிருந்த முகமதியப் படைகளை விரட்டியடித்து, ஸ்ரீரங்கம் கிழக்குக் கோபுரத்தை நிரந்தர வெள்ளைக் கலரில் பாதுகாக்கும்படி உத்தரவிட்டார். மக்கள் நிம்மதியடைந்தனர்.

வெள்ளையம்மாளின் உயிர்த்தியாகம் குறித்து பேசுகிறார் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் நண்பரும் வைஷ்ணவப் பெரியவருமான ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி:

“வெள்ளையம்மாள் தனது உயிர் பிரியும் தருவாயில், இனிவரும் காலங்களில் என்னைப் போன்ற தேவதாசிகள் யாரேனும் மரணம் அடையும்போது, கோயில் திருமடப்பள்ளியில் இருந்து நெருப்பும், திருக்கொட்டாரத்தில் இருந்து அரிசி, தீர்த்தம், மலர்மாலை, திருப்பரிவட்டம் ஆகியவற்றைக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். அந்த வழக்கம் வெகு காலத்துக்கு நடைமுறையில் இருந்தது. பிறகு 1953ல் தாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பிறகுதான் அந்த வழக்கம் நின்று போயிற்று.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *